முல்லைப் பெரியாறு -புதிய அணை ஏன் வேண்டாம் ? (பகுதி 2 )

முல்லைப் பெரியாறு  -புதிய அணை
ஏன் வேண்டாம் ? (பகுதி 2 )

“முல்லைப் பெரியாறு  -தமிழ் நாடு
ஏமாந்து கொண்டிருக்கிறது –
உடனடித் தேவை – பலமான பதில் தாக்குதல்”

என்கிற தலைப்பில் 4 நாட்களுக்கு முன்னர்
இந்த வலைத்தளத்தில் வெளிவந்த இடுகை
மிகப்பெரிய அளவு வாசகர்களை
சென்றடைந்திருக்கிறது.

தமிழ் மக்கள் அனைவரும் உணர்ச்சி
வசப்பட்டிருந்ததும்,
இடுகையில் முக்கியமான புள்ளி விவரங்களும்,
நியாயங்களும், சரியாகத் தொகுத்து
தரப்பட்டிருந்ததும் காரணமாக இருக்கலாம்.

பல நண்பர்கள் தங்கள் face book ல் இதை
பதித்திருந்ததும் ஒரு முக்கிய காரணம்.

உங்கள் அனைவரின் வருகைக்கும்,
அதிக அளவில் மறுமொழிகளில் சொல்லப்பட்ட
கருத்துக்களுக்கும் நன்றி.

இதன் தொடர்ச்சியாக நான் சொல்ல
விரும்புவது  –

நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
ஒன்றுபட்டிருக்க வேண்டும் –
இந்த விஷயத்தில் கட்சி வேறுபாடு
பார்க்கக் கூடாது.
இது நமக்குச் சொந்தமான அணை – நம் அணை.

இதன் உயரம், நீர் தேக்குதல், வெளியிடல்,
பயன்படுத்துதல் –
அனைத்தும் நம் உரிமை.
நம்மை மீறி – கேரள அரசோ, மத்திய அரசோ
செயல்பட முனைந்தால் விளைவு விபரீதமாக
இருக்கும் என்பதை  அவர்களுக்கு
புரிய வைக்க வேண்டும்.ஒருமித்த குரலில்
தெரிய வைக்க வேண்டும்.

இந்த பிரச்சினை உடனே தீர வாய்ப்பில்லை.

இயன்ற வரையில், இது தொடர்பான,
சரியான விவரங்கள் –
அதிக அளவு மக்களை சென்றடைய
உங்களால் இயன்ற வழிகளில் எல்லாம்
செயல்படுங்கள். ஆங்கிலத்தில் எடுத்துச்சொல்ல
முடிந்தவர்கள் (நண்பர் சரவணன் ) அவசியம்
செய்யுங்கள்.

நியாயம் நம் பக்கம் தான் இருக்கிறது –
ஆனால் இதை மற்றவர்களுக்குப் புரிய வைப்பதில்
தான் நம் வெற்றி இருக்கிறது.
புதிய அணையை நாம் ஏன் ஏற்க மறுக்கிறோம்
என்பதை மற்றவர்களுக்கு விளங்க வைக்க வேண்டும்.

அது ஒரு ஏமாற்று திட்டம்(fraud plan)
என்பதை எடுத்துச் சொல்ல
வேண்டும். இந்த இடுகையின் முதல் பகுதியையும்,
அதற்கான அனைத்து மறுமொழிகளையும்
ஒரு முறை படித்தால்
அதற்கான அத்தனை விவரங்களும் கிடைக்கும்.

நான் முன்னால் சொல்ல விடுபட்டுப் போன
சில  விஷயங்கள்.

1) அணையின் நீர் மட்டத்தை குறைத்தாலோ,
அணையை செயலற்றதாக்கினாலோ –
நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான
ஏக்கர் நிலங்கள் புதிதாக அவர்கள் கையில் வரும்.
மஹாராஷ்டிராவில் கடக்வாசலா
அருகே புதிதாக அமைக்கப்பட்டு வரும் “லவாசா”
போல் புதிதாக மலைவாசஸ்தலம்,(ஹில் ரிசார்ட்)
கட்ட சில  அமைப்புகள் தீவிரமாக முனைந்துள்ளன.
கேரள அரசியல்வாதிகள் அளவுக்கு மீறி “துள்ள” –
இந்த நிறுவனங்கள்  “புழங்க” விட்டிருக்கும்  
பணமும் ஒரு முக்கிய காரணம்.

2) இடுக்கியில் பெரிய மின் நிலையம் அமைத்து,
வருடம் பூராவும் தொடர்ந்து வர்த்தக ரீதியில்
மின்சாரம் தயாரித்து பணம் பண்ணவும் அவர்கள்
திட்டம் போடுகிறார்கள்.

