ஏ.ஆர்.ரெஹமான் சொன்னதற்கு – வாலியின் விளக்கம்… “நிஷ்காம்ய கர்மா” –

…………………………………………..

…………………………………………

கவிஞர் வாலி அவர்கள் விகடனில்
எழுதிய ஒரு கட்டுரையில் “நிஷ்காம்ய கர்மா” விற்கான
மிக சுவாரஸ்யமான நடைமுறை விளக்கங்களை
தந்திருந்தார் ….

கீழே -முதலில் வாலி அவர்களின் கட்டுரையும்
பின்னர் வேறு சிலவும்….

——————————————————————-

‘கடவுள் இல்லை;
கடவுள் இல்லை;
கடவுள் இல்லவே இல்லை!’

-சிவாஜி, பிரபு நடித்த ‘சுமங்கலி’ என்னும் படத்தில் இந்தப் பாட்டு!
எழுதியது நான்; இசையமைத்தது திரு.எம்.எஸ்.வி; பாடியது திரு.
டி.எம்.எஸ்.

நாங்கள் மூவரும் அக்மார்க் ஆத்திகர்கள்.

பிரபு நடித்து – இந்தப் பாட்டு, தி.நகர் பஸ் நிலையம் அருகே
இருக்கும் பெரியார் சிலையைச் சுற்றிப் படமாக்கப்பட்டது,
டைரக்டர் திரு.யோகானந்தால்!

கடுமையான கடவுள் நம்பிக்கை உடைய நானும், எம்.எஸ்.வி-யும்;
டி.எம்.எஸ்-ஸும் இந்தப் பாடலை – நூறு விழுக்காடு ஈடுபாட்டோடு
உருவாக்கினோம்.

இதற்குப் பெயர்தான் ‘நிஷ்காம்ய கர்மம்’. விருப்பு வெறுப்பின்றி –
நமக்கிட்ட பணியைச் செவ்வனே செய்வது தான், ‘நிஷ்காம்ய கர்மம்’.

…………………………………………………………………

‘காலையில் தினமும்

கண் விழித்தால் நான்

கைதொழும் தெய்வம் அம்மா!’

– ‘நியூ’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நான் எழுதிய பாட்டு.

ஒலிப்பதிவு எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் –

“வாலி சார்! எங்க மதத்துல, தெய்வத்தையும் தாயையும் ஒண்ணா
சொல்லக் கூடாதும்பாங்க… ‘தெய்வம்’கிற வார்த்தைக்குப் பதிலா
ஏதாவது சொல்லுங்க சார்!” என்று ரஹ்மானிடமிருந்து ஃபோன்
வந்தது.

“ய்யோவ்! என்னய்யா நீ… இதெல்லாம் ஒரு தவறா எடுத்துண்டு…

சரி… சரி… தெய்வம்கிறதுக்குப் பதிலா ‘தேவதை’ன்னு வெச்சுக்கோ!”
என்று மாற்றிக் கொடுத்தேன்.

……………………………………………….

பரத்பூஷண், மீனாகுமாரி நடித்த படம் ‘பாய்ஜூபாவ்ரா’….!!!
ஓர் இந்துக் கவிஞனைப்பற்றியது.

அதில் ‘ஓ! பகவான்!’ என்று இந்துக் கடவுளை விளித்து –
தர்பாரி கானடாவில் ஓர் அற்புதமான பாட்டு!

இசையமைத்தவர் திரு.நவுஷத் அலி; இசுலாமிய
நோன்புகளிலிருந்து இம்மியளவும் விலகாதவர்.

இந்தப் பாடலைப் பாடியவர் உலகு புகழ் உஸ்தாத்
திரு. படேகுலாம் அலிகான் அவர்கள். மூன்று காலங்கள்
அநாயாசமாக சஞ்சாரம் செய்யவல்ல சாரீரம்!
(படேகுலாம் அலிகான் அவர்கள் இந்தப்பாடலை
மேடையில் பாடுவது உண்டு; ஆனால், திரைப்படத்தில்
இதைப்பாடியவர் மொஹம்மது ரஃபி அவர்கள்…)

நம்ம ஊர் திரு. ஜி.என்.பி-யே – படேகுலாம் அலிகான்
கச்சேரியை, மியூசிக் அகாடமியில் கேட்டுவிட்டு – அவர்
பாதங்களில் விழுந்து பரவியவர்.

