விக்ரம், வேதாளம் –வாரிசை தேர்தெடுக்க வைக்கப்பட்ட போட்டி ….

……………………………….

…………………………………

பல வருடங்களுக்கு முன்னர், தமிழ்நாட்டில், தூர்தர்ஷனை தவிர வேறு
எந்த தொலைக்காட்சியும் இல்லாத சமயத்தில், வாரந்தோறும் ஞாயிறு
மாலைகளில் – 4 மணிக்கு, தூர்தர்ஷனில் “விக்ரம் ஔர் பேதாள்” என்கிற
தலைப்பில் – இந்தியில், (டெல்லியிலிருந்து, கொடைக்கானல் வழியே ) விக்கிரமாதித்தன்-வேதாளம் கதைகள் தொடர்ந்து
ஒளிபரப்பப் பட்டுக்கொண்டிருந்தன…. வீட்டில் நான், மனைவி மற்றும்
குழந்தைகள் ஒன்றாக அமர்ந்து, தவறாமல் ஒவ்வொரு வாரமும்
ஆர்வத்துடன் விடாமல் பார்த்துக்கொண்டிருப்போம்.

அந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யமே இறுதியில் வேதாளம் கேட்கும் கேள்வியும்,
அதற்கு விக்ரம் சொல்லும் பதிலும் தான்….

வேதாளம் விதித்திருந்த கண்டிஷன், தான் கதையின் இறுதியில் கேட்கும்
கேள்விக்கு விக்ரமாதித்தன் சரியான விடையை கூறி விட்டால்,
வேதாளம் மீண்டும் மரத்தின் மீது போய் உட்கார்ந்து கொண்டு விடும்….

அதற்காக, விக்ரம் வேண்டுமென்றே தவறான
விடையையும் கூறக்கூடாது….. சரியான விடை தெரிந்திருந்தும் தவறாக
பதில் சொன்னால், விக்ரம் மண்டை வெடித்து செத்து விடுவானென்று
வேதாளம் பயமுறுத்தி வைத்திருந்தது…..

விக்ரமாதித்தனோ புத்திசாலி…. எனவே, அவனுக்கு ஒவ்வொரு கதைக்கும்
விடை தெரிந்திருந்தது…. கூறுவான்…. வேதாளம் உடனே ஏளனமாக
சிரித்துக்கொண்டே பறந்து போய் மீண்டும் மரத்தின் உச்சியில்
உட்கார்ந்து கொள்ளும்.

ரொம்ப தமாஷாக, சுவாரஸ்யமாக இருக்கும்…. கதைகள் குழந்தைகள்
மட்டுமல்லாமல் பெரியவர்களும் ரசிக்கும்படி இருக்கும்…. நாங்கள் அனவரும்
ஒவ்வொரு வாரமும் ஆவலுடன் 5 நிமிடம் முன்னதாகவே சென்று டிவி முன்
அமர்ந்து கொள்வோம்….

அது ஒரு கனாக்காலம்….!!!

இப்போது, விக்கிரமாதித்தன் கதைகள் சிலவற்றை படிக்கக்கூடிய
வாய்ப்பு கிடைத்தது…. வாசக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே என்று
தோன்றியது…. வாய்ப்பு கிடைக்கும்போது, ஒவ்வொன்றாக பதிகிறேன்…
இன்று வரிசையில் முதலாவதாக –

……………………………….
வாரிசை தேர்தெடுக்க, துறவி வைத்த போட்டி ….
…………………………………….….

காட்டின் வழியே வேதாளத்தை விக்ரமாதித்தன் சுமந்து வந்து கொண்டிருந்த
போது, வேதாளம் அவனிடம் கூறிய கதை……

சொர்ணபுரி என்ற நாட்டை மன்னன் வீரபாகு சீரும் சிறப்புமாக ஆண்டுவந்தான். ஆனால் அவனுக்கு வாரிசு இல்லை. தனக்கு பிறகு தன் நாட்டை ஆள வாரிசு இல்லையே என்று கவலை கொண்ட மன்னன், வீரமிக்க ஒருவன் தன் காலத்திற்கு பிறகு இந்த நாட்டை ஆளவேண்டும் என எண்ணினான். இதை பற்றி தனது மந்திரியிடம் ஆலோசித்தான்.

அப்போது இந்நாட்டின் எல்லையிலிருக்கும் ஆசிரமத்தில் ஒரு துறவி,
இளைஞர்களுக்கு வீரக்கலைகளை கற்றுத்தந்து, அவர்களை மிகச்சிறந்த வீரர்களாக்குவதாகவும், அங்கு சென்று பார்த்தால் இந்நாட்டை ஆளும்
தகுதியுடைய நபர் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறினார். அதன்படி
மன்னன் வீரபாகுவும், அவன் மந்திரியும் அந்த ஆசிரமம் சென்று தங்களின் எண்ணத்தை அந்த துறவியிடம் கூறினர்.

