திரு.சாரு நிவேதிதாவின் – வித்தியாசமானதொரு அரசியல் கடிதம்…….!!!


திரு.கமல்ஹாசன், அரசியலுக்கு வருகிறேன், வந்து விட்டேன்,
ஏற்கெனவேயே உள்ளே தானே இருக்கிறேன், மக்கள்
விரும்பினால் வருவேன்… என்றெல்லாம் குழப்பிக்கொண்டு
இருப்பதை, பொறுக்க முடியாத எரிச்சலுடன்
திரு.சாரு நிவேதிதா வரிந்து கட்டிக்கொண்டு
கேள்விக்கணைகளை தொகுத்திருக்கிறார்…. !!!

கொஞ்சம் நீளமான கடிதம் தான்… ஆனாலும் …படியுங்கள்..!!!

அவர் எழுதி இருப்பது திரு.கமல்ஹாசனுக்கு என்றாலும்,
உள்ளடக்கம் – மத்திய அரசின் மீதான அதி தீவிரமான
விமரிசனமும் கூட….

மாநில அரசை சகட்டுமேனிக்கு விமரிசனம் செய்யும்
திரு.கமல்ஹாசனுக்கு, மத்திய அரசை விமரிசனம் செய்ய
தைரியம் இல்லாமல் போனது ஏன்..? – என்று கேட்கிறார்….

நியாயமான இந்த கேள்வியைத்தான் – சில வாரங்களுக்கு
முன்னர் நாமும் இந்த தளத்தில் கேட்டோம்….
நமக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம்
திரு.கமல்ஹாசனுக்கு இல்லை… ஆனால், சாரு – அப்படி
ஒதுக்கக்கூடிய ஒரு பர்சனாலிடி இல்லையே….!!!

நமக்கு கூட இந்த கடிதத்தின் உள்ளடக்கம் குறித்து
சொல்ல நிறைய செய்திகள் இருக்கின்றன… நாம் சாருவின்
கடிதத்தில் உள்ள அனைத்தையும், அப்படியே ஏற்றுக்
கொள்ளவில்லை… ஆனால், அவற்றை சொல்வதற்கான இடம்
இதுவல்ல…பின்னர் தனியே எழுதலாம்…

இப்போதைக்கு, திரு.சாரு நிவேதிதா அவர்கள்
திரு.கமல்ஹாசனுக்கு எழுதி, திரு.எழில் அவர்களால்
தொகுக்கப்பட்டு, தினமணி செய்தி தளத்தில் 20/09/2017 அன்று
வெளியான கடிதம் கீழே…

( நன்றி – திரு.சாரு நிவேதிதா, திரு.எழில், மற்றும் தினமணி
செய்தி வலைத்தளம்….)

——————————————————————-

கடந்த சில வாரங்களாக தனது அரசியல் பிரவேசம் குறித்து
தொடர்ந்து பேசிவருகிறார் கமல். இந்நிலையில் எழுத்தாளர்
சாரு நிவேதிதா, கமல் அரசியல் – சில கேள்விகள் என்கிற
தலைப்பில் தனது இணையத்தளத்தில் சில பதிவுகளை
எழுதியுள்ளார். அவற்றின் தொகுப்பு:

கமல் அரசியல் – சில கேள்விகள்

இப்போதுதான் கொஞ்ச நேரம் முன்பு நீங்கள் ஏன் கமலுக்கு
இத்தனை எதிர்ப்பாக இருக்கிறீர்கள் என்று கேட்டார் நண்பர்.
தயவுசெய்து நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பாருங்கள்.

கமல் பிக் பாஸ் வீட்டுக்குள் போனதும் அங்கிருந்த ஒரே ஒரு
பெண்ணைத் தவிர மற்ற அனைவரும் அவர் காலில்
விழுகிறார்கள். அதிலும் சிநேகன் விட்டால் அப்படியே
தரையிலேயே படுத்துக் கிடப்பார் போல் இருக்கிறது.

அந்தக் காலத்தில் ராஜாக்கள் ஆட்சியில் அடிமைகள் எப்படி
உடலை வளைப்பார்களோ, மந்திரிகள் மந்திரி சபையில் எப்படி
உடம்பை வளைப்பார்களோ அப்படி வளைக்கிறார் சிநேகம்.

பார்க்கவே அசிங்கமாகவும் ஆபாசமாகவும் இருக்கிறது. இது
ஏன் கமலுக்கு அசிங்கமாக இல்லை ? ஜெயலலிதாவின்
முன்னால் அம்பது மந்திரிகளும் கூழைக் கும்பிடு
போட்டார்களே, அதேபோல் அத்தனை பேரும் அவர் காலில்
விழுந்து கூழைக் கும்பிடு போடுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை நாலு கோடி பேர் – இப்போது ஓவியா
போன பிறகு ஒன்றரை கோடி பேர் –
பார்க்கிறார்கள் என்பது கமலுக்குத் தெரியாதா? இத்தனை
படித்தவருக்கு இது ஒரு அசிங்கம் ஆபாசம் என்று
தெரியவில்லையா? ஜெயலலிதாவுக்குக் கூழைக் கும்பிடு
போட்டால் அசிங்கம். தனக்குப் போட்டால் ஜாலியா?

என்னய்யா நியாயம் இது? இத்தனைக்கும் இவர் பகுத்தறிவுப்
பகலவர் வேறு? பகுத்தறிவுக்காரர்கள்தானே தன்மானம்
சுயமரியாதை எல்லாம் பேசினவர்கள்? இத்தனை பேர்
கமலுக்கு முன்னால் சுயமரியாதையே இல்லாமல் காலில்
விழுகிறார்கள். இதை கமல் எப்படி அனுமதிக்கிறார்? காலில்
விழுந்தால் அந்த நிமிடமே தகுதி நீக்கம் செய்யப்படும் என்று
பிக்பாஸை விட்டு அறிவிப்புக் கொடுத்தால் யாராவது இப்படிக்
காலில் விழுவார்களா?

பொதுவாகவே சினிமாக்காரர்கள் தங்களைக் கடவுளாக
நினைத்திருக்கிறார்கள். அவர்களை அப்படி நினைக்க வைப்பது
பொதுஜனம். நடிகர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அப்படித்
தங்களைக் கடவுள்களாக, சூப்பர் மேன்களாக நினைக்கும்
சினிமாக்காரர்களுக்கு அந்தக் காரணத்தினாலேயே அரசியலுக்கு
வரும் தகுதி இல்லாமல் போகிறது. அதில் முதலில் வருபவர்
கமல்.

