பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் பார்வையில் – மதுரை மீனாட்சி …..!!!

flowers-1

அண்மையில் புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் –
பேராசிரியர் திரு.சாலமன் பாப்பையா அவர்களிடம்
ஒரு கேள்வி கேட்கப்பட்டது –

“உங்கள் பேச்சில் அடிக்கடி “மீனாட்சித்தாய்”,
“அன்னை மீனாட்சியின் அருள்” என்றெல்லாம்
குறிப்பிடுகிறீர்களே – ஏன் ?”
( பேராசிரியர் ஒரு கிறிஸ்தவர்.. !! )

பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் கூறிய
பதில் – அவருடைய வார்த்தைகளிலேயே –

——————————————-

” நான் அடிப்படையில் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவன்.
கிறிஸ்தவ சமயம் சேவையை மையமாக வைத்துள்ளது.
தொண்டு செய்வது தான் கிறிஸ்தவம். மற்றபடி,
கடவுள்’னு ஒருத்தர் எல்லா மதத்திலேயும் விதம் விதமா
இருப்பார்.

சிவன், விஷ்ணு, புத்தர், அல்லா, கிறிஸ்து … என்று
பல கடவுள்கள். கிறிஸ்தவத்திலேயே ஒவ்வொரு பிரிவும்
கடவுளை ஒவ்வொரு விதமாக அடையாளப்படுத்துவாங்க.

என் தீர்மானம் என்னன்னா, ஒரே பரம்பொருள்,
எல்லாரும் அதன் மக்கள்.
இறைவன் என்பவன் எல்லாருக்கும் பொது.
பொது என்னும்போது, மீனாட்சியும் என் தெய்வம் தானே…?

மதுரைக்கு அழகு எது ..? அடையாளம் எது …?
அந்தப்பெண் தெய்வம் தானே.. ?
அவள் பெயரைச் சொல்ல எனக்கு என்ன தயக்கம் …?
நான் சி.எஸ்.ஐ. பிரிவைச் சேர்ந்தவன்.
என் வீட்டுக்குப் பக்கத்தில் ஆர்.சி. தேவாலயம் இருக்குது.
நான் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த ஆர்.சி. சர்ச்சைத்
தாண்டித்தான் எனது சர்ச்சுக்குப் போகணும்.
அப்படிப் போகும்போதெல்லாம் என் வீட்டுக்கார அம்மாகிட்ட
கேட்பேன். ‘ஏன் நான் தெய்வமில்லையான்’னு
நாளைக்கு இவர் கேட்க மாட்டாரா’ன்னு…!!

மதத்தில் பேதம் கிடையாதைய்யா….
சிறு வயதில் நான் மீனாட்சியம்மன் கோவிலில் தான்
பலபொழுதுகளைக் கழித்திருக்கிறேன்.
அதனால் மீனாட்சி மேல் எனக்கு
எப்பவும் ஒரு பாசம் உண்டு.

—————————————————————

எத்தனை மதங்கள் இருந்தாலும்,
எத்தனை தெய்வங்கள் பெயரைச் சொன்னாலும் –
இறைவன் ஒருவனே – என்கிற தத்துவத்தை
சாலமன் பாப்பையா அவர்கள் எவ்வளவு எளிமையாக,
அழகாகச் சொல்லி விட்டார் பாருங்கள்.

பேராசிரியர் சொல்வதை நான் நூற்றுக்கு நூறு சதவீதம்
அப்படியே வழிமொழிகிறேன்.

ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு கடவுள் என்று
இந்த உலகில் ஏகப்பட்ட கடவுள்கள் இருக்கவே முடியாது.

எப்படி அழைத்தாலும், எந்த பெயரில் அழைத்தாலும் –
படைத்தவன் ஒருவனே – எல்லாருக்கும் சொந்தமான
அந்த இறைவன் ஒருவனே…

நான் நடந்து போகும் நேரங்களிலெல்லாம் –
வழியில் தேவாலயத்தையோ, மசூதியையோ –
கடந்து செல்ல நேர்ந்தால், ஒருக்கணம் நின்று,
செருப்பைக் கழட்டி வெளியில் விட்டு விட்டு,
உள்ளே சென்று, கதவருகே நின்றுகொண்டு,
கண்களை மூடி ஒரு நிமிடம் மவுனமாக பிரார்த்தனை
செய்து விட்டுத்தான் செல்வேன். மிக நீண்ட காலமாக
இது என் பழக்கமாக இருந்து வருகிறது.

