“சோ”வின் வாதம் – பிடிவாதம், மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் ….

“சோ”வின் வாதம் –  பிடிவாதம்,
மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் ….

மிக அதிக அளவில் தனது வாசகர்களே
கண்டனம் தெரிவித்திருப்பது கண்டும் –

மீண்டும் இந்த வார துக்ளக்
தலையங்கத்தில் அன்னா ஹஜாரேயை
கேவலப்படுத்துகிறார் “சோ”!
(அவசரப்பட்டு அதைப்படிக்க காசு செலவழித்து
துக்ளக் வாங்கி விடாதீர்கள் – இட்லி வடையில்
எப்படியும் மறுபதிவு செய்து விடுவார்கள் !)

அன்னா ஒரு உதவாக்கரை – ஜோக்கர் என்று
தான் சொன்னதை நிரூபிக்க மீண்டும் துக்ளக்கில்
10 பக்கங்கள் + அட்டை எடுத்துக்
கொண்டுள்ளார் “சோ” !

“சோ”வின் ஒவ்வொரு கருத்துக்கும் பதில்
சொல்ல முடியும். ஆனால் இந்த கட்டுரை
வழ வழா வென்று நீண்டு விடும்.
அவரது கிண்டல், கேலி, அகம்பாவம்,
ஆணவம் – எல்லாவற்றையும் தள்ளி
வைத்து விட்டு விஷயத்திற்கு மட்டும் வருவோம்.

சுருக்கமாக –

1)சர்க்கார் லோக்பால் மசோதா
“படுபலவீனமானது என்பது பற்றி
சர்ச்சைக்கே இடம் இல்லை.
அதை நிறைவேற்றுவதால் ஒரு பயனும்
இருக்கப் போவதில்லை” – என்று “சோ”வே
தன் தலையங்கத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

எனவே அவர் கருத்துப்படியே ஜீரோ மதிப்பு உள்ள
அரசு மசோதாவுடன், அன்னா ஹஜாரேயின்
3 புதிய கருத்துக்களும் சேர்ந்தால் –
அதனால் குறைந்த பட்சமாக 10 % கூடுதல் பலம்
கிடைத்தாலும் அந்த அளவிற்கு அது பயன்
உள்ளது தானே ? ஒன்றுமே இல்லாததற்கு
10  % தேவலை தானே ?

2) அன்னா வின் மசோதாவில் உள்ள
பலவீனங்கள் பற்றி –

அன்னாவின் மசோதாவை
ஏற்றுக் கொள்வதாக அரசில் யாருமே
சொல்லவில்லையே. எனவே அதை அப்படியே
ஏற்றுக்கொள்வதாக இருந்தால் தானே “சோ”
கூறும் ஓட்டைகளை பற்றிய கேள்வியே வரும் ?
இப்போதைக்கு ஏற்றுக் கொள்ள வாய்ப்பு
இருப்பதாக (அதுவும் வேண்டா வெறுப்பாக )
கூறப்படுவது இந்த 3 பாயிண்டுகள் மட்டுமே.
அதைப்பற்றி மட்டும் தானே “சோ”
விவாதித்திருக்க வேண்டும் ?

3)ஆத்திரத்தில் தப்பான தகவல்களை
எல்லாம் தருகிறார் “சோ”.

“லோக்பால் தான் சிபிஐ –
சிபிஐ தான் லோக்பால் ” –
இது முற்றிலும் தவறான தகவல்.

சிபிஐ யின் லஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவு
மட்டும் தான் “லோக்பால்” அதிகாரத்திற்குள்
போகும்.
மற்ற பிரிவுகள் வழக்கம் போல் சிபிஐ யாகவே
(“சோ” பாஷயில் சொல்வதானால்
congress bureau of
investigation … ? ஆக ) தொடர்ந்து
மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கும்.

4)”யார் வேண்டுமானாலும் யார் மீது
வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம்.
அதற்கு முன் அனுமதி எதுவும் தேவை இல்லை”

– இதை எப்படி “சோ” குறையாகச்
சொல்கிறார் என்பது தான் புரியவில்லை.
ஊழல் அதிகாரிகளின் மீதோ, அமைச்சர்களின்
மீதோ வழக்கு தொடுக்க அனுமதி கேட்டால்
அரசு கொடுப்பதில்லை என்பது தானே குறையே.

