இந்த இரண்டில் யாருடைய வாதம் சிறப்பாக இருந்தது என்று கூறுவீர்கள் ?

அண்மையில் தமிழக சட்டமன்றத்தின் பழைய நிகழ்வுகள்
பற்றிய ஒரு கட்டுரையைப் படிக்க நேர்ந்தது.

அதில் 10/12/1959 அன்று – அதாவது ஏறக்குறைய
53 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக சட்டமன்றத்தில்,
திமுக உறுப்பினராக திரு மு.கருணாநிதி அவர்களும்,
காங்கிரஸ் அமைச்சராக திரு சி.சுப்ரமணியம் அவர்களும்
நிகழ்த்திய ஒரு விவாதத்தை படிக்க  மிகவும்
சுவையாக இருந்தது.

மிகச் சிறப்பாக அமைந்த அந்த விவாதத்தை நமது
நண்பர்களும் படிக்க வேண்டும் என்று விரும்பி,
கீழே தருகிறேன்.

மு.கருணாநிதி –பஸ் போக்குவரத்தையெல்லாம்
தேசீயமயமாக்க வேண்டும் என்பதைப் பற்றி எந்தவித
வாசகமும் (பட்ஜெட்டில்) காணப்படவில்லை.
பஸ் தொழில் தேசீயமயமாக்கப்பட வேண்டுமென்று
முற்போக்கு கட்சிகள் எல்லாம் சொல்லுகிற
நேரத்தில், காங்கிரஸ் உறுப்பினர்கள் எல்லாம்
எதிர்க்கத்தான் செய்கிறார்கள். பஸ் முதலாளிகள்
இல்லையென்றால் காங்கிரஸ் இல்லை என்கிற நிலை தான்
இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கிறது.  பஸ் முதலாளிகளால்
தான் இன்று காங்கிரஸ் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை
மிக மிக வற்புறுத்திக் கூறுவதோடு மட்டுமல்ல, அதற்கான
ஆதாரங்களை எங்களுக்கு எடுத்துக்காட்ட முடியும் என்பதையும்
தெரிவித்துக் கொள்கிறேன்.பஸ் முதலாளிகளால் தான்
காங்கிரஸ் காப்பாற்றப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால்,
காங்கிரஸின் உயிர் இன்று பஸ் முதலாளிகளின் மையில்தான் இருக்கிறது என்று குறிப்பிடலாம். புராண காலத்தில்சொல்லப்பட்டிருப்பது போல்,

மயில் ராவணன் உயிர் எங்கே இருக்கிறது என்று அனுமான் தேடிக்கொண்டிருந்த
நேரத்தில், அது  ஏதோ பத்து காதத்திற்கு அப்பால் உள்ள
மலைச்சாரலில் ஒரு தடாகமிருக்கிறது. அதையும் தாண்டிப்
போனால் ஒரு சுரங்கம் இருக்கிறது.  அதற்குள் ஒரு குகை
இருக்கிறது. அதன் மத்தியில் இருக்கும் டப்பாவில் ஒரு
வண்டு இருக்கும். அதைப்பிடித்து நசுக்கினால் தான்
மயில் ராவணனைக் கொல்ல முடியும் என்று புராணத்தில்
சொல்லப்பட்டிருக்கிறது.

சி.சுப்ரமணியம் – இதில் எவ்வளவு உண்மை இருக்கிறதோ,
அந்த உண்மைதான் கனம் அங்கத்தினர் அவர்கள் சற்று
முன்னால் சொன்ன காரியத்திலும் இருக்கும் என்பதை
சொல்லிக் கொள்கிறேன்.

மு.க: அந்த கதைப்படி, டப்பாவில் இருக்கும் வண்டைப்
பிடித்து நசுக்கினால் எப்படி மயில் ராவணனுடைய உயிரைப்
போக்கடிக்க முடியுமோ, அதேபோன்று பஸ் தொழிலை
தேசீயமயமாக்கி விட்டால், காங்கிரசின் நிலையும் ஆகிவிடும்
என்பதை எடுத்துக் காட்டவே விரும்பினேன்.

சி.எஸ் : அப்படியானால் பஸ் தொழிலை தேசீயமயமாக்க
வேண்டும் என்று சொல்வது காங்கிரஸ் கட்சியை
ஒழிக்கத்தானா?
அல்லது நாட்டினுடைய நன்மையைக் கருதியா ?

