………………………………………..

…………………………………………
தமிழக அரசியலில் ‘டெக்னாலஜி’ கிரிமினல் தனம்: 2021 ஜூலை முதல் அரங்கேறிய தமிழக பாஜகவின் நிஜ முகம்!
……………………………………
அரசியல் என்பது கொள்கை சார்ந்த தளம், மக்கள் பணி சார்ந்த இயக்கம் என்று நம்பிக் கொண்டிருக்கும் இன்றைய 25, 30 வயது இளைஞர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கசப்பான நிஜங்கள் சில உள்ளன.
2021 ஜூலை 16 அன்று, “படித்த இளைஞர், மாற்று அரசியல் வராதா?” என்று ஏங்கிய பல தம்பிகள் அவரை நோக்கி ஓடினார்கள். கவர்ச்சியான விளம்பரங்கள், சமூக ஊடகங்களின் மினுமினுப்புகள், அதிரடிப் பேச்சுகள் என எல்லாம் ஒரு ‘வண்ணமயமான மாயையை’ உருவாக்கியது.
ஆனால், அந்த மினுமினுப்பான வண்டிக்கு பின்னால் இருந்த வெடிகுண்டு ரகசியங்களும், ‘சின்ன கருணா’ பாணியில் நடத்தப்பட்ட அண்டர் கிரவுண்ட் கார்ப்பரேட் வேலைகளும் வெளிவரத் தொடங்கிய போதுதான், கட்சிக்குள்ளும் வெளியேயும் இருந்தவர்களுக்கு உண்மை புரியத் தொடங்கியது.
அதிகாரப் பயம், பதவி ஆசை காரணமாகப் பலரும் எழுதத் தயங்கிய அந்த ‘விஞ்ஞானப்பூர்வ நரித்தனங்களை’ இளைஞர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் இங்கே விரிவாகப் பார்ப்போம்.
உள்கட்சி ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டிய ‘ஒற்றைத் தலைமை’ சர்வாதிகாரம்
திமுக, அதிமுக போன்ற திராவிடக் கட்சிகளில் கூட செயற்குழு, பொதுக்குழு கூடி விவாதிக்கும் ஒரு கட்டமைப்பு இன்றும் பெயரளவாவது இருக்கிறது. ஆனால், 2021 ஜூலை 16-க்குப் பிறகு தமிழக பாஜகவில் அது முற்றிலும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. மூத்த தலைவர்கள், 40 ஆண்டுக்காலம் கட்சிக்காக உழைத்த தியாகிகள் என எவருக்கும் மதிப்பற்ற நிலை உருவாக்கப்பட்டது.
கண்ணாடி அறையும் வசூல் ஃபில்டர்களும்:
கட்சி அலுவலகத்தின் உள்ளே இருக்கும் அறையில் கண்ணாடிச் சுவரும், கண்ணாடித் கதவும் அமைக்கப்பட்டன. “பெண்கள் உள்ளே இருக்கும் போது வெளியே இருப்பவர்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் உள்ளே நடக்கும் செயல்பாடுகள் தெரிய வேண்டும்” என்று இதற்குக் காரணம் சொல்லப்பட்டது. ஆனால், நிஜத்தில் தலைவரைச் சந்திப்பதற்கு மூன்று படிகளைக் கடந்து செல்ல வேண்டும்; அந்த மூன்று நபர்களுக்கும் குறிப்பிட்ட தொகை வழங்கப்பட வேண்டும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இதில் தொடர்புடைய இளங்கோவடிகள் இன்று அற்புதமாக செட்டில் ஆகிவிட்டான்.
