— சரித்திரத்திலிருந்து ஒரு பகுதி — ராஜா மான்சிங் ….!!!

………………………………………

…………………………………………

இந்திய – முகலாய வரலாற்றில் ஒரு முக்கிய பகுதி ….

………………………………

இந்தியாவின் இராஜபுதனத்திலுள்ள ஆம்பர் என்னும் நாட்டை ஆண்ட மன்னர்களுள் இராஜா பார்மல் (Raja Bharmal) என்பவர் முக்கியமானவர்.

இராஜா பார்மலின் மகன் பகவன் தாஸ் என்பவனாவான்.

பகவன் தாசின் மகனே மான்சிங் (Man Singh 1550-1614) ஆவார்.

பார்மல், சாங்கநர்(Sanganer) என்னுமிடத்தில் ஆஜ்மீரை நோக்கிவந்த மொகாலய மன்னன் அக்பரை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது பார்மல், தன் மூத்த மகள் ஹர்கா பாய் (என்னும் ஜோதா பாய்… ) என்பவரை திருமணம் செய்து கொள்ளும் படி வேண்டிக்கொண்டார். அக்பரும் அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு திருமணத்திற்கு சம்மதித்தார். (திருமணத்திற்குப் பிறகு அந்தப்பெண் மரியம் உஸ் சமானி (Maryam Uz Zamani) என்ற பெயரில் அழைக்கப்பட்டார்….)

எனவே 1562 இல் அக்பருக்கும் பார்மலின் மளுக்கும் திருமணம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதன் விளைவாக பார்மலின் மகனான பகவன்தாசும், பார்மலின் பேரனும் பகவன்தாசின் மகனுமான மான்சிங்கும் அக்பருக்கு ஆதரவாகப் செயற்படத்தொடங்கினர். இவர்களுக்கிடையிலான தொடர்பு வலிமை பெற்றுக்கொண்டது.

அக்பருடைய ஆட்சியில் இராஜா மான்சிங் ஒரு சிறந்த படைத்தலைவராக இருந்தார். அக்பரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராகவும் திறமைமிக்க தளபதியாகவும் விளங்கினார். பல வெற்றிகளையும் அக்பருக்காக மான்சிங் பெற்றுக்கொடுத்தார். சூரத்திலுள்ள கோட்டையைக் கைப்பற்ற அக்பர் மான்சிங்கையே அனுப்பியிருந்தார்.

அக்பர் ஆட்சியேற்ற சில ஆண்டுகளில் மேவோரின் சுதந்திரத்தை உயிர் மூச்சாகக் கொண்ட பிரதாப்சிங் அக்பருக்கு பணிய மறுத்தான். எனவே முதலில் சமாதானமாக பேசி வழிக்கு கொண்ட வர அக்பர் முயன்றார். எனினும் அது பலனளிக்கவில்லை. அதனால் அக்பர் கி.பி 1573ஆம் ஆண்டு ஜூன் திங்களில் ஆம்பர் இளவரசர் மான்சிங்கை பிரதாப் சிங்கை சந்திக்க உதயபூருக்கு அனுப்பினார்.

பின்னர் 1576 ஆம் ஆண்டு மான்சிங் 5000 தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படைவீரர்களுடனும் இராணுவ அதிகாரிகளுடனும் ஆஜ்மிரிலிருந்து புறப்பட்டார். ஆயினும் பிரதாப்சிங்கின் படைத் தாக்குதலை தாங்க முடியாத மொகாலயப் படை நிலைகுலைந்தது. எனினும் மாறாத மன உறுதியோடும் தளராத நம்பிக்கையோடும் போரிட்ட மான்சிங்கைப் பார்த்து வியந்து போன மொகாலயப் படைகள் மீண்டும் தங்கள் தளபதியோடு சேர்ந்து போரிட்டனர். அப்போரிலே மான்சிங் வெற்றிபெற்றாலும் அக்பரின் நோக்கம் நிறைவேறவில்லை.

பின்னர் மான்சிங் இலாகூரின் ஆளுநராக அக்பரால் நியமிக்கப்பட்டார்.

அதன்போது அக்பரின் உண்மையான ஆதரவாளர் என்பதை மான்சிங் நிரூபித்தார். பீகார், ஒரிசா பிரதேசங்களின் ஆளுநராகவும் மான்சிங் செயற்பட்டுள்ளார். இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் இடைப்பட்ட இடைப்பட்ட எல்லைப்பகுதில் வாழ்ந்து வந்தவர்கள் யூசுப்சைஸ் என்னும் மலைவாழ் மக்கள். அவர்கள் சுதந்திரமாக வாழ விரும்பினார்கள்.

இவர்களை அடக்க மன்னர் அக்பர் பிரதான தளபதியோடு மான்சிங்கையும் துணைக்கு அனுப்பினார். இந்த தாக்குதல் மூலமாக அந்த மலைவாழ் மக்களின் தாக்குதல்களும் எதிர்ப்புக்களும் முறியடிக்கப்பட்டன.

அக்பரின் அருமை நன்பர் அபுல்பசாலை அக்பரின் மகன் சலீம் – கொலை செய்தான். இதனால் அக்பர் சலீம் மீது கடுமையான கோபம் கொண்டார். அந்நிலையில் சலீம் தன் தந்தை அக்பருக்கு எதராகவும் சதிச்செயலில் ஈடுபட்டார். எனவே அக்பர் தனது பேரனும் சலீமின் மகனுமான குசுரூ மீது முனைப்பைச் செலுத்தினார். அக்பர் தன் பேரனை வாரிசாகக் கொள்ளும் சூழ்நிலை உருவாகியது. அச்சதியினை மான்சிங்கும் முன்னின்று நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அக்பரைத் தொடர்ந்து சலீம் பதவியேற்றுக் கொண்டார்.

சலீம் தம் ஆட்சியில் மான்சிங்கிற்கு எவ்விதமான கெடுதலும் செய்யவில்லலை. மான்சிங்கும் கடைசிவரை பேரரசிற்கு விசுவாசத்தைக் காட்டி கி.பி 1614 இல் இறந்து போனார்.

இராஜா மான்சிங் கவியுலகப் புலவராகவும், புரவலராகவும் இருந்து புகழ்பெற்றார்.

அரசவைப் புலவராக இருந்த கங்கா பிரசாத் என்பவர் இயற்றிய கவியொன்றிற்கு மான்சிங் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். மான்சிங் குவாலியரில் ஒரு இசைப்பள்ளியை ஏற்படுத்தி நடத்தினார். கலை மீது அதிக ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவராக மான்சிங் விளங்கினார். வீரமும் இராஜதந்திரமும் கொண்டவரான மான்சிங் அக்பர் ஆட்சியிலும், அக்பரின் மகன் சலீம் ஆட்சியிலும் உயர் பதவிகளைப் பெற்று பேரரசின் வெற்றிகளுக்கும் சாதனைகளுக்கும் பங்காற்றி புகழடைந்தார். ( உதவி -இணையம் … )

……………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக