ஓடிப்போன EVKS இளங்கோவன் குறித்து – சுடச்சுட கார்த்தி சிதம்பரம்…..

karthi chidambaram-2

திருவாளர் EVKS இளங்கோவன் பற்றி நாம் விமரிசனம்
செய்வதை விட காங்கிரஸ்காரர் ஒருவரே விமரிசனம் செய்தால்
எப்படி இருக்கும் ….?

திரு.கார்த்தி சிதம்பரத்தை விட வேறு யார் இதை சிறப்பாகச்
செய்ய முடியும் …?

——-
“ஓடிப்போக நான் ஒன்றும் கோழை அல்ல” –
சரி – இப்போது எங்கு அய்யா இருக்கிறீர்கள்…?
“இந்தியாவுக்குள் தான்…
ஆமாம் – எங்கே இருக்கிறேன் என்று உங்களிடம்
எதற்காக சொல்ல வேண்டும்…. ?? !!! “

——–

முன் ஜாமீன் ( anticipatory bail ) கிடைக்கவில்லை என்பதால்,
வடக்கு நோக்கி எங்கோ ( ! ) ஓடிப்போன
தமிழக காங்கிரஸ் தலைவர்
திருவாளர் EVKS இளங்கோவன் அவர்களைக் குறித்து –
காங்கிரஸ் கட்சியின் இளைய தலைமுறை திரு.கார்த்தி சிதம்பரம்
அவர்கள் அளித்துள்ள “சுடச்சுட” பேட்டியிலிருந்து –

———-

குஷ்பு வடிவத்தில் இந்திரா காந்தியை பார்க்கிறேன் என்று
இளங்கோவன் சொன்னது ?

-அவர் கண் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

குஷ்புவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதா ?

வந்தாரை வாழ வைக்கும் கட்சி காங்கிரஸ் கட்சி.

ஜி.கே.வாசன் ?

அவரது கொள்கைகளை விளக்குங்கள் ப்ளீஸ்.

தமாக உறுப்பினர் சேர்க்கை ?

தங்களையே ஏமாற்றிக் கொள்கிறார்கள் ……..எங்களைப் போல …!!!

உங்கள் கட்சித்தலைவர் இளங்கோவன் பேச்சை
எப்படி பார்க்கிறீர்கள்…?

அரசியலில் நக்கல், நையாண்டி இருக்கலாம். ஒருபோதும் வரம்பு மீறக்கூடாது. ஆனால், இளங்கோவனின் பேச்சு வரம்பு மீறியது, அநாகரீகமானது. மக்களுக்கு அது தான் பிடித்திருக்கிறது போல. புள்ளி விவரங்களோடு அரசியல் பார்வையோடு பேசினால்,
ஏதோ போல பார்க்கிறார்கள். இது மாற வேண்டும்.

இளங்கோவனுக்கு எதிராக அதிமுக வினர் போராட்டங்கள்
நடத்தியது சரியானதா ?

இளங்கோவன் பேச்சை நியாயப்படுத்த முடியாது. அதற்காக ஒரு கட்சியின் தொண்டர்கள், இன்னொரு கட்சியின் அலுவலகங்களை தாக்குவது அதைவிட மோசமான செயல். தங்கள் கட்சியினர் இவ்வாறு நடந்துகொள்வதை ஒருவகையில் அதிமுக
ஊக்குவித்து இருக்கிறது.

இளங்கோவனால் தான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் “ஆக்டிவ்” ஆக
இருக்கிறது என்று சொல்கிறார்களே ?

இளங்கோவனால் தான் தமிழ்நாடு காங்கிரஸ் ஆக்டிவ் ஆக
இருக்கிறது என்று சொல்வது அபத்தமானது. ஏதோ ஒரு வகையில்
அவர் ஊடக வெளிச்சத்தில் இருப்பதால் அப்படி சொல்கிறார்கள்.
ஒரு தலைவர் தன் கட்சியின் வளர்ச்சிக்காக என்ன செய்தார்,
மக்களுக்கு என்ன செய்தார் என்பதைத்தான் பார்க்க வேண்டும்.
அடிக்கடி ஊடகங்களில் முகத்தை காட்டினால் மட்டும் கட்சி
வளர்ந்து விடுமா ? வைகோ கூடத்தான் அடிக்கடி ஊடகங்களில்
முகத்தை காட்டுகிறார். ஆனால், அவர் வாக்கு சதவிகிதம்
வெறும் 3 சதவிகிதம் தானே ?

