92 வயது சாணக்கியர் – மதுவிலக்கு காய் நகர்த்தலில் ஏமாந்து விட்டாரா என்ன …?

.

.

எதையும் நன்கு யோசித்து, திட்டமிட்டு காய் நகர்த்தும் கலைஞர் கடைசியில் மதுவிலக்கு காய் நகர்த்தலில் – கோட்டையை பிடிப்பதில்,கோட்டை விட்டு விட்டாரா …?

சில பின்னணிகளை முதலில் பார்ப்போமே –

தேர்தலுக்கு முன்னதாக – மதுவிலக்கு கொள்கையில் மாறுதல்களை கொண்டு வர ஜெ.அவர்கள் தீர்மானித்து விட்டார் என்பது கிட்டத்தட்ட
அனைவரும் அறிந்த விஷயம். இந்த மாற்றங்கள் எத்தகையதாக இருக்கும்… எப்போது அமலுக்கு வரும் போன்ற விஷயங்களை அவர் மனம் மட்டுமே அறியும். அவராக அறிவிக்கும் வரையில் வேறு எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

கடந்த திங்களன்று மதியம் ஜெ. அவர்கள் அமைச்சரவை
கூட்டத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து விவாதித்தாகவும்,
ஒரு முடிவிற்கும் வந்து விட்டதாகவும் கலைஞருக்கு மாலையில்
கோட்டையில், அவருக்கு வேண்டப்பட்டவர்களிடமிருந்து
செய்தி கிடைக்கிறது. உடனடியாக மூத்த சகாக்களை தன்
இல்லத்திற்கு வரவழைத்து ஆலோசித்திருக்கிறார்.

மதுவிலக்கை மீண்டும் அமல்படுத்தியதற்கான பெருமை ஜெ.வுக்கு போகாமலிருக்க, இந்த விஷயத்தில் திமுக முந்திக் கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

எப்படியும் ஜெ. செயல்படுத்த முடிவெடுத்து விட்டாரென்றால் – அதற்கு முன்னதாக திமுகவே அறிவித்து நல்ல பெயரை தட்டிக் கொண்டு போகலாம் என்று முடிவெடுக்கப்பட்டு –
இரவோடு இரவாகவே – அறிக்கை தயாரிக்கப்பட்டு,

//தி.மு. கழகம் ஆட்சிக்கு வந்தால் சமுதாய மாற்றத்திற்கும்,
ஏற்றத்திற்கும் வழி வகுக்கும் வகையில் மதுவிலக்கை
அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.//

– திரு ஸ்டாலின் அவர்களாலேயே செய்தியாளர்கள்
முன்னிலையில் படிக்கப்பட்டும் விட்டது.

இதன் விளைவுகள் ……?

– பொது மக்களைப் பொருத்த வரையில் பெரும்பாலானோர் –
தமிழ்நாட்டில் மதுவுக்கு எதிராக குரல்கள் வலுப்பெற்று
விட்டதால் – அதனைப் பயன்படுத்திக் கொள்ள
கலைஞர் தேர்தலுக்காக கொடுக்கும் வாக்குறுதி இது
என்றே நினைத்தனர். மக்களின் ரீ-ஆக்ஷன் எப்படி இருந்தது என்பதை வலைத்தள பின்னூட்டங்களில் பார்த்தோம்.

இன்னொரு பக்கம் – அரசியல்வாதிகளின் ‘ரெஸ்பான்ஸ்”
எப்படி …? திரு விஜய்காந்த் சுத்தமாக கண்டுகொள்ளவே இல்லை…

கலைஞருக்கும் – டாக்டர் ராமதாசுக்கும் –
ஸ்டாலினுக்கும் – அன்புமணிக்கும் தானே இப்போது போட்டி…?!!!

மதுவிலக்கை முன்வைத்து தீவிரமாக அரசியல் செய்து
கொண்டிருக்கும் டாக்டர் அய்யா சும்மா விடுவாரா ….?

karuna_ramadoss_

அவரது உடனடியான ஆவேச அறிக்கையிலிருந்து கொஞ்சம் கீழே –

———-

கருணாநிதி தமது அறிக்கையின் முதல் பகுதியில் அனைத்துத்
தரப்பினரும் மனம் போன போக்கில் மது அருந்தி நூற்றுக்கணக்கில்
உயிர்ப்பலி ஆவதாகவும், பெண்களும் பச்சிளம் குழந்தைகளும்
மதுவுக்கு பலி ஆவதாகவும் கூறியிருக்கிறார்.