என்றைக்காவது, கமல் அவர் வாழ்நாளில் மற்றவர் பேசுவதை
ஐந்தே ஐந்து நிமிடம் காது கொடுத்துக் கேட்டிருக்கிறாரா?

இதை நான் கமலின் மனசாட்சியிடம் கேட்கிறேன். அஞ்சு
வயதில் அம்மா பேசுவதைக் கேட்டேன் என்று சொல்லக்
கூடாது. கடந்த இருபது ஆண்டுகளில் அவர் என்றைக்காவது
ஒரு நாளாவது ஒரு தருணத்திலாவது அஞ்சே அஞ்சு நிமிடம்
மற்றவர் பேசுவதைக் கேட்டிருக்கிறாரா? மனசாட்சியைத்
தொட்டு அவர் இதற்கு மட்டும் பதில் சொல்லட்டும். நான்
கேள்விப்பட்டவரை அவர் ஆறு மணி நேரம் கூடப் பேசுவார்.
மற்றவர் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட குணநலன் கொண்ட ஒருவர் அரசியலுக்கு எப்படி
வர முடியும்?

மேலும், மோடி பற்றிய அவரது அரசியல் பார்வை என்ன? பண
நோட்டுக்களைக் காணாமல் ஆக்கி கோடானுகோடி மக்களை
நடுத்தெருவில் நிற்கவைத்தாரே மோடி, அது பற்றி கமல்
கருத்து என்ன?

மாட்டை இழுத்துக் கொண்டு போனவரெல்லாம் கொலை
செய்யப்பட்டார்களே, அது பற்றி கமல் கருத்து என்ன?

மோடியின் மாடு பாலிடிக்ஸ் பற்றி கமல் என்ன கருதுகிறார்?
சினிமாவில் ஆரம்பத்தில் தேசிய கீதம் போடுவது பற்றி கமல்
கருத்து என்ன?

அடுத்த ஆட்சி, திமுக. அந்த வாக்குகளைப் பிரித்து, திரும்பவும்
அதிமுகவின் பொம்மை ஆட்சி வருவதற்காக, மற்றும்
பாஜகவை தமிழகத்தில் பலப்படுத்துவதற்காக மோடி போட்ட
திட்டமே கமலின் அரசியல் எண்ட்ரி என்று பலர்
நினைக்கிறார்கள். நானும் அப்படியே நினைக்கிறேன். இது பற்றி
கமல் கருத்து என்ன? நான் சொல்வது தவறாக இருந்தால்
உங்கள் வாதத்தைச் சொல்லுங்கள். நான் ஏற்க முயல்கிறேன்.

கமல் ரஜினியை அழைக்கும் காரணம், ரஜினி மோடியின் காவி
ஏஜெண்ட். கமல் மோடியின் கருப்புச் சட்டை ஏஜெண்ட்.

இதுவும் தவறு என்றால் என் கருத்தை மாற்றுங்கள். உங்களை
ஒப்புக் கொள்ள முயல்கிறேன்.

*

அன்புள்ள நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு,
வணக்கம்.

மேலே கண்ட குறிப்பு கொஞ்சம் கடுமையாகத்தான் இருக்கும்.
ஆனால் சில விஷயங்களை இப்போதாவது வெளிப்படையாகப்
பேசியாக வேண்டியுள்ளது. பொதுவாக என் கட்டுரைகளையும்
முகநூல் குறிப்புகளையும் பற்றி உடனுக்குடன் கருத்து
தெரிவிக்கும் நண்பர் மேற்கண்ட குறிப்பு பற்றி வாயே
திறக்கவில்லை. என்ன விஷயம் என்று கேட்ட போது, இதில்
ஒன்றும் பெரிதாக இல்லை என்றார்.

ஆனால் நான் சொன்னேன், பெரிதான விஷயம் என்று.
புகழின் உச்சாணிக் கொம்பில் அமர்ந்திருக்கும் கமல் போன்ற
ஒருவரை விமர்சிப்பதன் மூலம் கமலையும், சினிமாவில்
கமலைச் சார்ந்திருக்கும் அத்தனை பேரையும் நான் பகைத்துக்
கொள்பவன் ஆகிறேன். இது ரிஸ்க் இல்லையா..?

இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் அவலமான அரசியல் நிலை
பற்றி எழுதுவதற்கு இந்த ரிஸ்கைப் பற்றியெல்லாம் யோசிக்க
முடியுமா என்று நண்பரிடம் கேட்டேன். இனிமேல் பொது
இடங்களில் தங்களிடம் கை குலுக்கித் தங்களுக்கு
தர்மசங்கடத்தை உண்டு பண்ண மாட்டேன். கவலை
வேண்டாம். தனிப்பட்ட விருப்பு வெறுப்பை விட சமூக நலன்
இப்போது எனக்கு மேலானதாகப் படுகிறது.

தமிழ்நாட்டு அரசியலை வாங்கு வாங்கு என்று வாங்கும்
நீங்கள் இந்திய அரசியல் நிலவரம் பற்றி ஏன் வாயே திறக்க
மாட்டேன் என்கிறீர்கள்? உலகம் பூராவிலும் உள்ள அத்தனை
புத்திஜீவிகளும் கவலைப்படுகிறார்கள். எழுதுகிறார்கள்.

நியூயார்க் டைம்ஸிலிருந்து நம் கடலூரில் வரும் லோக்கல்
தமிழ் தினசரி வரை இந்தியா இப்போது போய்க்
கொண்டிருக்கும் சர்வாதிகார அரசியல் பற்றித் தலையங்கம்
எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

————————————————————–

page-2
—–

சென்ற பாராளுமன்றத் தேர்தலின் போது மோடியை ஆதரித்த
இரண்டே எழுத்தாளர்களில் ஒருவன் நான். (மற்றவர் ஜோடி
க்ரூஸ்). இதற்காகப் பல்வேறு அவதூறுகளை வாங்கிக்
கொண்டேன். அதில் ரொம்பக் காமெடியான அவதூறு
என்னவென்றால், பிஜேபியிடம் பெட்டி பெற்றேன் என்றது.
மோடியை ஆதரித்ததற்குக் காரணம், காங்கிரஸின் ஊழலைக்
கண்டு காமன்மேன் போலவே நானும் பயந்தேன். மதவாதக்
கட்சியாக இருந்தாலும் ஊழல் காங்கிரஸ் (போனால்…?)
போதும் என்று நினைத்தேன். மேலும், வாஜ்பாய் பற்றிக்
கருணாநிதி சொன்னாரே, நல்ல மனிதர் கெட்ட கட்சியில்
இருக்கிறார் என்று; அதேபோல் மோடி நல்ல மனிதர் என்று
நம்பினேன்.

