இந்நேரத்தில் – டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒரு அவசியமான தேவையே ….

கீழடி பகுதியில் அகழாய்வு செய்யப்பட்டதன்
ஆய்வறிக்கைகளை இன்னும் வெளியிடாமல் தாமதம்
செய்வதாக மைய, மாநில அரசுகள் மீது பா.ம.க. நிறுவனர்
இராமதாஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் –

“தமிழர்கள் என்ற வகையில் நம் அனைவருக்கும்
உலக அளவில் பெருமைத் தேடித் தந்தவை கீழடியில்
கடந்த 7 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் அகழாய்வுகள் தான்.
கீழடி அகழாய்வுகளின் மூலம் தமிழர் நாகரிகத்தின்
தொன்மையை உலகத்திற்கு உணர்த்த முடியும் என்ற நிலையில்,
அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் முடிவுகளை
பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகள் வெளியிடாதது ஏமாற்றமளிக்கிறது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “உலகின் மூத்த குடி தமிழ்க்குடிதான் என்பதற்கான
குறிப்புகள் இலக்கியங்களில் காணப்படுகின்றன. அதை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்
தான் மதுரை அருகில் உள்ள கீழடியில் முதலில் மத்திய
தொல்லியல் துறையும், பின்னர் தமிழ்நாடு தொல்லியல்
துறையும் அகழாய்வுகளை நடத்திவருகின்றன.

அதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில்
கிடைத்த தொல்லியல் ஆதாரங்களின்படி, தமிழர்
நாகரிகத்தின் தொன்மை 2300 ஆண்டுகளாக இருக்கும்
என்று நம்பப்பட்டு வந்தது.

கீழடியில் மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட ஆய்வின்
மூலம்தான், தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது
என்று தெரியவந்தது.

அதன்பிறகு, சிவகளையில் நடத்தப்பட்ட அகழாய்வில்
கிடைத்த நெல் மணிகளின் மூலம் தமிழர் நாகரிகம்
3200 ஆண்டுகள் தொன்மையானதாக இருக்கலாம் என்று
தெரியவந்தது.

தமிழ்நாட்டில் நடத்தப்பட்டுவரும் அகழாய்வுகளின் மூலம்
தமிழர் நாகரிகம் மிகவும் பழமையானது என்பது அடுத்தடுத்து நிரூபிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மெய்ப்பிக்கப்பட்டுள்ள காலத்தைவிடவும் தமிழர் நாகரிகம் மிகவும் தொன்மையானது.
இது தமிழர்களாகிய நமக்குத் தெரியும்; ஆனால், உலக அரங்கில் மெய்ப்பிக்க தொல்லியல் சான்றுகள் தேவை. அதற்காகத்தான்
கீழடி, சிவகளை, ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

ஆனால், அவற்றின் முடிவுகளை வெளியிடுவதில் செய்யப்படும்
தாமதம் நியாயமற்றது; அது தமிழர் நாகரிகத்தின் தொன்மையை நிரூபிக்க தடையாக உள்ளது.” என்றும் இராமதாஸ் கூறியுள்ளார்.

கீழடியில் முதல் மூன்று கட்ட அகழாய்வுகளை மத்திய
தொல்லியல் துறை கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம்
ஆண்டுவரை மேற்கொண்டது; அந்தப் பணியைத் தலைமை
யேற்று நடத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் பாதியிலேயே இடமாற்றம் செய்யப்பட்டதால், அகழாய்வு அறிக்கை தயாரிக்கப்படவில்லை;

அதுமட்டுமின்றி அகழாய்வுப் பணியும் 3 கட்டங்களுடன்
நிறுத்தப்பட்டது. அடுத்த 4 கட்ட ஆய்வுகளை தமிழ்நாடு
தொல்லியல் ஆய்வுத் துறைதான் மேற்கொண்டது என்பதையும்
அவர் தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

“கீழடியில் 2018ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நான்காம்
கட்ட அகழாய்வு முடிவுகள் 2019ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன.
அந்த அறிக்கையைத் தயாரித்து வெளியிடுவதற்கு அதிக
பட்சமாக ஓராண்டுதான் தேவைப்பட்டது. அந்தக் கால
அளவீட்டை வைத்துப் பார்த்தால், 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஐந்தாவது, ஆறாவது அகழாய்வு முடிவுகளை எப்போதோ வெளியிட்டிருக்கலாம்.