காசு பார்க்கும் கலாச்சாரம்:
எவரையும் அருகே நெருங்க விடாமல் இருப்பது ஒரு தனி கலை. “சந்திக்க வேண்டும் என்றால் பணம் கொடு” என்ற உன்னதத் திட்டமும், காசு பார்க்கும் கலாச்சாரமும் உருவானது. மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி சார்ந்தவர்களின் பிரச்சினைகள் தலைமை அலுவலகத்திற்கு மின்னஞ்சல், மனுக்கள் அல்லது தபால் வழியாக வந்தபோது, அவை அனைத்தும் இவன் ஒருவன் கையில் சிக்கிக் கொண்டு சின்னாபண்ணப்பட்ட கதை தனியாக எழுத வேண்டிய ஒரு காவியம். ஒருவரின் குறையை அடுத்தவனிடம் சொல்லி, இவனிடமும் ஒரு பணம் அவனிடமும் ஒரு பணம் வாங்கும் வேலைகள் ஜூலை 16-க்கு பிறகுதான் கட்சி அலுவலகத்தில் கனகச்சிதமாக நடந்தேறின.
பிம்பச் சிறை:
இதற்கு முன்னால் இப்படிப்பட்ட ஃபில்டர்கள் இல்லை; எளிதாகச் சந்திக்கலாம், பேசலாம், உரையாடலாம். “மிஸ்டர் கிளீன்” என்று ஓய்வு பெற்று வீட்டுக்குள் அமர்ந்து கொண்டு ஜன்னல் வழியாக அரசியல் எழுதிக்கொண்டிருக்கும் அம்மாஞ்சிகளுக்கு இவையெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. தன்னை ஒரு பெரிய “பிம்பமாக” மாற்றிக் கொள்ள முதல் படியும், தன்னைச் சந்திப்பது ஒரு பாக்கியம் என்று மற்றவர்கள் கருத வேண்டும் என்ற எண்ணத்தின் இரண்டாம் படியும் அப்போதுதான் சேர்ந்து உருவானது.
கல்யாணராமன் சர்ச்சை:
பாஜகவில் நீண்ட காலமாக இருக்கும் கல்யாணராமன் என்பவர் இதே போல அப்பாயின்மென்ட் வாங்கிக் கொண்டுதான் உள்ளே செல்ல வேண்டும் என்று தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் சொன்னவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு, ஒரு எக்கு எக்கிவிட்டு நேரே கண்ணாடி ரூமுக்குள் சென்றார். சென்றவுடன் அவரிடம், *”அப்பாயின்மென்ட் வாங்காமல் ஏன் வந்தீர்கள்?” என்ற கேள்வி கேட்கப்பட, அவரோ, “மக்களுக்குச் சேவை செய்ய வந்துள்ளேன்” என்று பதிலடி கொடுத்தார். “நான் ஒரு விவசாயி” என்று பிதற்றும் பதரின் தொடக்க காலம் இப்படித்தான் ஆரம்பித்தது.
புரோக்கர் அலுவலகம்:
தமிழ் புலவரின் வாரிசு ஒன்று அங்கு நேரடி உதவியாளராக அமர வைக்கப்பட்டு இருந்ததை யாரும் மறுக்க முடியாது. ஆனால், வந்த கடிதங்களைத் தன்னுடைய சுயலாபத்துக்காக அவர் மறைத்ததை யாரும் எதிர்பார்க்கவே மாட்டார்கள். மொத்தத்தில் ஒரு புரோக்கர் அலுவலகம் போல, தனிமனித துதி பாடக்கூடியவர்களை மட்டும் வைத்துக் கொண்டு தொடக்க சக்கரம் சுழலத் தொடங்கியது. தொண்டர்கள் வெளியேற்றப்பட்டார்கள்; கட்சிக்காரர்கள் கலைக்கப்பட்டார்கள்; மாவட்டப் பொறுப்பில் இருப்பவர்களிடம் பேசுவது என்பது முற்றிலும் நிறுத்தப்பட்டது. அரசியலுக்குத் தலைமைப் பொறுப்பில் வந்து அமர்ந்தவனின் மக்கள் சேவை இப்படித்தான் தொடங்கியது. இவற்றையெல்லாம் நேரடியாகப் பார்த்தபோது, “மிகப்பெரிய பள்ளத்தில் காலம் தள்ளப் போகிறது” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.