திருச்சியில் இருக்கும்போது -மெயின் கார்டு கேட் அருகே,
லூர்து மாதா தேவாலயத்தையும், சிறிது தூரம் தள்ளி –
நத்தர் ஹவேலி தர்க்காவையும் நான் கடந்து
செல்லும்போதெல்லாம் இது நிச்சயம் நிகழும்.

நெற்றியில் விபூதி பூசிக்கொண்டு,
சர்ச்சிலும், மசூதியிலும்
நின்றுகொண்டு நான் பிரார்த்தனை செய்வது

அங்கே பார்ப்பவர்களுக்கு
வித்தியாசமாகத் தெரியக்கூடும்.
ஆனல், நான் திரும்புகையில்,
அங்கிருப்பவர்கள் என்னைப்பார்த்து மகிழ்ச்சியோடு
மெல்லியதாகப் புன்னகைப்பது
எனக்கு மிகவும் மன நிறைவைத் தரும்.

இது மனப்பூர்வமாக நிகழ்வது.

இது எல்லாருக்கும் சாத்தியம் தான்.
நமது மக்கள் இன்னும் கொஞ்சம் விசாலமாக,
சாலமன் பாப்பையா அவர்கள் சொன்னது போல் –
பரந்து பார்க்கப் பழக வேண்டும்.

மதங்களின் உண்மையான நோக்கம் –
மக்களை இணைப்பதாகத் தானே இருக்க முடியும்…?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் பார்வையில் – மதுரை மீனாட்சி …..!!!

  1. S.Selvarajan's avatar S.Selvarajan சொல்கிறார்:

    சாலமன் பாப்பையா கூறுவதற்கு முன்பே திரு எம்.ஜி.ஆர் .தனது படத்தில் கீழ்கண்ட வரிகளை பாடியுள்ளது நினைவில் நிற்க தக்கது :—ஒன்றே குலமென்று பாடுவோம்
    ஒருவனே தேவனென்று போற்றுவோம்
    அன்னை இதயமாக அன்பு வடிவமாக வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம்

    கடவுளிலே கருணை தனை காணலாம்
    அந்த கருணையிலே கடவுளயும் காணலாம்…….. !

    • today.and.me's avatar today.and.me சொல்கிறார்:

      நண்ப செல்வராஜன்,

      என்ன சொன்னார்கள் என்பதை விட (சொன்னகருத்து ஒன்றுதான் என்றாலும்) , யார் சொன்னார்கள் என்பதுதான் இந்தப் பதிவின் மையம் என நான் கருதுகிறேன்.

      //மீனாட்சித்தாய்”, “அன்னை மீனாட்சியின் அருள்” “மதங்களின் உண்மையான நோக்கம்” என்பது குறித்து பேராசிரியர் சாலமன் பாப்பையா (பேராசிரியர் ஒரு கிறிஸ்தவர்.. !! )//

      • S.Selvarajan's avatar S.Selvarajan சொல்கிறார்:

        தோழரே ! நான் பேராசிரியரை ஒரு தமிழ் அறிஞராகத்தான் பார்க்கின்றேனே தவிர அவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்று பார்த்தது இல்லை !!எனவே அவர் கூறிய :– ” என் தீர்மானம் என்னன்னா, ஒரே பரம்பொருள்,
        எல்லாரும் அதன் மக்கள்.
        இறைவன் என்பவன் எல்லாருக்கும் பொது.
        பொது என்னும்போது, மீனாட்சியும் என் தெய்வம் தானே…?” என்பதற்கு எடுத்துக்காட்டாக அந்த பாடல் நினைவில் நிற்க தக்கது என்று கூறியுள்ளேன் …!!!

  2. srinivasanmurugesan's avatar srinivasanmurugesan சொல்கிறார்:

    அய்யா எனது பார்வையும் இதுதான். சமதர்ம சிந்தனைகளுடன் தான் நானும் எனது சகோதர சகோதரிகளும் வளரக்கப்பட்டோம்.தற்போது கோவில் போன்ற பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்தாலும் சிறுவயது முதல் நாங்கள் கோவில், தர்கா, சர்ச் களை எங்கு கண்டாலும் கையெடுத்து கும்பிடுவதை இன்று வரை கைவிடவில்லை.

  3. today.and.me's avatar today.and.me சொல்கிறார்:

    இந்த மொழி மட்டும்தான் தெரியும் என்பவர்களுக்காக,

    पापाय परपीडनम्

    अष्टादशपुराणां सारं व्यासेन कीर्तितम् ।
    परोपकारः पुण्याय पापाय परपीडनम् ॥

    In eighteen lengthy episodes of puranas, Vyasa, author of the epic Mahabharatha, has described one thing. Helping others is virtue – troubling others is sin.
    (Can anyone show one religious book that deals with something different).

    ———–

    இது பேராசிரியர் போன்றோருக்காக,

    वसुधैव कुटुंबकम्

    अयं निजः परो वेति गणना लघुचेतसाम् ।
    उदारचरितानां तु वसुधैव कुटुंबकम् ॥
    This person is one of us, that one is not… So think only the small minded people.
    For the liberals, the world itself is one big family.

    ———–

  4. pkandaswamy's avatar pkandaswamy சொல்கிறார்:

    நான் இந்தக் கருத்திற்கு வந்து பல வருடங்கள் ஆகின்றன. சாலமன் பாப்பையா தைரியமாக வெளியில் சொல்லலாம். அது அவருக்குப் புகழ் சேர்க்கும். என்னைப் போன்றவர்கள் வெளியில் சொன்னால், பைத்தியக்காரன் என்று கல்லால் அடிப்பார்கள். ஆகவே என் கருத்தை என் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்திருக்கிறேன்.

  5. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    Soloman Pappaiah, in a nutshell, brought out the essence of all religions. I remember the ex Chief Justice of Madras High Court Mohamed Ismail who was also a scholar on Kamba Ramayanam. Tamil language is certainly a binding force for all who reside in Tamil Nadu, irrespective of the religions they profess in.

  6. Thiruvengadam (@veluran)'s avatar Thiruvengadam (@veluran) சொல்கிறார்:

    “தீயினைக் கும்பிடும் பார்ப்பார், நித்தம் திக்கை வணங்கும் துருக்கர், கோயிற் சிலுவையின் முன்னே நின்று கும்பிடும் ஏசு மதத்தார், யாரும் பணிந்திடும் தெய்வம் பொருள் யாவினும் நின்றிடும் தெய்வம் பாருக்குள்ளே தெய்வம் ஒன்று’ பாரதி

  7. மணிச்சிரல்'s avatar மணிச்சிரல் சொல்கிறார்:

    மலர்களை பின்வைத்து மனமுவந்து முன்வந்த அடையாளம்
    இன்று தங்களின் பரந்த எண்ணத்தால் மலர்களை முன்வைத்து மனங்கனிந்து பின்னடைந்தது.
    புதைந்ததை மீட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்.

  8. drkgp's avatar drkgp சொல்கிறார்:

    மணிச்சிரல், என்ன சொல்ல வரிங்க

    • மணிச்சிரல்'s avatar மணிச்சிரல் சொல்கிறார்:

      படம் பார்த்து படித்ததை சுருக்கி விட்ருக்கேன். முடிந்தது அவ்வளவு தான்.
      என் மதமே என்றில்லாமல், எம் மதமும் என்று சொல்வதற்கும் மனிதநேயம் முதலில் வேண்டும். நம்வழிகாட்டி நல்ல வழியை காட்டிக்கொண்டு இருக்கிறார்.
      காழ்ப்புணர்ச்சியில்லை அவரிடம். அனைவருக்கும் உண்டு ஓரிடம்.
      எத்தனை இடங்களில் காணமுடியும், காண்பவர்கள் கண்கொண்டு பதிலுரைப்பதை.
      இத்தள(ல)ம் மாற்றங்களை வெளிக்கொணரும். கடைசி நான்கு வரிகளும் இடுகைக்கானதல்ல.

  9. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    திரு பாப்பையாவின் மகன் பெயர் தியாக மூர்த்தி.திரு பாப்பையா கல்லூரியில் படிக்கும்போது பரீட்சைக்கு பணம் கட்ட முடியாமல் கஷ்டப்பட்டதாகவும் அப்பொழுது அவரின் இரு நண்பர்கள் தியாகராஜன் ,மூர்த்தி இவருக்கு பணம் கொடுத்து உதவியதாகவும் அந்த நன்றியுணர்ச்சி காரணமாக அவர் தன மகனுக்கு தியாக மூர்த்தி என்று பெயர் வைத்தார்._இது திரு சுகி.சிவம் ஒரு சொற்பொழிவில் கூறியது.