கருணாநிதியின் அறிக்கையை படிக்கும்போது, அதன் ஒவ்வொரு வரியும் பாவ மன்னிப்பு கோருபவரின் மனதிலிருந்து எழும் வார்த்தைகளாகவே என காதில் விழுந்தன. காரணம் 1948 ஆம் ஆண்டிலிருந்து 23 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைமுறையிலிருந்த முழு மதுவிலக்கை 1971 ஆம் ஆண்டு கருணாநிதி ரத்து செய்தது தான்
தமிழகத்தின் இன்றைய அவல நிலைக்கு
காரணமாகும்.

மதுவிலக்கின் தேவை குறித்து கருணாநிதி இப்போது பேசும்போது,
1971 ஆம் ஆண்டில் மதுவிலக்கை ரத்து செய்ய கருணாநிதி முடிவு
செய்தது, அதையறிந்து துடித்து போன ராஜாஜி கொட்டும் மழையில் குடைபிடித்து வந்து கருணாநிதியை சந்தித்து மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தியது,

rajaji and kalaignar

ஆனால், அதை ஏற்காத கருணாநிதி, “ராஜாஜி ஒரு பரிந்துரைக்காகத் தான் என்னை சந்தித்தார்” என்று கூறி
அவரை எள்ளி நகையாடிவிட்டு
மதுவிலக்கை ரத்து செய்தது உள்ளிட்டவை என் நினைவுக்கு
வந்து செல்கின்றன.

மது என்றால் என்னவென்றே தெரியாமல் ஒரு தலைமுறை
வளர்ந்த நிலையில், அவர்களை மதுவலையில் வீழ்த்தி சிதைத்த
பாவம் கருணாநிதியையே சாரும் என்பதை எவராலும்
மறுக்க முடியாது.

மதுவின் தீமைகள் குறித்தும், மது விலக்கின் அவசியம் குறித்தும்
35 ஆண்டுகளாக பரப்புரை செய்து வருகிறேன். பாட்டாளி மக்கள்
கட்சி தொடங்கி 26 ஆண்டுகளாகி விட்ட நிலையில் அதன் முதன்மைக் கொள்கையாக இருப்பது மது விலக்கு தான்.
அதனால் தான் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் முதல்வர் அன்புமணி ராமதாஸ் போடும் முதல் கையெழுத்து முழுமையான மதுவிலக்கை நடைமுறைப் படுத்துவதற்காகத் தான் இருக்கும் என்று அறிவித்திருக்கிறோம்.

பா.ம.க. சார்பில் மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வரும் மது ஒழிப்பு மாநாடுகளுக்கு ஆயிரக்கணக்கில் மகளிர் திரண்டு வருகின்றனர்.

இவற்றையெல்லாம் பார்த்த பின்னர் மதுவிலக்கு பற்றி பேசுவது பலருக்கும் பொழுதுபோக்காக மாறி விட்டது. அந்த வரிசையில் கருணாநிதியும் சேர்ந்திருப்பதாகவே தோன்றுகிறது.

அதுமட்டுமின்றி, முழு மதுவிலக்கை உடனடியாக கொண்டுவருவாரா?
அல்லது படிப்படியாக மதுவிலக்கு என்று கூறி கடந்த காலத்தில்
ஏமாற்றியதைப் போல இப்போதும் ஏமாற்றுவாரா? என்பது
பற்றியெல்லாம் எதையும் கூறாமல், பின்னாளில் மாற்றிக்கொள்ள
வசதியாக மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்டும் படாமலும் மேலோட்டமாக ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார் கருணாநிதி.

1971-ஆம் ஆண்டில் மதுக்கடைகளை திறந்து தமிழகத்தின் சீரழிவுக்கு வழிவகுத்த கருணாநிதிக்கு 44 ஆண்டுகள் கழித்து இப்போது தான் மதுவின் தீமைகள் குறித்து ஞானோதயம் ஏற்பட்டிருக்கிறது.

அதுவும் எதனால் ஏற்பட்டிருக்கிறது?

அடுத்த 8 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் மக்களின் வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக இந்த ஞானோதயம் ஏற்பட்டிருக்கிறது.

இடைப்பட்ட காலத்தில், கருணாநிதி தமிழகத்தின் முதல்வராக
இருந்தபோது மதுவிலக்கை நடைமுறைப் படுத்தும்படி வலியுறுத்தினேன்.

