நமக்கு இதுபற்றியெல்லாம் ஒன்றுமே தெரிவதில்லை….!!! ( திட்டங்களின் பெயரை புரியும்படி வைத்தால் தானே …!!!)

………………………………….

………………………………

…………………………….

……………………..

கடந்த அக்டோபர் மாதம் `மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய
பிரதமர் மோடி, எழிலன் சூரிய சக்தியால் இயங்குகிற பம்பு செட்டை விவசாயத்துக்கு பயன்படுத்தி வரும் முறையை குறிப்பிட்டு
பாராட்டினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி எழிலன்,
‘பிரதம மந்திரி குசும் யோஜனா’ திட்டத்தின் கீழ் மானியம் பெற்று
சூரிய சக்தியால் இயங்குகிற பம்பு செட் அமைத்து, விவசாயம்
செய்து வருகிறார்.ஒரு பனிப்பொழியும் காலையில் விவசாயி
எழிலனை காணச் சென்றோம்.

அடேங்கப்பா… சோலார் பம்ப்செட் அமைக்க 70% மானியம்;
இப்படித்தான் விண்ணப்பிக்கணும்!

காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் பகுதியில் இருக்கும் இவரது
பண்ணைக்கு நாம் செல்ல, நம்மை உற்சாகமாக வரவேற்று,
தான் சோலார் பேனல் அமைத்த கதையை சொல்லத்
தொடங்கினார்.

கெண்டை, வவ்வால், ஜிலேபி மீன்கள்…

“ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி, என்னோட நிலத்துல
மீன்பண்ணை வைக்கலாம்னு குளம் வெட்டினேன். அப்போ
ஆற்காட்டில் இருக்கிற ஒரு தனியார் பண்ணையில் இருந்து
3 ரூபாய், 5 ரூபாய் விலையில மீன் குஞ்சுகளை வாங்கிக்கிட்டு
வந்து குளத்துல வளர்க்க ஆரம்பிச்சோம். நல்லா வளர்ந்த
மீன்களை, கூலிக்கு ஆட்கள கூப்பிட்டு வலைவிரிச்சு பிடிச்சு
பக்கத்துல இருக்க சந்தையிலோ, இல்ல பக்கத்து கிராமத்திலோ வித்துடுவோம். புரட்டாசி, கார்த்திகை மாசம் இல்லாம மத்த
நாள்ல சந்தையில மீன்களுக்கு நல்ல டிமாண்டு இருக்கும்.

இப்போ எங்க மீன் பண்ணையில கெண்டை, வவ்வால்,
ஜிலேபி மீன்கள் இருக்கு. எந்தெந்த சீஸன்ல என்னென்ன மீனுக்கு
டிமாண்டு இருக்கோ, அந்த மீன நம்ம குளத்துல வளர்த்தாதான்
நல்ல வியாபாரமும் ஆகும். லாபமும் கிடைக்கும். நாங்க
எப்பவுமே மீனை குட்டைக்குள் விடுறதுக்கு முன்னாடி,
சாணி போட்டு பாசியை வளர விட்டுவிடுவோம். அப்போதான்
நாம அடிக்கடி தண்ணீர் மாத்த வேண்டியதில்லை. அப்புறம்
பொதுவாவே நாட்டு மீனுக்கு தண்ணீரை மாத்த வேண்டியதில்லை.

நாங்க மீனுக்கு ஆட்டு சாணம், மாட்டு சாணம், புண்ணாக்கு
போடுவோம். இதுயில்லாம சாணிய மக்கவெச்சு அதுல வர்ற மண்புழுவையும் போடுவோம். ஸ்பைருலினா மாதிரி பாசிகள
மீனுக்கு போடும்போது, மீன் கொஞ்சம் வேகமா வளரும்.
இப்படி சரியா திட்டம்போட்டு மீன வளர்த்து வித்தோம்னா
ஆறு மாசத்துலேயே நல்ல லாபம் பாக்கலாம்” என்று அவர் கூறிக்கொண்டிருக்கும்போதே நாம் சோலார் பேனல்
அமைத்திருக்கும் இடத்திற்கு வந்துவிட்டோம்.

அப்போது பிரதமர் மோடி பாராட்டியதைப் பற்றிக் கேட்கும்போது,
“பிரதமர் என்ன பாராட்டுனது எனக்கு ரொம்ப சந்தோஷம்.
ஆரம்பத்துல சின்ன குளத்துக்கு சோலார் பேனல் போட்டு ஏன் காச கரியாக்கணும்னு நினச்சேன். அப்புறம் மதிப்புக்கூட்டல்
செய்யற யோசனை இருந்துச்சு. குளத்துக்கு மட்டுமல்லாம மதிப்புக்கூட்டலுக்கும் தேவைப்படும்னு யோசிச்சு, அதிகாரிகள்
கிட்ட கேட்டு மானியம் வாங்கி பேனல் போட்டேன்.

