………………………………………

………………………………………
இன்றைய நாளிதழில் வெளியாகியுள்ள,
நிஜத்தை பிரதிபலிக்கும் – ஒரு செய்திக் கட்டுரை கீழே –
வாஷிங்டன்: டிரம்ப் ஆரம்பித்த வரி விதிப்புகள் இப்போது மிகப் பெரியதாக வெடித்துள்ளது.
சீனாவும் கனடாவும் அமெரிக்காவுக்கு எதிராக வரி விதிக்கப்போவதாக அறிவித்துள்ளன. டிரம்பின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் டிரம்பிற்கு எதிராக வெளிப்படையாகவே கருத்து கூறியிருக்கிறார்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் உலக நாடுகள் மீது வரிகளைப் போட்டு வருகிறார். சீனா, மெக்சிகோ, கனடா என இவர் பல்வேறு நாடுகளின் மீதும் தொடர்ச்சியாக வரிகளை விதித்து வருகிறார். இது ஒரு சங்கிலித் தொடர் நிகழ்வை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் வரி அறிவிப்புகள் அதாவது உலகின் மற்ற நாடுகளும் கூட இப்போது அமெரிக்காவுக்கு எதிராக வரிகளை விதிக்க தொடங்கிவிட்டன.
முதலில் அமெரிக்க இறக்குமதிகளுக்குச் சீனா வரிகளை அறிவித்த நிலையில், சீக்கிரமே கனடாவும் இதில் இணைந்து கொண்டது. அடுத்தகட்டமாக மெக்சிகோவும் எப்போது வேண்டுமானாலும் வரியை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாரென் பபெட் –
இதுபோல மாறி மாறி வரிகளை விதிப்பது எந்தவொரு நாட்டிற்கும் நல்லது இல்லை என்று பல வல்லுநர்களும் எச்சரிக்கிறார்கள். இது சர்வதேச வர்த்தகத்தைப் பாதிக்கும் என்றும் தேவையற்ற பதற்றத்தை அதிகரிக்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இதற்கிடையே டிரம்பின் வரி விதிப்பு அறிவிப்பை உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் தலைசிறந்த முதலீட்டாளராகவும் கருதப்படும் வாரன் பபெட் கடுமையாக விமர்சித்துள்ளார்.
” வரி அறிவிப்புகள் போர் நடவடிக்கை ” எனக் குறிப்பிட்ட
வாரன் பபெட் இதனால் விலைவாசி தான் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
கிட்டதட்ட போர் தான் இது தொடர்பாக வாரன் பபெட் மேலும் கூறுகையில், “எனக்கு வரி குறித்தும் அது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் ஓரளவுக்கு நன்றாகவே தெரியும்.. இதுவும் கிட்டதட்ட ஒரு போர் நடவடிக்கை போன்றது தான். இதுபோல விதிக்கப்படும் வரிகள் காலப்போக்கில் பல பொருட்களின் விலை உயரக் காரணமாகிவிடும். இது மக்கள் வாங்கும் பொருட்களின் விலைகளை உயர்த்தக்கூடும்.
நான் 60 ஆண்டுகளாக பெர்க்ஷயர் ஹாத்வே (முதலீட்டு நிறுவனம்) நடத்தி வருகிறேன். இந்த 60 ஆண்டுகளில் எங்கள் நிறுவனம் அமெரிக்க அரசுக்கு $101 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 8 லட்சம் கோடி ரூபாய்) வரியாகச் செலுத்தியுள்ளோம். வரலாற்றில் வேறு எந்த நிறுவனமும் நாங்கள் செலுத்திய அளவுக்கு வரி செலுத்தியதே கிடையாது” என்றார்.
தொடர்ந்து அமெரிக்கப் பொருளாதாரம் இப்போது என்ன நிலையில் இருக்கிறது என்ற கேள்விக்குப் பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார். இது தொடர்பான கேள்விக்கு அவர், “இன்று ஒட்டுமொத்த உலகமும் விவாதிக்கும் சுவாரஸ்யமான கேள்வி இது என்றே நான் நினைக்கிறேன். ஆனால் இது குறித்து நான் பேச மாட்டேன். என்னால் பேச முடியாது” என்று மட்டுமே கூறினார்.
யார் இந்த வாரன் பபெட்..?
94 வயதான வாரன் பபெட் உலகின் தலைசிறந்த முதலீட்டாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். சிறு வயது முதலே பல தொழில்களை வெற்றிகரமாக நடத்தியுள்ள வாரன் பபெட், எதிர்காலத்தில் எந்த பிஸ்னஸ் நிற்கும் என்பதைக் கவனித்துச் சரியாக முதலீடு செய்வதில் கை தேர்ந்தவர்.
மேலும், இவர் தனது சொத்தில் பெரும்பகுதியை இறந்த பிறகு தொண்டு நிறுவனத்திற்கு எழுதி வைத்துவிட்டார்.
சொத்தில் சிறு பகுதியை மட்டுமே தனது மூன்று பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 156 பில்லின் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இவர் 6வது இடத்தில் இருக்கிறார்.
உலகின் தலைசிறந்த முதலீட்டாளராகவும் மாபெரும் கோடீசுவரராகவும் உள்ள வாரன் பபெட் வெளிப்படையாகவே டிரம்பின் வரி விதிப்புகள் கிட்டதட்ட போருக்கு இணையானது எனக் கூறியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
…………………………………………………………………………………………………………………………………………….…



I mentioned a couple years back the fear of delimitation will result in less number of representatives for southern states…