அப்போதெல்லாம் பதிலாக கிடைத்தது கிண்டலும், கேலியும் தான்.
22.12.2008 அன்று 44 சமுதாயத் தலைவர்கள் மற்றும் மத குருமார்களுடன் கருணாநிதியைக் கோட்டையில் சந்தித்து தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என மன்றாடினேன்.

ஆனால், எனது கோரிக்கையை முழுமையாக ஏற்காத கருணாநிதி, மது விற்பனை ஒரு மணி நேரம் குறைக்கப்படும்; இனி புதிதாக
மதுக்கடைகள் எதுவும் திறக்கப்படாது; படிப்படியாக மதுவிலக்கு
நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

கருணாநிதி நினைத்திருந்தால் அதற்கு பிந்தைய இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி இருக்கலாம்.
ஆனால், தமிழகத்தில் மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழிவகுக்கும்
வகையில் மதுவிலக்கை கொண்டுவர கருணாநிதி துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.

24.08.10 அன்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதியிடம் மதுவிலக்கு பற்றி கேட்ட போது, “மதுவிலக்கு குறித்து பரிசீலித்து வருவதாகத்தானே சொன்னேன், இத்தனை நாள்களில் கொண்டு வருகிறேன் என்றா கூறினேன்?” என எதிர்கேள்வி எழுப்பி நழுவி விட்டார்.

மதுவுக்கு ஆதரவாக இப்படிப்பட்ட நீண்ட நெடிய வரலாற்றைக்
கொண்ட கருணாநிதிதான், ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை
நடைமுறைப்படுத்தப் போவதாக கூறுகிறார். நம்ப முடியாத
வாக்குறுதிகளை தண்ணீரில் எழுதப்பட்ட எழுத்து என்பார்கள்.
ஆனால், கருணாநிதியின் வாக்குறுதிகள் காற்றில் எழுதப்பட்ட எழுத்துக்கள். 50 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளிடம் ஏமாந்த மக்கள் இனியும் கருணாநிதியை நம்பி ஏமாற மாட்டார்கள்.

ஒருவேளை உண்மையாகவே தாம் செய்த பாவங்களுக்கு பரிகாரம்
செய்ய கருணாநிதி விரும்பினாலும் கூட அதை மக்கள் அனுமதிக்க
மாட்டார்கள். ஏனெனில் அவர் செய்த பாவம் அவ்வளவு கொடியது”
என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

————-

டாக்டர் ராமதாசின் கடுமையான தாக்குதலுக்கு தானே
பதில் கூறுவது பொருத்தமாக இருக்காதென்று நினைத்த
கலைஞர், திருவாளர் துரைமுருகன் மூலம் அளித்த பதில் இது –

// மகாத்மா காந்திக்குப் பிறகு மதுவிலக்கை கொள்கை தனக்கே
சொந்தம் என ராமதாஸ் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

இதை பிடித்துக்கொண்டே எப்படியாவது ஆட்சிக்கு வந்து விடலாம் என்ற நப்பாசையில் இருக்கிறார். அவரது மகன் முதல்வராகி
மதுவிலக்குக்காக முதல் கையெழுத்திடுவார் என கற்பனை உலகில் வாழ்ந்து வருகிறார்.

இந்தக் கனவுகளை எல்லாம் ஒரே நொடியில் தவிடுபொடியாக்கி விட்டாரே என்ற கோபத்தில் கருணாநிதி மீது
வீண்பழி சுமத்துகிறார்.//

——————–

சீனியர்கள் இப்படி இருக்க வருங்கால முதல்வர் போட்டியிலிருக்கும்
ஜூனியர் ஸ்டாலின் அவர்களுக்கு அந்த பக்கத்து ஜூனியர்
டாக்டர் அன்புமணி விட்ட கேள்விக்கணை நோட்டீஸ் இது –

stalin and anbumani

// 1. தமிழ்நாட்டில் 4 வயது குழந்தை கூட மது குடிக்கும் அவல நிலை ஏற்பட்டதற்கு காரணம் யார்?

2. 1971 ஆம் ஆண்டில் ராஜாஜி கொட்டும் மழையில் கோபாலபுரம்
இல்லத்திற்குச் சென்று, மதுவிலக்கை ரத்து செய்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட போதிலும், அதை பொருட்படுத்தாமல் 23 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மதுவிலக்கை ரத்து செய்தவர் யார்?