இதை கேட்ட அந்த துறவி, தான் அவர்களுக்கு உதவுவதாக கூறி, தனது
ஆசிரமத்தின் மிகச் சிறந்த வீரர்களான ராமன், ஜெயன், கௌதமன் என்ற
மூவரை அழைத்து, ஆளுக்கு ஒரு திசையில் பயணிக்குமாறும்,
ஒரு மாதத்திற்கு பிறகு இந்த ஆசிரமத்திற்கு திரும்பி வந்து தங்களின்
அனுபவத்தை கூற வேண்டும் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.

ஒரு மாதத்திற்கு பிறகு அந்த மூவரும் ஆசிரமத்திற்கு திரும்பினர்.
அங்கு மன்னன் வீரபாகுவும் அவனது மந்திரியும் அந்த துறவியுடன்
இருந்தனர். அப்போது ராமன் என்கிற வீரன், தான் இந்த ஒரு மாத காலம்
வடதிசை நோக்கி பயணித்ததாகவும், அப்போது ஒரு நாட்டின் மன்னனுக்கு
எதிராக சில இளைஞர்கள் ஒருவனின் வழிகாட்டுதலின் படி புரட்சியில் ஈடுபட,
காட்டின் மறைவான இடத்தில் ஆயுத பயிற்சி மேற்கொண்டிருந்ததாகவும்,
எனவே அக்கூட்டத்தின் தலைவனை தான் அம்பெய்தி கொன்று விட்டதாகவும் கூறினான்.

இப்போது ஜெயன், தான் தென் திசையை நோக்கி பயணித்ததாகவும்,
அந்த திசையின் பல இடங்களில் கொள்ளையர்களின் அட்டகாசங்கள் அதிகமிருந்ததால் அங்குள்ள இளைஞர்களுக்கு, தான் வாள் போர்க் கலையை கற்றுத்தந்து அவர்கள் தங்களை தற்காத்து கொள்ள தான் உதவியதாக
கூறினான்.

மூன்றாவதாக கௌதமன், தான் கிழக்கு திசையை நோக்கி பயணித்ததாகவும்,
தனது வீரத்தை காட்டக்கூடியதற்குண்டான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லையென்றாலும் வழியில் காட்டின் ஓரத்திலுள்ள ஒரு குளத்தில்
ஒரு குட்டி யானை சிக்கி தவித்ததைக் கண்டு, தான் அந்த ஊர் மக்களின்
உதவியுடன் அந்த குட்டி யானையை மீட்டு அதன் கூட்டத்தில் சேர்த்ததாகவும்,
பிறகு மக்கள் அனைவருக்கும் பிறருடன் சண்டையிடாமல் வாழ்வதைப் பற்றி
அறிவுரை கூறியதாகவும் கூறினான்.

இதையெல்லாம் கேட்ட வீரபாகுவும், அவன் மந்திரியும் வீரம் நிறைந்த
காரியங்கள் செய்த ராமன், ஜெயன் ஆகிய இருவரில் ஒருவரை தங்கள்
வாரிசாக தேர்ந்தெடுக்க முடிவு செய்தாலும் அந்த துறவியின் கருத்தை
கேட்க விரும்பினர்.

சிறிது நேரம் ஆலோசித்த பின்பு கௌதமனை வாரிசாக தேர்ந்தெடுக்கும்படி
கூறினார் அந்த துறவி.

“விக்ரமாதித்தியா அந்த துறவி கௌதமனை வாரிசாக தேந்தேடுக்க
கூறியது ஏன்? எனக் கேட்டது வேதாளம்.

“ராமன் மற்றும் ஜெயன் புரிந்தது வீரமிக்க செயல்கள் என்பதில் சந்தேகமில்லை.

அதே நேரத்தில் ஒரு நாட்டை நிர்வகிக்க வெறும் வீரம் மட்டும் போதாது.
அம்மக்களிடம் உள்ள ஏற்ற, தாழ்வுகளை நீக்கி அவர்களிடம் ஒரு ஒற்றுமை
உணர்வு ஏற்படுத்தும் திறன் வேண்டும். அது கௌதமனிடம் அதிகமிருந்தது.
மேலும் கௌதமனுக்கு வீரத்தை காட்டக் கூடிய சூழ்நிலை தான்
அமையவில்லையே தவிர அவன் ஒன்றும் கோழையல்ல. எனவே
கௌதமனை வாரிசாக ஏற்கும் படி அந்த துறவி கூறினார்” என
விக்ரமாதித்தியன் கூறிய பதிலைக் கேட்டு வேதாளம் மீண்டும் முருங்கை
மரத்தின் மீது ஏறிக்கொண்டது.😊😊😊

.
……………………………………………………………………………………………………………….……….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக