…
…

…
கடவுளும் கவர்மெண்டும் ஒன்று
அதைத் தூற்றாதே; பழி சேரும்
உனக்கு. அதற்கு
ஆயிரம் கண்கள்: காதுகள்.
ஆனால் குறையென்றால்
பார்க்காது கேட்காது
கை நீளும்; பதினாயிரம்
கேட்கும், பிடுங்கும்.
தவமிருந்தால்
கொடுக்கும்.
கவர்மெண்ட் பெரும் கடவுள்
அதைப் பழிக்காதே
பழித்தால்
வருவது
இன்னும்
அதிகம்
கவர்ன்மெட்தான்.
– இதை ஆகஸ்ட், 1965-ல் எழுதியவர் –
திரு.கி.கஸ்தூரிரங்கன்
————————-
இந்த தலைமுறையினருக்கு கஸ்தூரிரங்கனைப்பற்றி
தெரிந்திருக்க வாய்ப்பில்லை….அவர்கள் அவசியம்
தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு இலக்கியவாதி
கி.கஸ்தூரிரங்கன்.
எனவே, கி.கஸ்தூரிரங்கன் பற்றிய ஒரு சிறு குறிப்பு இங்கே –
கி.கஸ்தூரிரங்கன் ( 1933 – 2011) சென்னைப்
பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப்
பட்டம் பெற்றவர்…. 1961-ல் தில்லிக்குச் சென்று அடுத்த
20 ஆண்டுகள் -அதாவது, 1981 வரை, நியூயார்க் டைம்ஸ்
இதழின் டெல்லி நிருபராகப் பணியாற்றினார்.
பின்னர், 1981 முதல் 1991 வரை பத்தாண்டுகள் –
தினமணி நாளிதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
1991 முதல் காந்தி மிஷனின் செயலாளராக பணியாற்றி
வந்தார்.
அறுபதுகளில், டில்லியில் கஸ்தூரி ரங்கனை
மையமாகக் கொண்டு ஒரு அறிவுஜீவிக் குழு உருவானது.
அதில் முக்கியமானவர்கள் – க.நா.சுப்ரமணியம், ஆதவன்,
தி.ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா,
என்.எஸ்.ஜெகன்னாதன் போன்றவர்கள்.
இவர்களின் கூட்டு முயற்சியால் சென்னையில் இருந்து
கணையாழி இதழ் தொடங்கப் பட்டது. முதலில் அதை
ஓர் அரசியல் விமர்சன இதழாகவே நடத்தி வந்தார்கள்.
ஆரம்பத்தில் தி.ஜானகிராமன் ஆசிரியராக இருந்தார்.
பின்பு அசோகமித்திரன்….
மெதுவே, கணையாழி இலக்கிய இதழாக
பரிணாமம் கொண்டது.
70-களில் நான் திருச்சியில் இருந்தபோது,
கணையாழி இதழுக்கு வருட சந்தா கட்டி
தபாலில் வரவழைத்து படித்து வந்தேன்…
அந்த சமயத்தில் அது கடைகளில் கிடைக்காது..!
ஆனந்த விகடன், கல்கி வாசித்து சலித்துப்போய்,
இன்னும் தீவிரமான இலக்கியத்தை தேடிக்கொண்டிருந்த
வாசகர்களுக்கு – நல்ல தீனியாக இருந்தது கணையாழி.
பல வருடங்கள் தொடர்ந்து வெளி வந்த
சிற்றிதழ் கணையாழி.
தமிழின் அனேகமாக எல்லா முக்கியமான எழுத்தாளர்களும்
கணையாழி வழியாகவே அறியப் பட்டார்கள்.
ஸ்ரீரங்கம் எஸ். ஆர் என்ற பேரில் சுஜாதா எழுத ஆரம்பித்தது
கணையாழியில் தான். (கடைசி பக்கம்…! )
கணையாழியை ஒரு இலக்கிய இயக்கம் என்றே சொல்ல
வேண்டும்.பல சங்கடங்கள், பொருளாதார
பிரச்சினைகளுக்கிடையே, பிடிவாதமாக கணையாழி
தொடர்ந்து இயங்கியது கி.கஸ்தூரிரங்கனின்
ஆர்வத்தினால் தான்.
.
———————————————————————————————————–



அய்யா .. ! அருமை .. எதையோ கூற எத்தனிக்கிறீர்கள் — ஆனால் … ? பரவாயில்லை … ! ” கணையாழி ” கி.கஸ்தூரிரங்கன் என்பவர் தமிழ் இதழாளர், எழுத்தாளர் … மற்றதை நீங்களே இடுகையில் கூறிவிட்டிர்கள் … !
