முன் ஜாமீன் – ஒரே வழக்கு – இருவேறு தீர்ப்புகள்….!!!

.

.

மோசடி குறித்த கிரிமினல் வழக்கு ஒன்று.
கைது செய்யப்பட்டு விடுவோமோ என்று அஞ்சி –
குற்றம் சாட்டப்பட்டவர் முன் ஜாமீன் கோரி மனு செய்கிறார்.

முதலில் சென்னை உயர்நீதி மன்றத்தில் –
அது நிராகரிக்கப்படுகிறது.

பின்னர் டெல்லி உச்ச நீதி மன்றத்தில் –
அங்கே அவரது வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்படுவது
மட்டுமல்லாமல், கைது செய்ய முனைந்த புலன் விசாரணை
குழுவுக்கு கடுமையான கண்டனம் வேறு …!!!

சென்னையில் கிரிமினல் வழக்காக பார்க்கப்பட்டது –
டெல்லியில் சிவில் வழக்காக மாறி விடுகிறது…
இந்த விந்தை நிகழ்வது எப்படி …?

முன்னதாகவே ஒரு விஷயத்தை நமது வலைத்தள
நண்பர்களுக்கு சொல்லி விட விரும்புகிறேன்…

சாதாரணமாக நீதிமன்ற தீர்ப்புகளை விமரிசனம் செய்வதை
நீதிமன்றங்கள் சுலபமாக ஏற்றுக் கொள்வதில்லை.
தீர்ப்புகளை உள்நோக்கம் கற்பிக்காமல் விமரிசிக்கலாம்
என்று ஒரு நடைமுறை இருந்தாலும்,
பல சமயங்களில் அதுவும் கூட ஏற்கப்படுவதில்லை.

எனவே – நான் இங்கு தருவது செய்தியை மட்டுமே….
தீர்ப்புகளைப் பற்றிய எந்தவித விமரிசனமும் அல்ல….

அப்படியானால் – எதற்காக நான் இந்த செய்தியை இங்கு
தொகுத்து தரவேண்டும்….?

reason is very simple –

பல்வேறு சந்தர்ப்பங்களில் –
ஒரே வழக்கு, ஒரே வாதம் –
வெவ்வேறு நீதிமன்றங்களால் –
எப்படி வெவ்வேறு விதமாக பார்க்கப்படுகிறது….
வாதங்கள் எந்த அளவிற்கு ஏற்கப்படுகின்றன….

அவற்றின் மீதான தீர்ப்புகள்
எந்த கோணங்களில் வழங்கப்படுகின்றன
என்பதை ஒப்பிட்டு பார்த்து – நண்பர்கள்
தங்கள் சட்ட அறிவை
வளர்த்துக் கொள்ள வேண்டும்
என்பதற்காகவே…..!!!

—————————

இது சென்னை நீதிமன்ற தீர்ப்பின் ஒரு பகுதி –

இந்த வழக்கில் மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
நிரூபிக்கப்படாத வரை அவரை குற்றவாளியாகக் கருத முடியாது.
எனினும், இந்த வழக்கில் தயாநிதி மாறன் மீது ஊழல், மோசடி,
கோடிக்கணக்கில் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியது போன்ற தீவிரமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

காழ்ப்புணர்வு வாதம் ஏற்புடையதல்ல: அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவும், அவரை அவமானப்படுத்துவதற்காகவும்
தயாநிதி மாறன் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவரது
வழக்குரைஞர் கூறினார். ஆனால், இந்த வாதம் ஏற்புடையதாக
இல்லை.

இந்த வழக்கில் முதல் கட்ட விசாரணை 2011-இல் தொடங்கியது.
முதல் தகவல் அறிக்கை 2013-இல் பதிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே விசாரணைக்காக சி.பி.ஐ. அலுவலகத்துக்குச் சென்றபோது அவர் கைது செய்யப்படவில்லை.