3) இப்போது – கடைசியாக, இந்த வார
துக்ளக் இதழில் இருந்து ஒரு தகவல் கிடைத்தது.

சில விஞ்ஞானிகளின் ஆய்வுப்படி –
ஒரு அணை கட்டி 100 ஆண்டுகள் எல்லாம்
கடந்த பிறகு அந்த அணை காரணமாகவும்,
அதில் தேக்கப்படும் நீர் காரணமாகவும்,
இம்மாதிரி நில அதிர்வுகள் எல்லாம்
தோன்றாது. ஆனால் புதிய அணைகள்
கட்டப்படும்போது அதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மஹாராஷ்டிராவில், “கொய்னா” அணை
கட்டப்பட்டதை தொடர்ந்து “நில அதிர்வுகள்”
உருவானதும், தொடர்ந்து விபத்து ஏற்பட்டதையும்
இதற்கு உதாரணம் கூறுகிறார்கள்.

எனவே இப்போது கூறப்படும் “நில அதிர்வுகளுக்கு”-
116 வருடங்களைக் கடந்து விட்ட பழைய
முல்லைப் பெரியாறு அணை காரணம் அல்ல,

மாற்றாக –

1974ல் இடுக்கியில் புதிய அணை கட்டப்பட்ட பிறகு,
இடுக்கி அணைக்கு பக்கமாக உள்ள பகுதிகளில்  தான்
இந்த அதிர்வுகள் தோன்றுகின்றன.  அதுவும்,
இடுக்கி நீர்த்தேக்கத்தில் உள்ள நீரின் அளவு
அதிகம் ஆகும்போது தான் இந்த
அதிர்வுகள் அதிகமாகின்றன.

எனவே, புதிதாக கட்டப்பட்ட இடுக்கி அணையில்
நீர் தேக்குவதை  குறைத்தால் இந்த பிரச்சினை
தீர்ந்து விடும் என்று இந்த விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இந்த தலைப்பு தொடர்பாக இதைப் படிப்பவர்களிடம்
வேறு பயனுள்ள  தகவல்கள் ஏதேனும் இருந்தால் –
அவற்றை மறுமொழியில் அளிக்க  கேட்டுக்கொள்கிறேன்.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to முல்லைப் பெரியாறு -புதிய அணை ஏன் வேண்டாம் ? (பகுதி 2 )

  1. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    ஏன் எல்லோரும் உணர்ச்சிகளை தூண்டி விடுகின்றனர் என்று புரியமாட்டேங்குது.
    மனிதர்களுக்கு எது நன்மைபயக்கும் என்பதை யாரும் உணர்வதில்லை.
    சாயம் பூசுவதில்தான் நம் கவனம் இருக்கிறது. அதை வைத்து இலாபம் பார்ப்பதில்தான் கவனமாக இருக்கின்றனர்.
    கேரள அரசியல்வாதிகளை பார்க்கும்போது முன்பெல்லாம் பெருமையாக இருந்தது. அனால் அவர்களும் இப்போது அரசியல்”வியாதி” ஆகிவிட்டனர்.
    நிச்சயமாக நாம் நம் உரிமைகளை இழக்கக்கூடாது. அனாலும் நம் உரிமைகளை அடைய அவர்களின் உயிரை பணயமாக்கமாட்டோம் என்பதை நாம் அவர்களுக்கு கண்டிப்பாக புரியவைக்கவேண்டும்.
    அனைவரும் ஒன்று படுவோம். பிரச்சனையை புரிந்துக்கொள்வோம்.
    மற்றவர்களுக்கும் புரியவைப்போம்

  2. vignaani's avatar vignaani சொல்கிறார்:

    //நியாயம் நம் பக்கம் தான் இருக்கிறது –
    ஆனால் இதை மற்றவர்களுக்குப் புரிய வைப்பதில்
    தான் நம் வெற்றி இருக்கிறது.//

    மிகச் சரி.

