…………………………………………

………………………………………….

………………………………………….

…………………………………………
கூட்டத்துக்கு நேரடியாகவும் போகாமல்,
தொலைக்காட்சிகளிலும் முழுமையாக பார்க்காதவர்களுக்காக
இந்த இடுகை….
கெட்ட பையனாக தன்னைத் தானே வர்ணித்துக்கொண்டிருக்கும்
விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் ஹைலைட்டான
கருத்துகள் இங்கே –
………………
கட்சிப் பெயர் விளக்கம் ….!
நம் மக்களுக்கான அடையாளத்தையும் அங்கீகாரத்தையும், சொல்கின்ற
ஒரு வார்த்தை கட்சி பெயரின் முதல் வார்த்தையாக இருக்க வேண்டும் என்று எண்ணி தேர்ந்தெடுத்ததுதான் இந்தத் தமிழகம் என்ற வார்த்தை.
தமிழகம் என்றால் தமிழர்களின் அகம், தமிழர்கள் வாழும் இடம் என்று சொல்லலாம். புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பதிற்றுப்பத்து என்று நம் இலக்கியங்களில் இடம்பிடித்த ஒரு வார்த்தைதான் இந்த தமிழகம் என்று தமிழை முறையாகப் படித்த பலர் நமக்கு ஆழமாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.
வெற்றி என்றால் நினைத்தது எல்லாவற்றையும் செய்து முடிப்பது. கழகம் அப்படி என்றால் `படை பயிலும் இடம்’ என்று அர்த்தம் இருக்கிறது. அந்த வகையில் நம் இளம் சிங்கங்கள் பயிலும் இடம்தான் நம் கட்சி, நம் கழகம். அரசியல் உலகின் அணையா பெருஞ் சுடர்தான் இந்த ‘தமிழக வெற்றிக் கழகம்’.
த.வெ.க. ஏற்றுக்கொண்ட அரசியல் வழிகாட்டிகள் …!
- வேலு நாச்சியார்
- அஞ்சலையம்மாள்
- பெரியார்
- காமராஜர்
- அம்பேத்கர்
கொள்கைகள் ….!
த.வெ.க தனது கொள்கைகளை மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகள் என்று கூறுகிறது. அவை, `ஜனநாயகம், ஆட்சி அதிகாரம், விகிதாச்சார இடப் பங்கீடு, சமத்துவம், மதசார்பின்மை, மாநில தன்னாட்சி உரிமை, இரு மொழிக் கொள்கை, அரசியல் தலையீடற்ற பணி, பகுத்தறிவு சிந்தனை மனப்பான்மை, தீண்டாமை ஒழிப்பு, இயற்கை வள பாதுகாப்பு, போதையில்லா தமிழகம்’.
செயல்திட்டங்கள்….!
மதுரையில் உயர் நீதிமன்ற கிளை அமைக்கப்பட்டது போல,
மதுரையில் தலைமைச் செயலகக் கிளை. சாதிவாரி கணக்கெடுப்பு.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட அழுத்தம்.
மாநில அரசுகளின் சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தல். த.வெ.க சார்பில் தேர்தலில் போட்டியிடுபவர்களில்
மூன்றில் ஒருபங்கு மகளிர். மாவட்டம்தோறும் மகளிருக்கான மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிநவீன வசதிகளைக் கொண்ட
காமராஜர் மாதிரி அரசு பள்ளி. தகவல் தொழில்நுட்பத் துறைக்கென தனி
அரசுப் பல்கலைக்கழகம். மாவட்ட அளவில் அரசு பல்நோக்கு மருத்துவமனைகள். நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு ஊழியர்கள் வாரத்திற்கு
இருமுறை கைத்தறி ஆடை அணிய உத்தரவு. பதநீர் மாநில பானமாக அறிவிக்கப்படும். போதைப்பொருட்களை ஒழிக்க சிறப்பு சட்டம்.
அரசியல் எதிரிகள்…!
பிரிவினைவாதம் செய்பவர்களும்,
ஊழல் கபடதாரிகளும் த.வெ.க-வின் இரண்டு எதிரிகள்.
திமுக மீது தாக்கு …. பாசிசமும், பாயாசமும் …!!!
முகமூடி போட்ட ஊழல் கபடதாரிகள்தான் இப்போது கூடவே இருந்து கொண்டு நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். யார் அரசியலுக்கு வந்தாலும் ஒரு குறிப்பிட்ட கலரை அவர்கள் மீதுபூசுகிறார்கள். அவர்கள் பாசிசம் என்றால்
நீங்கள் என்ன பாயாசமா….. ???
மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறீர்கள். திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணாவின் பெயரை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டை சுரண்டிக் கொள்ளை அடிக்கும் குடும்ப சுயநலக் கூட்டமும் தான் நம் அரசியல் எதிரி.
திராவிடம், தமிழ் தேசியம்…!
கொள்கை கோட்பாட்டளவில் திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் நாம்
பிரித்துப் பார்க்கப் போவதில்லை. திராவிடமும் தமிழ் தேசியமும் இந்த
மண்ணின் இரண்டு கண்கள்.
கூத்தாடி விமர்சனம்…!
எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் கட்சி தொடங்கியபோதும் கூத்தாடி என்று கூப்பாடு போட்டார்கள். ஆனால், அந்த இருவரும் அந்தந்த மாநிலங்களில் பெரும் தலைவர்களாக மக்கள் மனதில் வாழ்கிறார்கள்.
சமூக அரசியல் புரட்சிக்கு உதவிய ஒரு பவர்ஃபுல் கருவிதான் சினிமா. திராவிட இயக்கம் பட்டி தொட்டி எல்லாம் வளர்ந்ததே சினிமாவை வைத்துதான். கூத்தாடிக்குள்ளே இருக்கிற கோபத்தையும், சோகத்தையும் யாராலும் புரிஞ்சிக்க முடியாது. அவனுக்குள் இருக்கின்ற கோபம் கொப்பளித்தது என்றால் யாராலும் அவனைக் கட்டுப்படுத்த முடியாது. நினைத்ததைச் செய்து முடிக்கும் வரையில் அவன் நெருப்பு மாதிரிதான் இருப்பான்.
கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு…!
தமிழ்நாட்டு மக்கள் நம்மைத் தனிப்பெரும்பான்மையுடன் ஜெயிக்க வைப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும், அந்த நிலையை
நாம் நிறைவாக அடைந்தாலும், நம்மையும், நம் செயல்பாட்டையும் நம்பி
நம்மோடு சிலபேர் வரலாம். அதற்கான அரசியல் சூழல் உருவாகலாம்.
நம்மை நம்பி நம்மோடு களம் காண வருகிறவர்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும்.
குட்டி ஸ்டோரி…. !
ஒரு நாட்டில் ஒரு பெரிய போர் வந்ததாம். அப்போது பவர்ஃபுல்லான தலைமை இல்லாததால், ஒரு சின்ன குழந்தையிடம் பொறுப்புகள் இருந்ததாம். அப்போது நாட்டில் இருந்த பெருந்தலைகள் எல்லாரும் பயந்துவிட்டனர். ஆனால் அந்த
சின்ன பையன் படைகளை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு போருக்கு போலாம் என்று சொன்னானாம். அப்போதந்த பெருந்தகைகள் எல்லாரும்,
`இது சாதாரண விஷயம் கிடையாது. நீ ஒரு சின்ன பையன் அங்க பவர்ஃபுல்லான எதிரிகள் இருப்பார்கள். இது ஒன்றும் விளையாட்டு கிடையாது நீ பாட்டுக்கு விளையாடிவிட்டு ஓடி வருவதற்கு…
போர் என்றால் படையை நடத்த வேண்டும். எதிரிப்படைகளை சமாளிக்க
வேண்டும், அதைவிட முக்கியமாக ஜெயிக்க வேண்டும். உனக்கோ கூட்டமோ துணையோ யாரும் இல்லை. நீ எப்படி இந்த போரை நடத்துவ, எப்படி ஜெயிப்ப’
எனக் கேட்டார்களாம்.
அவர்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல் நாட்டின் படைகளை நடத்திக் கொண்டு சென்ற அந்த பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த சின்ன பையன் என்ன செய்தான் என்று சங்க இலக்கியத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்.
படிக்காதவர்கள், படித்தவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
ஆனால், கெட்ட பையன் சார் அந்த சின்ன பையன்….!!!
( உதவி – செய்தித்தளங்கள் ….)
……………………………………………………………………………………………………………



I mentioned a couple years back the fear of delimitation will result in less number of representatives for southern states…