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு எப்படி இருக்கிறது ?

பிஜெபி-யைப் போல காங்கிரசும் தன்னைத்தானே ஏமாற்றிக்
கொண்டிருக்கிறது…. உறுப்பினர் சேர்க்கை என்ற பெயரில்,
காகிதத்தில் பெயர்களை எழுதுவது மட்டுமே வேலையல்ல.
அவை ஓட்டுக்களாக மாற வேண்டும். 70 லட்சம் உறுப்பினர்கள்
என்று சொன்னார்கள். ஆனால், கடந்த தேர்தலில் நாங்கள்
வாங்கிய ஓட்டுகளோ வெறும் 18 லட்சம் தான்.

இன்றைய கால கட்டத்தில் போராட்டங்களை எல்லாம் மக்கள் விரும்புவதில்லை. சாலை மறியல், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், என நடத்தினால் மக்கள் திட்டுகிறார்கள்.

அதனால் தான் கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக போன்ற கட்சிகள் வளராமல் இருக்கின்றன. ஊடக வெளிச்சத்துக்கு தரப்படும் முக்கியத்துவத்தை கட்சியை பலப்படுத்துவதில் காண்பித்தால் மட்டுமே தமிழகத்தில் காங்கிரஸ் தேறும்.

இவ்வளவு பேசுகிற நீங்கள் பல நாட்கள் ‘அரசியலில்” இருப்பதில்லையே ?

எனக்கு தொழில் இருக்கிறது. குடும்பம் இருக்கிறது.
உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் நேர்மையாக தொழில்
நடத்துகிறேன்.
அதற்காக மக்களை விட்டு விலகி இருக்கிறேன் என்பது தவறு. தொழில்நுட்ப வளர்ச்சி, எங்கிருந்தாலும் இணைக்கக்கூடியது.

24 மணி நேரமும் நக்கல் அடித்துக்கொண்டிருக்கவும், அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கவும் நான் தயார் இல்லை. யாருக்கும் பயப்பட வேண்டிய நிலையிலும் நான் இல்லை. யாருக்கும் வளைந்து கொடுக்கவும் எனக்கு தெரியாது. அது என் பலம். அதுவே என் பலவீனமாகவும் இருக்கிறது.

————–

பின் குறிப்பு – திரு.கார்த்தி சிதம்பரம் பற்றிய
பொதுவான குறைகளையும், அவர் மீதான
குற்றச்சாட்டுகளையும் ஒருபக்கம் ஒதுக்கி வைத்து
விட்டு, இந்த பேட்டியை மட்டும் படித்தால் –

அவரது பேட்டி மிகவும் வெளிப்படையாகவும்,
பெரும்பாலும் சரியாகவும் இருக்கிறது என்பதே
என் கருத்து. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே…?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to ஓடிப்போன EVKS இளங்கோவன் குறித்து – சுடச்சுட கார்த்தி சிதம்பரம்…..

  1. Sampathkumar. K.'s avatar Sampathkumar. K. சொல்கிறார்:

    மதுரை போனால் உயிருக்கு ஆபத்து என்று
    ஓடிப்போனவர் மீண்டும் பெட்டிஷன் போடப்போகிறாராமே ?

  2. நல்ல கூத்துதான் போங்க… இவங்கே இப்படித்தான் ஐயா…
    இந்திரா காந்தியை இறந்தவுடன் அவமானப்படுத்துவதா ? வேதனை வேதனை.

  3. பிங்குபாக்: ஓடிப்போன EVKS இளங்கோவன் குறித்து – சுடச்சுட கார்த்தி சிதம்பரம்….. | Classic Tamil

  4. paamaran's avatar paamaran சொல்கிறார்:

    முதிர்ச்சி —- பண்பு — உண்மை —- பெருந்தன்மை போன்றவைகள் பேட்டியில் தெரிகின்றன .! பேட்டிகளுக்குமட்டும் என்று இல்லாமல் நடைமுறையிலும் இருந்தால் கார்த்திக் சிதம்பரத்தின் வருங்காலத்திற்கு நல்லது …!!!

