…
…

…
நான் பார்த்த முதல் சினிமாவாக என் நினைவில் பதிந்திருப்பது –
1949-ஆம் ஆண்டு, மஹாராஷ்டிராவில், புனா நகரத்தின் ஒரு பகுதியில்
அமைந்திருந்த கர்க்கி ” எக்சல்சியர் ” தியேட்டரில் -என் 6-வது வயதில்
பார்த்த சந்திரலேகா – (ஹிந்தி பதிப்பு).
இந்திய திரைப்பட உலகில் சாதனை படைத்த இந்த படத்தைப்பற்றி சொல்ல
மிக அதிகமான செய்திகள் இருக்கின்றன…
இருந்தாலும், மிகச்சில மட்டும் கீழே –
இந்த படத்தை தயாரித்த ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ்.எஸ்.வாசன் அவர்களே தான் இந்த படத்தை டைரக்டும் செய்தார்.
அந்த காலத்தில் மிக அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட (சுமார் 30
லட்சம் ) இந்த படத்தை தயாரித்து முடிக்க 5 வருடங்கள் (1943-48 ) பிடித்தன. பல தடவை, எடுத்த காட்சிகளை தூக்கியெறிந்து விட்டு, மீண்டும் மீண்டும், மனம் திருப்தியடையும் வரையில் perfection பார்த்து தயாரித்தார் வாசன்…
முதலில் தமிழில் மட்டும் தான் தயாரித்தார். ஏப்ரல் 1948-ல் ரிலீசான இந்த படம் வெற்றிகரமாக ஓடியும் கூட, அவர் செலவழித்த பணத்தை இதில் மீட்டெடுக்க முடியாததால், சில காட்சிகளை திரும்ப எடுத்தும், சில கதாபாத்திரங்களை மாற்றியும், பெரும்பாலான காட்சிகளை டப் செய்தும் ஹிந்தியில் தயாரித்து அதே வருடம் டிசம்பரில் அகில இந்திய அளவில் ரிலீஸ் செய்தார்.
இந்திய திரையுலகமே கண்டிராத அளவிற்கு வாசன் செய்த பிரம்மாண்டமான விளம்பரங்களாலும், நிஜமாகவே படத்தின் தரத்தினாலும், ஹிந்தியில் மிகப்பெரிய ஹிட் ஆனது சந்திரலேகா.
அதன் பின்னர் இந்தப்படம் ஆங்கிலம், ஜப்பானிய மற்றும் டேனிஷ் மொழிகளிலும் டப் செய்யப்பட்டு, உலக அளவில் ரிலீஸானது.
வாசனுக்கு மிகப்பெரிய புகழையும், மிக அதிகமான செல்வத்தையும் ஈட்டித்தந்தது சந்திரலேகா…
என் 6-வது வயதில் நான் சந்திரலேகா பார்த்த அனுபவம்
இப்போதும் என்
மனதில் பசுமையாக பதிந்திருக்கிறது……
இரண்டு முக்கிய காரணங்கள் சந்திரலேகா மிகவும் பேசப்பட
காரணமாக இருந்தன.
ஒன்று – முரசு நடனம்…. 500 பெண் நடனக்கலைஞர்கள்
கலந்துகொண்டு ஆடிய அந்த நடனம், அதன் காட்சியமைப்பிற்காகவும்,
படப்பிடிப்புக்காகவும் – அந்தக்காலத்தில் பிரமிப்புடன் பார்க்கப்பட்டது.
இரண்டாவது – அந்த படத்தில் இடம்பெற்ற சர்க்கஸ் காட்சிகள்…
கதாநாயகி டி.ஆர்.ராஜகுமாரி பல பார் காட்சிகளில் டூப் போடாமலே
நடித்தது அவருக்கு பெரும் புகழை ஈட்டித்தந்தது.
திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்களைப்பற்றி தனியாகவே ஒரு இடுகை எழுதலாம்.. நிறைய விஷயங்கள் இருக்கின்றன…பின்பு எப்போதாவது சமயம் வாய்க்கும்போது எழுதுகிறேன்…
( ஒரு சின்ன சங்கதி – என் அப்பாவும், எஸ்.எஸ். வாசனும் நன்கு பழகிய நண்பர்கள் – 1940 -களின் துவக்கத்தில், வாசன் ஜெமினி ஸ்டுடியோவை வாங்குவதற்கும் முன்னர்… !!! -அதாவது நான் பிறப்பதற்கும் முன்னர்…!!! )
இங்கே கீழே இரண்டு காணொளி காட்சிகள் –
ஒன்று அந்த பிரம்மாண்டமான முரசு நடனம் வரும் காட்சி…
இரண்டாவது – கதாநாயகி டி.ஆர்.ராஜகுமாரியின் சர்க்கஸ் காட்சிகள் –
…
…
…
பின் குறிப்பு -உங்கள் குழந்தைகளுக்கு இந்த காட்சிகளை காட்டி, 70 வருடங்களுக்கு முன்னரே ஒரு தமிழ்ப்படத்தில் இத்தகைய காட்சிகள்
எடுக்கப்பட்டுள்ளன என்று சொல்லுங்களேன். அவர்களுக்கும் நம் தமிழுலகைப்பற்றி கொஞ்சம் நல்ல அபிப்பிராயம் ஏற்படட்டும்…!!!
.
——————————————————————————————————-



1948 ம் ஆண்டு வெளிவந்த ஜெமினியின்
சந்திரலேகா என்ற படத்தில்
லலிதா என்கிற
இந்தம்மா நடனகுழுவினருடன்
நடனம் ஆடினார்…!
சமீபத்தில் நடந்த ஒரு திருமண விழாவில், இந்த நடனத்தை அவர் ஆடினார்…!!!
சந்திரலேகா படம் வந்து 71 ஆண்டுகள் ஆகிறது இந்த அம்மாவுக்கு அப்பொழுது 19 வயது என்று வைத்துக் கொண்டாலும் இப்பொழுது இந்த அம்மாவிற்கு 90 வயது இருக்கும்.
அருமை…
மிக்க நன்றி நண்பர் பையா அவர்களே… 🙂 🙂 🙂
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அய்யா…! எஸ்.எஸ்.வாசன் எனறாலே பிரமாண்டம்..மற்றும் பிரமாதம்தான் ..இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட கமலா சர்க்கஸ் படத்திற்கு பிறகு ஜெமினி சர்க்கஸ் என்று பெயர் மாற்றம் ஆனது …இவரது ஔவையார் படம் பற்றியும் பல சுவாரஸ்யமான தகவல்கள் அதாவது கே.பி.சுந்தராம்பாள் அவர்களின் சம்பளம் மற்றும் இறுதி காட்சிகளின் பிரமாண்டம் பாேன்றவை …அடுத்து மக்கள் திலகத்தின் நூறாவது படமான ஔி விளக்கு இவரது தயாரிப்பு … இதில் வரும் ஒரு பாடல் அனைத்து மத ஆலயங்களிலிலும் தினமும் ஒலித்தது அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற பாேது என்பதும் அதனாலேயே அவர் நலமாகி திரும்பி வந்தார் என்று மக்கள் நம்பியதும் கூட திரு.வாசனுக்கு சிறப்பு சேர்க்கும் என்பதில் மாற்று கருத்தும் உண்டாே …?