பெற்ற மகனுக்கு “விஷம்” கொடுத்த அன்னை !

பெற்ற மகனுக்கு “விஷம்” கொடுத்த அன்னை !

pti photo on rg

பெற்ற “அன்னை”யே தான் பெற்ற மகனுக்கு விஷம்
கொடுக்கிறார். “மகனே உனக்கு விஷத்தைக் கொடுக்கிறேனே”
என்று கதற வேறு செய்கிறார்.

மகனோ “கவலைப்படாதீர்கள் தாயே. இது விஷம் என்பது

எ னக்குத் தெரியாதா ? இதை நான் வைத்துக் கொள்ள
மாட்டேன். மற்ற எல்லாருக்கும் பிரித்து, பங்கு போட்டுக்
கொடுத்து விடுவேன்”

ஜெய்பூரில் நடந்த நாடகத்தைக் கண்ட 1600 கட்சிப்
பிரதிநிதிகளும், உணர்ச்சி வசப்பட்டு, கண்ணீர் விட்டுக்
கதறுகிறார்கள்.

மகன் உணர்ச்சிகரமான பேச்சைத் தொடர்கிறார்.
பேச்சில் சகல ரசங்களும் சொட்டி வழிகின்றன.

திடீரென்று பாட்டியை நினைத்து,
தந்தையை நினைத்து சோகரசம் –

எந்தவித சட்ட திட்டமும் இல்லாமல்
காங்கிரஸ் கட்சி
120 ஆண்டுகள் வளர்ந்து,
தொடர்ந்து ஆட்சியையும்
பிடித்து வந்திருப்பது குறித்து கிண்டல் –

கட்சியில் முதியவர்கள் கூட்டம் பதவிகளை ஆக்கிரமித்து
செயல்படாமல் இருப்பது குறித்து ஆவேசம் –

இளையவர்களின் எதிர்ப்பை, அவர்களுக்கு அதிகாரத்தில்
பங்கு கொடுக்காத அநியாயத்தை சாடுவதில் கோபம் –

லஞ்ச ஊழல்களில் ஈடுபடுபவர்களே –
ஊழலை ஒழிக்க வேண்டும் என்று பேசுகிறார்களே
என்று வருத்தம் –

தாமதப்படும் நீதி,
எளிதில் கிடைக்காத கல்வி,
பாதுகாப்பில்லாத பெண்கள்,
மக்களுடன் தொடர்பில் இல்லாத  நிர்வாகம் என்று
மக்களுக்கும் அரசுக்கும் இடையே பெரிய இடைவெளி
இருப்பது குறித்து வருத்தம்  –

பெண்களை மதிக்காதவர்கள் பெண்ணுரிமைக்காக
வீதியில் இறங்கி போராடுவது குறித்து ஆச்சரியம் –

திறமைக்கு மரியாதை இல்லை. நல்ல  தலைவர்களை
உருவாக்குவதில்லை  என்று  சமுதாயத்தின் மீது சாடல் !

ஒவ்வொரு மாநிலத்திலும் 10 தலைவர்களையும்,
தேசிய அளவில் 40 -50 தலைவர்களையும்
உருவாக்குவோம் என்று வீர சபதம் –

(தயாரிப்பாளர் யாராக இருந்தாலும் சரி –
எழுதிக்கொடுத்தவர் ஒரு அற்புதமான உரையைத்
தயார் செய்து கொடுத்திருக்கிறார்
என்பதை ஒப்புக்கொண்டே தீர வேண்டும் !)

என்ன தான் நடந்து விட்டது இப்போது ?

10 வருடங்களாக “அன்னை”வைத்திருந்த அதிகாரத்தை
“இளவரசரிடம்” ஒப்படைக்கிறார்கள் (ஒப்படைப்பதாகச்
சொல்கிறார்கள். உண்மையாகவே ஒப்படைக்கிறார்களா
என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் !)