அடிப்படை முகாந்திரம்: இந்த வழக்கில் அடிப்படை முகாந்திரம்
உள்ளது. மத்திய தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்ப
அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், தனது பதவியைத் தவறாகப்
பயன்படுத்தி அதிகாரிகள் பெயரில் சட்டவிரோதமான முறையில்
தொலைபேசி இணைப்புகளைப் பெற்றதாகக் குற்றம்
சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் உண்மைகளையும், அதன் தாக்கத்தையும்
பார்க்கும்போது, இந்த வழக்கில் மனுதாரருக்கு முன்ஜாமீன்
வழங்குவது சரியானதல்ல எனக் கருதுகிறேன்.

அரசின் வாதம் சரியே… நமது நாட்டில் ஏராளமான விசாரணைக் கைதிகள் சிறிய குற்றங்களுக்காக சிறையில் வாடும்போது, அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பை ஏற்படுத்திய மனுதாரருக்கு மட்டும் ஏன் சிறப்புச் சலுகை வழங்க வேண்டும் என்கிற அரசு வழக்குரைஞரின் வாதம் ஏற்புடையதுதான்.

நீதியின் மனசாட்சி தடுக்கிறது: மக்கள் பிரதிநிதியாகவும்,
மத்திய அமைச்சராகவும் இருந்த மனுதாரர், தனது பதவியைத்
தவறாகப் பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு இழப்பை
ஏற்படுத்தினார்
என்ற மிகக் கடுமையான குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

இந்த வழக்கில் நீதியின் மனசாட்சி மனுதாரருக்கு ஜாமீன்
வழங்குவதைத் தடுக்கிறது.

மேலும், அவர் வழக்கு விசாரணையின்போது சரியாக
ஒத்துழைக்கவில்லை என்றும், தனது வாக்குமூலத்தில் கூறியவற்றை அவர் திரும்பப் பெற்றதாகவும், முந்தைய விசாரணைகளில் அவர் அளித்த தகவல்களுடன்,
இப்போது அளித்த தகவல்கள் பொருந்தவில்லை என்றும் சி.பி.ஐ.
தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலில் எடுக்கலாம்: அவர் ஆதாரங்களைக் கலைக்கக் கூடும் என்று அச்சம் தெரிவிப்பதால், சி.பி.ஐ. தரப்பில் கோரியவாறு,
மனுதாரரைக் காவலில் எடுத்து விசாரிப்பதுதான் சரியானதாக
இருக்கும். எனவே, மனுதாரருக்கு ஜூன் 30-ஆம் தேதி வழங்கப்பட்ட முன்ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது.

இது தொடர்பாக அவரது மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

3 நாள்கள் அவகாசம்: எனினும், மனுதாரரின் வழக்குரைஞர் கோரியவாறு, மனுதாரர் சரணடைய 3 நாள்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. அவர் வருகிற 13-ஆம் தேதி மாலை
4.30 மணிக்குள் சி.பி.ஐ. முன் சரணடைய வேண்டும்

( http://www.dinamani.com/tamilnadu/2015/08/11/ )

—————————————————

இது டெல்லி நீதிமன்ற உத்திரவின் சில பகுதிகள் –

முன்ஜாமீனை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததற்கு
எதிராக உச்ச நீதிமன்றத்தில் தயாநிதிமாறன் மனுத்தாக்கல்
செய்திருந்தார்.

மாறன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு
சிங்வி, மாறனின் முன் ஜாமீனை ரத்து செய்யும் முன்னர்
சென்னை உயர் நீதிமன்றம், சட்ட சூழல்களை கருத்தில்
கொள்ளவில்லை. முன் ஜாமீனை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் சட்டப்பிழை உள்ளது. எனவே, மாறன் முன் ஜாமீன் ரத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்றார்.