திரு. நவுஷத் அலிக்கும், படேகுலாம் அலிகானுக்கும்
சமயப்பற்று இல்லையா?

ஆயினும் அவர்கள் கடைப்பிடித்தது
– ‘நிஷ்காம்ய கர்மம்’; இந்தப் பாட்டோடு அவர்களுக்கு இருந்த
சம்பந்தம், படத்தளவே!

………………………………………………….

திரு.பாலுமகேந்திரா இயக்கிய படம் – ‘ராமன் அப்துல்லா’.
இந்தப் படத்தில் திரு. இளையராஜா இசையில், நான் ஒரு
பாட்டு எழுதினேன்.

‘ஆண்டவன் எந்த மதம்?

இந்துவா? இசுலாமா? கிறித்துவமா?’

– என்று வரும் இந்தப் பாட்டை – முழுமுதற் கடவுளாக
அல்லாவையே முப்பொழுதும் கருதி – அஞ்சு வேளை தொழுகை
புரியும், திரு. நாகூர் அனிபா அவர்கள் பாடினார்கள்.

பாடல் வரிகளைப் பார்த்து, அவர் மறுக்கவில்லை; அற்புதமாகப்
பாடினார், தானொரு தாமரை இலைத் தண்ணீராக இருந்து!
இதுதான் ‘நிஷ்காம்ய கர்மம்’ ….!

……………………………………..

கும்பகோணம் திரு. ஏ.டி.சுல்தான் அவர்கள் அற்றை நாளில்
ஓர் அருமையான கர்னாடக சங்கீத வித்வான்!

தியாகராஜரையும், தீட்சிதரையும் – அவர் பாடி
நான் கேட்டிருக்கிறேன்!

கடையநல்லூர் திரு. மஸ்ஜீத் அவர்கள் முருகன் பாடல்களைப்
பாடி – ஒலிப்பதிவு நாடாக்கள் வந்திருக்கின்றன!

மகாபாரதத்தில் ஒரு கதை. ஒரு மகா முனிவன், தருக்கும்
செருக்கும் ஏறி நிற்பவன்-

ஒரு குடும்பப் பெண்ணிடம் குட்டுப்படுகிறான். அவள், எங்கோ
இவன் ஒரு கொக்கைக் கொன்றதைப் பேசுகிறாள்.

‘தருமம் யாதென முழுமையாய்த் தான் அறியவில்லை’ என்று
அந்த முனிவன் ஒப்புக்கொண்டு –
அதைத் தனக்குக் கற்பிக்கும்படி அந்தப் பெண்ணை
வேண்டுகிறான்.

அவள் – ஒருவன் பெயரைக் குறிப்பிட்டு, அங்கு போய் அவனிடம்
அறத்தை அறிந்துகொள் என்கிறாள்.

அந்தப் பெண் குறிப்பிட்ட தர்மிஷ்டனின் பெயர் ‘தரும வியாதன்’;
அவனிடம் முனிவன் சென்று, தனக்கு தர்மத்தை உபதேசிக்க
வேண்டுகிறான்.

‘இரு; என் வேலையைச் செய்துவிட்டு வருகிறேன்!’ என்று
அவன் ஆட்டை வெட்டுகிறான்;

ஆம்! அவன் கசாப்புக் கடை
வைத்திருப்பவன்….!

………………………………………………………………..

வேதபாராயணங்கள்; ஹோமங்கள்; ஆகியவற்றின் முடிவில்
இந்துக்களால் உச்சரிக்கப்படுவது – ‘ஓம்! சாந்தி! ஓம்!’

இந்தப் பெயரில் வந்து பெரும் வெற்றி பெற்ற படத்தின்
கதாநாயகன் – ஷாரூக் கான்; இயக்குநர் புகழ்வாய்ந்த
CHOREOGRAPHER ஆன, ஒரு முஸ்லீம் பெண்மணி!