ராஜா மீது வழக்கு தொடுக்க அனுமதி கேட்டு
2 வருடம் ஆகியும் பிரதமர் மன்மோகன் சிங்
பதிலே கொடுக்கவில்லை என்று தானே
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி சுப்ரீம் கோர்ட்
போனார். அதற்கு பின்னர் தானே 2ஜி வழக்கே
பதிவு செய்யப்பட்டது.
ஆத்திரத்தில் – புத்தி
நிதானத்தில் இருப்பது இல்லை-
நிறைகளே குறைகளாகத் தெரிகின்றன !

5) “விசாரணை நடக்கும்போதே,
குற்றம் நிரூபணம் ஆவதற்கு முன்பே –
சம்பந்தப்பட்ட அதிகாரியை லோக்பால்
சஸ்பெண்ட் செய்து விடும்”
– சட்டம் படித்த மேதை “சோ”வா இதை
எழுதினார் என்றே எனக்கு சந்தேகம் எழுகிறது.

விசாரணையை துவக்கும் முன்பே,
குற்றம் நிரூபணம் ஆகும் முன்னரே –

அடிப்படை புகார்,ஆதாரங்களின் பேரில்
செய்யப்படுவது தான் சஸ்பெண்ட்.

விசாரணை முடிந்து விட்டால் –
குற்றம் நிரூபணம் ஆனால் –
செய்யப்படுவது டிஸ்மிஸ்.

ஆகவில்லை என்றால் செய்யப்படுவது
re-instatement.

“சோ” அவர்கள் இது பற்றிய
விளக்கங்களை எங்கே தேடுவது என்று
மறந்து போயிருந்தால் –

Central Civil Services
(Classification, Control &
Appeal) Rules – சட்ட புத்தகத்தை
எடுத்துப் பார்க்கலாம்.

6) அரசு அலுவலகங்களில்  இன்னின்ன
காரியங்கள் இத்தனை இத்தனை நாட்களில்
செய்யப்பட வேண்டும் என்றும், இல்லை என்றால்
என்ன தண்டனை என்றும் நோட்டீஸ் போர்டு
வைப்பதெல்லாம் – நடைமுறை சாத்தியக்கூறு
இல்லாதவை என்று “சோ” கூறுகிறார்.

இதற்கு இன்றைய தினம் வெளியாகி இருக்கும்
ஒரு செய்தியே பதில் ஆகிறது.

————————————

“குறித்த காலத்தில் பணியை முடிக்கா விட்டால்
அபராதம் – டில்லியில் வருகிற 15ந்தேதி முதல்
சட்டம் அமுலுக்கு வருகிறது.

டில்லி சட்ட சபை நிறைவேற்றியுள்ள ஒரு
தீர்மானத்தின்படி, பிறப்பு, இறப்பு சான்றிதழ்,
ரேஷன் அட்டை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை
உரிய காலத்தில் செய்யா விட்டால், தாமதமாகும்
ஒவ்வொரு நாளுக்கும் 10 ரூபாய் முதல் 200 ரூ.
வரை அபராதம் விதிக்கப்படும்.

லைசென்ஸை புதிப்பிக்க ஒரு நாள்.
எல் போர்டு லைசென்ஸ் விண்ணப்பிக்கப்பட்ட
அன்றே வழங்க வேண்டும்.
ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 45 நாட்களில்
வழங்கப்பட வேண்டும்.
பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவது
ஒரு வாரத்திற்கு மேல் போகக்கூடாது.”

———————————

டில்லியிலேயே,
நாட்டின் தலைநகரத்திலேயே இது முடியுமானால் –
மற்ற இடங்களில் ஏன் முடியாது ?

என்ன “சோ” அவர்களே – இந்த ஆதாரம்
போதுமா – இது நடைமுறை சாத்தியம் உள்ளதா
இல்லையா என்பதற்கு ?

