…
…

…
கிட்டத்தட்ட ஒரே சம காலத்தில் தான் இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளும் சுயேச்சையாக இயங்கத் துவங்கின.
1947-ல் நாம் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக இயங்கத் துவங்கினோம்.
1949-ல் சீன மக்கள் குடியரசின் கம்யூனிஸ்டு கட்சி அதிகாரத்தை ஏற்றது.
200 ஆண்டுக்கால காலனி ஆதிக்கத்தின் பாதிப்பிலிருந்து
நாம் புதிதாக நம்மை உருவாக்கிக் கொள்ள வேண்டி இருந்தது.
முடியாட்சி, நீண்ட கால உள்நாட்டுப்போர் மற்றும் ஜப்பானுடனான 1937 முதல்1945 வரையிலான 7 ஆண்டுக்கால போர், போரில் படுதோல்வி, போருக்கும், புரட்சிக்கும் பலி கொடுக்க வேண்டியிருந்த லட்சக்கணக்கான உயிர்கள் – இத்தனை பாதிப்புகளிலிருந்தும் சீனா வெளிவர வேண்டி இருந்தது.
1948 முதல் 1975 வரையிலான சீனாவில் பெரிய
அளவிலான முன்னேற்றங்கள், வளர்ச்சிகள் இல்லை.
ஆனால் 1978-ல் அறிமுகப்படுத்தப்பட்டு கொஞ்சம்
கொஞ்சமாக திடப்பட்டு உருவெடுத்த புதிய பொருளாதார
கொள்கை (mixed economy or market economy)
ஒரு விதத்தில் சீனாவின் வளர்ச்சிக்கு காரணம் என்று
சொல்லக்கூடும்.
இந்த புதிய பொருளாதார கொள்கை “socialism with Chinese characteristics” – என்று பெயர் சூட்டப்பட்டு சீன அரசியல் சட்டத்தில் டிசம்பர் 1982ல் சேர்க்கப்பட்டது. தாராளமயமாக்கலில்,
உலகப் பொருளாதாரச் சந்தையில் சீனா கலப்பதற்கான
அடித்தளம் இது.
கிட்டத்தட்ட 140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாடு,
அதில் 30% மேல் மக்கள் – உடலுழைப்புக்குத் தகுதி இல்லாதவர்களைக் கொண்ட ஒரு நாடு,
சுமார் 35 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி பெற்று, இன்று உலகின் முதல் பொருளாதார சக்தியாக ( number 1 GDP nation )
உருவெடுத்து இருப்பது எப்படி ?
ஏற்றுமதி வர்த்தகத்தில் உலகத்தில் நம்பர்-1.
பொருளாதார வளர்ச்சியில் – நம்பர்-1.
வாங்கும் சக்தி கொண்ட நாடுகளில் – நம்பர்-1.
உலக நாடுகளில், (அமெரிக்காவைத் தவிர) அதிக அளவில் அமெரிக்க டாலரை கையிருப்பு (reserve foreign exchange )
வைத்திருக்கும் ஒரே நாடு !
அமெரிக்க பொருளாதாரத்தை அசைக்கும் அளவிற்கு சக்தி கொண்ட ஒரு நாடு !
உலகின் அதிக அளவு படைவீரர்களைக் கொண்ட நாடு. (largest standing army )
ஐக்கிய நாடுகள் சபையில் (வீட்டோ அதிகாரம் கொண்ட) பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினராக உள்ள ஒரு நாடு.
உலகின் அதிவேக மற்றும் அதிக தூரத்திற்கு ஓடும் புல்லெட் ரெயில்.
உலகின் 3 மிகப்பெரிய, மிக நீளமான மேம்பாலங்கள்.
உலகில் அதிகபட்ச தூரத்திற்கு உள்நாட்டு நீர்வழிப்பாதையையும், அதில் போக்குவரத்தையும் உருவாக்கி இருக்கும் நாடு.
உலகின் மிகப்பெரிய நீர்மின்சக்தி உற்பத்தி நிலையத்தை உருவாக்கி இருக்கும் நாடு.
உலகில் அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடு.
பாதுகாப்புத் துறையிலும், ராணுவ சாதனங்களின் உற்பத்தியிலும் தன்நிறைவு பெற்ற நாடு.
1990ல் இருந்து 2010 வரையுள்ள காலத்தில், தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு சராசரி GDPயை -11 % க்கு தக்க வைத்துக்கொண்ட நாடு.
1970 வரை சீனாவைக் கண்ட வெளிநாட்டவர்கள் மிகச்சில பேரே.
ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி இருந்தபோது “இரும்புத்திரை” போட்ட நாடு என்று சொல்வார்கள்.
சீனாவோ – இரும்புக்கோட்டையாகவே இருந்தது. அதில் வெளியார் யாரும், டூரிஸ்ட் என்கிற பெயரில் கூட உள்ளே போக முடியாத நிலை தான் இருந்தது.
ஆனால் – 1970களின் இறுதிப் பகுதியில், டெங் ஜியோபிங் (Deng Xiaoping ) அதிகாரப் பொறுப்பேற்ற பிறகு, சீனா உலக நாடுகளின்
பார்வைக்கு திறந்து விடப்பட்டது. உலகம் முழுவதிலுமிருந்து டூரிஸ்டுகள் பெரும் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டார்கள்.
இன்று – உலகில் அதிக அளவில் டூரிஸ்டுகள் விரும்பும் நாடுகளில் 3வது நாடாக சீனா திகழ்கிறது.
வாதத்திற்காக –கம்யூனிஸ்ட் கட்சி ஆள்கின்ற காரணத்தால் தான்
சீனா இந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்று
எடுத்துக் கொண்டால்,
உலகில் இன்னும் எவ்வளவோ கம்யூனிஸ்ட் நாடுகள் உள்ளனவே –
அவை எல்லாம் இந்த அளவிற்கு முன்னேற்றம்
காண முடியாதது ஏன் ? என்கிற கேள்வி எழுகிறது !
மேலும் – தனியார் சொத்துரிமையையும், தாராளமயமாக்கலையும்,
சந்தைப் பொருளாதாரக் கொள்கையையும் ஏற்றுக்கொண்ட பிறகு சீனாவில் இருப்பது கம்யூனிசம் என்று எப்படிச் சொல்ல முடியும் ?
சீனாவை ஆள்வது கம்யூனிஸ்ட் கட்சி என்று சொன்னாலும் – கொள்கை, கோட்பாடுகளின் அடிப்படையில் பார்த்தால் இன்றைய நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியை கம்யூனிஸ்ட் கட்சி என்று கார்ல் மார்க்ஸை ஏற்றுக் கொண்டவர்களால் ஒப்புக் கொள்ள முடியுமா ?
அங்கே இருப்பது ஒரு கட்சி ஆட்சி.
அந்த கட்சிக்கான கொள்கைகளை, லட்சியங்களை –
அவர்களுக்குத் தேவைப்பட்ட விதத்தில்,
அவர்களே ஏற்படுத்திக்
கொண்டுள்ளார்கள். அவ்வளவு தான்.
எனவே சீன வளர்ச்சிக்கு காரணம் கம்யூனிச சிவப்பு அல்ல
என்று கொள்ளலாமா ?
பின்னர் – இதெல்லாம் எப்படி சாத்தியமாகியது ?
————-
பின்குறிப்பு – சீன வளர்ச்சியின் காரணங்கள் குறித்த விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன. நண்பர்கள் பின்னூட்டங்கள் மூலம் தங்கள் கருத்துகளை சொல்லலாம்.
————–
( தொடர்வோம்- பகுதி-5-ல் …)



//அங்கே இருப்பது ஒரு கட்சி ஆட்சி.
அந்த கட்சிக்கான கொள்கைகளை, லட்சியங்களை –
அவர்களுக்குத் தேவைப்பட்ட விதத்தில்,
அவர்களே ஏற்படுத்திக்
கொண்டுள்ளார்கள். அவ்வளவு தான்.//
சீனா ஒரே கலாசாரம், ஒரே மொழி கொண்ட நாடு. அதனால் ஒரு கட்சி ஆட்சி முறை அங்கு வெற்றியடைந்ததில் ஆச்சரியமொன்றுமில்லை.
ஆனால் இங்கு பல மொழி, கலாசாரம் பல மதங்களையும் தன்னகத்தே கொண்ட வேற்றுமையில் ஒற்றுமையாக அமைதியாக வாழும் மக்களிடையே புலியை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பூனை கதையாக அதை கொண்டுவர முயற்சி செய்தால் அவர்கள் இந்நாட்டின் ஒற்றுமையை அமைதியை கெடுத்த மாபாவிகளாவர்.
மக்கள் அவர்களை மன்னித்தாலும் எதிர் காலம் மன்னிக்காது.
https://www.quora.com/How-diverse-is-China-in-terms-of-culture-and-language
நன்றி கார்த்திக்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்