  10. வல்லம் தமிழ்'s avatar வல்லம் தமிழ் சொல்கிறார்:

    மதங்கள்,கடவுள் குறித்த கட்டுரையாளரின் கருத்துடன் நானும் முழுமையாக உடன்படுகிறேன். ஏறக்குறைய நானும் அப்படித்தான் இருக்கிறேன்

  11. DeathBirthRaceR's avatar visujjm சொல்கிறார்:

    வழிபாட்டுத் தலங்களை (சர்ச்சாகட்டும், மசூதியாகட்டும், கோயிலாகட்டும்) கடந்து போவோர் வணங்குவது நமது இந்தியாவில் தான் அதிகம் ஜி…

    முரணாணது என்னெவெனில் ஒவ்வொரு மானுடமும் (ஆண், பெண்) முதலில் நமது இல்லத்தை கோவிலாக காண்கிறார்களா எனில் சொச்சமே … …

    கொடுமைக்கெல்லாம் கொடூரக் கொடுமை என்னவெனில் வறுமையோடு வேண்டும் கூட்டம் தான் நமது தேசத்தில் மிக மிக அதிகம் … என்நிலை எப்போதும் போல் சமநிலையான மனநிலை தந்து என்னையும் என் போன்றோர்களையும் நிம்மதியோடு நல்வழிப்படுத்து என் இறைவா…

    கடந்து போகும் என்று வேண்டுவதை விட்டு விட்டு கடமையே கண்கண்ட தெய்வம். சிலருக்கு அது தொழிலாகட்டும் , சிலருக்கு அது பிணியாகட்டும், இன்னும் ஏராளமானோருக்கு நிறைந்து காணப்படும் நமது இளைய இந்தியாவின் கல்வியாகட்டும்…..

    மதுரைக்கு அழகு அன்னை மீனாட்சி மட்டுமல்ல , நான் உணவு விடுதியில் இரண்டு வருடங்கள் காசாளராக பணி மேற்கொண்ட போது நடுநிசியில் பணி முடிந்து பல மண்டலங்கள் (ஒரு மண்டலம் – 41 நாட்கள்) சிம்மக்கல் – வில்லாபுரம் மீனாட்சி அம்மன் ஆலய கோபுர அழகை கண்டு அதே வேளையில் அங்கு அந்த நேரங்களிலும் காய் கனிகள் வந்து லாரியில் இறங்குவதும் , ஏற்றுவதும் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்… மாடுகள் சிந்திய காய்கனிகளை உண்ணும் நான் செல்லும் வழியில் சில நேரம் உறக்க கலக்கத்தில் எங்கேனும் அங்கனமே சைக்கிளில் (மூன்று சக்கரம்) உறங்கி விடுவேன் … ஒரு சமயம் அப்படி உறங்கி விழித்து பார்த்தால் சுடுகாடு அருகில் விழித்து எழுந்தேன்…. வில்லாபுரம் செல்லும் முன் ஒருசுடுகாடு வந்ததும் தெரியாது நான் விழித்து எழுந்தால் பிணம் எரிந்து கொண்டிருந்தது அன்றிலிருந்து பிணம் எரியும் இடம் தனிமை விரும்பினேன்…

    சென்னையிலும் கே.கே நகர் அருகாமையில் ஒரு மயானம் உண்டு அவ்வளவு பரபரப்பான சாலையின் ஊடே மயானம் எப்போதாவது பணிச்சூழல் மிகுதியாக இருப்பின் நான் தனிமை அதிகம் விரும்புவது மயானம் தான் …

    அவ்வளவு கஷ்டங்களையும் ஆறடியில் படுத்து கிடக்கும் சுடுகாட்டு மயானம் என் போன்றவருக்கு தத்துவ பள்ளிக்கூடமாக காட்டியதுண்டு நானும் துன்பம் மிகும் வேளையிலும் அதைபோன்ற ஒரு பக்குவ மனநிலை எண்ணி எனக்குள் வியந்ததுண்டு எல்லோருக்குமே ஆறடி தான் இறுதியடி என்று…….

    வாரத்தின் இறுதி நாளில் என் போன்றோருக்காகவே ஒரு பதிவு போட்ட விமரிசனம் காவிரிமைந்தனுக்கு நன்றி……

  12. desinghjothi's avatar desinghjothi சொல்கிறார்:

    அனைத்து மதங்களும் அன்பினையே வலியுறுத்துகின்றன! ஒவ்வொருவர் அதை ஒவ்வொரு வழியில் இறையாகப்பாவித்துப் பின்பற்றுகின்றனர். எவ்வாறு பின்பற்றினாலும் அன்பில்லா நெஞ்சில் அவர்கள் நம்பும் ஆண்டவன் உறைந்திடான்! அன்பினை வழிபடுங்கள்!
    நீங்கள் நம்பும் ஆண்டவன் உங்கள் வசப்படுவான்!

  13. Killergee's avatar Killergee சொல்கிறார்:

    மதங்கள் அனைத்தும் போதித்தது, போதிப்பது அன்பை மட்டுமே ஆகவே மதங்கள் மறப்போம், மனிதம் வளர்ப்போம்.

  14. yogeswaran's avatar yogeswaran சொல்கிறார்:

    great sir,

    solomon sir and gentlemen who have commented

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.