அப்போது நீதிபதி டி.எஸ். தாகூர் ” மாறனை கைதை நோக்கி தள்ளுவதன் பின்னணியில் அரசியல் பழிவாங்கல் உள்ளதா? என்று கேள்வி எழுப்பியதோடு,

மாறனை சிக்க வைக்க சிபிஐ முயற்சிக்கிறதா?
என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், ” ஒரு கோடி ரூபாய் தொலைபேசி கட்டண பாக்கிக்காக ஒருவரை சிபிஐ கைது செய்யவேண்டியதன் அவசியம் என்ன?
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை 2013 ஆம் ஆண்டில் பதிவு
செய்யப்பட்டபோது ஏன் அவரை கைது செய்யவில்லை.
ஏறக்குறையை 3 ஆண்டுகளாக நீங்கள் ( சிபிஐ) என்ன
செய்துகொண்டிருந்தீர்கள்?

உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேசிய கிராமப்புற
சுகாதார திட்ட ( NRHM ) ஊழலில் சுமார் 800 கோடி ரூபாய்
பொதுமக்கள் பணம் இழப்பு ஏற்பட்டது. ஆனால் ஒருவர் கூட
அதற்காக கைது செய்யப்படவில்லை.
ஆனால் இங்கே நீங்கள் ஒரு கோடி ரூபாய் பில் பாக்கிக்காக
ஒருவரை கைது செய்ய விரும்புகிறீர்கள்.
நீங்கள் அவரை
( சிபிஐ) உங்கள் பிடிக்கு கொண்டு வர முயற்சிக்கிறீர்களா?

தொலைபேசி இணைப்புகள் கொடுக்கப்பட்டது சதி திட்டத்தின் ஒரு பகுதி என்று நீங்கள் (சிபிஐ) கருதினீர்கள் என்றால்
அவரை ( மாறனை ) விசாரியுங்கள்…பிஎஸ்என்எல் அதிகாரிகளை
விசாரியுங்கள். அதை விடுத்து அவரை ஏன் கைது செய்யவேண்டும்?

அவரை கைது செய்வது என்பது உங்களது கவுரவ பிரச்னையா?

பொதுமக்கள் பணத்திற்கு இழப்பு ஏற்படுத்திய யாரும்
தப்பித்துவிடக்கூடாதுதான். ஆனால் கஸ்டடி விசாரணை தேவையா?

ஒரு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்பதை எவ்வாறு
மதிப்பிட்டீர்கள்?

பில் எதுவும் போடப்படவில்லை என்று நீங்கள் ( சிபிஐ) கூறுகிறீர்கள். எப்படியோ… அவர் பில்லுக்கான பணத்தை கட்ட தயாராக உள்ளாரா?
இப்போது நீங்கள் பில் போட்டு கொடுத்தால் அவர் அந்த
தொகையை கட்டுவார்” என்று காட்டமாக கூறினார்.

அப்போது மாறன் வழக்கறிஞர் ஷியாம் திவான், ” இந்த வழக்கில் கிரிமினல் குற்றம் எதுவுமில்லை. பணம் கட்ட வேண்டும் என்பது மட்டும்தான்” என்றார்.

இதனையடுத்து சிபிஐ சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, ” இது ஒரு மிகப்பெரிய ஊழல்; அரசாங்கத்தில் இருந்த தனது செல்வாக்கு காரணமாக அவர் தனது குடும்பத்தினர் நடத்தும் தொலைக்காட்சிக்கு தொலைபேசி இணைப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
இந்த சதியில் மாறனுக்கு உள்ள தொடர்பை நிரூபிக்க
அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க விரும்புகிறோம்”
என்றார்.

இதனையடுத்து நீதிபதி, ” அரசு பங்களாக்களில் காலக்கெடு
முடிந்த பின்னரும் பல பேர் காலி செய்யாமல் தங்கி உள்ளனர்.
அதனை நீங்கள் ஊழல் என்று கூறுவீர்களா?

என கேள்வி எழுப்பினார்.

அவரைத் தொடர்ந்து நீதிபதி கோபால கவுடா, “பொருளாதார குற்றங்களில் ஏன் முன் ஜாமீன் அளிக்கப்படுவதில்லை?
உங்கள் ஆட்சேபனைகளை நீங்கள் விளக்க வேண்டும்”
என அட்டார்னி ஜெனரலிடம் கூறினார்.

