கலைஞரும், குஷ்புவும், சினிமாவும், தமிழர்களும் !
85 வயது இளைஞர் கருணாநிதி தலைமையில் குத்தாட்டம்

அதென்னவோ தெரியவில்லை – சினிமாக்காரர்களும்
முதல்வரும் இப்படி பசை போட்டு ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள் !
பொழுது விடிந்தால், பொழுது போனால் சினிமாக்காரர்களுடன்
கொஞ்சிக் குலவிக்கொண்டிருப்பதே முதல்வருக்கு முதல்
வேலையாகி விட்டது.தொடர்ந்து துணைக்கு ஒரு பக்கம்
ராமநாராயணன் இன்னொரு பக்கம் வைரமுத்து !
சென்ற வாரம் -தமிழ்நாடு அரசின் பரிசளிப்பு விழாவில்
இவர்கள் அடித்த கூத்து ! அடடா – காணக்கண் கோடி வேண்டும் !!!
85 வயது இளைஞர் முதல்வர் தலைமையில்,
முன்னிலையில் அரைகுறை ஆடையில் குத்தாட்டம் !
(கோடிக்கண்கள் காண்பதற்காகவே விரைவில் –
கலைஞர் தொலைக்காட்சியில் விசேஷ
ஒளிபரப்பும் வரும் !)
நிகழ்ச்சி அறிவிப்பாளர் குஷ்பு !( ராதிகா அலுத்து
விட்டார் போலிருக்கிறது கலைஞருக்கு !)
நிகழ்ச்சி அறிவிப்பாளராக குஷ்புவை கலைஞர் தேர்ந்தெடுத்ததே
ஒரு கேலிக்கூத்து. இந்த வயதில் இவருக்கு ஏன் இது
போன்ற ஆசைகள் ? பிறகு – குஷ்பு பேசியபின்னரும்
தமிழ் உயிருடன் இருக்கிறது என்று கிண்டல் வேறு.
எழுந்து நிற்க உடம்பு ஒத்துழைக்கவில்லை என்ற சாக்கில்,
பரிசு வாங்குபவர்களை எல்லாம் கட்டாயமாக காலில்
விழ வைக்கும் விபரீத மடாதிபதி ஆசை !
வெளிப்படையாகவே – தனக்குத்தானே அவார்டு
கொடுத்துக்கொண்ட பெருமை இந்த உலகிலேயே
இவர் ஒருவருக்குத் தான் இருக்க முடியும் !
திரைப்படத்துறையினரால் இவருக்கு ஆதாயமா ? இல்லை –
இவரது பலவீனத்தை திரைத்துறையினர் பயன்படுத்திக்
கொள்கின்றார்களா ?
திரைத்துறை இவரது சுய விளம்பரத்துக்கு உதவுகிறது
என்பதற்காக பொதுமக்களை பாதிக்கும் விதத்தில்
அசட்டுத்தனமான நிர்வாக உத்திரவுகள் !
இந்த வரிசையில் மேலே நிற்பது –
நேற்று அறிவிக்கப்பட்டுள்ள –
அமைச்சர் பரிதி இளம்வழுதியின் தலைமையிலான
திரைப்படத்துறைக்கான நல வாரியம்.
இவர் முதலில் அமைக்க வேண்டியது –
திரைத்துறையினரால் சீரழிக்கப்படும் பொதுமக்களைக்
காப்பாற்றத் தேவையான ஒரு மக்கள் நல
வாரியம் தான்.
சினிமா என்கிற மீடியாவின் கவர்ச்சியையும்,
சினிமா மோகம் என்கிற மக்களின் பலவீனத்தையும்
பயன்படுத்திக்கொண்டு திரைப்படத்துறையினர்
தமிழ் மக்களை பல விதத்திலும் தொடர்ந்து ஏமாற்றிக்
கொண்டே வருகிறார்கள். சுரண்டிக் கொண்டே
வருகிறாரகள் -இதற்கு அதிகாரபூர்வமான
அங்கீகாரம் தான் நமது மதிப்பிற்குரிய முதலமைச்சர் !
தமிழில் பெயர் வைத்தால் போதும்.கேளிக்கை வரி
கட்ட வேண்டாம் ! படம் எவ்வளவு மட்டமாக,
ஆபாசமாக இருந்தாலும் யாருக்கும் கவலை இல்லை.
ஷகீலா, மும்தாஜ் படத்துக்கும், நமீதா படத்துக்கும்
கூட வரிச்சலுகை !
