நாய்களா ..? குழந்தைகளா … ?

முன்பே எழுதவேண்டுமென்று நினைத்தது – இப்போது
மீண்டும் ஒரு நிகழ்வால் நினைவூட்டப்பட்டேன்.

அந்த காட்சியின் தீவிரம், அதனால் ஏற்பட்ட பதட்டமும், ஆத்திரமும்
நீங்க மறுக்கின்றன.. அந்த கோபத்திலேயே எழுதுகிறேன் இதை.

dog-2

dog-1

எங்கள் தெருவிலேயே கண்ட காட்சி ஒன்று.
அம்மா வென்று அலறிக்கொண்டே, பயத்துடன் ஓடி வரும்
ஐந்து வயது சிறுமி ஒருத்தி. அவள் பின்னால், பயங்கர வெறியுடன் துரத்திக்கொண்டு
வந்த 3 – 4 தெரு நாய்கள்.
பாவம் அந்த பெண் குழந்தை. நடு நடுங்கி விட்டது.
அந்தச் சிறுமியை குதறிக் கொன்றிருக்கும் அந்த நாய்கள்.
தெருவோடு போய்க்கொண்டிருந்த நாங்கள் – இரண்டுபேர்
அவசரமாக இடைமறித்ததால் அந்த நாய்களின் கவனம் திரும்பியது.
அந்த நாய்களின் குதரல்களிலிருந்து தப்பியது அந்தக்குழந்தை.
தற்காலிகமாகத்தான் ….! இதன் பாதிப்பு நிச்சயம் அந்தக்குழந்தையின்
மீது நிரந்தரமாக நிலை கொண்டிருக்கும்..

இந்த சம்பவம் இங்கு மட்டும் தானா ? இது ஒன்று தானா ?

dog-4

dog-5

தெருவுக்கு தெரு – ஊருக்குஊர் இதே தொல்லை. ஏன் சகித்துக்கொள்ள வேண்டும்
இத்தகைய தெரு நாய் தொல்லைகளை ?

உண்மையில், இது குழந்தைகளின் பிரச்சினை மட்டுமல்ல.
பெரியவர்களுக்கும் கூட இது பெரிய பிரச்சினை தான். பகல் பூராவும்
பேசாமல் படுத்துக் கிடக்கும் இந்த தெரு நாய்கள் இருட்டினால்,
யாரைக் கண்டாலும் துரத்தத் துவங்கி விடுகின்றன. அதுவும்,
டூவீலர்களில் போவோர்கள் கதிகலங்கிப்போகிறார்கள்.
தெருமுனை வரையிலும், சில சமயம் அதைத்தாண்டியும்
துரத்துகின்றன. இரவில் வீட்டை விட்டு தெருவில் இறங்கவே
பெண்கள் பயப்படுகிறார்கள்.

ஏன் நானே இரவு 9 மணிக்குமேல் வீடு திரும்ப நேர்ந்தால்,
பயந்துகொண்டே தான் வருகிறேன். அவை இருக்கும் இடத்திலிருந்து கொஞ்ச தூரம்
முன்னால் துவங்கி, மெதுவாக
தயங்கி தயங்கி, அவைகளைப் பார்த்துக்கொண்டே தான் நகர்கிறேன்.
அவற்றைத் தாண்டி ஒரு 50 அடி போன பிறகு, அப்பாடா தப்பித்தோம்
என்கிற உணர்வு…!

dog-6

dog-7

இதே போன்ற உணர்வை உங்களில் பலர் அனுபவித்திருப்பீர்கள்,
சிலர் இப்போதும் அனுபவித்துக் கொண்டிருப்பீர்கள் என்றே
நினைக்கிறேன்.

dog-8dog-9

முடிவே இல்லாமல் எத்தனை நாட்கள் இவை தொடரப்போகின்றன ?
இன்னும் எத்தனை நாட்கள் அரசாங்கம் இதை வேடிக்கை
பார்த்துக்கொண்டிருக்கப்போகிறது ?
வேலை வெட்டியற்று வெறும் பொழுது போக்கிக்கொண்டிருக்கும்
பணக்கார பெரிய இடத்து பெண்கள் சிலரும், வறட்டுத்தனமாக
வெட்டி ஆட்கள் சிலரும் – ப்ளு க்ராஸ் –
பிராணிகள் வதைத் தடுப்பு – அது இது என்று சொல்வதை கேட்டு மாநகராட்சியும்
அரசாங்கமும் ஏன் பயப்பட வேண்டும் ?