ஆனால், கொரோனா நோய்ப் பரவல் முதலிய காரணங்களைக்
காட்டி, கீழடி அகழாய்வு அறிக்கைகளை தயாரித்து வெளியிடுவது தாமதமாகிவருகிறது. இது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது”
என்றும்,

“கீழடி அகழாய்வின் முதல் மூன்று கட்ட அறிக்கைகளை
விரைந்து வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்றம்
ஆணையிட்டு, 2 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இன்னும் அதில்
எந்த முன்னேற்றமும் இல்லை.

கீழடி அகழாய்வு அறிக்கைகளை வெளியிடுவதில் மத்திய அரசு
தாமதம் செய்வதன் நோக்கத்தையாவது புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இதில் தமிழக அரசு தாமதம் செய்வதற்கான காரணம்
தான் புரியவில்லை” என்றும் இராமதாஸ் குறைகூறியுள்ளார்.

“உலகில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்களின் ஒற்றை எதிர்பார்ப்பு கீழடி அகழாய்வு அறிக்கைகள் அனைத்தையும் வெளியிட்டு, தமிழர் நாகரிகத்தின் தொன்மை
எவ்வளவு ஆயிரம் ஆண்டுகள் என்பதை நிரூபிக்க வேண்டும்
என்பது தான்.

இதில் செய்யப்படும் எந்தத் தாமதத்தையும் அனுமதிக்கமுடியாது. எனவே தமிழக அரசு விரைந்து செயல்பட்டு, கீழடி ஆய்வின்
5ஆம், 6ஆம், 7ஆம் கட்ட அறிக்கைகளை உடனடியாகத் தயாரித்து வெளியிட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மற்றொருபுறம், வட மாநிலங்களில் பணி செய்வதற்காக
அனுப்பப்பட்ட மத்திய தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் கடந்த செப்டம்பர் மாதமே
தமிழகத்திற்கு மாற்றப்பட்டுவிட்டார். அவருடன் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொண்டு, முதல் 3 கட்டங்களின் அகழாய்வு
அறிக்கைகளை விரைந்து வெளியிடவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன், கீழடியில் எட்டாவது கட்ட அகழாய்வை விரைவில் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்றும்
இராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

…………………………………

மத்திய அரசுக்கு கீழடி அகழ்வாராய்வுகளில் விருப்பமோ
ஆர்வமோ, இல்லை என்பது தெரிந்த விஷயம் தான்.

ஆனால் – மாநில திமுக மற்றும் அதிமுக – ஆகிய இரண்டு
அரசுகளுக்கும் இதில் ஆர்வமும் அக்கறையும் நிச்சயம் உண்டு.

இப்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசுக்கு விருப்பமில்லை
என்று நான் கூற மாட்டேன்… விருப்பம் உண்டு தான்.
ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு – அவர்களுக்கு வேறு
கவர்ச்சிகரமான “சங்கதி”கள் கிடைத்து விட்டன. எனவே,
இதில் ஈடுபாடு குறைந்து விட்டது என்று கூறலாம்.

டாக்டர் ராமதாஸ் அவர்களின் அறிக்கை இந்த தொய்வை
சரிசெய்ய உதவும் என்கிற வகையில் அவசியமானது
என்றே கூற வேண்டும்.

.
………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

1 Responses to இந்நேரத்தில் – டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒரு அவசியமான தேவையே ….

  1. Tamil சொல்கிறார்:

    திமுக எப்போதும் நல்ல எதிர்க்கட்சி.

    அண்ணா திமுக எப்போதும் மோசமான கட்சி

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.