இதனையடுத்து தயாநிதி மாறன் முன்ஜாமீனை ரத்து செய்த
சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து
உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் அடுத்தகட்ட
விசாரணையை அடுத்த மாதம் 14-ம் தேதிக்கு
ஒத்தி வைத்தனர்.

( http://tamil.oneindia.com/news/india/supreme-court-
restrains-cbi-from-arresting-dayanidhi-maran-t-
233227.html )

———————————————–

நான் ஏற்கெனவே மேலே சொல்லியிருப்பது போல் –

– இந்த இடுகை இந்த வலைத்தள நண்பர்கள்
தங்களுக்குள்ளேயே சிந்தித்துக் கொள்வதற்காக மட்டும் தான்…
எனவே, நண்பர்களிடமிருந்து – இந்த இடுகைக்கு மட்டும் –
நான் பின்னூட்டங்களை எதிர்பார்க்கவில்லை –
– வரவேற்கவும் இல்லை…!

இந்த வழக்கு சென்னையில் ஒரு கோணத்திலும்,
டெல்லியில் வேறோரு கோணத்திலும் பார்க்கப்பட்டது
எப்படி…?
அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்று
உங்களுக்குள்ளேயே அலசிக் கொள்ள மட்டுமே
இந்த இடுகை….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to முன் ஜாமீன் – ஒரே வழக்கு – இருவேறு தீர்ப்புகள்….!!!

  1. kalakarthik's avatar kalakarthik சொல்கிறார்:

    அண்ணா ,எனக்கும் தாங்கவேயில்லை.கலிகாலம் என்றாலும் இப்படி கலி முத்த வேண்டாம்.

  2. Ramachandran. R.'s avatar Ramachandran. R. சொல்கிறார்:

    கே.எம்.சார்,

    ” பாதாளம்” என்பது சுமாராக எவ்வளவு தூரம் இருக்கும் ?

    ஒன்றுமில்லை. வீட்டில் “பணம் பாதாளம் மட்டும் பாயும்” என்று
    சொன்னார்கள்.
    அதான் தோராயமா சென்னை டு டெல்லி வரை இருக்குமா
    என்று தெரிந்து கொள்வதற்காக கேட்டேன்.

    சார், கண்பத் சாருக்கு நீங்கள் எழுதிய பதிலைப்பார்த்து
    நாமும் முயற்சி செய்தால் என்ன என்று தோன்றியது.
    நான் எழுதியது தவறாக இருந்தால் நீங்களே டெலிட் செய்து
    விடுங்கள். நன்றி.

  3. Sella's avatar Sella சொல்கிறார்:

    Like Gunha vs Kumarasmy; who is wrong?

  4. நெல்லைத் தமிழன்'s avatar நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    நீதிபதிகள் மனிதர்கள்தான். அதனால்தான் தீர்ப்புக்கள் மாறி மாறி எழுதப்படுகின்றன. சட்டத்துக்கு எப்படி வேண்டுமென்றாலும் விளக்கம் அளிக்கலாம். நேர்மை நம் சமூகத்தில் அருகி வருகிறது. நீங்கள் எந்த வழக்கை எடுத்துக்கொண்டாலும் தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். அதை நியாயப்படுத்தலாம். அதனால்தான் நீதிபதி கிருஷ்ணையருக்கு வயது ஏற ஏற, அவர் பார்க்கும் பார்வை சாந்தமாகிப்போனது (மனிதாபிமானம் கூடிக்கொண்டே வந்தது)

  5. Thiruvengadam (@veluran)'s avatar Thiruvengadam (@veluran) சொல்கிறார்:

    Astrologers , if Daya`s Horoscope ( leave alone their faith) available can Research the happenings in this period and update their knowledge.

  6. புது வசந்தம்'s avatar புது வசந்தம் சொல்கிறார்:

    பாராளுமன்றத்தில் சுவையான விசயம்…

    நிறைய கேள்விகள் உள்ளன ?