நமக்கு தேவை வளரும் குழந்தைகளா – இல்லை
தெருவுக்கு தெரு வெறி நாய்களா ?
உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய பிரச்னை இது.

பிராணிகள் வதைத் தடுப்பு சட்டம் குறுக்கே நிற்கிறது என்கிறார்கள் …
அதைக் கொண்டு வந்தது யார் ? அரசாங்கம் தானே ?
அதில் மாற்றங்களைச் செய்ய முடியாதா அதே அரசாங்கத்தால் ..?
சட்டத்துக்காக மக்களா – இல்லை மக்களுக்காக சட்டங்களா ?
யாருக்கு வேண்டும் இந்த வதைத்தடுப்பு சட்டங்கள் …?
உண்மையில் இன்றையத் தேவை குழந்தைகள் வதைத்தடுப்பு
சட்டங்கள் தான் ..!

அதென்ன பிராணிகள் வதை ?
நாள் தோறும் லட்சக்கணக்கில் கோழிகள் கொல்லப்படுகின்றன.
முட்டை வடிவில் உள்ள கோழிகுஞ்சுகள் சாகடிக்கப்படுகின்றன –
கோடிக்கணக்கில் மீன்கள் –
நாள்தோறும் லட்சக்கணக்கில் ஆடுகள் பலி –
பக்கத்து மாநிலத்தில் மாடுகள் கூட –
இவை எதுவும் பிராணிகள் வதை இல்லையா ?
உணவுக்காக கொல்லப்படும்போது வதை இல்லை என்றால்
குழந்தைகளைக் காப்பாற்ற
வெறி கொண்டு அலையும் நாய்கள் விஷயத்தில் மட்டும் அது
எப்படி வதையாகி விடும் …?
அவற்றைத் தடை செய்வதில் என்ன தவறு ..?

சட்டத்தில் தகுந்த விதிகளைக் கொண்டு வந்தால் தான் –
நீதிமன்றங்களைத் தேடி அலையும் பணக்காரப்பொழுதுபோக்காளர்கள்
மற்றும் வேலையற்ற வக்கீல்களின் பிடியிலிருந்து விடுபட முடியும்.

நாய்களின் மீது இரக்கம் காட்ட விரும்பும் நாய்கர்களும் நாய்கிகளும்
தாராளமாக அவற்றை தங்கள் வீடுகளில் கொண்டு போய்
வைத்துக் கொண்டு கொஞ்சட்டும் – வீட்டுக்கு உள்ளேயே சோறு போட்டு
வளர்க்கட்டும் – அல்லது கட்டிப்பிடித்து விளையாடட்டும்
– யார் தடுக்கப்போகிறார்கள் ?

தெருவில் ஓநாய்களை சுதந்திரமாகத் திரிய விட வேண்டும்
என்றால் இவர்கள் ஒப்புக்கொள்வார்களா ..?

வேண்டுமானால் நாய்களுக்காக அலையும் த்ரிஷா போன்ற நடிகைகளைக்கொண்டு
கருணை இல்லங்கள் திறக்கட்டும்.
அவர்களே நன்கொடை திரட்டி அத்தகைய நாய் விடுதிகளை நடத்தட்டும்.
ஆனால் தெருவில் திரியும் கேட்பாரற்ற நாய்களை பிடித்து அழிக்க
உடனடி நடவடிக்கை அவசியம் தேவை.

மக்கள் புலம்பிக்கொண்டே இருக்கிறார்கள் – ஆனால் மாநகராட்சியும்
அரசாங்கமும் – கோர்ட் குறுக்கீட்டை எண்ணி நடவடிக்கை
எடுக்கத் தயங்குகின்றன.

இனியாகிலும் தயக்கத்தை விட்டு விட்டு, தகுந்த சட்டத்திருத்தங்களை
கொண்டு வந்து அரசாங்கம் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு
நல்ல தீர்வு காண வேண்டும்.

நாய் வளர்க்க விரும்புவோர், அவற்றிற்கு தகுந்த முறையில்
தடுப்பூசிகளைப் போட்டு, தங்கள் வீட்டு காம்பவுண்டிற்குள் தாராளமாக
வளர்க்கட்டும். ஆனால், தெருநாய்கள் இனி அனுமதிக்கப்பட மாட்டா
என்று சட்ட திருத்தம் கொண்டு வந்தால் தான் குழந்தைகள்
நிம்மதியாக வெளியே சென்று வரும்.

வலைத்தளம் இருக்கிற வசதி – நான் எழுதி விட்டேன்.
ஆனால், எழுத இயலாத எத்தனையோ கோடி மக்கள் இதையே தான்
வேண்டுகின்றார்கள். அரசின் செவிகளில் இந்த வேண்டுகோள் கேட்குமா …?

என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே …?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to நாய்களா ..? குழந்தைகளா … ?

  1. tmnkin's avatar tmnkin சொல்கிறார்:

    Rightly said, especialy in sub urban regions around chennai, i am one of those who tries best to reach home before 10, otehwise i will walk carefully, are pretending in mobile like speaking to someone to avoid eye contacts with street dogs, hoping nothing worse happens – Thirumurugan K

  2. புது வசந்தம்'s avatar புது வசந்தம் சொல்கிறார்:

    நல்ல பதிவு. தமிழ்நாடு முழுவதும் இதுதான் நிலைமை. நாய்கள் தொல்லை என்பது உயிர் பயம் நிறைந்தது. நிச்சயமாக கொல்லப்படவேண்டும். உணவுக்காக கொல்லப்படுவது வேறு, அதையும் இதையும் குழப்ப வேண்டாம். அதனை வாழ்வாதாரமாக கொண்டு பல குடும்பங்கள் இருக்கின்றன.

  3. rathnavelnatarajan's avatar rathnavelnatarajan சொல்கிறார்:

    நாய்களா ..? குழந்தைகளா … ? = திரு காவிரி மைந்தன் அவர்களின் அவசியமான பதிவு. அடிக்கடி நாய்க்கடியினால் இறந்தவர்களைப் பற்றிய பரிதாபமான செய்திகள் வருகின்றன. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி திரு காவிரி மைந்தன்

  4. rathnavelnatarajan's avatar rathnavelnatarajan சொல்கிறார்:

    நாய்களா ..? குழந்தைகளா … ? = திரு காவிரி மைந்தன் அவர்களின் அவசியமான பதிவு.
    அடிக்கடி நாய்க்கடியினால் இறந்தவர்களைப் பற்றிய பரிதாபமான செய்திகள்
    வருகின்றன. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி திரு காவிரி மைந்தன்

    2014-05-02 14:21 GMT+05:30 “வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்” :

    > vimarisanam – kavirimainthan posted: “முன்பே எழுதவேண்டுமென்று
    > நினைத்தது – இப்போது மீண்டும் ஒரு நிகழ்வால் நினைவூட்டப்பட்டேன். அந்த
    > காட்சியின் தீவிரம், அதனால் ஏற்பட்ட பதட்டமும், ஆத்திரமும் நீங்க
    > மறுக்கின்றன.. அந்த கோபத்திலேயே எழுதுகிறேன் இதை. எங்கள் தெருவிலேயே கண்ட
    > காட்சி ஒன்று”

  5. kuttipisasu's avatar kuttipisasu சொல்கிறார்:

    மிகமிக அவசியமான பதிவு. நானும் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில், தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோருகிறேன்.