திருமணம் கூட செய்து கொள்ளாமல் நாட்டுக்காக
உழைப்பவர், தனிப்பட்ட முறையில் சொத்து சேர்க்காதவர்
என்று அவர் மீது நல்லெண்ணம் இருந்தது. குஜராத் கலவரம்?

அப்படிப் பார்த்தால் தில்லியில் இந்திரா காந்தி கொல்லப்பட்ட
போது திர்லோக்புரி என்ற இடத்தில் 2000 சீக்கியர்கள் உயிரோடு
எரித்துக் கொல்லப்பட்டதை என் கண்ணால் பார்த்தவன் நான்.
எனவே குஜராத் மதக் கலவரத்துக்கு மோடியே காரணம் என்று
நான் நம்பவில்லை.

தைரியசாலியும் துணிச்சல்காரருமான மோடி வந்தால்
இந்தியாவில் நல்லது நடக்கும் என்று சராசரி மனிதனைப்
போலவே நானும் நம்பினேன். குஜராத்தில் அப்படி சில
சாதனைகளைச் செய்திருந்தார் மோடி. அதையும் நான் நேரில்
பார்த்திருந்தேன்.

ஆனால் எதிர்பார்த்தது போல் நல்லது நடக்காவிட்டாலும்
பரவாயில்லை; இந்திய சமூகம் ஏதோ ஒரு விதியின் கதியில்
ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் மோடி சக்கரத்தின் நடுவே
கம்பை விட்டு ஆட்டி வண்டியைக் கவிழ்த்து விட்டார். எப்படி
என்று சொல்கிறேன்.

இந்தியாவின் பலமும் விசேஷமும் அதன் பன்மைத்துவம்.
உதாரணமாக, ஜெர்மனிக்கு ஒரு உத்தரப் பிரதேசக்காரரும் ஒரு
தமிழரும் செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இருவரும்
ஆங்கிலத்தில் உரையாடுவதைப் பார்த்து ஜெர்மன்காரர் உங்கள்
இருவருக்கும் தேசப் பற்றே இல்லையே, நீங்கள் இருவரும்
இந்தியராய் இருந்து கொண்டு, உங்கள் மொழியில் பேசாமல்
அந்நிய மொழியில் பேசுகிறீர்களே என்று கேட்டு இருவரையும்
மிகக் கடுமையாக விமர்சிப்பார்.

அவருக்கு நீங்கள் எவ்வளவுதான் விளக்கினாலும் புரியவே
புரியாது. அவர்களால் ஒரே தேசத்தில் பல்வேறு மொழிகளைப்
பேசும் மக்கள், பல்வேறு கடவுள்களைத் தொழும் மக்கள்,
பல்வேறு இனத்தைச் சேர்ந்த மக்கள் வாழ முடியும்
என்பதையே புரிந்து கொள்ள முடியாது.

ஜெர்மன் என்றால் அவர் ஜெர்மானிய மொழிதான் பேச
வேண்டும்; கிறிஸ்தவராகத்தான் இருக்க வேண்டும். இப்படி
ஒரு தேசம் என்றால் அவர்களைப் பொறுத்தவரை ஒரே
மொழி, ஒரே மதம்தான் இருக்க முடியும். ஆனால்
இந்தியாவில் செம்மொழிகளே அரை டஜன் இருக்கின்றன.

உதிரி மொழிகள் நூற்றுக் கணக்கில்.

கடவுள், மதம் என்று எடுத்துக் கொண்டால், ஒரு கடவுள்
கிடையாது. நூற்றுக் கணக்கான கடவுள்கள். புனித நூலும்
கிடையாது. தீர்க்கதரிசியும் கிடையாது.

பகவத் கீதையெல்லாம் இந்து மதத்துக்கான அங்கீகரிக்கப்பட்ட
புனித நூல் இல்லை. வியாசன் என்ற கவிஞன் எழுதிய
மகாபாரதம் என்ற இலக்கியப் படைப்பில் வரும் ஒரு சிறிய
பகுதியே கீதை.

ஆனால் இஸ்லாம், கிறித்தவம் போன்றவற்றில் அப்படிக்
கிடையாது. கடவுள் ஒன்று; தீர்க்கதரிசி ஒன்று; புனித நூல்
ஒன்று. ஆனால் இந்து மதமே பன்மைத்துவத்தைப் போற்றும்
மதமாக இருக்கிறது. நாத்திகம் பேசினாலும் அதையும் தன்
ஒரு உறுப்பாகக் கொள்கிறது இந்து மதம். நாகார்ச்சுனா ஒரு
உதாரணம். தேவிப்ரசாத் சட்டோபாத்யாய எழுதிய what is living
and what is dead in indian philosophy என்ற நூலை நீங்கள் 30
ஆண்டுகளுக்கு முன்பே படித்து விட்டீர்கள். உங்களிடம்
இதையெல்லாம் சொல்லத் தேவையில்லை.

இந்தியாவின் பன்மைத்துவத்துக்கு மற்றொரு எடுத்துக்காட்டு,
இங்கே உள்ள ஆயிரக் கணக்கான தர்காக்களும் அங்கே
வழிபாடு செலுத்தும் கோடிக் கணக்கான இந்துக்களும் என்று
சொல்லலாம்.

இப்படித் தன்னுடைய மதத்திலும், வழிபாட்டிலும்,
கலாச்சாரத்திலும், இன அடையாளங்களிலும் விதவிதமான
குணாம்சங்களையும் வித்தியாசங்களையும் கொண்ட இந்திய
சமூகத்தை –

இன்று மோடி என்ற ஒரே நபர் ஒரே மதம் – ஒரே கடவுள் –
ஒரே மொழி – என்ற ரீதியில் அகண்ட பாரதமாகக் கொண்டு
செல்கிறாரே,

இது பற்றி உங்கள் கருத்து என்ன?

இந்தியாவின் பன்மைத்துவத்தைக் குழி தோண்டிப் புதைக்கும்
பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் மோடி பற்றி இன்று
சர்வதேச அளவில் புத்திஜீவிகள் கவலைப்படுகிறார்கள்.
அமார்த்யா சென் இது பற்றி எழுதிய கட்டுரைகளை நீங்கள்
படித்திருக்கலாம்.

மோடியின் மாட்டு அரசியல் இந்தியாவின் பன்மைத்துவத்தை
அழிக்கும் செயல்களில் முக்கியமான ஒன்று ஆகும். ஒரு
தேசத்தின் தலைவரே இப்படிச் செயல்படும் போது சராசரி
மனிதன் என்ன செய்வான்? மாட்டை மேய்ச்சலுக்கு
அழைத்துச் செல்பவனை அடித்துக் கொல்கிறான்.

இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்களுக்கு மோடியின்
செயல்பாடுகள் அச்சத்தையும் பீதியையும் உண்டு
பண்ணுகின்றன. ஏற்கனவே குஜராத் மதக் கலவரத்தின்
காரணமாக, மோடியின் மீது முஸ்லீம்களுக்கு அச்சம்
இருந்தது. இருந்தாலும் ஊழல் வேண்டாம் என்றே மோடிக்கு
வாக்களித்தார்கள் முஸ்லீம்கள்.

அப்படி ஆட்சிக்கு வந்த மோடி என்ன செய்திருக்க
வேண்டும்? நான் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும்
பொதுவானவன் என்று தன் செயல்பாடுகளின் மூலம்
நிரூபித்திருக்க வேண்டாமா?

ஆனால் மோடி என்ன செய்தார்? ஏழை முஸ்லீம்களின்,
தலித்துகளின் பிரதான உணவான மாட்டுக்கறியை
மறைமுகமாகத் தடை செய்தார்.
மாட்டுக் கறி சாப்பிட்டால் சிறை இல்லை. மாட்டை விற்றால்
சிறை. மாட்டை விலைக்கு வாங்காமல் மாட்டுக் கறியை
எப்படி ஐயா விற்கவோ வாங்கவோ முடியும்? மாட்டை விற்கத்
தடை. மாட்டுக் கறிக்குத் தடை இல்லை. எப்பேர்ப்பட்ட
ஜிகிர்தண்டா வேலை பாருங்கள்!

மாடு மட்டும் இல்லை. நான் இந்துக்களின் ஆள்;
உங்கள் ஆள் இல்லை என்று மோடி தன்னுடைய ஒவ்வொரு
செயலின் மூலம் வெளிப்படையாகக் காண்பித்துக் கொண்டே
இருக்கிறார்.

கிரிமினல் வழக்குகளை எதிர் கொண்ட, மதரீதியான
தீவிரவாதக் கருத்துக்களைக் கொண்ட ஒரு இந்துத் துறவியை
உத்தரப் பிரதேச முதல் மந்திரி ஆக்கியிருக்கிறார் மோடி. ஜக்கி
வாசுதேவ் என்ற இன்னொரு இந்துத்துவ ஆசாமிக்கு பத்ம
பூஷன் விருது வழங்கியிருக்கிறார் மோடி. ஏன், தில்லி ஜும்மா
மசூதி இமாமுக்குக் கொடுக்க வேண்டியதுதானே பத்ம பூஷன்?

கொடுப்பாரா? இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாட்டில் எந்த
மதத் தலைவருக்குமே இது போன்ற விருதுகள் கொடுக்கப்படக்
கூடாது என்ற கருத்தைக் கொண்டவன் நான்.

——————————————————————-

page-3
—–

தமிழகத்தில் நடக்கும் ஊழல் ஆட்சி பற்றி இத்தனை
கவலைப்படுகிறீர்களே, இந்தியா ஃபாஸிஸத்தை நோக்கிப்
படுவேகமாகப் போய்க் கொண்டிருக்கிறதே, அதைப் பற்றி ஏன்
வாயே திறக்க மாட்டேன் என்கிறீர்கள்? இந்திரா காந்தியின்
சர்வாதிகாரத்தை விட மோடியின் ஃபாஸிஸம் ஆபத்தானது.

ஏனென்றால், இந்திரா வெறும் அதிகாரத்தை மட்டுமே
கைப்பற்ற நினைத்தார். மக்கள் அதை ஆதரிக்கவில்லை.

ஆனால் மோடிக்கு – ஹிட்லரைப் போலவே – கோட்பாட்டு
பலம், சித்தாந்த பலம் இருக்கிறது. அதனால்தான்
உலகமெங்கும் உள்ள புத்திஜீவிகள் அஞ்சுகிறார்கள்.

உம்பர்த்தோ எக்கோவின் நாவல்களை நீங்கள் படித்திருப்பீர்கள்.
ஃபாஸிஸம் பற்றிய அவருடைய கட்டுரையை
வாசித்திருக்கிறீர்களா? அதில் அவர் ஃபாஸிஸத்தின் முதல்
அடையாளமாக பாரம்பரியத்தின் மீதான வெறியை உண்டு
பண்ணுவது என்கிறார். cult of tradition.

50 ஆண்டுகளுக்கு முன்பு நம் அம்மாமார்களும்
பாட்டிமார்களும் வழிபட்ட செவ்வாய்ப் பிள்ளையார்
இன்று பிரம்மாண்டமான மதச் சடங்காக மாறியதைப்
பாருங்கள். இந்து – இந்தியா என்ற பாரம்பரியத்தை
முன்வைத்து அதன் மீது கட்டமைக்கப்படும் பாஸிஸ
சித்தாந்தத் தூண்களைப் பாருங்கள். மோடியின் இந்தித்
திணிப்பை இந்தப் பின்னணியில்தான் புரிந்து கொள்ள
வேண்டும்.

திமுகவும் ஊழல் கட்சிதான். ஆனால் திமுகவினால் மட்டுமே
தமிழ்நாடு இன்னமும் அகண்ட பாரத அண்டாவுக்குள்
அடையாளம் தெரியாமல் அழிந்து போகாமல் இருக்கிறது.

இந்தியாவிலேயே இன்னும் வங்காளமும் தமிழகமும் தான்
தம்முடைய பிரதேச அடையாளங்களைத் தக்க வைத்துக்
கொண்டிருக்கின்றன.

ஒடிஸாவில் ஒடிய மொழி இல்லை; இந்திதான் பேச்சு மொழி.
மகாராஷ்ட்ராவில் மராட்டி இல்லை; இந்திதான் பேச்சு மொழி.

தமிழகமும் அப்படித்தான் ஆகியிருக்கும். கருணாநிதி மட்டும்
இருந்திருக்காவிட்டால் நான் உங்களுக்கு இந்தியில்தான்
கடிதம் எழுதியிருப்பேன். மறைமுகமாகவாவது தமிழின்
தனித்துவத்தை நிலைநாட்டியவர் அவர். இல்லாவிட்டால் ஒரு
மாநிலத்தின் பெயரைத் தமிழ்நாடு என்று வைத்திருப்பாரா
அவர்? நாடு என்றால் தேசம் என்று பொருள் இல்லையா?