7)அகம்பாவமும், ஆத்திரமும் பொங்க
இந்த போராட்டத்தை ஏளனப்படுத்தி எழுதும்
“சோ” அவர்களிடம் கேட்கிறேன் – உங்கள்
மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் –

“இந்தியா சுதந்திரம் அடைந்த
இத்தனை ஆண்டுகளில்
கடுகளவு கூட வன்முறை இல்லாமல்,
ஒரு ஒழிக கோஷமும் இல்லாமல்,
மில்லியோ, பிரியாணி பொட்டலமோ,
ஓசி லாரி பயணமோ இல்லாமல் –
பெரும்பாலான  நகரஙகளில் –
இந்த அளவில்  லட்சக்கணக்கான மக்கள்
கூடியதை நீங்கள் பார்த்தது உண்டா ? “

“அன்னா” என் அண்ணாவும் இல்லை,
தம்பியும் இல்லை நான் வக்காலத்து வாங்க.
எத்தனையோ ஆண்டுகள்  கழித்து –
முதல் முறையாக,
தேர்தலில் போட்டியிடவோ,
அதிகாரத்தை கைப்பற்றும் அரசியல்
ஆசையோ இல்லாத,
சொத்து, சொந்த பந்தம் இல்லாத,
ஜாதி, இனம் – மொழியை
துணைக்கு இழுக்காத,
எளிமையான ஒரு மனிதரைக் கண்டதால்
தான் இவ்வளவு எழுதுகிறேன்.

அதிகம் படிக்காத அந்த கிராமத்து மனிதரின்
நடவடிக்கைகளைப் பார்த்தால்
மொழி புரியாத நிலையில் “சோ”விற்கு
அவரைப் பற்றி சரியான மதிப்பீடு
உருவாகாமல் இருக்கலாம்.
மராத்திக்காரரான அவரது
அரைகுறை இந்தி புரியாமல் இருக்கலாம்.
ஆனால் அதற்காக
இந்த அளவிற்கு கீழ்த்தரமாக எழுத
வேண்டிய அவசியமில்லையே.

8)கிரண் பேடி அந்த அளவிற்கு காமெடி
பண்ணிக்கொண்டிருந்ததன் அவசியம்
உண்மையிலேயே “சோ”விற்கு
புரியவில்லையா ?
மிகப்பெரிய கூட்டம் திரண்டிருந்தது.
கூட்டத்தின் மூலம் மத்திய அரசுக்கு
அழுத்தம் கொடுக்க, மக்களுக்கு அரசின் மீது
ஏற்பட்டிருந்த வெறுப்பை  தக்க வைத்துக்
கொள்ள வேண்டி இருந்தது.  
அதே சமயம், நாளாக நாளாக
பெரிதாகிக்கொண்டே வந்த  கூட்டம்
கொதிப்படைந்து வன்முறையிலும் இறங்கி
விடக்கூடாது. மிகப்பிரமாதமாக கூட்டத்தை
சமாளித்துக்கொண்டிருந்த கிரண் பேடியின்
சாமர்த்தியம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

டில்லியிலேயே, ஐ.ஜி.யாக பணி புரிந்து,
பல உயர் பதவிகளை திறமையாக வகித்து
ஏற்கெனவே டில்லி மக்கள் மத்தியில் நன்கு
பிரபலம் ஆகி இருந்த  கிரண் பேடிக்கு
“சோ”சொல்வது போல் “டான்ஸ்” ஆடி
புதிதாகப் புகழ் சேர்க்க வேண்டிய அவசியமில்லை.

மேலும் அன்னா குழுவில் இருந்த மற்றவர்களும்
சாமான்யர்கள் அல்ல என்பது “சோ”விற்கு
தெரிந்திருக்க வேண்டும்.
அல்லது எழுதுவதற்கு முன்னர் தெரிந்து
கொண்டிருக்க வேண்டும்.

பிரசாந்த் பூஷன் -புகழ் பெற்ற வழக்கறிஞர்.
கடந்த பல ஆண்டுகளாக,
450 க்கும் மேற்பட்ட பொது நல வழக்குகளை
கையாண்டு மிகப்பெரிய சமூக சேவையில்
ஈடுபட்டிருக்கிறார்.
( latest being 2 g spectrum)
அடக்கமான மனிதர்.
“சோ”வைப் போல் வெறும் வாய்ச்சொல் வீரர்
இல்லை  தான்!

அர்விந்த் கஜ்ரிவால் –
43 வயது நடுவயதுக்காரர்.
IIT, kharakpur ல் படித்துப் பட்டம்
பெற்றவர். Indian Revenue Service-ல்
தேர்வாகி, 10 வருடங்கள் மத்திய அரசில்
வருமான வரி கமிஷனராக பணி புரிந்தவர்.

பொது சேவையில் ஈடுபட விருப்பம் கொண்டு,
பதவியை ராஜினாமா செய்து விட்டு வந்தவர்.

இவ்வளவு ஆர்வமாக பொதுப்பணியில்
ஈடுபடுபவர்களைப்பற்றி படுகேவலமாக எழுதும்
“சோ” தன் நிலையை மீண்டும் கொஞ்சம்
சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

9) அன்னா ஹஜாரே குழுவினரைப் பற்றி
இவ்வளவு எழுதிய “சோ” இடையில்
பாராளுமன்றத்தில் புகுந்து  சபை வரம்புகளை
எல்லாம் மீறி 5 நிமிடம்  “வீர உரை”
ஆற்றி விட்டுச்சென்ற ராகுல் காந்தியைப் பற்றி
ஒன்றுமே கூறாமல் விட்டது எப்படி ?
“லோக்பால்”க்காக அரசியல் சட்டத்தையே
திருத்த வேண்டும் என்று கூறிய இளம்
மேதை ஆயிற்றே !

முன்பெல்லாம் “சோ”விடம்  –

புத்திசாலித்தனம் -70 %
அகந்தை/ஆத்திரம்     – 20 %
அசட்டுத்தனம் -10 %

என்கிற விகிதத்தில் இருந்தது என்று வைத்துக்
கொண்டால் – இப்போதெல்லாம்
முதலும், கடைசியும் இடம் மாறி விட்டனவோ
என்று தோன்றுகிறது !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, காமெடி, குடும்பம், தமிழ், பொது, பொதுவானவை, மகா கேவலம், மீண்டும் துக்ளக், ஸ்பெக்ட்ரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to “சோ”வின் வாதம் – பிடிவாதம், மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் ….

  1. ramalingam's avatar ramalingam சொல்கிறார்:

    சோவுக்கு தான் ஆடாவிட்டாலும் தன் அகம்பாவம் அவரை ஆட்டி வைக்கிறது. அருந்ததி ராயும், இவரும் அளவுக்கு மீறி உளறிக் கொட்டி மக்களிடம் தங்கள் மரியாதையைக் கெடுத்துக் கொண்டார்கள்.

  2. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    இந்தப்பதிவை படித்துகொண்டே இருந்த நான் அப்படியே கண் அயர்ந்து விட்டேன் போலும்..ஒரு கனவு அதில், அட, நம்ம சோ வந்தார்..”என்ன சார்! இருந்திருந்து ஊழலை கண்டிக்க, கட்டுப்படுத்த, ஒரு முதியவர் வந்துள்ளார்.அவரை நிறைய இந்தியர்களும் வரவேற்கிறார்கள்.அவருடைய அணுகு முறையில் சில தவறுகள் இருக்கலாம் ஆனால் நோக்கம் புனிதமானதல்லவா? அவரை ஆதரித்து வாழ்த்துவதை விடுத்து,உங்களைப்போன்ற நல்லவர்களே ,அவரை கிண்டலும் எகத்தாளமும் செய்தால் அது நம் பொது எதிரிகளான அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக அல்லவா இருக்கும்?எல்லாம் அறிந்த நீங்களே இப்படி செய்யலாமா/” என கேட்க அவரும்,”கண்பத்,நீங்களுமா என்னைப்புரிந்துகொள்ளவில்லை? கடந்த என் நாற்பது ஆண்டுகால பொது வாழ்க்கையில் நான் ஆதரித்த எந்த இயக்கம் உருப்பட்டது அல்லது எதிர்த்த எந்த இயக்கம் அழிந்தது?நேர்மாறாக அல்லவோ நடந்துள்ளன.அது என்னவோ இறைவன் அவ்வாறு எழுதி விட்டான்!இப்போ அன்னா ஹசாரே ஒரு நல்ல இயக்கத்தை துவங்கி உள்ளார்.அதையாவது எதிர்த்து, அதை, நான் எதிர்த்து அடையார் ஆலமரத்தைப்போல வளர்த்த கழகங்களைப்போல வளர்த்து விட முடியாதா என்ற நப்பாசையில்தானே நான் அதை எதிர்க்கிறேன்!” என்றார்.
    @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
    என்ன செய்வது காவிரி மைந்தன்?
    நாம் மதிக்கும் ஒரு நல்ல மனிதர் ஏதேதோ பேசும்போது,இப்படி எதையாவது சிந்தித்து நம்மை சமாதானப்படுத்திக்கொள்வதை தவிர வேறு வழி எனக்குத்தெரியவில்லை!.
    என்னைபொறுத்தவரை தமிழ் நாட்டின் மூன்றே ஆண்கள்..
    ஜெயகாந்தன்,சோ,ஞாநி
    முதல் இருவரையும் மூப்பு தாக்கி விட்டது போலும்!
    மூன்றாமவராவது நிலை மாறாமல் இருக்க வேண்டும்!

  3. yatrigan's avatar yatrigan சொல்கிறார்:

    வணக்கம் காவிரிமைந்தன்,

    நிறைய பெண்கள் சமூக சேவையில்
    ஈடுபட்டிருக்கிறார்கள்.
    சிலர் நடுத்தர குடும்பத்தினர்.
    அவர்கள் சிறிய அளவில் தங்களுக்கிடையிலேயே
    குழுக்களாக செயல்பட்டு ஒருவருக்கொருவர்
    உதவி வருகிறார்கள்.

    நிறைய – படித்த, செல்வந்தர் குடும்பத்துப்
    பெண்களும் சமூக சேவையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
    ஆனால் அவர்கள் பொதுவாக கல்வி, மருத்துவ
    பணிகளிலேயே கவனம் செலுத்துகிறார்கள்.

    இந்த மாதிரி விஷயங்களில் சேவை செய்ய முடியும்,
    செய்ய வேண்டும் – என்பது பொதுவாக பலருக்கு
    தோன்றவில்லை என்று நினைக்கிறேன். தோன்றினால்,
    நிச்சயம் செய்வார்கள்.

    வசதியான நிலையில் உள்ள படித்த பெண்களின்
    அமைப்புகள் தான் அரசாங்கத்தில் அதிகாரத்தில்
    இருப்பவர்களிடம் பேசி இது மாதிரி விஷயங்களில்
    பலனுள்ள வகையில் செயல்பட முடியும்.

    எனக்கு தெரிந்த அமைப்பினரிடம் நான் கூட
    இது பற்றி பேச விரும்புகிறேன்.

    சிறிய அளவிலாவது, முயற்சிகள் தொடங்கட்டுமே.

    நல்ல முயற்சி. இது போன்ற அவசியமான
    விஷயங்களை அடிக்கடி எழுதுங்கள்.

    யாத்ரிகன்
    http://yatrigan.wordpress.com

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பரே,

      மிக்க நன்றி.
      உங்கள் மறுமொழி அடுத்த இடுகைக்கானது.
      (உலகின் மிகப்பழமையான தொழில் ….)
      இடம் மாறி விட்டது. மாற்ற முயற்சி
      செய்கிறேன். முடியவில்லையென்றால்,
      அங்கேயே பார்க்கலாம்.

      வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  4. ராஜநடராஜன்'s avatar ராஜநடராஜன் சொல்கிறார்:

    சோவின் ராசிக்கு ஒரு ஜோஸ்யம் இருக்கிறது.அவர் எதை எதிர்க்கிறாரோ அது வெற்றி பெற்றுவிடும்:)

  5. palaniappan's avatar palaniappan சொல்கிறார்:

    thodarattum ungal karutthukal – valga valarga

  6. smtvkendra's avatar smtvkendra சொல்கிறார்:

    kaalam bathil chollum.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.