திரு.ஸ்டாலின் – அவசரப்பட்டது ஏன்…?


சிதறிக்கிடக்கும் எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைப்பை சாத்தியப்படுத்த, பாஜகவுக்கு எதிரான அத்தனை முக்கிய கட்சிகளின் தலைவர்களையும், தொடர்ந்து தனித்தனியே சந்தித்துப்பேசி, அவர்களின் தயக்கங்களைப் போக்கி, அவர்களை ஒன்றுகூட சம்மதிக்க வைத்து, – கடந்த 9-ந்தேதி டெல்லியில் 21 கட்சிகளின் கலந்தாலோசனை கூட்டத்தை ஏற்பாடு செய்தார் திரு.சந்திரபாபு நாயுடு.

இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் எந்தெந்த வழிகளில் எல்லாம் ஒருங்கிணைந்து செயல்பட்டு, வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கலாம் என்பது குறித்து விரிவாக
ஆலோசனை செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் ஒருமித்த தலைவராக – பிரதமர் வேட்பாளராக எப்படி, எப்போது, யாரை – தேர்ந்தெடுத்து அறிவிப்பது என்பதும் கூட ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் – அனைத்து கட்சிகளும், தங்கள் தங்கள் மாநிலங்களில் – மாநில அளவிலான வலுவான கூட்டணிகளை ஏற்படுத்திக்கொண்டு, தேர்தலை சந்திப்பது என்றும்

-பிரதமர் வேட்பாளர் பற்றிய முடிவை, தேர்தலுக்குப்பின் கூடி தீர்மானிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

பிரதமர் பதவியை குறிவைத்து – மாயாவதி, மம்தா பானர்ஜி, சரத் பவார் போன்ற பல தலைவர்கள் காத்திருப்பதால், முன்கூட்டியே பிரதமர் வேட்பாளரை தீர்மானிப்பது – கூட்டணியின் ஒற்றுமையை குலைத்து விடும் என்பதை அனைவரும் புரிந்துகொண்டதன் விளைவே இந்த முடிவு.

இதே காரணத்தால் தான், இத்தனை முயற்சிகளையும் முன்னெடுத்துச் செய்த சந்திரபாபு நாயுடு – பிரதமர் வேட்பாளரைப்பற்றி இன்றுவரை வாய் திறவாமல் இருக்கிறார்.

ஒரு வாரத்திற்கு முன்பு டெல்லியில் நடந்த அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்துகொண்ட, ஸ்டாலினுக்கு இந்த விவரங்கள் அனைத்தும் தெரியும்.

ஸ்டாலின், ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க, ஆதரிக்க – முடிவு செய்திருந்தால் அப்போதே – அந்த கூட்டத்திலேயே தன் விருப்பத்தை தெரிவித்திருக்க வேண்டும்.
ஆனால் செய்யவில்லை… காரணம்….?

நேற்று, திமுக சார்பில் நடந்த கூட்டத்தில், திருமதி சோனியா காந்தி, ராகுல்காந்தி, சந்திரபாபு நாயுடு, ஆகியோரின் முன்னிலையில் – திடீரென்று ராகுல் காந்தியை பிரதமர்
வேட்பாளராக அறிவிக்க காரணம் என்ன…?

இந்த ஒரு வார காலத்திற்குள் நடந்த ஒரே விஷயம் – நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில், 3 முக்கிய மாநிலங்களில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது
என்கிற ஒரே ஒரு செய்தி தான்.

தமிழகத்தில், திமுக கூட்டணி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எந்தெந்த கட்சிகள் இருக்கும்… யார் யாருக்கு எத்தனை சீட்டுகள் என்பதெல்லாம் இன்னமும் சூடாக விவாதிக்கப்படும் நிலையில் உள்ளன.

‘சீட்’டுகள் பிரிக்கப்படும்போது, இன்னும் யார் வேண்டுமானாலும், உள்ளே வரலாம்… யார் வேண்டுமானாலும் வெளியே போகலாம் – என்று திமுக சீனியர் துரைமுருகன்
வெளிப்படையாகவே அறிவித்தது தான் லேடஸ்ட் நிலை.

ஒற்றை இலக்கத்தில், காங்கிரசுக்கு இடம் கொடுத்தால் – அது மாற்று ஏற்பாட்டை நோக்கிச் செல்லும் என்கிற ஒரு வலிமையான கருத்தும் உலவிக்கொண்டிருக்கிறது. அத்தகையை ஒரு சூழ்நிலையை எதிர்பார்த்தே – பாமக, கமலின் கட்சி, தினகரனின் கட்சி, ( விசிக கூட ) இன்னும் சில சிறிய கட்சிகளும் காத்திருக்கின்றன.