சோலார் பேனல் வைக்க காரணம்…

என் நிலத்துல டீசல் மோட்டார் இருந்தப்போ, 30 அடிக்கு மேல
இருக்கற தண்ணிய இழுக்காது. சோலார் பேனல் போட்ட பிறகு
இந்த பிரச்னை சுத்தமாவே இல்ல. கரன்ட்டும் ஏத்த இறக்கம்
இல்லாம வர்றதால மோட்டரும் அடி வாங்காது.
டீசல் மோட்டருக்கு தினமும் டீசல் வாங்கற செலவு இருந்துச்சு.
ஆனா, இப்போ சோலார் பேனல்ல பராமரிப்பு செலவுகூட இல்ல.

தினமும் பேனல தொடச்சு வெச்சா மட்டும் போதும். மழை வந்தா
அந்த வேலைகூட கிடையாது. பேனல் வேலை செய்ய உச்சி வெயில் அடிக்கணும்னு அவசியமில்லை. லேசான வெயில் இருந்தாலே
போதும்” என்று அவர் சொல்லிக்கொண்டே தண்ணீர் குழாயை
காட்ட சூரியன் மேகத்துக்குள் ஒளிந்திருக்கும் அந்தப்
பொழுதிலும் சற்றும் சலனமில்லாமல் குளத்துக்குள் தண்ணீர் பாய்ந்துகொண்டிருந்தது.

அடுத்ததாக கீழ் அம்பியில் இருக்கும் அவரது நெல் வயலுக்கு
செல்ல, அங்கே ஆறடிக்கும் மேலே வளர்ந்திருக்கும் பயிர்கள்
நம்மை கையசைத்து வரவேற்றது. இவரது நிலத்துக்கு அருகில்
இருக்கும் கோயிலில்தான் கம்பர் அம்பிகாபதி – அமராவதி
காவியம் எழுதினார் என்பது கூடுதல் சிறப்பு. வரப்பில்
நடந்துகொண்டே பேசத்தொடங்கிய இவர், “எங்க பரம்பரை
தொழிலே விவசாயம்தான்னு சொல்லலாம். எங்க நிலத்தில
நாங்க பாரம்பர்ய நெல்களை மட்டும்தான் பயிரிடுறோம்.
முதல்ல ரசாயன உரங்கள் போட்டுதான் விவசாயம் செஞ்சுட்டு
இருந்தேன். அப்புறம் நாகலிங்க ரெட்டி மாதிரியான இயற்கை விவசாயிகிட்ட பேசுனது அப்புறம் நானும் இயற்கை
விவசாயத்துல இறங்கிட்டேன்.

முதல்ல ஆர்கானிக் விவசாயம்தான் செஞ்சேன். நவதானியங்கள்
போட்டு மூடாக்கு செஞ்சு, பயோ உரங்கள் போட்டு ஆர்கானிக்
விவசாயம் செஞ்சேன். முதல் சாகுபடியில எனக்கு மகசூல்
குறைவாத்தான் கிடைச்சுது. அதுல மார்கெட்டிங் பிரச்னை வேற
வந்துச்சு. அப்போ அரிசிய செமி-பாலிஷ் செஞ்சும் பாலிஷ்
செய்யாமயும் ரெண்டு வகையா அரிசிய விக்க ஆரம்பிச்ச பிறகு
நல்ல வரவேற்பு கிடைச்சது” என்று சொல்லும் இவர் மாநில
விவசாய சங்கத் துணைத் தலைவர் ஆவார்.

“முதன்முதலா பாரம்பர்ய நெல்களைப் போடும்போது மதுரை,
திருச்சி, ஆந்திரா, கர்நாடகால இருந்து நெல் வாங்கிட்டு வந்து விதைச்சோம். ஆனா, இப்போ தமிழ்நாட்டு வகை நெல்ல
மட்டும்தான் வயல்ல போடறேன். அறுபதாம் குறுவை,
மாப்பிள்ளைச் சம்பா, யானை கவுனின்னு எல்லா நெல்லும்
எங்க வயல்ல இருக்கு. அதுமட்டுமல்லாம 3 அடில இருந்து
10 அடி வரை பயிர்கள் இருக்கு.