  5. இ.பு.ஞானப்பிரகாசன்'s avatar இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

    //வை.கோ கூடத்தான் அடிக்கடி ஊடகங்களில்
    முகத்தை காட்டுகிறார். ஆனால், அவர் வாக்கு சதவிகிதம்
    வெறும் 3 சதவிகிதம்தானே// – உங்களுக்கு அது கூடக் கிடையாதே! அப்புறம் என்ன பேச்சு?

    //இன்றைய கால கட்டத்தில் போராட்டங்களை எல்லாம் மக்கள் விரும்புவதில்லை… மக்கள் திட்டுகிறார்கள்// – மேல்தர, நடுத்தர மக்களின் கண்ணோட்டத்தில்தான் இவர் மொத்தச் சமூகத்தையும் பார்க்கிறார் என்பது இதிலிருந்தே தெரிகிறது. இன்றும் மக்கள் நாள்தோறும் ஏதாவது ஒரு போராட்டம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஈழப் பிரச்சினைக்காக நடத்தப்பட்ட போராட்டங்களில் மக்கள் கலந்து கொண்டு ஆதரவளிக்கவில்லையா? அல்லது, அண்மையில் நடந்த மதுவிலக்குப் போராட்டங்களுக்குத்தான் பொதுமக்கள் ஆதரவு இல்லாமல் போய்விட்டதா? பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கே உரிய பார்வை இவருக்கு இன்றும் மாறவில்லை என்பதையே இந்தப் பேச்சு காட்டுகிறது.

    //அதனால் தான் கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக போன்ற கட்சிகள் வளராமல் இருக்கின்றன. ஊடக வெளிச்சத்துக்கு தரப்படும் முக்கியத்துவத்தை கட்சியை பலப்படுத்துவதில் காண்பித்தால் மட்டுமே தமிழகத்தில் காங்கிரஸ் தேறும்// – போராட்டம் என்பதே ஊடக வெளிச்சத்துக்காகத்தான் என்கிற கீழ்த்தரமான பார்வை கொண்டவர்களுக்குப் போராட்டம் என்பதன் உண்மையான பொருள் தெரியாது. இங்கு எதுவும் போராடாமல் கிடைத்து விடுவதில்லை. இன விடுதலை, சுற்றுச்சூழல், பெண்ணுரிமை போன்ற பெரிய விதயங்கள் முதல் குடிநீர் வராதது, சாலை இல்லாதது, தெருவிளக்கு எரியாதது எனச் சின்னஞ் சிறிய விதயங்கள் வரை எல்லாப் பிரச்சினைகளுக்கும் இங்கு அன்றாடம் போராட்டம் நடத்தித்தான் தீர வேண்டியிருக்கிறது. இது கூடத் தெரியாவிட்டால், நாட்டில் என்ன நடக்கிறது என்பது கூடத் தெரியாத, அரசியல் அரிச்சுவடி கூட அறியாத சிறுவர்தான் இவர் என்பதுதான் பொருள்.

    //அதற்காக மக்களை விட்டு விலகி இருக்கிறேன் என்பது தவறு. தொழில்நுட்ப வளர்ச்சி, எங்கிருந்தாலும் இணைக்கக்கூடியது// – என்னவோ நாட்டில் எல்லாரிடமும் திறன்பேசிகளும் (smartphones) இணைய இணைப்பும் சென்று சேர்ந்து விட்டது போலப் பேசுகிறார். நாட்டில் இருக்கிற மேல்தட்டு, நடுத்தட்டு மக்களை மட்டுமே மனதில் கொண்டு இவருடைய முழுக் கண்ணோட்டமும் அமைந்திருக்கிறது என்பதற்கு இஃது இன்னுமோர் எடுத்துக்காட்டு!