இரண்டு –மூன்று நாட்களாக தமிழகத்தில் ஒரு வித பதட்டத்தை உருவாக்கியிருக்கின்ற ” கி.கஸ்தூரிரங்கன் ” என்பவர் வேறு வகை … ! புதிய கல்விக் கொள்கை.. இனி இந்தி கட்டாயம்.. என்று அறிக்கையளித்திருக்கிற அறிவுஜீவி …! என்ன பெயர் ஒற்றுமை இருக்கிறது — செயல் வெவ்வேறு விதம் — முன்னவர் மறைந்தாலும் நினைவு கூறத்தக்கவர் .. பின்னவர் போகப்போக தெரியும் …!!!
செல்வராஜன்,
ஒரு விதத்தில் நீங்கள் சொல்வதும் சரியே –
இன்றைய தினம் நான் கஸ்தூரிரங்கன்
பெயரை நினைவுபடுத்திக்கொள்ள காரணம்
இருக்கிறது…. அவர் எமெர்ஜென்சி காலத்திய
இந்திரா காந்தியையே விமரிசனம் செய்தவர்…
ஆனால், இவர்…..?
இஸ்ரோ விஞ்ஞானிக்கும் கல்விக்கொள்கைக்கும்
என்ன சம்பந்தம் ….?
ஏன் இவர் தலைமையில்
இப்படி ஒரு கமிட்டி…?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அய்யா …! “கணையாழியின் கதை ” என்று ” திருமிகு வே . சபாநாயகம் ” அவர்கள் முதல் இதழின் தொடக்கத்தை மிக விரிவாக விவரித்திருக்கிறார்… அதைப்பற்றி அறிய : –https://puthu.thinnai.com/?p=12028 …
திருமிகு .வே.சபாநாயகம் அவர்கள் எமக்கு யாம் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தவர் .. எமக்கு குருநாதர் — அவரைப்பற்றி ” அது ஒரு கனாக்காலம் ” என்று யாம் தங்களுக்கு எழுதிய எமது பள்ளியைப்பற்றிய மடலில் குறிப்பிட்டு இருந்தேன் … மடலை இடுகையாக வெளியிட்டு பெருமை சேர்த்தீர்கள் …!!
கணையாழி இதழின் முதல் பதிப்பின் அட்டைப்படம் மற்றும் விவரங்கள் பற்றி தினமணி பத்திரிகையில் வந்த கட்டுரையை வாசிக்க : — // கணையாழி பதித்த இலக்கியத் தடங்கள்! // https://m-dinamani-com.cdn.ampproject.org/v/s/m.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/feb/17/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3098273.html?usqp=mq331AQA&_js_v=0.1#referrer=https%3A%2F%2Fwww.google.com&_tf=From%20%251%24s&share=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fweekly-supplements%2Fdinamani-kathir%2F2019%2Ffeb%2F17%2F%25E0%25AE%2595%25E0%25AE%25A3%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25B4%25E0%25AE%25BF-%25E0%25AE%25AA%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4-%25E0%25AE%2587%25E0%25AE%25B2%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25A4%25E0%25AF%258D-%25E0%25AE%25A4%25E0%25AE%259F%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D-3098273.html
செல்வராஜன்,
நிறைய தகவல்களை அளித்திருக்கிறீர்கள்.
இவற்றை நான் இப்போது தான் படிக்கிறேன்.
மிக்க நன்றி.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அய்யா .. ! கணையாழி என்கிற இலக்கிய பள்ளியில் பயின்றவர்களும் — பங்களித்தவர்களும் என்ன சாதாரண நபர்களா…? — எத்தனை முகம் தெரியாத எழுத்து ஆர்வம் நிறைந்தவர்களை வெளியுலகத்திற்கு வெளிச்சம் போட்டு விளம்பரம் படுத்தி – பின்னாளில் அவர்கள் மிளிர ஒரு நெடுஞ்சாலையாக இருந்துள்ளது என்பதை ” கணையாழியின் கதை ” மூலம் அறிந்துக் கொள்ளலாம் — எவ்வளவு பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் இதில் எழுதி இருக்கிறார்கள் என்பதை காணும் போது ஆச்சர்யம் ஏற்படுகிறது …!!
சும்மா மேம்போக்காக கூட இந்த பதிவை படிக்க எண்ணம் இல்லாமல் — சாக்கடை அரசியல் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற நிலையை நினைத்தால் வருத்தமே மேலிடுகிறது ..!
இது ஒரு சாதாரண இதழின் கதை அல்ல — ஒரு எழுத்துலகின் சரித்திரம் — !!!
தமிழில் இலக்கியத் தரமுள்ள பத்திரிகைகள்
எதாவது இப்போது வெளிவருகின்றனவா ?