நெல்லை பயிரிடும்போது என்ன பிரச்னைனா சீக்கிரம்
வண்டு வந்துடும். அதனால வசம்பு, வேப்பிலையை வயல்ல
போட்ருவோம்.

எங்க வயல்ல நெறையா மண்புழு இருக்கு. அதனால எங்களுக்கு
நல்ல லாபம் தான். மண்புழு நிலத்துக்கு ரொம்ப ரொம்ப
முக்கியம். அப்புறம் அதோட கழிவுகள் மண்ணுக்கு நெறைய பாக்டீரியாக்களை உருவாக்கி தருது. பொதுவாவே ஒருநாளைக்கு
மண்புழு நெறைய தடவ மண்ணுக்கு மேலயும் கீழயும் போய்ட்டு
வர்றதால, நமக்கு ப்ரீ ஏர் ஓட்டல் கிடைக்குதுனே சொல்லலாம்”
என்று தனது நிலத்தில் உள்ள மண்புழு எச்சங்களை காட்டுகிறார்.

“இப்போலாம் களை எடுக்க ஆட்களே கிடைக்கறதுல இல்ல.
இதனால களை வயல்ல வளராம தடுக்கறது நல்லது.

அதுக்காக நம்ம நிலத்துல நீல பச்சை பாசி, அசோலா மாதிரியான பாசிகளை வளர்க்கலாம். நாங்க எங்க வயல்ல அசோலாவை வளர்க்கறோம். இப்படி வளர்க்கறது களைய மட்டுமல்லாம
மண்ணுல இருக்கும் ஈரத்தையும் காக்கும்.

மார்க்கெட்டிங் பொறுத்தவரை, நாங்க இப்போ தமிழ்நாடு
இயற்கை விவசாயிகள் உற்பத்தி நிறுவனத்த தொடங்கியிருக்கோம்.
இதுல அரிசிய பேக்கிங் போட்டு, அதுமேல அந்த அரிசிய யாரு விளைவிச்சாங்கிறதும் அவங்க போன் நம்பரும் போட்ருவோம்.
எங்க அரிசிய சாப்பிட்டவங்க டேஸ்ட் ரொம்ப பிடிச்சிட்டதால,
நெறைய பேர் ரெகுலர் கஸ்டமர் ஆயிட்டாங்க என்று அவர் கூற,
அவரிடமும் அவரது வயலிடமிருந்தும் விடைபெற்று நாம் கிளம்பினோம்.
(நன்றி – விகடன் தளம்….)

.
…………………………………………………………………………………………………………………………..…

 

 

சிந்திக்க ஒரு செய்தி …


(அண்ணாமலை கூறும் இந்த மன்னிப்பும்
விடுதலையும் பற்றிய செய்தி எந்த தமிழ் மீடியாவிலாவது வந்ததா…? வரவில்லை
என்றால் – ஏன்… ???? )

……………………………………………………………………….

 

.

 

……………………………………………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to நமக்கு இதுபற்றியெல்லாம் ஒன்றுமே தெரிவதில்லை….!!! ( திட்டங்களின் பெயரை புரியும்படி வைத்தால் தானே …!!!)

  1. புதியவன் சொல்கிறார்:

    //எந்த தமிழ் மீடியாவிலாவது வந்ததா…? வரவில்லை என்றால் – ஏன்… ????// – ஆண்டிப்பண்டாரத்துக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. ஆனால் வியாபாரிகளுக்கு அப்படியா? திமுக எதைச் சொல்லுகிறதோ அதை மாத்திரமே செய்தியாக்குவார்கள், அவர்களுக்கான தோத்திரங்களை மாத்திரமே வெளியிடுவார்கள் இந்த ‘நடுநிலை’ ஊடகவியலாளர்கள், இந்து ராம் உட்பட. இவங்களுக்கு தேசத்தைப் பற்றியோ இல்லை பொதுமக்களைப் பற்றியோ என்ன அக்கறை இருக்கப்போகிறது?

  2. புதியவன் சொல்கிறார்:

    //நமக்கு இதுபற்றியெல்லாம் ஒன்றுமே தெரிவதில்லை….!!!// – பாஜக மத்திய தலைமைக்கு யார் இந்த மாதிரி உருப்படியில்லாத ஆலோசனை சொல்கிறார்களோ தெரியவில்லை. யோஜ்னா அது இது என்று பெயர் வைப்பதால் என்ன பிரயோசனம்? (கருணாநிதியும் நெகிழி, வழுவி, வடிநீர், கொட்டைநீர் என்றெல்லாம் பெயர் வைக்கச் சொல்லிப் பாடாய்ப்படுத்தி தமிள் வலர்த்தது நினைவுக்கு வருகிறது).

