இது முக்கியமாக – whatsapp பிரியர்களுக்கானது….


நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.

ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”

“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

“தொடரும்” என்றார் மன்னர்.

“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.

“சரி அடுத்து”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”

“களிப்படைந்தோம் அமைச்சரே! களிப்படைந்தோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.

””நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.

“சரி எங்கே முதலாவது முட்டாள்?”

அமைச்சர் சொன்னார்….

”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு whatsapp தான் குடியென வாழ்ந்து இந்த மொக்கையான forward களை மிக சுவாரசியமாக வாசித்துக்கொன்டு –

– நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடி படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த “முதல் முட்டாள்”….! ”

.
———————————————————————————-
பின் குறிப்பு –

சில பேர் இதை படித்து கடுப்படையலாம்…
என்னை திட்டக்கூட செய்யலாம்.

ஆனால் வேறு வழி இல்லை –
நான் இதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்….

whatsapp மோகம் தலைவிரித்து ஆடுகிறது.
எங்கே போனாலும், யாரைப்பார்த்தாலும், இதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தனைக்கும், இதில் வரும் 100-க்கு 99 மெசேஜ்கள் சுத்த மொக்கை – அஞ்சு காசுக்கும் உதவாதவை.

மேலும், யார் எழுதியது, யார் முதலில் அனுப்பியது என்றே தெரியாமல்,
அவரவர் தங்களுக்கு வந்ததையெல்லாம் forward பண்ணிக்கொண்டே
இருக்கிறார்கள். அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்களுக்கு யார் பொறுப்பு ஏற்கிறார்கள்…? அந்த தகவல்கள் உண்மையானவையா என்கிற சிந்தனை யாருக்காவது இருக்கிறதா..? receive பண்ணுபவர்களோ – தங்கள் நேரம் அநாவசியமாக விரயமாகிறதே என்கிற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் வருகின்ற அத்தனை உதவாக்கரை மெசேஜ் களையும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதைவிட கொடுமை, தங்கள் நேரம் வீணானது போதாதென்று மீண்டும்
அதை தங்கள் தொடர்பில் இருக்கும் அத்தனை பேருக்கும் அவற்றை forward செய்து கொண்டிருக்கிறார்கள்.

” என்று ஒழியும் இந்த whatsapp மோகம் …? ”

————-

நான் செல்போனுக்கு எதிரானவன் அல்ல…
ஆனால் –

“செல்போனை அவசியத்திற்கு மட்டும் பயன்படுத்துங்கள்…”
என்கிற செய்தியைத்தான் சொல்ல விரும்புகிறேன்.

.
——————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to இது முக்கியமாக – whatsapp பிரியர்களுக்கானது….

  1. Rajagopalan's avatar Rajagopalan சொல்கிறார்:

    // நான் செல்போனுக்கு எதிரானவன் அல்ல…
    ஆனால் –

    “செல்போனை அவசியத்திற்கு மட்டும் பயன்படுத்துங்கள்…”
    என்கிற செய்தியைத்தான் சொல்ல விரும்புகிறேன். //

    I welcome your Story.
    A very essential Message of the day.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.