ஃபாஸிஸத்தின் இரண்டாவது அடையாளமாக எக்கோ
குறிப்பிடுவது, rejection of modernism. நவீனத்துவத்தை முற்றாக
மறுதலிப்பது. மதுக் கூடங்களுக்குள் புகுந்து அங்கே இருக்கும்
பெண்களை அடித்து விரட்டுவது, பொது இடங்களில் ஆண்
பெண்களை ஜோடியாகப் பார்த்தால் அடித்து விரட்டுவது
போன்றவையெல்லாம் இந்தப் பிரிவில் வரும்.

ஃபாஸிஸத்தின் மூன்றாவது அடையாளம், action for action’s
sake. அதாவது, எதையுமே விவாதிக்கக் கூடாது. சிந்திக்கக்
கூடாது. குருட்டாம்போக்கில் அடித்துக் கொண்டே இருக்க
வேண்டும். When I hear talk of culture I reach for my gun என்று
சொன்னார் ஹெர்மன் கோரிங் (Hermann Goring) என்ற நாஜி
ராணுவ அதிகாரி. எனக்கு இந்துத்துவவாதி ஒவ்வொருவரின்
முகமும் கோரிங்கின் முகத்தைத்தான் ஞாபகப்படுத்துகிறது.

இங்கேயும் கலாச்சாரம் பற்றிப் பேசுபவர்களின் மீது
தோட்டாக்களும் கத்திகளும் பாய்கின்றன. கர்னாடகாவில்
இதுவரை அப்படி மூன்று எழுத்தாளர்கள்/பத்திரிகையாளர்கள்
கொல்லப்பட்டிருக்கிறார்கள். வெறுமனே
கொல்லப்படவில்லை. கொல்லப்படுவீர்கள் என்று
அறிவிக்கப்பட்ட பிறகு கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

டியர் கமல், இத்தனை லோக்கல் அரசியல் பேசுகிறீர்களே,
மோடி பற்றி ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்கள். என்ன
ஆகிறது பார்ப்போம்? நிச்சயமாக உங்களை நாடு கடத்தி
விடுவார்கள், எனக்கு அதில் சந்தேகமே இல்லை.

ஃபாஸிஸம் வளர்வதற்கான இன்னொரு முக்கிய காரணம்,
individual or social frustration. காங்கிரஸ் கட்சியின் இத்தனை
ஆண்டு ஊழல் ஆட்சியின் காரணமாக, இந்தியா சராசரி
மனிதர்கள் வாழ்வதற்குத் தகுதியில்லாத இடமாகப் போய்
விட்டது. இந்த frustrationஇலிருந்து ஃபாஸிஸம் தனது
உணவை எடுத்துக் கொண்டு வளர்கிறது.

இதையெல்லாம் பற்றி ஒரு வார்த்தை பேசாமல் நீங்கள்
லோக்கல் பாலிடிக்ஸ் பேசினால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள
முடியும்? மேலும், நீங்கள் இத்தனைக் காலம் பேசிய
திராவிடம், பகுத்தறிவு இதற்கெல்லாம் மோடியின் அகண்ட
பாரதமும் இந்துத்துவமும் எதிராக இருக்கிறதே, இதை எப்படிப்
பார்க்கிறீர்கள்?

ஆனால் விஷயம் என்னவென்றால், நான் தொடர்ந்து பல
காலம் என் நண்பர்களிடையே சொல்வதுண்டு, கமலின்
திராவிடமும் பகுத்தறிவும் மிக மேலோட்டமானது என்று.

ஏனென்றால், அடிப்படையில் நீங்களும் ரஜினியும் ஒன்றுதான்.
இந்துத்துவம்தான். அதனால்தான் ஹே ராம் படத்திலும்
விஸ்வரூபத்திலும் அத்தனை முஸ்லீம் எதிர்ப்பு இருந்தது.
இந்த இரண்டு படங்களைப் பற்றியும் விரிவாக மதிப்புரைகள்
எழுதியிருக்கிறேன். அதை இங்கே திரும்ப எழுத இடமில்லை;
நேரமும் இல்லை. விஸ்வரூபத்தைப் பார்த்தால் ஏதோ
முஸ்லீம்கள் எல்லோரும் ஏகே 47 துப்பாக்கிகளோடுதான்
அலைகிறார்கள் என்ற எண்ணமே மேலோங்குகிறது.
அப்படித்தான் அந்தப் படம் முஸ்லீம்களைச் சித்தரிக்கிறது.

போதும், எழுதிக் கொண்டே போகலாம். இத்தனை
விஷயங்களுக்கும் உங்களிடமிருந்து பதில் வராது என்று
தெரியும்.

இதையெல்லாம் விடுங்கள். சினிமாத் துறையில் இருப்பவர்கள்
யாருமே அரசியலுக்கு வரத் தகுதி இழந்தவர்கள் ஆகிறார்கள்.
ஏனென்றால், தமிழர்கள் உங்களையெல்லாம் கடவுளாகப்
பார்க்கிறார்கள். தொழுகிறார்கள். நீங்கள் பதவிக்கு வந்தால்
மீண்டும் ஊர் பூராவும் ஆண்டவனே கட் அவுட் தான்.

தினந்தோறும் உங்கள் காலில் விழும் அத்தனை பேரையும்
தூக்கி விடுவதிலேயே ஐந்து ஆண்டுகள் முடிந்து விடும்.
உடனே அடுத்த தேர்தலில் உங்களைத் தூக்கி விடுவார்கள்
மக்கள்.

ஏனென்றால், ஒவ்வொரு தேர்தலில் ஆட்சியில் இருக்கும்
கட்சிக்கு எதிராகப் போடுவதே தமிழர்களின் தலைவிதியாக
இருக்கிறது.

மேலும், ஒரே ஒரு கேள்வி. நீங்கள் பிக்பாஸில் அடிக்கடி
உங்களைக் கவிஞன் என்று சொல்லிக் கொள்கிறீர்கள்.
அப்படியா? தேவதேவன், தேவதச்சன், ஆத்மாநாம்,
ஞானக்கூத்தன், தர்மு சிவராமு, மனுஷ்ய புத்திரன் போன்ற
கவிஞர் வரிசையில் வரக் கூடியவரா நீங்கள்?

உங்கள் பெயரில் ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் வரும்
கவிதைகளை நான் அவ்வப்போது படித்திருக்கிறேன். நியூஸ்
சைரன் பத்திரிகையில் நடுப்பக்கத்தில் உங்கள்
புகைப்படத்துடன் ஒரு கவிதை வந்திருந்தது. கிராமத்தில்
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் கவிதை என்ற பெயரில்
ஏதோ ஒன்றைக் கிறுக்குவான் இல்லையா, அப்படி இருந்தது
உங்கள் கவிதை.

அப்படிப்பட்ட நீங்கள் உங்களைக் கவிஞன் என்று சொல்லிக்
கொள்கிறீர்கள். உங்கள் நண்பர் ஜெயமோகனை சொல்லச்
சொல்லுங்கள், கமல் ஒரு கவிஞர் என்று ? இப்படித் தன்னைப்
பற்றி கவிஞன் என்றும் மேதை என்றும் நினைத்துக்
கொண்டிருக்கும் ஒரு மனிதரிடம் ஆட்சி அதிகாரமும்
சேர்ந்தால் என்ன ஆகும் கமல்? பத்து ஜெயலலிதா ஆட்சி
செய்வது போல் இருக்கும். உண்மையிலேயே பயமாக
இருக்கிறது.

——————————————————————-
page-4
——

பின்குறிப்பு: ஆசை என்று ஒரு கவிஞர் இருக்கிறார். நிஜமான
கவிஞர். அவர் காந்தி பற்றி எழுதிய கட்டுரையில் பின்வரும்
சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.

காந்தியின் நெருங்கிய நண்பர் ஒருவரின் மகன் ஸ்ரீமன்
நாராயண். பணக்காரக் குடும்பத்தில் பிறந்த பிராமணர்.

லண்டனில் பொருளியலில் பட்டம் பெற்று இந்தியாவுக்கு
சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன்
திரும்புகிறார்.

அவருக்குப் பெரிய பெரிய கனவுகள் இருந்தன. இந்தியாவுக்கு
ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையின் விளைவால்
உருவான கனவுகள் அவை. முதலில் காந்தியிடம் வந்து
ஆசிபெற்றுக் கொஞ்ச காலம் அவருடன் இருக்கும் திட்டத்தில்
வந்தார். காந்தி அவருக்கு ஆசிர்வாதம் செய்து தனது
ஆசிரமத்தில் சேர்த்துக்கொண்டார்.

அந்த ஆசிரமத்தில் வந்துசேரும் யாருக்கும் முதலில்
கொடுக்கப்படும் பணி என்ன தெரியுமா? கழிப்பறைகளைச்
சுத்தம் செய்வது. ஸ்ரீமன் நாராயணன் தனது வீட்டில் கூட
அதைச் செய்ததில்லை.

ஏராளமான பணியாளர்கள் இருந்தார்கள் அதையெல்லாம்
செய்வதற்கு. எனினும் காந்தி சொல்லிவிட்டாரே என்று அதைச்
செய்ய ஆரம்பித்தார். ஒரு வாரம் செய்துவிட்டு காந்தியிடம்
வந்தார். “பாபுஜி நீங்கள் சொன்னபடி ஒரு வார காலம்
கழிப்பறைகளைச் சுத்தம் செய்துவிட்டேன். எனக்கு மற்ற
முக்கியமான பணிகளை ஒதுக்குங்கள்” என்று கேட்டிருக்கிறார்.

காந்தி திரும்பவும் கழிப்பறைகளைச் சுத்தம்செய்யும் பணிக்கே
அவரை அனுப்பினார். ஒரு மாதத்துக்குப் பிறகு ஸ்ரீமன்
நாராயண் காந்தியிடம் வந்து “ பாபு நான் லண்டன்
பொருளியல் கல்லூரியில் பட்டம் பெற்றவன், என்னால்
மகத்தான விஷயங்களை சாதிக்க இயலும், எனது திறமையை
இப்படிக் கழிவறை சுத்தப்படுத்துவதிலேயே விரயம்
செய்வதுஏனோ?” என்று வாதிட்டார்.

அதற்கு காந்தியின் பதில் இது: “நீ வெளிநாட்டில் கற்றவன்,
பெரிய விஷயங்களை உன்னால் சாதிக்க
முடியும்என்பதெல்லாம் எனக்கு தெரியும், ஆனால் சிறிய
விஷயங்களைச் செய்வதற்கு உண்டான தகுதி உன்னிடம்
இருக்கிறதா என்பதை நான் இன்னும் அறியவில்லை.

வறுமை ஒழிப்பு, வளர்ச்சி, கல்வி வழங்குதல் போன்ற பெரிய
பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும் என விரும்புவது
புரிகிறது. ஆனால், மிகக் கீழான வேலைகளைச் செய்வதற்கான
மனப்பக்குவம் இல்லாமல் போனால் உனது தாய்நாட்டைச்
சூழ்ந்திருக்கும் உண்மையான பிரச்சினைகளை நீ உணராமல்
போய்விடலாம்.

உண்மையில் ஏதேனும் மாற்றங்களை உண்டாக்க
விரும்பினால் நீ உனது அகந்தையை விட்டகல வேண்டும்,

அப்போதுதான் முக்கியத்துவமற்ற கீழான பணிகளைச்
செய்வதற்கு தேவையான பணிவை உணர்ந்துகொள்ள
முடியும், அதை கவுரவத்துடனும் மரியாதையுடன் செய்யத்
தொடங்கும்போது பெரிய காரியங்கள்எல்லாம் தானாக எளிதில்
கைகூடும்.”

மை டியரஸ்ட் கமல்,

மேலே கண்ட சம்பவத்தில் கக்கூஸ் கழுவினானே ஒரு இளைஞன், அப்படிப்பட்ட அடக்கம் உங்களிடம் இருந்தால் –

உங்கள் கட்சிக்காகப் போஸ்டர்
ஒட்டும் தொண்டனாக நான் சேர்ந்து கொள்கிறேன்.

அடியேன்,

சாரு நிவேதிதா

——————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to திரு.சாரு நிவேதிதாவின் – வித்தியாசமானதொரு அரசியல் கடிதம்…….!!!

  1. M.Thevesh's avatar M.Thevesh சொல்கிறார்:

    One of the best article I read after a long time. I totally against koothadikal coming in politics.

  2. myGod's avatar myGod சொல்கிறார்:

    I really dont understand, what is the main intention behind his email.Does he mean, that whoever want to fight against tamilnadu plight, have to first answer all of his questions.Its utter bullshit!!
    Our problem just stands with tamilnadu, or i can say he just have guts to handle tamilnadu plotiticians.Why the hell he has to fight with central goverment.
    SO whenver somebody shouts against tamilnadu politicians, i hope this guy will send them this email for thier answers.So nobody can shout against tamilnadu politicians.
    Only charu have the guts it seems, but he has to make sure that nobody will ask him the same questions!!!

    • இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

      O myGod

      நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு உங்களுக்காவது புரிகிறதா ?
      இங்கே யார் ஈமெயில் எழுதினாங்க ?
      நீங்க எந்த ஈமெயிலை படிச்சுட்டு இங்கே எழுதறீங்க ?
      நீங்க இந்தியாவுல தான் இருக்கீங்களா ?
      இங்கத்திய அரசியலை பத்தி எதாவது தெரியுமா ?

      // Our problem just stands with tamilnadu, //
      இது எப்படி சாத்தியமாகும் ?
      மத்திய அரசுடன் தொடர்பே இல்லாமல் எப்படி இருக்க முடியும் ?
      இங்கே எழுத வந்தா ஒழுங்கா படிச்சுட்டு, புரியற மாதிரி எழுதுங்க சார்.
      ஒங்க தலைவர் மாதிரியே யாருக்கும் ஒண்ணும் புரியாத மாதிரி
      எழுதாதீங்க.

      • myGod's avatar myGod சொல்கிறார்:

        So if i want to show my disgruntlement towards tamilnadu politicians, is it mandatory that i should have scolded central goverment in the past?
        Absolutely ridiculous!!!!

      • Nalini's avatar Nalini சொல்கிறார்:

        Well Said Mr. Ilango, First, read fully what Mr. Charu had written and understand. We agree and really worrying the way and direction, this country is going. There are so many fake ids of people from RSS and Kavies. One person has multiple ids. If you say or write on little thing bad about modi, That’s it, they will swarm around you and started to harass you like any thing. This not good for the country and future generation.

        • myGod's avatar myGod சொல்கிறார்:

          You could have answered my question rather than stamping me that i am supporter of modi.
          if you always criticize all the peoples whoever express thier concern towards tamilnadu goverment, then nobody will come forward and airlift you from these turmoil as you dream.You better please keep on criticize all the peoples by sitting in an AC room, and dream for a hero saviour(like your favourite hero RAHUL GANDHI).
          i pray the god to save our nations from these intelectual criticizers….

  3. Rajasekar's avatar Rajasekar சொல்கிறார்:

    திரைப்பட துறையில் இவரது சகாப்தம் முடிந்து விட்டது.
    கடைசியாக வெளிவந்த 3 படங்களும் FLOP. இவரை வைத்து
    முதல்போட்டு படம் எடுக்க எந்த தயாரிப்பாளரும் தயாரில்லை. உத்தம வில்லன் எடுத்த கலைப்புலி தாணூ பட்ட அவஸ்தை எல்லா தயாரிப்பாளர்களுக்கும் பாடம்.
    கைவசம் இருக்கும் 2 படங்களையும் முடிக்க வழியில்லை.
    (வி.ரூபம்-2, ச.நாயுடு). இவரால் விளம்பரம் இல்லாமல் இருக்க முடியாது. இனி டிவி விளம்பரங்கள் தான் இவர் கதி.
    ஒரு காலத்தில் விளம்பரங்களில் நான் நடிப்பதன் மூலம் வருமானம் அனைத்தையும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமிகளுக்காக செலவழிப்பேன் என்றார். அது என்ன ஆனது ? எல்லாருக்கும் தெய்ரியும்.

    நிறைய சொத்து, பணம் வைத்திருக்கிறார். கொ.கானலில்
    300ஏக்கர் தோட்டம். எதிர்காலத்தை பற்றீ எந்த கவலையுமில்லை. இப்போது ரஜினியை ஜெயிக்க விடக்கூடாது என்பது தான் இவரது ஒரே நோக்கம், லட்சியம்,
    கொள்கை அனைத்துமே. அதற்காக தான் அரசியல் நுழைவு.
    தமிழக் மக்கள் நாசமாகப் போனாலும் இவருக்கு எந்த கவலையும் இல்லை. ரஜினி ஜெயித்து விடக்கூடாது. அந்த அளவுக்கு வெறி.
    சாமி கிடையாது. கல்யாணம் வேண்டாம். உறவுகள் வேண்டாம். இவருக்கும் பண்பாட்டுக்கும் என்ன சம்பந்தம் ? காட்டுமிறாண்டி கல்சர் தானே இவருக்கு தேவை.
    தமிழ்நாட்டு மக்கள் மடையர்களல்ல. தெருவில் இறங்கட்டும்;அவமானத்தை சந்திக்கட்டும்;அப்போது தான் புத்தி வரும்.

  4. Rajasekar's avatar Rajasekar சொல்கிறார்:

    குடும்பம் வெண்டாம் என்றவர் ஆரம்பமே குடும்ப அரசியல் தான்.
    சினிமாவில் சான்ஸ் கிடைக்காமல் இருந்த 2வது பெண்ணை
    முதல் நாளே அரசியலில் நுழைத்து விட்டார்.
    அந்த குல்லா இந்த குல்லா என்றெல்லாம் சொல்லி விட்டு
    கடைசியில் கெஜ்ரிவால் குல்லா போட்டு விட்டார்.
    அந்த கிழவர் அன்னா ஹஜாரேயை மனசாட்சியே இல்லாமல் ஏமாற்றிய
    கெஜ்ரிவாலும் இவரும் சரியான ஜோடிகள் தான்.
    தைரியம் இருந்தால் இவரும் ஆம் ஆத்மி தொப்பி போட்டு பார்க்கட்டும்.
    3 பெண்டாட்டிகளையும் விரட்டிய ஒரு ஆசாமிக்கு தமிழ்நாட்டில் எந்த
    பெண்மணி ஓட்டு போடுவார் ?

  5. paamaranselvarajan's avatar paamaranselvarajan சொல்கிறார்:

    // தமிழக மக்களுக்காக முதல்வராகிறார் கமல்ஹாசன் // https://www.dailyceylon.com/137415 …. எவ்வளவு பெரிய மனசு ? … இந்த செய்தியில் உள்ள சாராம்சம் என்ன … ஏது … என்று புரிந்து காெள்ள முடிந்தவர்கள் … பாக்கயவான்கள் ….!!!
    இதே செய்தியில் ஓரிடத்தில் : ” மக்களின் ஒத்துழைப்பு இன்றி எதையுமே செய்ய முடியாது, ஏன் நான் அவர்களுக்காக உதவ நினைப்பதில் பாதியைக் கூட நிறைவேற்ற முடியாது. என்னைப் பொறுத்தவரையில் நான் பகுத்தறிவாளன்.” என்றும் கூறுகிறார் … ஒரே ….?

    • Sundararaman's avatar Sundararaman சொல்கிறார்:

      You write on Something..Mani Shankar echo it.Now you quote , charu nvithitha…good ,good keep it up. As I told you before the more you punch Modi , the more stronger he becomes. Try to find some real holes …I am not saying there is none…but don’t say Hindi imposition, NEET, anti farmer, kaveri etc.,
      Did you see the plycard today..tamils are not Hindus…the more DK shows it’s face with DMK, people will throw it to dust bins.