90 சதவீதம் திரை அரங்குகள் வியாதிக்கூடங்களாகவே
இருக்கின்றன. திரை அரங்குகளில், பாத்ரூம்களில்
உள்ளே நுழையவே முடியாத அளவுக்கு நாற்றம்.
எந்த திரை அரங்கிலும் குடிநீர் வசதி கிடையாது.
தின்பண்டங்கள், டீ,காப்பி, குளிர்பானம் –
இஷ்டத்திற்கு விலை.
குளிர்சாதன வசதிகளை சரியான அளவில்
இயக்குவது கிடையாது.படம் முடிவதற்கு 20 நிமிடம்
முன்பாகவே குளிர்சாதனம் நிறுத்தப்பட்டு விடுகிறது.
இருக்கைகளிடையே போதிய இடைவெளி இல்லாமல்
பெண்கள் வெளியே சென்று வருவது
பெரும்பாடாக இருக்கிறது.
நுழைவுக் கட்டணமோ – எந்தவித கட்டுப்பாடுமின்றி
அவரவர் இஷ்டம் போல் ஊருக்கு ஒரு கட்டணம்
வசூலிக்கிறார்கள்.
திருச்சியில் அஜித், விஜய், சூர்யா, விக்ரம்,
கமல், படங்கள் வந்தால் இரண்டே வகுப்புகள் –
150 ரூபாயும், 100 ரூபாயும்.
சென்னையிலேயே சைதாப்பேட்டை ராஜில்
இரண்டே வகுப்புகள் தான் –
60 ரூபாய், 40 ரூபாய்.
சென்னை நகரில் உள்ள ஐநாக்ஸ், சத்யம் போன்ற –
கார்பொரேட் நிறுவனங்கள் நிர்வகிக்கும்
சில திரைஅரங்குகளைத்தவிர, கிட்டத்தட்ட தமிழ் நாடு
முழுவதும் இதே கதை தான் !
திருவண்ணாமலையில் சூர்யாவின் ஆதவன் படம்
வெளியானபோது அருள் தியேட்டர் முழுவதும்
ஒரே கட்டணம் தான் – 60 ரூபாய்.
இருக்கைகளின் இடையே எல்லாம் செருகப்பட்ட பெஞ்சுகள்.
கிட்டத்தட்ட 1000 இருக்கைகள் .ஒரு காட்சிக்கு ஏறக்குறைய
60,000 ரூபாய் வசூல்.
அதில் ஐந்து காசு கூட -வரி கிடையாது.
இதில் உனக்கென்ன நஷ்டம் என்பீர்கள்
திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த கேளிக்கை வரி
நகராட்சிகளுக்கும், பஞ்சாயத்துகளுக்கும் சொந்தமானது.
எனவே இந்த நிர்வாகங்களுக்கு வரும்படி குறைந்தால் –
நேரடி பாதிப்பு நமக்கு தான் -திட்டங்களும், வசதிகளும்
குறைவது நமக்கு தான்.
முதலமைச்சருக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை –
எனவே ஊரான் வீட்டு நெய்யே – என் பொண்டாட்டி
கையே கதை தான் !
கடைத் தேங்காயை எடுத்து
வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதை என்று
வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் முதல்வர்
பகுத்தறிவாளர் ஆயிற்றே !
அவ்வப்போது திரை அரங்குகளை எல்லாம் பரிசோதித்து,
அவை சரிவர இயங்குவதை உறுதி செய்யும் பொறுப்பு
மாவட்ட அதிகாரிகளுடையது.
சரிவர நிர்வகிக்கப்படாத திரைஅரங்குகளின் லைசென்சை
ரத்து செய்ய மாவட்ட கலெக்டருக்கு முழு அதிகாரம் உண்டு.
ஆனால் இவற்றை எல்லாம் முறைப்படுத்தவோ,
ஒழுங்குபடுத்தவோ யாருக்கும் ஆர்வமில்லை.
யாரும் இயங்க மாட்டார்கள். தலைவரின் ருசி இவர்கள்
எல்லாருக்கும் தெரியும். எனவே யாரும், திரைப்படத்துறை
சம்பந்தப்பட்ட எதிலும் தலையிட மாட்டார்கள் !
தவிரவும்- அவர்களுக்கு தான் அவ்வப்போது இலவச பாஸ்கள்
வீடு தேடி, அலுவலகம் தேடி – போய் விடுகிறதே !




Thiruvengadam Thirumalachari, Welcome Thiruvengadam Thirumalachari Sir... I am happy to see you here after long time ... with best wishes,…