செயற்குழு கூட்டுவது நிறுத்தப்பட்டு, *”நான் வைப்பதுதான் சட்டம், நான் பேசுவதுதான் கட்சியின் கொள்கை” என்ற ஒற்றை நபர் பிம்பம் கட்டமைக்கப்பட்டது.
நிர்மல் குமாரின் வெளியேற்றமும் ‘வார் ரூம்’ (WAR ROOM) கூலிப்படையும்
முன்பு பாஜகவின் ஐடி விங் தலைவராக நிர்மல் குமார் இருந்தபோது, தகுதியான நபர்களைக் கொண்டு கட்சி ரீதியாகப் பலம் வாய்ந்த கட்டமைப்பை உருவாக்கினார். ‘வெல்கம் மோடி’ போன்ற ஹாஷ்டேகுகளை 5 லட்சத்திற்கும் மேல் ட்ரெண்ட் செய்து திமுகவினரை கதறடித்த பெருமை அந்த உழைப்புக்கு இருந்தது. ஆனால், நிர்மல் குமார் போன்றவர்கள் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டனர்.
அதற்குப் பதிலாக, ‘War Room’ என்ற பெயரில் ஒரு சமூக ஊடகக் கூலிப்படை உருவாக்கப்பட்டது. கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகைகள் முடக்கப்பட்டு, மோடியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதை விடுத்து, 24 மணி நேரமும் தனிநபரின் புகழைப் பாடுவது மட்டுமே இந்த வார்ரூமின் ஒரே வேலையாக மாற்றப்பட்டது.
இதற்காகக் கட்சியின் பெரிய தொகை தனிப்பட்ட நபர்களுக்குத் தொடக்கத்தில் வழங்கப்பட்டது. கட்சிக்குத் தொடர்பில்லாத அந்த நபர்கள் வார் ரூம் பொறுப்பில் இருந்தார்கள். ஆனால் இப்போது இரண்டு நபர்களுக்கு மாதம் 15 + 16 லட்சம் (மொத்தம் 31 லட்சம்) என்கிற விதத்தில் பிரித்துக் கொடுக்கப்பட்டு வருகிறது. கட்சியின் ஐடி விங் என்பது பெயருக்கு என்று இருக்கிறது; அது செயல்படுவதில்லை, செயல்படக்கூடிய நபர்களும் அதில் இல்லை.
இப்போது கூட 2026 சட்டமன்றத் தேர்தலில் செலவழித்த தொகை என்று மிகப்பெரிய தொகையைக் குறிப்பிட்டு பில்லாக மாற்றி, பணத்தை எடுத்து அவரவருக்கு உண்டான share-களுடன் பிரித்துக் கொண்டு விட்டார்கள்.
பதவிக்கு வந்த மூன்று வருடங்களிலும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும்போது, அங்கே இருக்கக்கூடிய பணம் படைத்தவர்களின் வீட்டுக்கு மட்டும் தான் செல்லும் கலாச்சாரத்தை பார்த்து அந்தந்த மாவட்ட கட்சிக்காரர்கள் நொந்து போய்விட்டனர். .
இது தவிர, அந்தந்த மாவட்டத்தில் பிரபல்யமானவர்கள் மற்றும் பணம் படைத்தவர்களின் திருமண வைபவங்களுக்கு மட்டும்தான் செல்லக்கூடிய கலாச்சாரமும் இப்போதுதான் ஆரம்பித்தது. மற்ற கட்சிகளில் தொண்டர்களின் வீட்டுக்குச் செல்வது, தொண்டர்களுடன் பேசுவது, அவர்களுடைய எளிய வாழ்க்கையைப் பார்ப்பது, தேவையான உதவியைச் செய்வது என்பது பெயருக்கென்றாவது இன்று வரையிலும் உள்ளது. ஆனால், எந்தத் தொண்டரையும் திரும்பிப் பார்ப்பதில்லை; எவருடனும் உரையாடுவதில்லை.