3. மது மூலம் கிடைக்கும் வருவாய் என்பது புழுத்துப்போன
தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம் என்று அண்ணா கூறினார்.
மது கூடவே கூடாது என்று பெரியார் கூறினார்.

ஆனால், பெரியார், அண்ணாவின் கொள்கைகள் தேவையில்லை… வருமானம் தான் முக்கியம் எனக் கருதி மதுக்கடைகளை திறந்தவர் யார்?

4. புதிய மது ஆலைகளுக்கு அனுமதி அளிப்பதில்லை என
30 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த விதியை தளர்த்தி தங்கள்
கட்சியைச் சேர்ந்த இரு முன்னாள் மத்திய அமைச்சர்கள்,
வேண்டிய இருவர் உட்பட 5 பேருக்கு புதிய மது ஆலைகளை நடத்த அனுமதி வழங்கியது யார்?

5. மது விலக்கை ஏற்படுத்தும் சிந்தனை கருணாநிதிக்கு ஏற்கெனவே ஏற்பட்டுவிட்டதாக கூறியிருக்கிறீர்கள். அப்படியானால், தமிழகத்தில்
படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று 22.12.2008 அன்று ராமதாஸூக்கு வாக்குறுதி அளித்த கருணாநிதி,

அதன்பிறகு 30 மாதங்கள் ஆட்சியில் இருந்தும் மதுவிலக்கை
நடைமுறைப்படுத்தாதது ஏன்? அப்போது கொடுத்த
வாக்குறுதியை நிறைவேற்றாத கருணாநிதி இப்போது மட்டும்
நிறைவேற்றுவார் என எப்படி நம்புவது?

6. 1996 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு
வந்தால் முழுமதுவிலக்கு மிகத் தீவிரமாக செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்த கருணாநிதி அதன் பின்னர் 10 ஆண்டுகள்
முதலமைச்சராக இருந்தும் அதை நிறைவேற்றாதது ஏன்?

தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று 27.12.2008 அன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதன்பின் இரண்டரை ஆண்டுகள் பதவியில் இருந்த உங்கள் அரசு அதை
செயல்படுத்தாதது ஏன்? இப்படிப்பட்ட உங்களை எப்படி மக்கள் நம்புவார்கள்?

7. தமிழகத்தில் நடைமுறையில் இருந்த மதுவிலக்கை நீக்கி கடந்த
44 ஆண்டுகளாக மதுவைக் கொடுத்து இரு தலைமுறைகளை
சீரழித்தது யார்?

8. காமராஜர் முதலமைச்சராக இருந்த போது 12,000 புதிய பள்ளிகளை திறந்து அனைத்து மாணவர்களையும் படிக்க வைத்தார். ஆனால், அவருக்குப் பின் 7,000 மதுக்கடைகளை திறந்து மக்களை
குடிக்க வைத்தது யார்?

9. அதிமுக தான் டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்ததாகவும்,
அதனால் தான் 10 ஆயிரம் பேருக்கு ஒரு மதுக்கடை என்ற நிலை
ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டும் நீங்கள், உங்கள் ஆட்சியில்
அந்த கடைகளை மூடாதது ஏன்?

10. மதுவின் மூலம் கிடைக்கும் வருவாய் முக்கியமல்ல,
மக்கள் நலனே முக்கியம் என்று திடீரென அக்கறை காட்டுகிறீர்கள்.
2006 ஆம் ஆண்டில் திமுக அரசு பதவியேற்ற போது ஆண்டுக்கு
ரூ.6086 கோடியாக இருந்த மது வருவாயை 2011 ஆம் ஆண்டில்
150% அதிகரித்து ரூ.14,965 கோடியாக இலக்கு நிர்ணயித்து உயர்த்தினீர்களே….

இதனால் மக்கள் நலன் பாதிக்கப்படவில்லையா?

——————

” சும்மா கெடந்த சங்கை ஊதிக் கெடுத்தாராம் ஆண்டி “ என்பதைப் போல், கலைஞர் நேரங்கெட்ட நேரத்தில் மதுவிலக்கு பற்றி பேசி – தேன் கூட்டைக் கலைத்து விட்டாரோ …?

