ஜெயலலிதா அவர்கள் மீது கனிமொழி அவர்கள்
தொடுக்கும் வழக்கை எதிர்பார்த்து – மக்கள் ஆவலுடன்
காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன !
நெய்வேலியில் நடைபெற்ற கூட்டத்தில் தனது நற்பெயருக்கு
களங்கம் விளைவிக்கும் முறையில் பேசியதற்காக
3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்
தவறினால் மானநஷ்ட வழக்கு போடப்போவதாகவும்
ஜெயலலிதா அவர்களுக்கு கனிமொழி
அவர்களின் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக செய்தி
வெளியாகி உள்ளது !
இன்று வெளியாகி இருக்கும் செய்திகளின்படி
இந்த நோட்டீசில் வக்கீல் கூறியிருப்பதாவது –
———————————————————
‘முதல்வரின் மகள் என்ற முறையில்,
தனக்கு நெருங்கியவர்களுடன் சேர்ந்து சட்டவிரோதமாக
ரூ.2000 கோடி சம்பாதித்துள்ளதாக, முற்றிலும் பொய்யான,
மிக மோசமான குற்றச்சாட்டை எமது கட்சிக்காரர் மீது
கூறியிருக்கிறீர்கள்.
தமிழ், கலை, மற்றும் கலாசாரத்தை மிக உயர்ந்த நிலைக்கு
எடுத்துச் செல்லும் பொது சேவைக்கு தனது நேரத்தை
செலவிட்டு வரக் கூடிய நேரத்தில் உமது இந்தக் கருத்துகள்
வெளியாகியுள்ளன.
எமது கட்சிக்காரருக்கு தமிழகத்தில் மட்டுமின்றி உலகெங்கும்
தமிழர்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் நற்பெயர் இருக்கிறது.
அந்த நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் முயற்சியாக
உங்கள் கருத்துகள் அமைந்திருப்பதாக எமது
கட்சிக்காரர் கருதுகிறார்.” –
—————————————
ஜெயலலிதா அவர்கள் குணம் அனைவரும் அறிந்ததே . அவர்
நிச்சயம் இதற்கு பதிலே அளிக்க மாட்டார்.
கன்னா பின்னா என்று குற்றசாட்டுக்களை அள்ளி வீசிவிட்டு
தப்பிபோகின்றவர்களை சும்மா விட்டுவிடக்கூடாது !
எனவே கனிமொழி அவர்கள் வெறும் வக்கீல் நோட்டீசுடன்
நின்று விடாமல் இந்த வழக்கை நீதிமன்றம் வரை தொடர்ந்து
எடுத்து சென்று நீதி கேட்க வேண்டும் –
ஏனென்றால் தொடர்ந்து பலர் குற்றசாட்டுக்களை
பொறுப்பில்லாமல் அள்ளி வீசிக்கொண்டே இருப்பதால்
கனிமொழி அவர்கள் இந்த குற்றசாட்டுகளை எல்லாம்
தவிடுபொடியாக்க இந்த வழக்கைப் பயன்படுத்திக்கொள்ள
வேண்டும் என்று தமிழக மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து
காத்து கொண்டிருக்கிறார்கள்
வழக்கு விசாரணைக்கு வரும்போது பல விவகாரங்கள்
கிளப்பப்படலாம் !
அவற்றில் சில –
சென்னை துறைமுகத்தில் அவருக்கு கப்பல் துறை பாலுவின்
மூலமாக ஏற்படுத்திக்கொடுக்கப்பட்ட வியாபாரத் தொடர்புகள்,
லோடிங் அன்லோடிங் காண்டிராக்டுகள்
புதிதாக துவங்கப்பட்ட கம்பெனிகள்,
அவற்றின் பொருளாதார நிலை மற்றும் வருமானம்
குறித்த குற்றசாட்டுகள் –
ஸ்பெக்ட்ரம் புகழ் ராஜாவின் துணையுடன் துவங்கப்பட்டதாக
சொல்லப்படும் கம்பெனிகள் ,தொழில்கள், முதலீடுகள் மற்றும்
அவற்றின் மூலம் கிடைத்த பயன்கள் – மற்றும்
ராஜாவிற்கும் அவருக்கும் உள்ள
வியாபார ரீதியிலான தொடர்புகள் –
சங்கமம் நிகழ்சிகள் பற்றிய மேல் விவரங்கள் –
அவர் நண்பர் ஜெகத் கஸ்பர் அவருடன் சேர்ந்து ஆற்றும்
பணி எத்தகையது –
திருச்சி ராமஜெயத்துடன் அவர் அடிக்கடி கலை மற்றும்
தமிழ் வளர்ச்சி குறித்து கலந்துரையாடல் செய்வது –
அவரது வக்கீல் கூறியுள்ளது போல் தமிழ் கலை மற்றும்
கலாசாரத்தை மிக உயர்ந்த நிலைக்கு அவர் எந்தெந்த
வழிகளில் எடுத்துச் செல்லுகிறார் –
மற்றும் அவரது பொது சேவை பற்றிய அரிய விவரங்கள் –
மேலும் அவரது வக்கீல் கூறியது போல் எந்தெந்த
விதத்தில் எல்லாம் – தமிழகத்தில் மட்டுமின்றி உலகெங்கும்
தமிழர்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் அவருக்கு
நற்பெயர் இருக்கிறது. –
இது போல் இன்னும் பல குற்றசாட்டுகளை
அள்ளி வீசும் பொறுப்பற்ற எதிரிகளின் முகத்தில்
மலேசியா நிலக்கரியைப் அள்ளிப்பூசவாவது
அவர் அவசியம் இந்த வழக்கை வெறும்
வக்கீல் நோட்டீசுடன்
நிறுத்திக்கொள்ளாமல் நீதிமன்றம் வரை
போக வேண்டும் என்று மக்கள் விரும்புவதால் –
மக்கள் இந்த வழக்கு நீதி மன்றத்திற்கு வரும் நாளை
ஆவலுடனே எதிர்பார்க்கிறார்கள் !
சம்பந்தப்பட்டவர்கள் ஏமாற்றாமல் இருப்பார்களாக !



Thiruvengadam Thirumalachari, Welcome Thiruvengadam Thirumalachari Sir... I am happy to see you here after long time ... with best wishes,…