கொஞ்சம் தேடல் – கொஞ்சம் ஞானம் ….( 4 ) காஞ்சி பெரியவர் ….


இந்த தலைப்பிற்கு வந்து நீண்ட நாட்களாகி விட்டன.
இன்றைய சிந்தனைக்கு…. ஒரு துளி….

பூவுலகிலிருந்து மறைந்து விட்டாலும், என்றும் நம்
நெஞ்சத்தில் மறையாமல் வீற்றிருக்கும், காஞ்சி பெரியவர்
அவர்களின் உரையிலிருந்து ஒரு துளி –

தவறுகளை மறைத்தால் தான் – துன்பம் ….

சாதாரணமாக ஒரு தப்பு செய்தபோது உங்களுக்கு என்ன
தோன்றுகிறது? அது ஓர் அழுக்கு மாதிரி உங்கள் மனசையே
உறுத்துகிறது. உடனே இந்த அழுக்கை யாரும் தெரிந்து
கொண்டு விடக்கூடாது என்று அதை மூடி மறைக்கத்
தோன்றுகிறது.

நியாயமாக, தவறுதல் உண்டானவுடன் பிரார்த்தனை
பண்ணினால், அந்தப் பிரார்த்தனையே சோப்பைப் போல்
அந்தத் தப்பை அகற்றிவிடும். அப்படிச் செய்யாமல் தப்பை
மற்றவர்கள் தெரிந்து கொள்ளாமல் மூட வேண்டும் என்கிற
போது, பொய் சொல்ல வேண்டியதாகிறது.

அழுக்கைத் தேய்த்துக் கழுவாமல், மூடி மூடி வைத்தால்
சீழ் பிடித்துச் சிரங்காகிவிடும். அது மாதிரி, தப்பை
மூடியவுடன் அது பொய் என்ற சிரங்காக ஆகிவிடுகிறது.

உள்ளத்தை பொம்பவும் கெடுக்கிற பயங்கரமான சிரங்கு
பொய்தான்.

எதனால் தப்பை மறைக்கப் பார்க்கிறோம்?
ஒன்று – நம்மை மற்றவர் நல்லவன் என்றே நினைக்க
வேண்டும் என்ற பொய் எண்ணத்தினால்;

அல்லது இன்னொருத்தரிடம் பயத்தினால் மறைக்கப்
பார்க்கிறோம். பொய் என்பது சிரங்கு என்றால் பயம் என்பது
சொறி மாதிரி.

பெரியவர்களிடமெல்லாம் உங்களுக்கு நிறைந்த
மரியாதையும் மதிப்பும் இருக்கத்தான் வேண்டும். ஆனாலும்
அர்த்தமில்லாத பயம் கூடாது. பயம் உள்ளத் தூய்மையைக்
கெடுக்கிற அழுக்கு.

தப்பு செய்தால் கூட, அதை உணர்ந்து, பணிவுடன் உள்ளபடி
பெரியவர்களிடம் சொல்ல வேண்டுமே ஒழிய, பொய்யால்
மூடி மறைக்கக் கூடாது.

தப்பு செய்தது போதாது என்று, பொய்யும் சொன்னோம்
என்பது வெளிப்பட்டு நமக்கு மேலும் அவமானம்,
கஷ்டம்தான் ஏற்படும். உள்ளபடி சொன்னால் பெரியவர்கள்
மன்னித்துவிடுவார்கள்.

மன்னிக்காமல் அவர்கள் தண்டித்தாலும் பரவாயில்லை. அவர்களுக்கு அந்த உரிமை உண்டு.

‘நாம் தப்பு செய்தோம்; அதனால் அதற்குரிய தண்டனையைப்
பெறுகிறோம்’ என்று தைரியத்துடன் தண்டனையை ஏற்க
வேண்டும்.

தைரியம், சத்தியம் இவை எல்லாம் மன அழுக்கைப் போக்குகிற சோப், சீயக்காய் மாதிரி.

 

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to கொஞ்சம் தேடல் – கொஞ்சம் ஞானம் ….( 4 ) காஞ்சி பெரியவர் ….

  1. தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

    பரமாச்சாரியார், மனிதனின் இயல்பான தவறைச் சுட்டிக்காண்பித்துள்ளார். பிறரின் தவறுகளை மன்னிப்பதே பெரும்தன்மை. தான் செய்த தவறுகளை ஒத்துக்கொள்வது அதைவிட பெரியமனதுத் தனம். ஆனால் சுலபமல்ல. ஏனென்றால், மனிதன் வெறும் இமேஜை, நிஜ முகமாக மற்றவர்களுக்கு முன்னால் நிறுவ எத்தனப்படுகிறான்.

    நல்ல பகிர்வு.

  2. Sundar Raman's avatar Sundar Raman சொல்கிறார்:

    என்ன ஒரு எளிமையான ஆனால் அர்த்தமுள்ளள கருத்து . மன்னிப்பு கேட்காமல் , பிரச்னைகளை தூக்கி பிடித்தால் , அதன் எடை அதிகமாய் கொண்டே போகும் .

    சின்ன உபாயம் , பெரிய பரிசு , மன நிம்மதி

  3. இன்றில்லாவிட்டாலும்'s avatar இன்றில்லாவிட்டாலும் சொல்கிறார்:

    காமை ஐயா,
    தற்போதைய செய்தி.
    அந்நிய செலாவணி வழக்கு விசாரணையிலிருந்து தினகரன் மீதான குற்றச்சாட்டுக்கள் ரத்து செய்திருப்பதாக வந்துள்ளது. தமிழகம் என்னவாக சீரழிய போகிறதோ என்ற பயம் ஏறிக்கொண்டே செல்கிறது.

  4. Selvadurai Muthukani's avatar Selvadurai Muthukani சொல்கிறார்:

    பைபிளில் நீதிமொழிகள் என்று ஒரு பகுதி உண்டு. அவைகளில் நமது வாழ்க்கைக்கு வேண்டிய நல்ல பல கருத்துக்கள் உள்ளன. இந்தப் பொருள் குறித்து அதில் சொல்லப்பட்டுள்ளது என்னவென்றால் “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். He that covereth his sins shall not prosper: but whoso confesseth and forsaketh them shall have mercy. (நீதிமொழிகள் /Proverbs 28:13)”. மத சம்பந்தமான நூல் என்று கருதி அநேகர் பைபிளை வாசிப்பது இல்லை. அதில் இல்லாத நல்ல கருத்துக்களே இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம் என்பதே உண்மை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.