ஒருவேளை கலைஞர் இந்த அறிவிப்பை இப்போது
வெளியிடாமல் இருந்திருந்தால் –

ஜெ. அவர்கள் மதுவிலக்கைப் பற்றிய அறிவிப்பை வெளியிடும்
சமயத்தில், பெரிய டாக்டர் அய்யாவும், சின்ன டாக்டர் அய்யாவும் – தங்கள் வாய்ப்பை தட்டிப்பறித்ததற்காக –
அவர் மேல் பாய்ந்திருப்பார்கள்….!

தப்பாக காயை நகர்த்தி –
கலைஞர் தானாக வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டாரோ …?

தமிழகத்தில் – பூரண மதுவிலக்கு அமலுக்கு கொண்டு
வரப்பட வேண்டும் என்பதில் – இந்த வலைத்தள நண்பர்கள்
யாருக்கும் எந்தவித மாறுபட்ட கருத்தும் இருக்க வாய்ப்பில்லை…

ஆனால் – கலைஞரின் இந்த காய் நகர்த்தல் மற்றும்
அதன் விளைவுகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே …?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

19 Responses to 92 வயது சாணக்கியர் – மதுவிலக்கு காய் நகர்த்தலில் ஏமாந்து விட்டாரா என்ன …?

  1. Prakash's avatar Prakash சொல்கிறார்:

    இதை எதிர்பர்தரோ இல்லையோ, அம்மா மதுவிலக்கை அமுல்படுத்தினால் அது தன்னால் தான் நடந்தது என்று கண்டிப்பாக சொல்லுவார்.

  2. வெ.க.சந்திரசேகரன்'s avatar வெ.க.சந்திரசேகரன் சொல்கிறார்:

    யானைக்கும் அடி சறுக்கும் ஆனால் தமிழனின் விதி பயன் விழுந்த யானைக்கு தேவைக்கும் அதிகமான சந்தர்ப்பத்தை அளித்து அதனை மீண்டும் நடமாட விடுவதுதான்.எத்தனையோ பார்த்த தலைவரால் இதனையும் சமாளிக்க முடியும் ஆனால் அதனால் யாருக்கு லாபம் என்பது தான் யோசிக்க வேண்டிய ஒன்று.

  3. நெல்லைத் தமிழன்'s avatar நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    இன்றைக்கு மதுபான ஆலைகளின் மூலமாக, பெரிய குறிப்பிடத்தக்க பணம் இரண்டு கட்சிகளுக்கும் (ஆட்சி அமைக்க வாய்ப்புள்ள, ஆளும், ஆண்ட) செல்கிறது. இதை வைத்துத்தான் அவர்கள் தேர்தலைச் சந்திக்கிறார்கள். (ஆண்ட கட்சி, அறிவியல் பூர்வமாகச் செயல்படும் கட்சியாதலால், அறிவியல்பூர்வமாக இதனை, மா’நாடு, அது இது என்று சொல்லி, வெள்ளையாக்கிவிடுகிறார்கள்).

    எனக்கு மனதில் தோன்றுவது, ஒருவருக்கு இது கடைசி தேர்தல். (‘நான் சொல்வது ‘நடக்காமல் இருக்கலாம். ஆனால் அது நடந்துவிடும் என்று என் மனது சொல்கிறது. அதை நினைத்து வருத்தப்படுகிறது). அதனால் நிச்சயமாக, ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில், தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக, மதுக் கடைகளை மிகவும் குறைக்கத்தக்க முடிவை அறிவிப்பார்கள். இதைப் பற்றித் தன் சகாக்களுடன் மற்றும் அதிகாரிகளிடம் (வருமானத்தில் விழும் துண்டினால் ஏற்படும் பாதிப்பு போன்றவை) விவாதித்திருப்பார்கள். கோட்டை அதிகாரிகளில், தி.மு.க ஆதரவு ஆட்கள் உண்டு. இந்த விஷயம் காதில் விழுந்ததும், தான் சொல்லித்தான் நடந்ததுபோன்று சொல்லிக்கொள்வதற்காக, தி.மு.கா அறிக்கை வெளியிட்டது. இதுவே ஸ்டாலின் தயாரித்திருந்தால், வெளிப்படையாக, ‘ஆட்சி அமைத்து 2 ஆண்டுகளுக்குள் முழுமையான மதுவிலக்கை ‘நோக்கிச் செல்வோம்’ என்று சொல்லியிருப்பார். கருணானிதி, பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்றமாதிரி, வார்த்தை ஜாலத்தில் விளையாடுவார். நாளை ஒருவேளை அவர் ஆட்சிக்கு வந்து, யாராகிலும் கேள்வி கேட்டால், வார்த்தை ஜாலமாக விடை சொல்வார்.