மேடையில் ஏறும் போது கட்சி சார்ந்த, கொள்கை சார்ந்த விஷயங்களைப் பேசிவிட்டு, காரில் அமர்ந்த பிறகு தங்கியிருக்கும் அறைக்கு அழைத்துச் செல்லும் வரையிலும் ரியல் எஸ்டேட் பிசினஸ் தான் பேசப்பட்டு வந்ததை உடன் பயணித்தவர்கள் இன்று வரையிலும் சொல்லி அங்கலாயித்துச் சங்கடப்படுகின்றார்கள்.
2021 ஜூலை 16 முதல் அடுத்த மூன்று வருடங்கள் ஒரு துளி கூட கட்சி வளர்ச்சியிலோ, கட்சி வளர்ச்சி சார்ந்த விஷயங்களிலோ இவர் ஈடுபடவில்லை; ஈடுபடுபவர்களையும் அனுமதிக்கவில்லை. ஊடக வெளிச்சம், சோசியல் மீடியா வெளிச்சம் என்கிற இந்த வெளிச்சம் மட்டுமே போதுமானது என்பதை அனைவரின் மனதிலும் பதிய வைக்கத் தொடங்கினர்.
இப்போது கூட இன்ஸ்டாகிராமில் நூற்றுக்கணக்கான ஐடிகளை உருவாக்கி, “மோடி பழி வாங்குகிறார், அமைச்சர் அமித்ஷா பலி வாங்குகின்றார்” என்ற கண்ணீர் கதையைக் காவியமாக ஒரு கும்பல் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட மீடியா ஹைப் என்பது பாஜகவின் மோடி மற்றும் அமித்ஷாவின் பெயரைப் பாதி அளவுக்குத் தமிழகத்தில் ரிப்பேர் செய்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
கட்சியின் பணம் என்பது தனிப்பட்ட நபர்களுக்கு மாதம் தோறும் மிகப்பெரிய அளவில் வழங்கப்பட்டு வந்த அக்கிரமம் இந்தக் கட்சியில் மட்டும்தான் முடியும்.
“என்ன சாதித்தார்கள்?” என்று கேட்டால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்; பலருடைய அந்தரங்க பெட்ரூமில் நடந்த நீலப்படங்களைச் சேமித்து வைத்துள்ளார்கள், தேவைப்படும் சமயத்தில் வெளியிடுவார்கள். கட்சி நிதியிலிருந்து லட்சக்கணக்கில் பணம் வாரியிறைக்கப்பட்டது. பி.எல். சந்தோஷ் ஆசீர்வாதத்துடன்தான் இதையெல்லாம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஆபரேஷன் சக்சஸ்’ – இரண்டாம் கட்டத் தலைவர்கள் ஒழிப்பு
“500 இரண்டாம் கட்டத் தலைவர்களை உருவாக்குவேன்” என்று மேடைகளில் வீரவசனம் பேசப்பட்டது. ஆனால் நிஜத்தில், எந்த மாவட்டத்திலும் ஒரு புதிய தலைவனோ, பேச்சாளரோ, எழுத்தாளரோ வளர்ந்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார்கள். கிரியேட்டிவ் சம்பந்தப்பட்ட எவர் உள்ளே நுழைந்தாலும் அடித்துத் துரத்துவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.
“எனக்கு இந்தத் திறமை உள்ளது” என்று அந்த காலகட்டத்தில் ஐடி விங் உள்ளே சென்று அனுமதி கேட்டாலும் உள்ளே நுழைய அனுமதி தர மாட்டார்கள். உங்களைப் பற்றிய சகல விதமான விவரங்களையும் சேகரித்து, உங்கள் பொருளாதாரப் பலத்தைச் சோதித்து, சாதிப் பின்புலத்தையும் அதில் உள்ள பிரிவுகளையும் எல்லாம் ஆராய்ச்சி செய்து, அதன் பிறகு வட்டத்திற்கு வெளியே நிறுத்தி வைப்பார்கள். யார் மூலம் அறிமுகமானவர் என்பது தொடங்கி சிபிஐ போலச் சோதனை செய்து வட்டத்திற்கு வெளியே நிறுத்தி வைத்து விடுவார்கள்.
தப்பித்தவறி யாராவது மத்திய அரசு மற்றும் டெல்லி தலைமைக்கு நேராகச் சென்று வந்துவிட்டால், அவர்களை ‘ஆபரேஷன் சக்சஸ்’ என்ற பெயரில் கட்சியை விட்டே ஓரம் கட்டுவது அல்லது கிரிமினல் தனமான அச்சுறுத்தல்கள் மூலம் முடக்குவது போன்ற வேலைகள் நடந்தன.
சீனியர் தலைவர்கள் தன் பேச்சுக்கு எதிர்த்துப் பேசிவிடக் கூடாது என்பதற்காக, சமூக ஊடகக் கூலிப்படைகளைக் கொண்டு சொந்தக் கட்சித் தலைவர்களையே அவதூறு செய்து மிரட்டி வைத்திருந்தார்கள்.
மத்திய அரசு ஏஜென்சிகளை வைத்து மிரட்டல் மற்றும் ‘விஞ்ஞானப்பூர்வ’ ஊழல்
திமுகவை எதிர்ப்பது போல ஒரு மாயத் தோற்றத்தை வெளியில் காட்டிவிட்டு, உள்ளுக்குள் ஆளுங்கட்சியுடன் நூறு சதவீதம் விஞ்ஞானப்பூர்வமான டெக்னாலஜி கலந்த கிரிமினல் வர்த்தக உடன்பாடுகளை (Business Pacts) இந்தக் கிரிமினல் தரப்பு செய்து கொண்டதை ஆரம்பத்தில் யாரும் நம்பவில்லை.
ஆவணங்களை எடுத்த மத்திய அமைச்சர்:
செந்தில் பாலாஜி போன்றவர்களின் நிழல் மனிதர்களாக யார் செயல்பட்டார்கள், இந்த ‘சர்வீஸ்’ காலத்தில் எவ்வளவு கேவலமான பணப் பரிமாற்றங்கள் நடந்தன என்பதற்கான ஆவணங்களை, 40 வருட அரசியல் அனுபவம் மிக்க மத்திய அமைச்சர் ஒருவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் கண்டுபிடித்து ஐபி (IB) அதிகாரிக்கு அறிக்கையாக அனுப்பி வைத்தார்.
ஆனால், இதனை நிர்மல் குமார் வெளிப்படையாகக் கட்சியை விட்டுச் செல்கின்றபோது சொன்னபோது எவரும் நம்பவே இல்லை. இன்று பிரபல்யமாக பேசப்படும் பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்ற விஷயத்தை முதல் முதலில் வெளியே கொண்டு வந்தவர் நிர்மல் குமார். அவர் இவ்வாறு கொண்டு வந்ததும் செ பாலாஜி நிர்மல் குமார் மேல் வழக்கு தொடுத்தார்.
நிர்மல் குமார் உடனே அந்த வழக்கை எதிர்கொண்டார். இதை செ பாலாஜி எதிர்பார்க்கவில்லை. உடனே அந்த வழக்கை வாபஸ் வாங்குங்கள் என்று நிர்மல் குமாருக்கு இவனிடமிருந்து அழுத்தம் உருவாக்கப்பட்டது. ஆனால் உங்கள் வேலை என்னவோ அதை மட்டும் பாருங்கள் என்று நிர்மல் குமார் சொன்ன புள்ளியிலிருந்து அவரை தூக்கும் வேலையை தொடங்கினான்.
பட்டியல் போட்ட டெல்லி:
ரவிச்சந்திரன் என்கிற உழவு அதிகாரி ஒருவனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பலவீனங்களை அறிமுகப்படுத்தி எந்த ரிப்போர்ட் மேலே செல்லாமல் தடுத்த கெட்டிக்காரன். தனிப்பட்ட கட்சிக்காரர்கள் எந்த அறிக்கை கொடுத்தாலும் தொடக்கத்தில் டெல்லி அதை புடுங்கையால் தள்ளி விட்டார்கள்.