ஏன் – இவர் இன்று காங்கிரஸ் கட்சியின் உப-தலைவராக
நியமிக்கப்பட்டது எந்த தகுதியை வைத்து ?
கட்சியில் வேறு மூத்த தலைவர்களே இல்லையா ?
இவரை விட தகுதியும், திறமையும், அனுபவமும்
கொண்ட – எந்த ஊழலிலும்  சம்பந்தப்படாத –
தலைவர்கள் இல்லையா ?

இந்தப் பதவிக்கு வர இவருக்கு “அன்னை”யின் மகன் –
என்பதைத் தவிர வேறு எந்த தகுதியாவது உண்டா ?

காங்கிரஸ் அரசியலும் சரி,
நாட்டு  நிலைமையும்  சரி –
இத்தனை குற்றச்சாடுகளைக் கூறுகிறாரே –
இவர் கூறும் இத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் யார் காரணம் ?
இவ்வளவு ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்தது
இவரது அன்னையும்,
அவரது அடியார்களும் தானே ?

இவர் பேசுவதைப் பார்த்தால் மன்மோகன் சிங்
எதிர்க்கட்சி பிரதமராக இருந்து இவ்வளவு ஆண்டுகளாக
ஆட்சி செய்தது போல அல்லவா இருக்கிறது !

ஏன் – இப்போது கூட ஒன்றும்
கெட்டுப்போய் விடவில்லையே !

அடுத்த தேர்தல் வர இன்னும் ஒன்றரை ஆண்டுகள்

இருக்கின்றனவே. நாளையே கூட இவர் பிரதமராகப்

பொறுப்பேற்றுக் கொண்டு இன்று இவர் கூறும் அத்தனை
விஷயங்களையும் அடுத்த தேர்தலுக்குள்
நடத்திக் காட்டலாமே !

சுதந்திரம் கிடைத்த 67 ஆண்டுகளில்
60 ஆண்டுகள் இவரது குடும்பம் தானே ஆண்டது ?

முக்கியமாக கடந்த சில ஆண்டுகளில் எத்தனை
எத்தனை ஊழல்கள் ?

ஆதர்ஷ் கட்டிட ஊழல்,
காமன்வெல்த் போட்டி ஊழல்,
2ஜி அலைக்கற்றை ஊழல்,
நிலக்கரி ஊழல் –
மருமகன் வாத்ரா  தொடர்புடைய ஏகப்பட்ட ஊழல்கள் –
மாற்றுத் திறனாளிகள் நிதியில் ஏமாற்றிய
மத்திய மந்திரி மனைவி
லஞ்சப் புகார் காரணமாக  வரிசையாக வெளியேற நேர்ந்த
மத்திய மந்திரிகள் எத்தனை பேர் –
(புதிது புதிதாக ஊழல்கள் வெளிவந்து கொண்டே
இருப்பதால் – சரியாக நினைவில் இல்லை !)

யாரை ஏமாற்ற நடக்கும் நாடகம் இது ?
நொந்து போய், சோர்ந்து போய்
கட்சியின் எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையே
இல்லாமல் சுருண்டு கிடக்கும் காங்கிரஸ்
கட்சிக்காரர்களுக்கு வேண்டுமானால் இது உதவலாம்.

பெருத்த அளவில் சலுகைகளைப் பெறும் ஆதரவு
மீடியாக்களுக்கு வேண்டுமானால் வியாபாரத்திற்கு
உதவலாம்.

பொது மக்கள் எப்போதோ விழித்துக் கொண்டு
விட்டார்கள். நாடகம் எந்த அளவிற்கு போகின்றது
என்று பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாடகத்தை எப்போது முடித்து வைக்க வேண்டும் –
எப்படி முடித்து வைக்க வேண்டும் என்பது
அவர்களுக்கு நன்றாகவே தெரியும் !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to பெற்ற மகனுக்கு “விஷம்” கொடுத்த அன்னை !

