………………………………………..

……………………………………………….
சிங்கப்பூர் பயணத்தில் உணவகப் பணியாளர்கள் பலருடன் உரையாடல் கொண்டேன்.
அவர்களுள் ஒருவர் தோழி தாட்சாயினி; மலேசியாவைச் சேர்ந்தவர். நான்காம் தலைமுறை மலேசியத் தமிழர். தினமும் 3 மணி நேரம் பயணித்து மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பணிக்கு வருகிறார்.
24 மணி நேரம் இயங்கும் உணவகம் அது. தாட்சாயினி’க்கு இரவு 9 முதல் காலை 9 வரை, 12 மணி நேரப்பணி. வேலை முடித்து மீண்டும் 3 மணி நேரம் பயணித்து வீடு திரும்புகிறார்.
வாரம் 6 நாள்கள் பணி. ஆக, நாள் ஒன்றுக்கு இவ்வாறு மொத்தம் 18 மணி நேரம் கழிகிறது.
இவர் கதையை கேட்டு எனக்கு வியப்பு பொருக்கவில்லை. பலரும் இவ்வாறு மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் வந்து பணிபுரிவதாகச் சொன்னார்.
வியப்பு இத்தோடு அடங்கவில்லை. கதைகள் கேட்கக் கேட்க விழிகள் விரிந்தன. மலேசியர்கள் 5-6 மணி நேரம் பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் பணியை நாடும் காரணம் மலேசியாவைக் காட்டிலும் கூலி சிங்கப்பூரில் மும்மடங்கு அதிகம்.
இது ஒருபுறம் இருக்க – மற்றொரு செய்தி அடுத்த அதிர்ச்சியைத் தந்தது. சிங்கப்பூர் உலக அரங்கில் பெரும் நன்மதிப்பைக் கொண்டுள்ள நாடு. ஆகையால் பணியாட்கள் இடையே ஏற்றத்தாழ்வு இருக்காது என ஊகித்திருந்தேன்.
இப்பயணத்தில் அக்கருத்தும் பொய்துப் போனது: சிங்கப்பூர் பணியாட்களிடையே, குடியுரிமை சார்ந்து கூலியில் பெரும் வேற்றுமைகள் உள்ளன.
என் பயணத்தில் சுமார் 30 நபர்களுடன் உரையாடினேன். சிங்கப்பூர் குடிமக்கள்;
சிங்கப்பூரில் பணி புரியும் மலேசியக் குடிமக்கள்;
இந்தியா உட்பட இதர நாட்டுக் குடிமக்கள் என பணியாட்களை மூன்று பிரிவுகளாக வேற்றுமைப் படுத்தி கையாள்கின்றனர்.
சிங்கப்பூரில் ஓர் நிறுவனத்தை துவக்கையில் அத்தொழிலின் துறை சார்ந்து நிறுவனப் பணியாட்களுக்கு அரசு இட ஒதுக்கீடு நிர்ணயிப்பதாகச் சொன்னார்கள்.
அத்தோடு, அடிமட்ட/நடுத்தர பணிபுரியும் இம்மூன்று பிரிவினருக்கிடையே கூலி யில் வேறுபாடு; எ.கா சிங்கப்பூர் குடிமக்களுக்கு கூலி 100$ என்றால்; சிங்கப்பூரில் அதே பணி புரியும் மலேசியப் பணியாளுக்கு 70-80$; இந்தியாவைச் சேர்ந்த பணியாளுக்கு 35-40$.
உணவகம், துப்புரவு நிறுவனங்கள் போன்றவை பணியாட்களை நேரடியாக பணியமர்த்துவதில்லை, தரகு நிறுவனக்கள் மூலமே பணிக்கு ஆள் எடுக்கின்றன. குறைந்த கூலியில் மேலும் ஒரு பங்கை எடுத்துக் கொள்ளும் தரகு நிறுவனங்களும் உள்ளன என்றனர்.
நான் பயணித்த நாடுகளுள் இவ்வாறு வெளிப்படையான ஏற்றத் தாழ்வை வேறெங்கும் கண்டதில்லை. சிங்கப்பூரின் அபார வளர்ச்சிக்கு பின்னால் இதுபோன்ற உழைப்புச் சுரண்டலின் கரை படிந்துள்ளது. இதுநாள் வரை சிங்கப்பூர் மீது நான் கொண்டிருந்த பார்வையை இப்பயணம் பெருமளவில் மாற்றிவிட்டது. ( நன்றி -அஷ்வின் குமார் ராமசுப்பு )
…………………………………………………..
மேற்கண்ட தகவல்கள் சரி தானா….? இன்னுமொரு விஷயம்… தினமும் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் போய் வர என்று தனியே விசா எதாவது இருக்கிறதா …??? சிங்க்ப்பூர் வாசக நண்பர்கள் யாராவது பின்னூட்டத்தில் எழுதுங்களேன்……
……………………………………………………………………………………………………………………………………………………………………………



Thiruvengadam Thirumalachari, Welcome Thiruvengadam Thirumalachari Sir... I am happy to see you here after long time ... with best wishes,…