B.R.சோப்ராவின் புகழ்வாய்ந்த ‘மகாபாரதம்’ டி.வி. சீரியலுக்கு
உரையாடல்கள் எழுதியவர் – மகா மேதையான ஓர்
உருதுக் கவிஞர்….!!

……………………………..

சுருக்கமாக நான் சொல்ல வருவது என்னவென்றால்…

படங்களில் பாட்டுகள், வசனங்கள் எழுதப்படுவதெல்லாம் –


கதைகளில்
காணுகின்ற
சமயத்துக் கேற்றபடி;

– சமயத்துக் கேற்றபடி அல்ல….!!!

நன்றி: விகடன்

வாலி அவர்களின் விளக்கம் இதோடு முடிந்தது.


————————————————————————————–

நிஷ்காம்ய கர்மா பற்றி ரமண மகரிஷி தனது செயல் மூலம்
இதை அழகாக விளக்குகிறார்.

….

….

முன்பொரு சமயம், ரங்காச்சாரி என்ற பெயர் கொண்ட
தெலுங்கு பண்டிதர் ஒருவர் ரமண மகரிஷியிடம்
‘நிஷ்காம்ய கர்மம்’ பற்றி கேட்டார்.
ரமணரிடம் இருந்து பதிலே இல்லை. சிறிது நேரத்திற்கு
பின்னால், ஒரு குன்றின் மேல் ஏறி நடக்கலானார்.
கேள்வி கேட்ட பண்டிதரும் இன்னும் சிலரும், ரமணரை
தொடர்ந்து நடக்கலானர்.

கீழே தரையில் இருந்த ஒரு முட்கள் நிறைந்த குச்சியை
கையில் எடுத்தார் ரமணர். பின்னர் ஓரிடத்தில் அமர்ந்து
கொண்டு மெதுவாக, அந்த குச்சியில் இருந்த முட்களை
நீக்கலானார்..!.

அந்த குச்சியின் முடிச்சுகளை நேராக்கினார். பின்னர் ஒரு
தடினமான இலையைக் கொண்டு, அந்த குச்சியை
வழவழப்பானதாக மாற்றினார். சுற்றி இருந்தவர்கள் இவர்
என்ன செய்கிறார் என்று வியந்து கொண்டு இருந்தார்கள் !

சற்று நேரத்தில் பக்கத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டு
ஒரு சிறுவன் அந்தப் பக்கம் வர எல்லோரும் ஒதுங்கி
ஆடுகளுக்கு வழி விட்டனர். அந்த சிறுவன் கையில் குச்சி
இல்லாமல், ஆடுகளை வழிப்படுத்த சிரமப்பட்டுக் கொண்டு
இருந்தான்!

இதைப் பார்த்த உடனே ரமணர், தன் கையில் இருந்த
புதுக் குச்சியை, அந்த சிறுவனுக்கு கொடுத்து விட்டு
அங்கிருந்து நகர்ந்தார் ரமணர்!.

ரமணரிடம் கேள்வியெழுப்பிய பண்டிதருக்கு –
இதைப்பார்த்த பின்னை வேறு விளக்கம் ஏதும்
தேவைப்படவில்லை.

———————————————————

பின் குறிப்பு – வாலி அவர்கள் இந்த கட்டுரையில்
குறிப்பிடும் “பாய்ஜு பாவ்ரா” பாடல் பற்றி நான்
ஏற்கெனவே விமரிசனம் வலைத்தளத்தில் என் விருப்பம்
பகுதியில் எழுதியிருக்கிறேன்.

அற்புதமான அந்தப்பாடலை -நாளைக்கு,
அடுத்த பதிவில் வெளியிடுகிறேன்.

.

……………………………………………………………………………………………………………………………………………………

Posted in அரசியல் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

யுனெஸ்கோ புகழ்பெற்ற கோட்டை – Alhambra ….. !!!

This gallery contains 4 photos.

………………………………….. …………………………………… ……………………………………….. …………………………………………………………………………………. History of Alhambra – in short 1) It started as a fortress in the 9th century. 2) In the 13th century, the Nasrid dynasty transformed it into the stunning palace we see today. 3) After the Reconquista in 1492, the … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உலகை ஏமாற்றும் அமெரிக்கா –  R&AW spymaster – விக்ரம் சூட் பேட்டி – (பகுதி-2)

This gallery contains 1 photo.