  1. ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

    Same side goal போட்டிருக்கிறார்.
    இந்த வீர வசனங்களை தன் அடுத்த படத்தில் உபயோகப்படுத்தலாமா என்று விஜயகாந்த் யோசித்து வருவதாக கேள்வி!

  2. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    ஐயா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். அன்னை மகனுக்கு இப்போ அழுது புரண்டு கண்ணீரும் கம்பலையுமாய் கொடுத்தது பதவி எனும் விஷம் என்றால், முன்னாளில் தேமே என்று இருந்த ஒரு மண்ணாங்கட்டி சிங்குக்கு தூக்கி கொடுத்தது என்ன அமுதமா? இந்த கொடுமையை சிங் சார்பாக தட்டி கேட்க யாருமில்லையா?!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      அப்பாடா – ஒருவழியாக மன்மோகன் சிங்குக்கு
      ஆதரவாக ஒரு வார்த்தை சொல்லி விட்டீர்கள் எழில் !

      இன்றைய தினம் வெளியாகியுள்ள ஜூ.விகடனில்
      ஒரு கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

      ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்றோ,
      கட்சித் தலைவர் என்றோ இப்போது அறிவிக்காமல்
      இருப்பதற்கு அன்னை முக்கியமான காரணம்
      வைத்திருக்கிறார்.

      இனி நல்லது எதாவது நடந்தால், அது ராகுலால்
      நடந்ததாகச் சொல்லலாம். வரவிருக்கும்
      சில மாநில சட்டமன்ற தேர்தல்களிலும், பாராளுமன்ற
      பொது தேர்தலிலும் ஒரு வேளை தோல்வி அடைய
      நேர்ந்தால் – அது ராகுல் காந்தியின்
      எதிர்காலத்தை பாதிக்கும்.

      அந்த தோல்வியின் பாதிப்பிலிருந்து தன் மகனை
      முழுப்பாதுகாப்பில் வைக்க விரும்புகிறார் அன்னை.
      எனவே, இளவரசரின் இமேஜைப் பாதுகாக்க –
      பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் கூட
      ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று
      காங்கிரஸ் கட்சி அறிவிக்காது.

      – இது சரியான கணிப்பு என்றே தோன்றுகிறது.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • எழில்'s avatar எழில் சொல்கிறார்:

        மகனுக்கு ஒரு பதவி வழங்குவதை ஏதோ கழுவில் ஏற்றுவது போல் நாடகம் ஆடும் போது, மன்மோகன் சிங்கின் மனதில் ‘அடப் பாவிகளா.. என்னக்கு பதவி கொடுக்கும் போது மட்டும் எப்படி சிரித்து கொண்டே கொடுத்தீர்கள்… ” என்ற எண்ணம் எட்டிபார்திருக்காதா என்று தோன்றியது. என்ன தான் அவருக்கு சூடு சொரணை இல்லாவிட்டாலும், ஒரு கையாலாகவருக்கு குரல் கொடுத்தேன் என்ற திருப்தி எனக்கிருந்து விட்டு போகட்டுமே!

        மேலும் ஒன்று புதிராகவே உள்ளது. நீங்கள் கூறியது போல் இளவரசரின் பேச்சில் சுட்டி காட்டப்பட்ட அத்தனை குறைகளுக்கும் இரண்டு தவணைகளாக அரசாலும் மன்மோகனும், காங்கிரஸ் தலைவி சோனியாவும் மற்றும் அங்கு கூடியிருந்த காங்கிரஸ் தலைவர்களும் தானே காரணம். அப்படியிருக்க இளவரசர் பேசி முடிந்தவுடன் எழுந்து நின்று கைதட்டி, கண்ணீர் விட்டு, கட்டி தழுவிக் கொண்டார்களே… இவனுங்க உண்மையாகவே லூசா… புரிஞ்சு தான் செய்றாங்களா..

  3. Padmanabhan Potti L's avatar Padmanabhan Potti L சொல்கிறார்:

    இராகுல் அடுத்ததாக பிரதமர் வேலைக்கு ரெடியாகி கொண்டு வருகிறார். எல்லாம் ரெடிமேட் தலைவர்கள்தான் .அதிகபட்ச தலைவர்களு ம் ஒவ்வொரு வேலைக்காக நியமிக்கப்படுபவர்கள்தான் . கீழ் மட்டத்திலிருந்து தேர்தல்
    மூலமாக தலைவராக வருபவர்கள் மிக குறைவு. இவ்வாறு வேலைக்கு நியமிக்கப்படுபவர்கள் ஊழலில் ஈடுபட்டு
    எப்படி விஞ்சான முறையில் ஊழல் செய்யலாம் என தனக்கு கீழே வேலை செய்பவர்களுக்கு சொல்லி
    கொடுத்து வருமானத்துக்கு வழி செய்பவர்கள்தான் . மாட்டிகொண்டால் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தாலும் பயப்பட மாட்டார்கள் . மேல்முறையீடு செய்யலாமே. மொத்தத்தில் அரசியல் கட்சிகள் நாடகம்
    நடத்துகிறார்கள் . எரியும் கொள்ளியில் எந்த கொள்ளி நல்லது என கூறுவது .

  4. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    ஆட்சியும் அதிகாரமும் கை நழுவவுள்ள தருணத்தில்
    கிடைக்கும் பதவி வரமா? சாபமா?

    ஊடகங்களும் பத்திரிகைகளும் இவருக்கு தரப்பட்டுள்ள
    “புது”பதவியால் நாட்டிற்கு புது விடியல் வரவுள்ளதைப்
    போன்றதொரு மாய பிம்பத்தை பிரயத்தனப்பட்டு
    உண்டாக்கி வருகின்றன. உண்மை நிலவரம் வேறு.

    பொது செயலராக இருந்த காலத்தில், இரண்டு முறை
    இவர் உ.பியில் மேற்கொண்ட “பகீரத பிரயத்தனங்கள்”
    “தலைகீழ் விகிதங்களான” போது, ஜால்ராக்கள் போட்ட
    அந்தர்பல்டியை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

    கிழடுகளின் இப்போதைய தேவை கேடயமே அன்றி
    வாள் அல்ல.

    தாய் தலைவர். இவர் பொ.செ. அப்போதே எந்த மாற்றமும்
    நிகழவில்லை. உ.த ஆனால் மட்டும், கிளைகள் பூமிக்குள்ளும்
    வேர்கள் மேலுக்கும் வந்துவிடுமா என்ன?

    “எது நடக்க இருக்க இருக்கிறதோ அது நன்றகவே
    நடக்கும்”. மாற்றம் தவிர்க்க முடியாதது; விரும்பினாலும்
    விரும்பாவிட்டாலும்.

  5. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    இளிச்சவாயர்கள் கோடிக்கணக்கில் உள்ள ஒரு நாட்டில், ஒரு சாமர்த்தியமான அயல்நாட்டு தாய், தன் மகனை அரசனாக்க முயற்சிக்கிறாள் என்பதே இதன் one liner.

    இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான்,
    “எங்க வீட்டு பெண்,ஒரு இரண்டுங்கெட்டான்;எனவே எங்கள் தெருவில் ஆண்களே நடமாடக்கூடாது”
    என சொல்லிக்கொண்டிருப்போம் எனத்தெரியவில்லை.

    அறுபது ஆண்டுகளுக்குப்பின்பும் காங்கிரசிற்கு ஓட்டுபோட்டு அவர்களை ஆட்சியில் அமர்த்தும் மக்களுக்கு மிகசிறந்த தண்டனையே அந்த ஆட்சிதான்.

    அனுபவிப்போம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.