    அந்த அந்த மாநிலத்து மொழியில் பெயரை வைத்தால்தான் நல்லது. ஒரு திட்டத்தின் purpose அது மக்களைச் சென்று அடையவேண்டும், பயன் பெறவேண்டும் என்பது அல்லவா? சும்மா ஹிந்திப் பெயரை, அதுவும் இலக்கியப் பெயரை வைப்பதால் யாருக்குப் பிரயோசனம்?

    மன் கீ பாத் என்பது பகாளாபாத் மாதிரி ஒன்று என்றுதான் பலர் நினைப்பார். அதனை மனதின் குரல் என்று மாற்றியமாதிரி, ஒவ்வொரு திட்டத்தையும் தமிழகத்தில் ‘தமிழ்ப் பெயர்’ கொண்டு அழைத்தால், எல்லோருக்கும் புரியும், உபயோகமாக இருக்கும், திட்டமும் பிரபலமாகும் அல்லவா?

  3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்கிறேன்….
    இதை யாராவது பாஜக தலைமைக்கு
    எடுத்துச் சொல்வார்களா…?

    நான் இதைச் சொல்வது பாஸிடிவ் ரிசல்ட்
    வர வேண்டும் என்பதற்காகத் தான் –

    வெளி ஆட்கள் சொன்னால், தலைமை ஏற்காது….
    தேசத்துரோகி என்று சொல்லி ஒதுக்கி விடுவார்கள்…

    பாஜக-வைச் சேர்ந்தவர்களே யாராவது
    சொன்னால் தேவலை….
    யாருக்கு அதற்கான அக்கறை, “தைரியம்”
    அல்லது ” நெருக்கம்” இருக்கும்….?

    மாலன், பத்ரி நாராயணன் போன்றோர் யாராவது….?

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • புதியவன் சொல்கிறார்:

      மக்களை பக்தியில், இறைவனுடன், கோயிலில் ஒன்ற வைக்கவேண்டுமானால், அவர்களுக்குப் புரியும் விதத்தில், மொழியில் பேசும்போதுதான் பக்தி வளரும். இது எந்த மதத்திற்கும் பொருந்தும்.

      இதைப்போலவே, தேச பக்தியையும் மனதில் ஊட்டவேண்டுமானால் அவரவர் மொழியில்தான் அது சாத்தியம். ‘பாரத சமுதாயம் வாழ்கவே ஜெய ஜெய ஜெய பாரத சமுதாயம் வாழ்கவே’, ‘வெற்றி எட்டுத் திக்கும் என்று கொட்டு முரசே’ போன்றவை நம் உணர்ச்சியை (தமிழர்) பெருக்குமா இல்லை ‘ஜெய் ஜவான்..ஜெய் கிஷான்’ என்று கோஷமிடுவதா? அவரவர் மொழியில்தான் அனைத்தும் அமையவேண்டும்.

      என்னதான் பாரதீயர்கள் அனைவரும் ஒன்று, சகோதர சகோதரியர்கள் என்று பேசினாலும், தம் தம் இனத்தினருடன் இருக்கும்போதுதான் நாம் மொழி, கலாச்சாரம், பண்பாடு போன்ற அனைத்திலும் மனதளவில் ஒன்றுபடுவோம். நிச்சயம் யாராவது பாஜக ‘கொள்கை’ தலைமைப் பீடத்தில் சொல்வார்களேயானால் பன்மொழிக் கொள்கையை பாஜக தலைமை நடைமுறைப்படுத்தும் என்றே நான் நம்புகிறேன். அவர்களது நோக்கம் மக்களை ஒன்றுபடுத்தி, தங்கள் கட்சியை வளர்ப்பதுதான் அல்லவா?

      பாஜக ஆட்சியில் அமர்ந்த புதிதில், பஹ்ரைனில், இந்திய பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்த அனைத்து அலுவலர்களும், அன்றுதான் ஹிந்திக்குப் பிறந்தவர்கள் மாதிரி, ஹிந்தியிலேயே பேசுவது, பதில் சொல்வது என்று என்னைக் கடுப்படித்தார்கள் (நான் தேசியச் சிந்தனை, ஒடுக்கப்படும் இந்து மதத்தின் சார்பான சிந்தனை கொண்டவன்… அதனால் இந்திய அளவில் பாஜக மீது soft corner கொண்டவன்). ஆங்கிலத்தில் பேசினாலும் ஹிந்தியில் பதில் சொன்னார்கள். என்ன திமிர் இவர்களுக்கு என்று நினைத்துக்கொண்டேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.