  6. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    அப்படியே வழிமொழிகிறேன்.ஆனால் லஞ்சத்தில் முழுகியுள்ள மாநகராட்சி இதை பொருட்படுத்தாது..

  7. Thiruvengadam's avatar Thiruvengadam சொல்கிறார்:

    The only solution is to implement Sterilize project of Dogs is done with due attention. The Dog catchers are paid low amounts and also not enough infrastructure & Vet people

  8. Srinivasanmurugesan's avatar Srinivasanmurugesan சொல்கிறார்:

    அவசியமான பதிவு. அரசு இதற்கு உடனடி முடிவு காண வேண்டும்.மக்களுடன் அந்த நாய்களும் தகுந்த உணவில்லாமல் சொரி சிரங்குகளுடன் பார்பதற்கே பயங்கரமாக தெருக்களில் சுற்றுகின்றன.அவற்றை எல்லாம் பிடித்து தனியாக பராமறிக்க வேண்டும் அல்லது அவைகளாவது மண்ணுக்கடியில் நிம்மதியாக உறங்கட்டும்.

  9. saamaaniyan's avatar saamaaniyan சொல்கிறார்:

    மிக அவசியமான, சமூக அக்கறை கொண்ட பதிவு. தவறாக நினைத்துகொள்ள வேண்டாம்… உங்களின் அரசியல் பதிவுகளையும்விட அவசியமான பதிவு இது !

    மேல்மட்ட நாய்கர்களுக்காகவும் நாய்கிகளுக்காகவும் நம் குழந்தைகள் பாதிக்கபட வேண்டுமா ? நிச்சயமாக பிராணிகள் வதை சட்டம் நம் அரசாங்கத்தின் கையாலாகாத தனங்களில் ஒன்று !

  10. Gopalasamy's avatar Gopalasamy சொல்கிறார்:

    so many times I personally face this situation. In Banglaore, in some streets, after 10 pm, it is difficult to walk .All stray dogs to be handed over to people like Thirisha, Amala, Maneka.

  11. kalakarthik's avatar kalakarthik சொல்கிறார்:

    இது பற்றி நானும் ஒரு பதிவு எழுதியுள்ளேன்.நீங்கள் குறிப்பிட்ட ஒரு சில நடிகைகள் +மேனகா காந்தி போன்றோரின் விளம்பர யுக்தி காரணமாக நம் போன்ற சாதாரணமான மக்கள்தான் பாதிக்கப் படுகிறோம்.அவ்வளவு நல்ல மனம் உள்ளவர்கள் எல்லா தெரு நாய்களையும் அவர்கள் வீட்டில் கொண்டு வைத்து பராமரிக்கட்டுமே.
    தெருவில் ஒரு சில நாரீமணிகள் நாய்களுக்கு ரொட்டி துண்டுகள் போட்டு தங்கள் மேன்மை குணத்தை பறைசாற்றிக் கொண்டிருப்பார்கள். அவர்களை கேள்வி கேட்காமல் சென்றதில்லை.
    இதை விடவும் முக்கியமான விஷயம் இந்த பணக்காரர்கள் நாய் வளர்த்தும் முறை. அவர்கள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வார்களாம்.ஆனால் அவர்கள் வீட்டு நாய்களுக்கான கழிவறை நாம் நடக்கும் சாலைகள்தான்.
    இதை விட காமெடி என்ன என்றால்,ஒரு உயர் ரக(நாய்களில் கூட உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி..கொடுமை ) நாயுடன் வந்தவர் அந்த நாயை சாலையை கழிவரையாக்கிக் கொண்டிருந்தார்.அதை பார்த்த நம் நாட்டு நாய் குரைத்தது .அவர் என்ன சொன்னார் தெரியுமா?” ” சனியனே இது எவ்வளவு உயர் ஜாதி தெரியுமா?” ”
    நம் நாட்டு நாய்கள் ஏதாவது கோர்ட்டுக்கு போய் வழக்கு போடா முடியாதா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.