  7. paamaran's avatar paamaran சொல்கிறார்:

    திரு. கா.மை. அய்யா ! நீங்கள் நான்கு வருடங்களுக்கு முன் எழுதிய ஒரு இடுக்கையின் வாக்கியங்கள் இன்றும் பொருந்துவது வியப்பு அளிக்கிறது …..!! // சட்டம் ஒரு இருட்டறை – வக்கீல்களின் வாதம் ஒரு கொள்ளிக்கட்டை ! படிக்கவும் செய்யலாம் – கொளுத்தவும் செய்யலாம் !! //
    Posted on ஒக்ரோபர் 1, 2011 by vimarisanam – kavirimainthanஅறிஞர் அண்ணா ஒரு முறை சொன்னார் –
    “சட்டம் ஒரு இருட்டறை.
    வக்கீல்களின் வாதம் ஒரு விளக்கு”

    இன்று அதை இப்படி மாற்றிச்சொல்ல
    வேண்டி இருக்கிறது. –

    வக்கீல்களின் வாதம் ஒரு கொள்ளிக்கட்டை.
    வெளிச்சமும் கொடுக்கலாம் –
    கொளுத்தவும் செய்யலாம் !
    தன் தலையையே சொரிந்தும் கொள்ளலாம் !!.

    விசித்திரமான வழக்கு !
    வினோதமான வாதங்கள் ……. !!

  8. பிங்குபாக்: முன் ஜாமீன் – ஒரே வழக்கு – இருவேறு தீர்ப்புகள்….!!! | Classic Tamil

  9. NRI_Tamil's avatar NRI_Tamil சொல்கிறார்:

    //ஒரு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்பதை எவ்வாறு
    மதிப்பிட்டீர்கள்?

    பில் எதுவும் போடப்படவில்லை என்று நீங்கள் ( சிபிஐ) கூறுகிறீர்கள்//

    Why high court did not consider these points?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் NRI_Tamil,

      நீங்கள் வழக்கை துவக்கத்திலிருந்து கவனிக்கவில்லை என்று
      நினைக்கிறேன்.

      சிபிஐ தன்னுடைய பெட்டிஷனிலேயே இந்த விவரங்களை
      எல்லாம் விரிவாக கூறி இருக்கிறது.

      வேண்டுமென்றே, பில் போட முடியாதபடியான கனெக்ஷன்கள்
      தான் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தொலைபேசி இலாகாவின்
      சொந்த பயன்பாட்டிற்கு என்று காரணம் சொல்லப்பட்டிருகிறது.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  10. theInformedDoodle's avatar theInformedDoodle சொல்கிறார்:

    உச்ச நீதி மன்ற வழக்கில் இது வரை தொலைபேசி உபயோகப் படுத்தியதற்கு பில் கொடுக்கப் படவில்லை. அதனால் அவர் கட்டவில்லை. இதற்கு கைது வரை போகத்தேவையில்லை என்பது போல வாக்குவாதங்கள் இருப்பது போல தோன்றுகிறது. இது வழக்கின் தன்மையே மாற்றிவிடுகிறதே?

    வழக்கு பணம் கட்டவேண்டியது பற்றியே இல்லை! சட்ட விரோதமாக உபயோகப் படுத்திய விதத்தில் தான்.

    ஒரு வேளை நான் தான் தவறுதலாகப் புரிந்து கொண்டுள்ளேனா?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் theInformedDoodle,

      நீங்கள் சரியாகவே புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.

      கிரிமினல் வழக்கை, சிவில் வழக்காக மாற்றும் முயற்சி தான்
      நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு யார் யாரோ துணை
      போகிறார்கள்.

      குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு
      கேட்கப்பட வேண்டிய விஷயங்கள் எல்லாம், முன் ஜாமீன்
      பெறும்போதே கேட்கப்படுகிறது.

      கேள்வி கேட்கப்பட வேண்டியவர் யார்….?
      விளக்கம் சொல்ல வேண்டியவர் யார் ..?

      மன்னித்துக் கொள்ளுங்கள் – நீதிமன்ற விவகாரங்களை பற்றி
      நாம் இந்த நிலையில் விரிவாக விவாதம் செய்ய முடியாது.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  11. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    மேகி நூடுல்ஸ் மீது விதிக்கப்பட்ட தடையை மும்பை நீதிமன்றம் நீக்கியுள்ளது!