மு.க: நாட்டினுடைய நன்மைக்காகத் தான் பஸ் தொழில்
தேசீயமயமாக்கப்பட வேண்டும் என்று சொல்லுகின்றோம்.
ஆனால், பஸ் தொழில் தேசீயமயமாக்கப்பட்டு விட்டால் –
ஒழிக்கப்பட வேண்டியவை எல்லாம் தானாகவே ஒழிந்து
போய் விடும்.

மு.கருணாநிதி ஒரு சிறந்த பேச்சாளர் -எதிர்க்கட்சி.
சி.சுப்ரமணியம் ஒரு மிகச்சிறந்த அறிவாளி -ஆளும்கட்சி.

இருவரில், யாருடைய வாதம் சிறப்பாக
எடுபடுகிறதென்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to இந்த இரண்டில் யாருடைய வாதம் சிறப்பாக இருந்தது என்று கூறுவீர்கள் ?

  1. rathnavelnatarajan's avatar rathnavelnatarajan சொல்கிறார்:

    சி.சுப்ரமணியம் ஒரு மிகச்சிறந்த அறிவாளி

  2. c.venkatasubramanian's avatar c.venkatasubramanian சொல்கிறார்:

    congress in T.N dethroned in 1967, still unable to comeback,very shameful,nobody bothered

  3. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    கருணாநிதி சிறந்த பேச்சாற்றல் மட்டும் அல்லாது அறிவாளியாகவும் இருந்தார்.

    • அருண்முல்லை's avatar அருண்முல்லை சொல்கிறார்:

      பேச்சாளர் மட்டுமல்ல,பொறாமை, சுயநலம், தன்முன்னேற்றத்திற்கு யார்தடையாக இருந்தாலும் ஒழித்துக் கட்டிவிடுவது.அறிவாளிகளைப் புறக்கணித்து அடியாட்களை அருகில் வைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றில் கைதேர்ந்தவர்.

      • எழில்'s avatar எழில் சொல்கிறார்:

        நண்பரே, நீங்கள் சொல்வது இருக்கிறார். நான் சொன்னது இருந்தார்.

      • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

        இந்த குணாதிசயங்கள் இருந்ததால் தானே
        அவரால் அரசியலில் இந்த அளவு “முன்னேற”
        முடிந்தது – சரி தானே நண்பரே ?

        -வாழ்த்துக்களுடன்,
        காவிரிமைந்தன்

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நல்ல “பஞ்ச்” எழில் !

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  4. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    சி. சுப்ரமணியம் அவர்கள் சுதந்திர போராட்ட தியாகி. கருணாநிதி நாஸ்தீகவும் ஆஸ்தீகவும் இல்லாத குள்ளநரி
    போன்ற அரசியல்வாதி. சட்டசபையில் சி.எஸ்-ன் பதில் நாட்டு மக்களின் நலனை அடிப்படையாக கொண்டது.

  5. ramanans's avatar ramanans சொல்கிறார்:

    விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டுப் பார்த்தால் கலைஞர். மு.கருணாநிதி அவர்களது வாதம் தான் சிறப்பாக இருக்கிறது.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் ரமணன்,

      கலைஞரின் பேச்சுத்திறமை பற்றி நீங்கள் கூறுவது சரியாக
      இருந்தாலும், எதிர்க்கட்சி வாதம் பொதுவாகவே
      எடுபடும்.
      ஆனால், மு.க.வின் வாதத்தையும் மீறி,
      சி.சுப்ரமணியம் அவர்களின் வாதத்தில் அவரது
      புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது அல்லவா ?

      கட்சிகள் கிடக்கின்றன -விடுங்கள்.
      இத்தகைய புத்திசாலித்தனமான விவாதங்களை
      எல்லாம் நாம் மீண்டும் காணக்கூடிய நாள் என்றாவது
      வருமா ?