ஆனால் வேறு சில விஷயங்கள் இந்திய இறையாண்மை பாதிக்கக்கூடிய விஷயங்கள் காதுக்கு வரவர உஷாராகி விட்டார்கள். டெல்லி உளவு அமைப்புகளின் அறிக்கைகள், ஆவணங்கள் அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து, “இவ்வளவு மோசமான கிரிமினலை இத்தனை நாள் எப்படி நம்பினோம்?” என்று டெல்லி தலைமை அதிர்ந்து போனது.
பிளாக் மெயில் பாலிடிக்ஸ் என்பதன் முழு அர்த்தத்தை இந்த சின்ன வயதில் செய்த போதும் அவர்களால் முதலில் நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. அதன் பிறகு உஷாராகி விட்டார்கள்.
அதன் பிறகுதான் டெல்லி வாசல் முழுமையாக அடைக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள மற்ற எந்த மாநிலங்களிலும் பொறுப்பில் இருக்கக்கூடிய, பதவியில் இருந்த எவரும் இவனைத் தொடர்பு கொள்ளவே அச்சப்பட்டு, அழைப்பு வந்தாலும் எடுப்பதைத் தவிர்க்கத் தொடங்கினர்.
வாக்குச் சிதறல் பேரம்:
திமுக தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் இருக்க, சிதறக்கூடிய ஓட்டுகளை வெவ்வேறு பக்கம் திருப்பக்கூடிய வேலைக்காகவும், எதிர் ஓட்டுகளை மாற்றக்கூடிய வேலைக்காகவும் வருடம் தோறும் ஒரு தொகையை வாங்க வேண்டும்; ஆனால் பாஜக தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டே இவற்றைச் செய்ய வேண்டும், “கட்சி வளர்க்கிறேன்” என்ற எண்ணத்தை மக்களிடம் விதைக்க வேண்டும், மற்றொரு பக்கத்தில் பணம் சம்பாதிப்பதைத் தெளிவாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மத்திய பாஜகவிடம் பலரும் சொன்னபோது அவர்கள் நம்பவில்லை.
இப்போதுதான் உறுதியாக நம்பத் தொடங்கிவிட்டார்கள். இது தவிர அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற மற்ற அனைத்து ஏஜென்சிகளையும் வைத்துக்கொண்டு மிரட்டிச் சம்பாதித்த அத்தனை தொகையையும் இப்போது டெல்லி தலைமை பட்டியல் போட்டு எடுத்து வைத்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வெற்றியும், பேரமும்
தற்போது தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் அசாத்தியமான வாக்கு சதவீதத்தைப் பெற்று விஜய் முதலமைச்சராக அமர்ந்துள்ளார். அவரை நேரடியாகத் தாக்க திமுகவிடம் சரியான ஆள் இல்லாததாலும், பயத்தாலும், தங்களின் பழைய ‘அடியாளான’ சின்ன கருணாவைப் பயன்படுத்தத் திட்டம் படிப்படியாகத் தீட்டப்பட்டது.
TVK – அக்கா, அண்ணா, தம்பி, தங்கை, அப்பா, அம்மா என ஒரு பெரிய குடும்ப நெட்வொர்க்கை உருவாக்கி, வாக்காளர்களைச் செண்டிமெண்டாக இணைத்து வாக்குகளாக மாற்றினார்கள்.
War Room – அடுத்தவர்களின் அந்தரங்கங்களைத் தோண்டித் துருவி, வீடியோ எடுத்து மிரட்டும் கேவலமான வேலைகளை மட்டுமே செய்தது.
TVK – விளம்பரமே இல்லாமல் அடிமட்ட மக்களிடம் சோசியல் மீடியா வீடியோக்கள் பல கோடி பார்வைகளைக் கடந்து தேர்தல் வெற்றியைத் தந்தது.
War Room – தேர்தலில் இரண்டு முறை படுதோல்வி அடைந்தும், அதை ஒரு ‘பணம் காய்க்கும் மரமாக’ மாற்றி, நிலம், சொத்துகளாகத் தனியாகச் சேர்த்துக் கொண்டது.