  6. Sundar's avatar Sundar சொல்கிறார்:

    We are not suppose to believe such kind of wrong persons since we have experienced their earlier political influences…….JEE

  7. Ezhil's avatar Ezhil சொல்கிறார்:

    //எனக்கு தொழில் இருக்கிறது. குடும்பம் இருக்கிறது.
    உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் நேர்மையாக தொழில்
    நடத்துகிறேன். //

    http://www.dnaindia.com/money/report-aircel-maxis-deal-ed-summons-officials-of-firm-linked-to-p-chidambaram-s-son-karti-2118029

    🙂

  8. gopalasamy's avatar gopalasamy சொல்கிறார்:

    பெரும்பாலார்ன் அரசியல் கட்சி போராட்டங்களுக்கு கூலிக்கு ஆள் பிடித்துத்தான் அழைத்து வருகிறார்கள். இது தமிழ் நாடு அறிந்த உண்மை. பெருபாளான் போராட்டகளினால், எல்லா தரப்பு மக்களும் பாதிக்க படுகிறார்கள். எவ்வளவோ மக்களுக்கு அன்றைய வேலை கிடைக்காமல் பொய் விடும். யார் பாதிக்கபட்டாலும் பரவாயில்லை என்பதும் மேட்டிமை வாதம்தான்.

    • இ.பு.ஞானப்பிரகாசன்'s avatar இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

      யார் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று நான் சொல்லவில்லை. போராட்டம் நடத்துபவர்களே பாதிக்கப்பட்டவர்கள்தாம் என்றுதான் கூறுகிறேன். ‘பெரும்பாலான கட்சிகள்’ என்று நீங்கள் தொடங்கியிருப்பதிலிருந்தே சில சிறுபான்மைக் கட்சிகள் இன்றும் உண்மையாகத்தான் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதை நீங்களே ஒப்புக் கொண்டு விடுகிறீர்கள்.

  9. நெல்லைத் தமிழன்'s avatar நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    ஆளைப்பார்த்து எடை போட்டிருக்கிறீர்கள். கொள்ளையடித்ததில் பெரும் பங்குண்டு. தமிழகத்தில் மத்திய அமைச்சரின் மகன் ஒருவர், பினாமி பெயரில் பெரிய நிறுவனங்கள் வைத்திருக்கிறார். துபாயில் 1000 கோடி முதலீடு செய்துள்ளார். பல பல கம்பெனிகள் அவருக்குச் சொந்தம் (‘நாங்க இருக்கோம். நீங்க வாங்க கம்பெனி முதற்கொண்டு, மால்கள் முதற்கொண்டு). இவையெல்லாம் எந்த நேர்மையான தொழில் செய்து, 8 ஆண்டுகளில் வந்தன? மது வாங்கும்போது, அந்தக் கட்சிக்குக் கொஞ்சம், இந்தக் கட்சிக்குக் கொஞ்சம் என்று எல்லாவற்றிலும் பங்கு கொடுப்பதுபோல், எத்தனை எத்தனை கம்பெனிகளில் இவருக்குப் பணம் உண்டு. நமக்குத் தெரியாததால், ‘வெள்ளையும் சொள்ளையுமா இருப்பவன் பொய் சொல்ல மாட்டாண்டா’ என்று நினைப்பதால், எத்தர்கள் நல்லவன் வேடத்தில் நடமாடுகிறார்கள்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் நெல்லைத்தமிழன்,

      நீங்கள் என் எழுத்தை முழுமையாக கவனிக்கத் தவறி விட்டீர்கள்
      என்று நினைக்கிறேன் – இந்த பகுதியை கவனிக்கவும் :-

      – // திரு.கார்த்தி சிதம்பரம் பற்றிய
      பொதுவான குறைகளையும், அவர் மீதான
      குற்றச்சாட்டுகளையும் ஒருபக்கம் ஒதுக்கி வைத்து
      விட்டு, இந்த பேட்டியை மட்டும் படித்தால் // –

      இந்த இடுகை /பேட்டி, கார்த்தியைப் பற்றிய
      எந்தவித பிம்பத்தையும் ஏற்படுத்தவோ மாற்றவோ அல்ல –
      திரு இளங்கோவனைப் பற்றி இன்னொரு காங்கிரஸ்காரரே
      சொன்னதை எடுத்துரைக்க மட்டுமே –

      என்று கொள்க …..!!!

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.