    ஒரு மணினேரம் கடையை மூடினால், அதுக்குப் பெயர் என்ன? அதனால் என்ன பயன் விளையும்? காந்தி ஜெயந்திக்குக் கடையை மூடுவதால் மது விற்பனை குறைந்ததா? முந்தின நாளே வாங்கிவைத்துக்கொள்கிறார்கள்.

    இந்த வார்த்தை ஜாலத்துக்கே, தி.மு.காவினர், கருணானிதி ஏதோ தமிழ்னாட்டில் மதுவை ஒழிக்கப் புறப்பட்டுவிட்டமாதிரியும், மதுவால் அழிகிற மக்களை ‘நினைத்து நித்தம் வருத்தப்படுவது மாதிரியும் படம் காட்டுகிறார்கள்.

    எப்போது ராமதாஸ், வெட்கத்தைவிட்டுத், தன் மகனை முதலமைச்சர் வேட்பாளராக அறிமுகப் படுத்தினாரோ, அப்போதே, தி.மு.காவுக்கு அது மிகப் பெரும் சங்கடத்தையும் இடைஞ்சலையும் கொடுத்துள்ளது. இல்லாவிட்டால், கருணானிதி அறிவிப்புக்கு, சூடான அறிக்கை கொடுக்கும் கட்டாயம் உள்ள அ.தி.மு.காவை விட்டு, ராமதாசும், அன்புமணியும் கருணானிதியைக் காய்ச்சி எடுக்கிறார்களே. மக்கள் மத்தியில் கருணானிதின் சந்தர்ப்பவாதச் சொல் எடுபடாது.

  4. paamaran's avatar paamaran சொல்கிறார்:

    எட்டப்பன்களை பயன்படுத்தி, தகவல்களை முன்னதாக அறிந்து கொள்ளும், கருணாநிதி மற்றும் ஸ்டாலின், அறிவிப்பு வெளியாவதற்கு முன், கோரிக்கை வைக்கின்றனர்.அறிவிப்பு வெளியான பின், தங்களால் அது நடந்தது என்கின்றனர் —- உதாரணமாக வேலூர் மற்றும் ஒகேக்கனல் கூட்டு குடிநீர் திட்டம் —. சென்னை மெட்ரோ ரயில் துவக்க விழா, நடைபெற உள்ள விவரம் வெளியாவதற்கு முன், தி.மு.க., தலைமைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனால், ‘மெட்ரோ ரயில் திட்டத்தை துவக்க வேண்டும்’ என, ஸ்டாலின் உடனடியாக கோரிக்கை விடுத்தார் ! — இதை போல செய்து போலியான பெயரெடுக்க நினைத்து — மதுவிலக்கு விஷயத்தில் இப்போது மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள் ” அப்பாவும் — பிள்ளையும் ” — மக்கள் இவர்களின் சூழ்ச்சி தெரிந்து —- சிரிக்கிறார்கள் ? நினைத்தது ஒன்று — நடந்தது ஒன்று அதனாலே முழிக்கிது — அய்யா கண்ணு என்கின்றனர் — கா.மை .போன்ரவ விமர்சகர்கள் !!

  5. today.and.me's avatar today.and.me சொல்கிறார்:

    //இரவோடு இரவாகவே// ஆமாம் , திமுக லெட்டர்பேடு கூட கிடையாது. வெள்ளைத்தாளில் டைப் அடிக்கப்பட்டு, ரப்பர்ஸ்டாம்ப் உடன்.

    https://scontent-mrs1-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/s526x395/11694934_491208801038995_2977790343464194855_n.png?oh=39f1dcfea6fcd8b97c4457fa04741cc2&oe=564741FB

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி நண்பர் டுடேஅண்ட்மீ.

      Excellent ..!

      நீங்கள் சொல்லியுள்ளதை இங்கேயே பதிப்பித்து விட்டேன்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  6. Jebam Jeya Raja's avatar Jebam Jeya Raja சொல்கிறார்:

    What a pity! You mean to say, DMK is facing trouble because of PMK!!
    Neither DMK or the people of Tamilnadu thinks PMK is opponent to DMK.
    Only PMK cadres will care about what Sr Doctor and Jr Doctor saying!!!
    சின்ன அய்யாவ, அங்கிட்டு ஓரமா போய் விளையாடுப்பா அப்டின்னு சொல்லிட்டு மக்களும் தி மு க வும் போயிட்டே இருப்பாங்க!!