தவெக-வின் வளர்ச்சியைத் தடுக்கத் தங்களுக்கு ஒரு ஆள் தேவை என்ற டெல்லியின் பலவீனத்தைப் பயன்படுத்தி, “நான் அடுத்த 6 ஆண்டுகளுக்கு மாநிலத் தலைவராக இருக்க வேண்டும்”* என்று பேரம் பேசத் தொடங்க அமித்ஷா ரசிக்கவில்லை; மோடி பார்க்கவே விரும்பவில்லை.
அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.25,000 கோடி சேர்த்துவிட்டால், உடல்நலக் குறைவாலோ அல்லது கால ஓட்டத்தாலோ மற்ற அரசியல்வாதிகள் கரையும் போது, நாம் மட்டும் பண பலத்தால் தனித்து நின்று வெல்லலாம் என்ற குறுக்கு வழிப் புத்தியை அமித்ஷா உணர்ந்து கொண்டார்.
டெல்லியில் நடந்த நாடகமும் முடிவும்
“உன்னுடைய சங்காத்தமே வேண்டாம்” என்று பாஜக தலைமை முடிவெடுத்த பின்னும், மாதம் ரூ.25 லட்சம் ஊடகங்களுக்குச் செலவழித்து, தன் பெயர் மீடியாக்களில் வந்துகொண்டே இருக்கச் செய்ததினால் ஒன்றும் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது.
டெல்லிக்கு அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமலேயே சென்று இறங்கி, *”என்னைச் சந்தித்தே தீர வேண்டும்”* என்று ஊடகங்கள் மூலம் நிர்பந்தத்தை உருவாக்க முயன்றதை ஊடகங்கள் இடம் தன் பணத்தை வைத்து கதை திரைக்கதையாக மாற்றியதில் வெற்றி பெற்றாலும் டெல்லியும் விட்டுக் கொடுக்கவில்லை.
நம்பிக்கைத் துரோகிகளையும், பணத்திற்காகத் தன் இருப்பையே காட்டிக் கொடுப்பவர்களையும் மத்திய பாஜக எப்படி அக்குவேறு ஆணிவேராகக் களையும் என்பதற்கு, கடந்த 13 மாதங்களாக கொடுக்கப்பட்ட ‘அவமானங்களே’ சாட்சி.
இதன் பின்னணியாக இருந்த அமைப்புப் பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் போன்றவர்கள் வெளியேற்றப்பட்டு, பீகாரிலிருந்து புதிய நபர்கள் உள்ளே கொண்டு வரப்படுகிறார்கள். கட்சி வளர்கிறதோ இல்லையோ, உள்ளே இருக்கும் ‘நாகப்பாம்புகளை’ அடித்து நொறுக்க வேண்டும் என்பதில் டெல்லி தலைமை உறுதியாக உள்ளது.
இளைஞர்களுக்கான பாடம்:
ஆங்கிலத்தில் பேசுவதாலோ, நாஞ்சில் சம்பத்துகளாக மாறுவதாலோ ஒன்றும் தமிழகத்திற்கு நடந்து விடப் போவதில்லை. பந்தா காட்டுவதாலோ ஒருவன் நல்ல தலைவனாகி விட முடியாது.
உறுதியான கொள்கையும், நேர்மையும் இல்லாமல், மனிதர்களை ஏமாற்றிப் பிழைக்க வந்த ‘சின்ன கருணாநிதி’களுக்குக் காலம் மிக விரைவாகவே பாடம் புகட்டும் என்பதற்கு இந்த 13 மாத வீழ்ச்சியே தற்போதைய மிகச் சிறந்த உதாரணம்!
( மேற்படி கட்டுரையை எழுதி இருப்பவர், ஜோதி கணேசன் என்னும் தமிழக பாஜக பிரமுகர்… !!! )
………………………………………………………………………………………………………………………………………….









இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…