      • paamaranselvarajan's avatar paamaranselvarajan சொல்கிறார்:

        நண்பரே …! தங்களின் மறுமாெழி யாருக்கானது … எனக்கா … இல்லை வேறு யாருக்காவதா … ?
        செல்வராஜன் …. !

  6. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    சாரு அவர்கள் எழுதியதன் சாராம்சம் புரிகிறது.

    கூழைக் கும்பிடு போடுகிறார்கள் – இது போடாமல் எந்த அரசியல்வாதியும் காலம் தள்ளமுடியாது. இதை எதிர்பார்க்காத எந்த அரசியல் தலைவரும் இல்லை. ஸ்டாலின் மனைவிக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம்? … எத்தனைபேர் பார்த்து வணக்கம் தெரிவிக்கிறார்கள்? திமுக தலைவரை துதி பாடாத ஒரு அரசியல்வியாதியைக் காண்பியுங்கள். ‘காலில் விழுவது’ ஒரு பிரச்சனையா? தன் காலில் இப்படி விழவில்லையே என்று நினைக்காத அரசியல்வாதியைக் காண்பியுங்கள் பார்க்கலாம்.

    ‘மத்திய அரசை எதிர்க்கச் சொல்லுங்கள்’ – இது என்ன வாதம்? முதலில் தமிழக அரசியல்வாதிகளையும், குறிப்பாக ஆளும் கட்சியையும், அதன் கொள்கைகளையும் சாடுகிறார். பிறகு வாய்ப்பு வரும்போது மத்திய அரசையும் சாடுவார். ஜெவுக்கான மரியாதை, தைரியமாக மத்திய அரசை எதிர்த்து தமிழகத்தின் தனித்தன்மையைக் காத்தது. சாரு சொல்வது எப்படி இருக்கிறது என்றால், ஒவ்வொரு முஸ்லீமும் ஏன் ‘பின் லாடன் ஒழிக’ என்று கோஷம் எழுப்பவில்லை, அதனால் அவர்களும் பின் லாடன் ஆதரவாளர்கள்தான் என்று சொல்வதுபோல் இருக்கிறது.

    கருணானிதியும், தன் கதை வசனத்துக்கு மதிப்பில்லாததால்தான் அரசியலுக்கு வந்தார் என்று சொல்லலாமா? ஒன்றை யாரும் புரிந்துகொள்ள மாட்டேன் என்று சொல்கிறீர்கள். 10 கோடி ரூபாய் இருந்தால் மிக சௌகரியமாக தங்கள் வாழ்க்கையை வாழ்ந்துவிடலாம். கமலஹாசன் ஒரு படத்துக்கே 20 கோடிக்கு மேல் சம்பாதிப்பவர். ஆனாலும் தான் விரும்பிய திரைத் துறையிலேயே தன் பணத்தை முதலீடு செய்கிறார். ரஜினி நிறைய சொத்துக்களை வாங்கியுள்ளார். கமல் நினைத்திருந்தால், தி. நகர் முழுமையும் அவருக்குச் சொந்தமாகியிருக்கும்.

    3 பெண்டாட்டியை விரட்டிய ஆசாமி – இதைச் சொல்ல ஏன் நாம் வெட்கப் படவில்லை? நடிகைகளை மனதால் நினைக்காதவர் 5% மக்கள் இருக்கலாம். மற்றவர்களெல்லாம் ஏன் உயிருடன் இருக்க வேண்டும் என்று கேட்பதைப் போன்றது இது. கருணானிதி என்ன செய்தார் என்று கண்ணதாசன் சாட்சியம் அளித்திருக்கிறார். ………… அவரை 30 சதவிகித தமிழர்கள் ஆதரிக்கவில்லை? ரேப் குற்றச் சாட்டுக்கு ஆளானவர்கள் மேயரானதில்லை? இன்னும் இதுபற்றி நிறைய எழுதலாம்.

    கமலஹாசன் கவிதைகளைப் பற்றி எழுதும் சாரு, கருணானிதியின் கவிதை, பத்திரிகையாளர் என்று சொல்வது பற்றியெல்லாம் எழுதவேண்டியதுதானே. ஏன் பயப்படவேண்டும்? கருணானிதியின் கதை வசனச் சிறப்பைப் பற்றி ……… எழுத சாருவுக்கு தைரியம் இருக்கா? அப்படி எழுதிவிட்டு, கமல் ஏன் மத்திய அரசைப் பற்றி சொல்லவில்லை என்று கேட்கட்டும்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      மீண்டும் அதே….

      திரு.கமல்ஹாசன் உங்களுக்கு பிடித்தமானவராக இருக்கலாம்.
      ஆனாலும் கூட – உங்களிடமிருந்து இத்தகைய ஒரு
      பின்னூட்டத்தை நான் எதிர்பார்க்கவில்லை…

      திரும்பவும் நீங்கள் எழுதியுள்ள இரண்டு பின்னூட்டங்களையும்,
      உங்கள் மெயில் பாக்சிலேயே படித்துப் பாருங்கள்…
      உங்களுக்கே புரியும்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • Antony's avatar Antony சொல்கிறார்:

        Dear KM,
        Seriously I could not understand your point behind supporting or not opposing Rajani’s political entry and doing opposite in Kamal’s case. Can you clarify what difference you find between them?

        • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          Antony,

          இப்போது திரு.கமல்ஹாசன் அரசியலுக்கு வந்திருக்கிறார்…
          அவரைப்பற்றிய என் எண்ணங்களை சொல்லி இருக்கிறேன்.

          திரு.ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும்போது,
          அதைப்பற்றி பேசலாமே…

          -வாழ்த்துகளுடன்,
          காவிரிமைந்தன்

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        கா.மை சார்… I think I have covered the points. சாரு நிவேதிதா தனக்கு ஏற்புடையவை இல்லாதவைகளைப் பற்றி கமல் ஏன் பேசவில்லை என்று கேட்கிறார். ஆனால் சாரு அவர்கள், மற்றவர்களிடம் இதைப் பற்றிக் கேட்கவில்லையே?

        நமக்குத் தேவை நல்ல தலைவர். ஜெ.வுக்குப் பிறகு யாரும் தென்படவில்லை. இந்த இடைவெளியை உபயோகப்படுத்த அன்புமணியை மீண்டும் முன் நிறுத்தினாலும், அதனால் பிரயோசனம் இல்லை. யார் வரும் காலங்களில் தலைவராக வரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.