…………………………………………… ……………………………………………….. பகுதி 2 5. வெனிசுலா மற்றும் ‘லோக்கல் தாதா’ அமெரிக்கா – வெனிசுலாவில் அமெரிக்காவின் தலையீட்டைப் பற்றி சூட் பேசுகிறார். “முன்பு அவர்கள் அமைதி காப்பவர்களாகவும், ஜனநாயகத்தை மீட்டெடுப்பவர்களாகவும் நடிக்க அதிக சிரத்தை எடுத்தார்கள். இப்போது அதெல்லாம் முடிந்துவிட்டது. இப்போது அவர்களின் நிலைப்பாடு: ‘நான் ஒரு லோக்கல் தாதா. எனக்குத் தோன்றியதைச் செய்வேன். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஓரு முன்னாள் ‘ரா’ (R&AW) தலைவரின் வெகு சுவாரஸ்யமான பேட்டி – விக்ரம் சூட் (பகுதி-1)

This gallery contains 1 photo.

………………………………………………. …………………………………………………. ஸ்வராஜ்யா பத்திரிகையில் வந்த மிக சுவாரசியமான ஒரு கலந்துரையாடல். மிகவும் விறுவிறுப்பாக இருந்த காரணத்தால் இதை முழுதும் மொழிபெயர்த்து பகிர வேண்டும் என்ற ஆசைப்பட்டேன். அதிக பக்கங்கள் கொண்ட காரணத்தால் இதை இரண்டாகப் பிரித்து பகுதி ஒன்று பகுதி இரண்டு என்று பகிர்கிறேன். இந்த உரையாடல் அவரது சமீபத்திய புத்தகமாகிய கிரேட் பவர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

3262 நாட்கள் ( 9 ஆண்டுகள் )ஜெயிலிலேயே …. !!!

This gallery contains 2 photos.

………………………………. ………………………………. நேருவுக்கு ‘கிரிமினல்’ பட்டம் கொடுக்கிறார் ஓரு மத்திய அமைச்சர். ’நேரு இந்தியாவை அவமதித்தவர்’ என்று தூற்றுகிறார் ஒரு பெண் எம்.பி. ‘ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற வேண்டும்’ என்கிறார் இன்னொரு அரசியல்வாதி … இன்னும் சிலர் -நேரு நினைவு அருங்காட்சியகத்தையே அடையாளம் மாற்ற ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர் …. நாடாளுமன்றத்திலும் வாய்ப்பு கிடைக்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

புத்தராவது எப்படி …??? பாலகுமாரன் ….

This gallery contains 1 photo.

……………………………………………… ……………………………………………………………. பல ஜென்மங்கள் எடுத்தபிறகு கௌதமர் என்ற அரசர் குமாரனாக பிறந்து புத்தம் என்ற நிலையை அடைந்தார். அதற்கு முன்பு பல பிறவிகள் எடுத்து தன்னை உயர்த்திக் கொண்டார். இந்த முறை போதிசத்துவர் ஒரு காலநிதி கணக்கனாக ஒரு ஊரில் பிறந்தார். பார்த்த உடனேயே பிரசன்னம் சொல்லுவது போல பல நேரத்து கோள்களை நினைவில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

காதலையும், காமத்தையும் கூட அழகாகச் சொன்ன – சென்சார் போர்டை திணறடித்த கவிஞர் கண்ணதாசனின் வரிகள் ……!!!

This gallery contains 1 photo.

……………………………….. ……………………………… தணிக்கை அதிகாரியாக இருந்த சாஸ்திரி என்பவர் கண்ணதாசனுக்குப் போன் போட்டு சொன்னாராம் … ” இந்தப் பாட்டோடு பொருளைக் கேட்டால் கத்திரிக்கணும்போல தோணுது. ஆனால் நீங்க சொல்லியிருக்கும் விதத்தைப் பார்த்தால் கத்திரிக்க முடியல. எங்களையே அசர வைக்குது….” என்று. பாசமலர்…..திரைப்படம். இதில் வரும் பாடல் தான் இது. பாடியவர் எல்.ஆர்.ஈஸ்வரி. இந்தப் பாடலில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக