(பகுதி-3 ) உருமாறிய திராவிட இயக்கமும் – இன்றைய அரசியலும் ..



நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும்
இணைந்த அமைப்பிற்கு பின்னர் ஒரு
புதிய பெயர் இடப்பட்டது.

1944-ல் இந்த இயக்கத்தின் பெயர் திராவிடர் கழகம்
என்று மாற்றப்பட்டது.
பெரியாரின் செல்வாக்கினால் திராவிடர் கழகம்
மலர்ந்து வளரத் துவங்கியது.

இந்த இடுகைத்தொடரின் இதற்கு முந்தைய பகுதி( 2)-க்குச் செல்ல –

இதன் முன்னர் நீதிக்கட்சியின் சின்னமாக
சம உரிமையை குறிக்கும் வகையில்
தராசு இருந்தது.

திராவிடர் கழகம் தோன்றியதும் சுற்றிலும்
கருப்பும், நடுவில் வட்டமாக சிவப்பும் கொண்ட
கருப்பு சிவப்பு கொடி முதன் முதலில்
அறிமுகம் செய்யப்பட்டது.

கருப்பு (சமூக, பொருளாதார) அடிமைத்தனத்தையும்,
சிவப்பு அவற்றிலிருந்து பெறவேண்டிய
விடுதலையையும் குறிப்பதாக ஆனது.


பெரியார் தீவிரமாக பிராம்மணர் எதிர்ப்பு,
ஜாதி, மத, கடவுள் ஒழிப்பு பிரச்சாரங்களில்
ஈடுபடலானார். அவரது கொள்கைகளும்,
பேச்சும் – தமிழ் இளைஞர்களைக்
கவர்ந்து இழுத்தன. (இதில் சில பிராம்மண
இளைஞர்களும் இருந்தனர் என்பது தான்
அதிசயம் ! )

அடுக்குமொழியிலோ, அலங்காரமாகவோ
பேசக்கூடியவர் அல்ல பெரியார் !
மிகவும்  எளியநடை – திண்ணையில்
4 பேருடன் உட்கார்ந்துக்கொண்டு
எப்படிப் பேசுவோமோ அதே போல்
மேடைகளில் பேசி வந்தார்.

 

 

திரு. ஜின்னா, டாக்டர் அம்பேத்கர் – ஆகியோருடன் பெரியார்

பெரியாருடன் நடிகவேள் M.R.ராதா ….

 

 

( ஒரு கூட்டத்தில், பெரியார் அவர்கள்,
ஒரு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்துகொண்டு
உரையாற்றியதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்……!!! )

பல சமயங்களில் எதிரே அவர் பேச்சைக்
கேட்டுக்கொண்டு இருக்கும் பொதுமக்களையே –
முட்டாள், முண்டம், அறிவில்லாத மடையன்,
காட்டுமிராண்டி என்றெல்லாம் கூட உரிமையோடு
திட்டிப் பேசி இருக்கிறார். ( அவருக்குப் பின்,
தமிழகத்தில், துக்ளக் சோ அவர்களைத் தவிர –
இத்தகைய தைரியம் உடைய வேறு தலைவர்கள்
யாரையும் நான் கண்டதில்லை…!! )

அவர் மீது பெரும் அன்பு வைத்திருந்த
தமிழ் மக்கள் யாரும் அவர்
பேச்சைத்தவறாகஎடுத்துக்கொண்டதே கிடையாது.

மாறாக மக்கள் அதையும் ரசித்தார்கள்.
பல படித்த இளைஞர்கள்
திராவிடர் கழகத்தில் இணைந்தனர்.
அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன்,
ஈவெகி சம்பத், மதியழகன், கலைஞர் கருணாநிதி,
பேராசிரியர் அன்பழகன், என்.வி.நடராஜன்
போன்றவர்கள் பெரியாரின் படையை
பலப்படுத்தினார்கள்.

துவக்க கால செயல்வீரர்கள் – மதியழகன், நெடுஞ்செழியன், கருணாநிதி, என்.வி.நடராசன் ஆகியோருடன் சி.என்.அண்ணாதுரை….(பேசிக்கொண்டிருக்கிறார்…)


ஆனால் இவர்களது பேச்சு நடை முற்றிலும்
மாறு பட்டது ! அடுக்கு மொழி,
அலங்கார வார்த்தை விளையாட்டுகள்,
எதுகை மோனையுடன் சொற்கள்,
உணர்ச்சியைத் தூண்டும் வகையில் –
ஆவேசமான பேச்சு !
கூடவே கவர்ச்சிப் பேச்சுகளும்…!!!

அண்ணாவின் உரைகள் – ஆழமாகவும்,
அர்த்தமுள்ளதாகவும், ரசனையுடனும் இருந்தன.
அண்ணா தன் சொல்லாற்றலால்
அனைவரையும் கவர்ந்தார் !
அனைவரையும் அணைத்துச்செல்லும்
பெருந்தன்மையும், சாதுரியமும், அண்ணாவிடம்
இயல்பாகவே இருந்தது.

இளமைக்கால அண்ணா – 1946-ல்

( அறிஞர் அண்ணா – 1960 -களில்…)

ஞாயிற்றுகிழமை காலை வேளைகளில்,
நுழைவுக் கட்டணம் வைக்கப்பட்ட அண்ணாவின்
உரை நிகழ்ச்சிகள் கூட நடைபெற்றன.

அவையும் HOUSE FULL -ஆக….!!!

( அத்தகைய ஒரு கூட்டத்திற்கு நான் இளமைப் பருவத்தில்
சென்றிருக்கிறேன்… உரையின் தலைப்பு –
“கற்பில் சிறந்தவள் கண்ணகியா… மாதவியா…? ( 🙂 🙂 🙂 )

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை சொல்லியாக
வேண்டும்.

பெரியாரின் அணுகுமுறைக்கு நேர்மாறாக இருந்தன
அவரது சீடர்களாக அறியப்பட்ட அண்ணா மற்றும்
அவரது தம்பிகளின் அணுகுமுறையும்,
உரையாற்றல்களும்.

பெரியார் மிக மிக சிக்கனமானவர்.
பேசும்போது – மிகவும் எதார்த்தமாக, பேச்சு நடையில்,
பளிச்சென்று எதையும் வெளிப்படையாக உடைத்துப் பேசுவார்.

ஆனால், இந்த சீடர்களோ –
எதுகை மோனைகளோடு, அடுக்கு மொழியில்,
வர்ணனைகளும், வார்த்தை ஜாலங்களும் நிறைந்த
“கவர்ச்சி” கரமான உரைநடையை மேற்கொண்டார்கள்..

எடுத்துக் காட்டாக, அண்ணா’வின் “புகழ்பெற்ற”
ஒரு சொல்லாடலைக் குறிப்பிடலாம்.

ஒரு சமயம் அண்ணாவை, அந்த காலத்தில் புகழ்பெற்றிருந்த
ஒரு நடிகையுடன் சம்பந்தப்படுத்தி, கேட்கப்பட்ட ஒரு
கேள்விக்கு அவர் அளித்த பதில்…

“அந்த நங்கை படிதாண்டா பத்தினியுமல்ல…
நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல…” 🙂 🙂 🙂

.
—————————————————————
தொடர்ந்து அடுத்த பகுதி(4)-ல் சந்திப்போம்..

—————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.