எனவே, அவசர அவசரமாக ஸ்டாலின் அறிவித்ததன் பின்னணி – காங்கிரஸ் கட்சி, திமுகவை விட்டு விலகிச்சென்று விடக்கூடாதே என்கிற அச்சத்தின் வெளிப்பாடு தான் என்று சூழ்நிலைகள் தெரிவிக்கின்றன.

எனவே, வெற்றிமுகத்தோடு முன்னேறிக்கொண்டிருக்கும் ராகுல் காந்தியை, காங்கிரஸ் கட்சியை மடக்கிப்போட முந்திக்கொள்ள வேண்டும் –

அடுத்த பிரதமரை அடையாளம் காட்டியவர் திமுக தலைவர் என்று பெருமை பேசக்கூடிய வாய்ப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும் –

ஒருவேளை குறிப்பிட்ட அளவிற்கு, தமிழ்நாட்டில் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்றாலும் கூட, காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியமைக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் –
அதில் திமுக-வுக்கான இடத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும்…

இப்படி பல ‘டும் டும்’ -கள் தான் ஸ்டாலினின் அவசர அறிவிப்புக்கான – பல காரணங்களில், சில காரணங்களாக இருக்க முடியும்.

ஆனால் – இந்த அவசர அறிவிப்பால் – திமுக சில வாய்ப்புகளை இழந்து விட்டது.

காங்கிரசுடன் இறுதியாக கூட்டணியை அறிவிக்கும் முன்னர் – தமிழ்நாட்டின் நலனுக்கான சில உறுதிமொழிகளை திமுக பெற்றிருக்க வேண்டும்.

– காவிரியில், தமிழ்நாட்டிற்கு எதிரான நிலையை மத்திய அரசு எதிர்கொள்ளாமல் தீர்ப்பாணையம் நியாயமாக செயல்பட உறுதி அளிக்க வேண்டும்.

– முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் -தமிழக உரிமைகளும், நலன்களும் உறுதி செய்யப்பட வேண்டும்.

– மத்திய அரசால் தமிழகத்திற்கு அண்மைக்காலங்களில் நிகழ்த்தப்பட்ட கேடுகள் சரிசெய்யப்பட வேண்டும்.

-டெல்டா மாவட்டங்களில் மீதேன் எரிவாயு திட்டங்கள் கைவிடப்பட வேண்டும்.

இதுபோன்ற, மத்திய அரசின் தன்னிச்சையான, ஒருதலைப்பட்சமான சில முடிவுகளால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ள விஷயங்களில் நிவாரணம் பெற உறுதியான நடவடிக்கை…

திரு.ஸ்டாலின் எடுத்திருப்பது, அவசரம் அவசரமாக அறிவித்திருப்பது –
முதிர்ச்சியற்ற, தற்போது தேவைப்படாத ஒரு முடிவு என்று தான் சொல்ல வேண்டும்.

நமக்கு சொல்வது எளிது… சொல்லி விட்டோம்.
ஆனால், என்ன செய்வது – அவரவர்க்கு வந்தால் தானே தெரியும்…
அரசியலில் – அச்சமும், பதட்டமும்
எப்படியெல்லாம் ஆட்டி வைக்குமென்று…!

.
—————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to திரு.ஸ்டாலின் – அவசரப்பட்டது ஏன்…?

  1. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    ஸ்டாலின், அகில இந்திய அரசியலில் தன்னை ஒரு முக்கிய தலைவராக
    முன்னிலைப்படுத்த முயற்சிகளை மேற்கொள்கிறார்… இதில் தமிழக நலன்கள்
    பற்றிய கவலைகளை அவர் மேற்கொண்டால் – அவர் மேற்செல்ல முடியாது.
    அவர் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதை தவறு என்று சொல்ல முடியாது.
    சந்திரசேகர் ராவ் போன்ற உதவாக்கரைகளெல்லாம் முந்திரிக்கொட்டைகளாக
    முன்வரும்போது, இத்தகைய முயற்சிகள், அவலமாக இருந்தாலும் கூட-
    அவசியம் என்றாகி விடுகிறது.

    ஆனால், தமிழ் நாட்டில் எதாவது ஒரு தேர்தலில் பலத்த வெற்றியை நிரூபித்துக்காட்டிய பிறகு, அவர் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டால் தான் மரியாதை இருக்கும்.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      சரியான அவதானிப்பு அரவிந்தன்.

      ஆனாலும்,
      //தமிழ்நாட்டின் நலனுக்கான சில உறுதிமொழிகளை திமுக பெற்றிருக்க வேண்டும்.//
      இந்த எதிர்பார்ப்பு, அதுவும் திமுகவிடமிருந்து டூ டூ மச் இல்லையோ? கடந்த காலங்களில் எந்த நலனுக்கான உறுதிமொழி திமுக வாங்கினார்கள்? ஒன்றுமே இல்லை. அதற்குப் பதில், எனக்கு ‘அமைச்சர் பதவிகள் தா’, நீங்க என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க, தமிழகத்தைப் பற்றி எனக்குக் கவலை இல்லை என்பதுதானே திமுகவின் ஸ்டாண்ட் ஆக இருந்துவந்திருக்கிறது.