    “திருவள்ளுவர் கலைக்கூடம்” வி. சேகர், சிலை கடத்தலில் கைது!

    ஜெயாவின் திட்டத்தை முன் கூட்டியே அறிந்துகொண்ட கருணாநிதி அன்று இரவே அவசர அவசரமாக மது விலக்கு அமல்படுத்தும் திட்டத்தை அறிவித்தது கேவலம் என்றால்…
    //”உங்கள் அறிவிப்பு மட்டும் அன்று வெளிவந்து விட்டால் –
    இவர்கள் யாரையும் தரையிலேயே பார்க்க முடியாது….
    முதலமைச்சருக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்…
    தயவுசெய்து வேறு எப்போது வேண்டுமானாலும்
    மதுவிலக்கு அறிவிப்பை செய்யுங்கள். ஆனால் 15.8.2015 அன்று
    மட்டும் வேண்டாம் – வேண்டவே வேண்டாம் தாயே.// என்று கூறும் காவிரிமைந்தன் ஐயா!

    மனிதர்களில் எத்தனை நிறங்கள்?!

  12. Naresh's avatar Naresh சொல்கிறார்:

    2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் இந்த நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபருடைய ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது. இத்தனைக்கும் கீழ் நீதிமன்றத்தில் விசாரணைக்கே வராத வழக்கு அது. அதை 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரித்து அந்த தொழிலதிபருடைய நிறுவனத்தின் மீது கடும் ஆட்சேபம் தெரிவித்து அந்த தொழிலதிபரை திகார் சிறைக்கு அனுப்புகிறது. அன்றிலிருந்து இன்று வரை அவருக்கு பிணை வழங்காமல் உச்சநீதிமன்றம் கடும் நிபந்தனைகளை விதித்து வருகிறது. மேலும் பத்தாயிரம் கோடி பிணை தொகை செலுத்தினால் மட்டுமே ஜாமீன் கிடைக்கும் என்கிற நிலை தான் தற்போது வரை அவரை சிறையில் வைத்துள்ளது. அந்த தொழிலதிபர் சுப்ரதா ராய், அந்த வழக்கை விசாரித்த நீதிபதி திரு.டி.எஸ்.தாகூர்.

    அதே நீதிபதி தான் தயாநிதி வழக்கை வேறு ஒரு கோணத்தில் இருந்து பார்கிறார். இங்கே அவரது பார்வை மாறுபடுகிறது. தயாநிதி புலனாய்வு துறைக்கு ஒத்துழைக்கவில்லை என்பது தான் பிரச்னை. தயாநிதி ஏன் ஒத்துழைக்க வில்லை என்பதை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஒழுங்காய் படித்தாலே புரிந்து கொள்ளலாமே. தயாநிதி கொடுத்த மனுவை அப்படியே உத்தரவாய் வழுங்குவதற்கு உச்சநீதிமன்றம் எதற்கு? இதை வைகோ அல்லது இளங்கோவனோ கூட செய்வார்களே?அரசியல் பழிவாங்கல் என்ற வார்த்தையை வேறு பயன்படுத்தி உள்ளார். எனக்கு ஒரு சந்தேகம் தயாநிதி மாறன் என்ன மக்கள் செல்வாக்கு படைத்த அவ்வளவு பெரிய தலைவரா? கருணாநிதி என்ற பிம்பம் இல்லாவிட்டால் மாறனால் மத்திய சென்னையில் 5 இலக்க ஓட்டுகளை கூட வாங்க முடியாது. அவரது கைதால் நாட்டில் ஏதேனும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நீதிபதி அஞ்சுகிறாரா? ஒரு வழக்கை அரசியல் கண்ணோட்டத்துடன் அணுகுவது தான் முறையோ? நாளை ஜெயலலிதா வழக்கு கூட இதே காரணங்களுக்காக தள்ளுபடி செய்யபட்டால் தலீவர் கொதித்து விட மாட்டாரா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.