  7. today.and.me's avatar today.and.me சொல்கிறார்:

    கா.மை ஜி,

    //ஆனால் – கலைஞரின் இந்த காய் நகர்த்தல் மற்றும்
    அதன் விளைவுகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே …?//

    சின்னக் கேள்விதான்.. ஆனால் பதில் நீண்டுவிட்டது. இங்கேயே எழுதினால் நண்பர்களுக்கு ஸ்கோரல் செய்துபடிக்க சிரமமாக இருக்கலாம். எனவே தனி இடுகையாகத் தந்துவிட்டேன்.

    நண்பர்கள் இங்கே படித்துவிட்டு பதில்தர விழைகிறேன்.

    92 வயது சாணக்கியர் – மதுவிலக்கு காய் நகர்த்தலில் ஏமாறுவாரா என்ன …?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் டுடேஅண்ட்மீ,

      எப்படி எல்லாம் யோசிக்கிறீர்கள்….!!!

      அதான் – மனம் இருந்தாலும், ஒரு தீர்மானத்திற்கும்
      வர முடியாமல் மீண்டும் மீண்டும் முடிவு
      தள்ளிப் போடப்படுகிறது.

      எவ்வளவு காரணங்கள் இருந்தாலும் –
      நான் மதுவிலக்கு வேண்டும் என்று சொல்லும் மனிதன்.
      வேண்டுமானால் –
      Existing liquor addicts -க்கு மட்டும் ஒரு ID card
      கொடுத்து, அவர்களுக்கு மட்டும் ரேஷன் மாதிரி கொடுக்கலாம்.

      குறைந்த பட்சம் எதிர்கால – குழந்தை குடிகாரர்களையாவது
      நாம் தடுத்தேயாக வேண்டும்.

      உங்கள் விவரமான கருத்துக்களுக்கு நன்றி நண்பரே.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  8. பிங்குபாக்: 92 வயது சாணக்கியர் – மதுவிலக்கு காய் நகர்த்தலில் ஏமாந்து விட்டாரா என்ன …? | Classic Tamil

  9. Manickam's avatar Manickam சொல்கிறார்:

    ஒன்று மட்டும் உண்மை, எந்த ஒரு அரசியல் பிழைப்பவர்களுக்கும் மக்களின் மீது,சமுதாயத்தின் மீது வருங்கால இளைய சமுதாயத்தின் மீது துளியும் அக்கறையே இல்லை.தான், தங்களின் வாரிசுகளை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவதே குறிக்கோள் அன்றி வேறு இல்லை.ஆண்ண்டாண்டு காலமாக அதிகாரத்தில் இருத்தும் இவர்களால் கேடுகளை மட்டுமே அதிக அளவில் நாடு கண்டுள்ளது.

  10. ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

    இச்செய்தி ஆச்சரியம் தருகிறது!

  11. Kamalan's avatar Kamalan சொல்கிறார்:

    Hi Sir,
    As a senior citizen, can you clarify the details given in this article are true? Did Karunanidhi close the wine shops after two years and MGR started it back?

  12. velumani's avatar velumani சொல்கிறார்:

    right decision / right statement at right time.

  13. today.and.me's avatar today.and.me சொல்கிறார்:

    //நபருக்கு தலா ரூ. 150/- !
    ஆண்களுக்கு 2 சரக்கு பாட்டில்கள்; பெண்களுக்கு முழு குடும்பத்திற்கும் இலவச மதிய உணவு டோக்கன்கள்…
    திமுகவின் குளத்தூர் தொகுதி போராட்டத்தின் ருசீகர தகவல்கள் அம்பலம்…//

    எல்லா கட்சிகளும்தான் இதை அல்லது இதுபோன்றதைச் செய்கின்றன. ஆனால் திமுகவுக்கோ முகவுக்கோ ஸ்டாலினுக்கோ மதுவிலக்கு என்பதைப் பற்றி சொல்ல அருகதை இல்லை, அவர்களால் சொல்லமட்டும்தான் முடியும், அதன்படி நடக்க அவர்களாலேயே முடியாது என்பதுதான் நடைமுறையில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியவேண்டியது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.