  2. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா … ! பல தேர்தல்களில் இதுபோல எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதில் இருக்கின்ற விறு விறுப்பு பிரதம வேட்பாளர் என்கிற போது பிசு- பிசுத்து போன உதாரணங்கள் நிறைய இருக்கிறது … இப்போதே இரு கம்யூனிஸ்ட்களும் இது ஸ்டாலின்அவர்களின் தனிப்பட்ட கருத்து என்று கூற ஆரம்பித்து விட்டார்கள் … அதுபற்றி :– // ராகுல் பிரதமர் வேட்பாளர்: மார்க்சிஸ்ட் பதில்! // https://www.minnambalam.com/k/2018/12/17/42 மின்னம்பலம் செய்தி … ! சென்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசின் முக்கிய வீழ்ச்சிக்கு மூலகாரணமாக இருந்தது எது என்று மக்களுக்கு ஏன் காங்கிரஸாருக்கே தெரியும் — அவசரக்காரருக்கு … மட்டு என்றொரு சொலவடை இருக்கிறது …!!!

  3. சிவராசு's avatar சிவராசு சொல்கிறார்:

    என்னப்பா நீ, இம்புட்டு பச்சப் புள்ளையாகீறீயேப்பா? நாங்க கேரண்டி வாங்காம ஒத்துக்குவமா என்ன? எம்புட்டூ பெரிய யாவாரிக நாங்க தெர்மா? டீலிங்கெல்லாம் முடிஞ்சு – மந்திரி போஸ்டு, துட்டு எல்லாம் ஒத்துகின பின்னாடிதான் அனவுன்சு பண்ணீகிறோம்.

    தள்பதி எம்புட்டு நாளுப்பா வெயிட்டு பண்ணுவாரு? சேடிஸ்டி மோடி தள்பதிய எதிர்கட்சி தலைவராவே உட்டுகினான்பா. அப்புறம் என்ன வழி எங்குளுக்கு. அதான் டீலிங் முடிச்சிட்டோம். எங்களப்பத்தி தெரியனும்னா இந்த போட்டோ பாரு….https://pbs.twimg.com/media/DuhvZnsU0AE0133.jpg அப்பவே நாங்கெல்லாம் இப்படி தெரியுதா?

    இடைல உட்டே பாரு ‘தமிழக நலன்’னு ஒரு வார்த்தை … நல்லா டமாஸ் பண்ணுற நயினா!

    200 ரூபிஸ் உபி.

  4. sirappu's avatar sirappu சொல்கிறார்:

    அய்யா,
    தெரிந்துதான் இந்த தலைப்பை வைத்தீர்களா? அல்லது அறியாமையிலா?
    நீங்கள் குறிப்பிடும் தமிழ் நாட்டிற்கு எதிரான அணைத்து திட்டங்களின் சூத்திர தாரிகளும் இந்த தி.மு.க தான்.
    உடன் இருந்தே அணைத்து திட்டங்களையும் அமைதியாக அனுமதி அளித்தவர்கள்.
    என்னமோ காமெடி பண்ண வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேர்கள் போலும்.

  5. Saravanan's avatar Saravanan சொல்கிறார்:

    Watch This Video! Respect given to Tamilnadu police on duty by a DMK party local women functionary member during Karunanidhi statue opening event. This happened when they are not in power, just imagine what will happen if they come to power… God save Tamilnadu!

  6. tamilmani's avatar tamilmani சொல்கிறார்:

    ஐந்து மாநில தேர்தல் முடிவுகளில் சத்தீஸ்கர் மட்டுமே
    பிஜேபி கையில் இருந்து நழுவி இருக்கிறது. ராஜஸ்தானிலும்
    மத்யபிரதேஷிலும் நல்ல tough fight. மிசோரத்தில் காங்கிரஸ் தோல்வி
    தெலுங்கானாவில் காங்கிரஸ் எடுபடவில்லை. இன்னும் பாராளுமன்ற
    தேர்தலுக்கு ஆறு மாதங்கள் உள்ளன. கடந்த தடவை போல
    பிஜேபிக்கு இடங்கள் கிடைக்காவிட்டாலும் தனிப்பெரும் கட்சி அல்லது
    சிம்பிள் மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்புள்ளது.கிழவியை தூக்கி மணையில்
    வைத்த கதை போல் சுடாலின் அதற்குள்
    அவசர படுகிறார். காரணம் மத்திய மந்திரி பதவிகள்தான். நல்ல
    “பசை ” உள்ள இலாக்காக்களை வாங்கி கோடிகள் குவிப்பதே
    திமுகவின் லட்சியம். தமிழ்நாட்டை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை,

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.