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • ramanans's avatar ramanans சொல்கிறார்:

        வராது.. வராது.. வரவே வராது. ஏனென்றால் அக்காலத்தில் கட்சியுடனும், கொள்கையுடனும் மட்டுமே தலைவர்கள் முரண்பட்டிருந்தார்கள். இப்போது கொள்கையெல்லாம் தூக்கிக் கடாசி விட்டு தனிப்பட்ட முறையில் ஒருவருக்கொருவர் முரண்பட்டு, விரோதிகளாக, பகையாளிகளாக இருக்கின்றனர். இதில் மாற்றங்கள் எதிர்காலத்தில் வருமா என்பது தெரியவில்லை சார். நன்றி

  6. maathur venkatramani's avatar maathur venkatramani சொல்கிறார்:

    அந்த காலத்தில், தமிழகத்திலே பஸ் முதலாளிகள் மட்டுமல்ல
    பல தொழில் அதிபர்களும் காங்கிரஸுக்கு நிதியுதவி செய்தார்கள்.
    ஆயினும் சாலை போக்குவரத்து மட்டும் தான் அக்காலத்திலே
    “பணம்” கொழிக்கும் தொழில். எனவே, கழகம் ஆட்சிக்கு
    வரவேண்டுமானால் காங்கிரஸ் கட்சியின் “தொடரும்” நிதி
    ஆதாரத்தை புரட்டி போட வேண்டும். மற்றது தானே நடக்கும்
    என்கிற சித்தாந்தத்தின் (?) அடிப்படையிலே அமைந்ததுதான்
    தலைவர் கலைஞரின் அன்றைய வாதம்.

    (இப்போதும் கூட, அடக்க வேண்டும் என நினைத்தால்,
    எதிராளியின் “நிதி” ஆதாரத்தில் தான் கை வைப்பார். செல்வி.
    ஜெயலலிதாவின் அ.இ.அ.தி.மு.க.வும் இதில் விதிவிலக்கல்ல.
    தேசிய அள்விலே காங்கிரஸும் இவ்வித்தையைக் கையாள்கிறது.)

    சாலை போக்குவரத்து தேசியாமாக்கப்பட்ட (NOTE: it was not 100
    per cent nationalisation) கருணாநிதியின் கழக ஆட்சியிலே
    சராயக்கடைக்காரர்கள் அவரின் “நிதி” ஆதாரமாக உருவெடுத்தார்கள்.

    சமீபத்தில் வெளியான கண்க்கெடுப்பின் படி, தமிழக அரசியல்
    கட்சிகளிலே பல கொடிகளை கையிருப்பில் வைத்துக் கொண்டு
    முதலிடம் வகிக்கும் பெருமையை கலைஞரின் கழகம் பெற்று
    இருக்கிறது. MGR-ம் பின்னர் ஜெ.வும் அ.இ.அ.தி.மு.க ஆட்சி நட்த்தி
    இருந்தாலும் கூட அக்கட்சி, “நிதி” நிலவர்த்தில் இரண்டாம் இடத்தில்
    தான் இருக்கிறது. காங்கிரஸ் பழைய அசையும் அசையா
    சொத்துக்களின் மதிப்பின் காரணமாக பட்டியலில் ஓரிடத்தைப்
    இருக்கிறது.

    கட்சி ஆரம்பித்து இதுநாள் வரை எந்த அதிகாரத்தையும்
    பெற்றிராத ம.தி.மு.க-விற்கு கூட பல கோடி சொத்துக்கள்
    இருக்கிறது.

    எந்த ஆட்சியானாலும் (சினிமா நடிகைகள் மணம் புரியும்
    தொ.அ அல்ல) தொழில் அதிபர்கள் ஆட்சியாளருக்கு மட்டுமல்ல
    எதிர்க்கட்சி கஜானாவுக்கும் சேர்த்து “கப்பம்” கட்டும் நிலை தொடர்ந்து
    வருகிறது.

    முந்தைய தென்னாற்காடு மாவட்டத்திலே சாராய “தொழிலில்”
    கொடிகட்டி (?!) பறந்த உடையார் ஆட்சி அதிகாரத்தின் உச்சத்திலே
    இருந்தவருக்கு “பக்க பலமாக”வும் பலத்த ஆதாரமாகவும் இருந்தார்
    என்பது (தமிழ்)நாடறிந்த ரகசியம்.

    எனவே, யாருடைய வாதம் அறிவு சார்ந்தது என்பது சொல்லித்
    தெரிய வேண்டியதில்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.