    இந்த விஷயத்தில் என்றல்ல, எந்த விஷயத்திலும் தமிழர்கள் அறிவுபூர்வமாக வாதாடுவதை விட, உணர்ச்சி பூர்வமாக வாதாடுவதே அதிகம்.
    ஈழம் சமீபத்திய உதாரணம். வைகோ பல அறிவு பூர்வமான புள்ளிவிவரங்களைக் கொடுத்தாலும் உணர்ச்சி பொங்கி பேசுவதால் அதை அரசியல் கண்ணுடனேயே காணவும் அதனால் முழுவதும் உண்மை இருக்காது நாடகம் என்ற நம்பிக்கை இன்மை வந்து புரிதலைக் கெடுத்துவிடுகிறது.
    மிக நடு நிலைமையுடன் தர்க்க ரீதியாக உண்மைகளை பட்டியல் இட்டிருக்கிறீர்கள்.
    அனைத்து சாராரும், கட்சி வேறுபாடு இன்றி ஒரே குரலில் பேசுவது அவசியம். தொலைக்காட்சிகளும் வெவ்வேறு கோணங்களில் இந்த உண்மைகளை சொல்லிக் கொண்டிருக்கவேண்டும். இதற்கும், விளம்பரதாரர் யார் என்று பாராமல், பொது நன்மைக்காக செய்ய வேண்டும்.
    அம்மையார் ஆட்சியில் அப்படி செய்திருக்கவேண்டும், அல்லது மைனாரிட்டி அரசு செய்யத் தவறி விட்டது என்று வசை பாடத்
    துவங்காமல், இப்போது என்ன செய்ய வேண்டும் என்று ஒரே குரலாய் ஒலிக்க வேண்டும்.

    தமிழகம் செய்யுமா?

  3. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    இரண்டு குடிமக்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வு காண உள்ளூர் நீதி மன்றத்தை அணுகலாம்.மாநில உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யலாம்.கடைசியாக நாட்டின் உச்ச நீதி மன்றத்தில் அப்பீல் செய்யலாம்.பிறகு அந்த தீர்ப்பை
    அமல்படுத்தியே ஆகவேண்டும்.வேறு வழியில்லை.

    அதே போல இரு மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசை அணுகலாம்.கடைசியாக நாட்டின் உச்ச நீதி மன்றத்தில் அப்பீல் செய்யலாம்.பிறகு அந்த தீர்ப்பை
    அமல்படுத்தியே ஆகவேண்டும்.வேறு வழியில்லை.

    ஒருவேளை அதை நடைமுறைபடுத்தவேண்டிய மாநில அரசு அவ்வாறு செய்யாவிட்டால்?அந்த அரசை கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்த மத்திய அரசிற்கு அதிகாரம் இருக்கிறது.

    இங்கேதான் சிக்கல் வருகிறது.இவ்வாறு நடக்கும் பட்சத்தில் கலைக்கப்பட்ட அரசு (அதாவது கட்சி)முன்பிருந்ததை விட அதிக பலத்துடன் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகம்.எனவே எந்த மத்திய அரசும் மாநில அரசை கலைக்காது.

    நான் முன்னேயே சொன்னது போல நம் மாநிலத்தை பொறுத்த வரை இங்கு காங்கிரசோ,பா.ஜா.க வோ தனித்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அறவே இல்லை.எனவே இந்த இரு கட்சியினருக்கும் நம் மாநிலத்தின் நலனில் எந்த அக்கறையும் இருக்க முடியாது.

    நாம் அனுபவித்துகொண்டிருப்பது ஒரு இறையாண்மை சிக்கல்.மிகவும் ஆபத்தானது.அப்படியே விட்டு விட்டால் பரவும் அபாயமும் உள்ளது.உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் மாநில அரசை என்ன செய்வது எனும் கேள்விக்கு நாம் பதில் காண வேண்டிய நேரம் இது.காவிரி,முல்லை பெரியார் எல்லாம் விளைவுகளே.மேற்கண்ட கேள்வியே எல்லாவற்றிக்கும் காரணம்.இதற்கு தீர்வு என்ன?

    1.Reunite the states.: மொழி வாரி மாகாணங்களை கலைத்துவிட்டு,நாட்டை ஐந்து பகுதிகளாக பிரிக்கலாம்.(zones)
    கிழக்கு,மேற்கு,வடக்கு,தெற்கு மற்றும் மையம்.

    அல்லது

    2.உணவு,மின்சாரம்,தண்ணீர் கல்வி,மற்றும் மருத்துவம் ஆகியவற்றை மத்திய அரசின் அதிகாரத்திற்கு கீழ் கொண்டுவரலாம்.

    அல்லது

    3 கடந்த 64ஆண்டுகளாக நாம் பேசி மகிழும் நதிகள் இணைப்பு
    திட்டத்தை உலக வங்கியின் உதவியுடன் செயல் படுத்த தொடங்கலாம்.

    இதையெல்லாம் விடுத்து நாங்கள் மலையாளி டீக்கடையில் சாப்பிடமாட்டோம் ,ஷகிலா படம் பார்க்க மாட்டோம் கேரளாவிற்கு முட்டகோஸ் அனுப்பமாட்டோம் என்பதெல்லாம் டைனோசாரை சுள்ளெறும்புகளை விட்டு கடிக்க வைத்து சாகடிக்க திட்டம் போடுவதற்கு ஒப்பானது.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பர்களே,

      இருக்கிறது. வழி இருக்கிறது.
      முதலில் நம்மிடம் ஒற்றுமை வேண்டும்.

      அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டும்.
      அனைத்து தமிழர்களும் ஒரே அணியில்
      நிற்க வேண்டும்.

      தமிழ் விவசாயிகளின் வாழ்வோடு,
      உயிரோடு, விளையாடும்
      தரம் கெட்ட கேரள அரசியல்வாதிகளை மடக்க

      -சாம, பேத, தான, தண்டம் – ஆகிய
      அனைத்து முறைகளையும் பயன்படுத்த வேண்டும்.

      இரண்டே கோரிக்கைகள் –

      1) முல்லைப் பெரியார் அணையின் நீர்மட்டத்தை
      ஏற்கெனவே சுப்ரீம் கோர்ட் அனுமதித்த அளவான
      142 அடிக்கு உயர்த்த வேண்டும்.

      2) அணையின் பாதுகாப்பையும், நீர் மட்டத்தை
      உறுதி செய்யும் மெயின்டெனன்ஸ் பொறுப்பையும்
      மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

      இதை மத்திய அரசு தட்டிக் கழிக்க முடியாது.
      அரசியல் சட்ட விதிகளின்படி, சுப்ரீம் கோர்ட்
      தீர்ப்பு நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யும்
      பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.

      இந்த கோரிக்கைகளை வற்புறுத்தி,
      அவை நிறைவேறும் வரை முதல்படியாக –

      கோயம்புத்தூருக்கு தெற்காக
      நாகர்கோவிலுக்கு மேற்காக,
      செங்கோட்டைக்கு மேற்காக,
      எந்த ரயிலும் போகாதபடி
      3 பக்கங்களிலிருந்தும் கேரளாவிற்கு
      ரெயில் போக்குவரத்து முற்றிலுமாக
      நிறுத்தப்பட்டால் ?

      ஒன்று சேருவார்களா நம் மக்கள் ?

      வன்முறை அற்ற, அமைதியான,
      ஆனால் உறுதியான, ஒன்றுபட்ட
      சாத்வீக வழிகளிலேயே
      நம் நியாயம் ஜெயிக்க வழி நிச்சயம் இருக்கிறது.

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  4. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இன்று கிடைத்த செய்தி –

    நீர்ப்பிடிப்பு பகுதியாக தமிழ்நாடு 999 ஆண்டு
    குத்தகைக்கு எடுத்திருந்த 8000 ஏக்கர்
    பரப்பில்,
    பெரியார் அணையின் நீர் மட்டம்
    136 அடியாக குறைக்கப்பட்டதனால் –

    உண்டான வெற்றிடமான நிலத்தில் –
    கேரள அரசின் ஆசியுடன்
    சில ரிசார்டுகள் ஏற்கெனவே வந்து விட்டனவாம்.

    இப்போது 120 அடியாகக் குறைத்தால்
    இன்னும் கொஞ்சம் இடம் கிடைக்கும்.
    இன்னும் கொஞ்சம் பணம் பண்ணலாம்
    என்பது அவர்கள் உத்தேசங்களில் ஒன்று.

    உடனடியாக நீர்பிடிப்பு பகுதிகளில் ஒரு
    அதிரடி சர்வே நடத்த வேண்டும்.
    தமிழக அரசு அதிகாரபூர்வமாக சர்வே செய்ய,
    கேரள அரசு அனுமதி கொடுக்க மறுத்தால் –
    ப்ரைவேட் நிறுவனங்கள் மூலம் இதை
    ரகசியமாக சர்வே செய்து கண்டு பிடிக்கலாம்.

    இந்த ரிப்போர்ட் கையில் கிடைத்தால் –
    கேரள அரசின் மூஞ்சியில் குத்த உதவும்.

    -காவிரிமைந்தன்

  5. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    >>இரண்டே கோரிக்கைகள் –

    1) முல்லைப் பெரியார் அணையின் நீர்மட்டத்தை
    ஏற்கெனவே சுப்ரீம் கோர்ட் அனுமதித்த அளவான
    142 அடிக்கு உயர்த்த வேண்டும்.
    2) அணையின் பாதுகாப்பையும், நீர் மட்டத்தை
    உறுதி செய்யும் மெயின்டெனன்ஸ் பொறுப்பையும்
    மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.<<

    சபாஷ் !!
    இதற்கு எதற்கு ரயிலெல்லாம் நிறுத்திக் கிட்டு?

    அதான் நம்ம ஊழலர்கள்..சேச்சே ஊழியர்கள் இருக்காங்களே..
    ஒண்ணுக்கும் ஓதவாத தண்டங்கள்.39 பேர்..

    ஒரு மாதத்திற்குள் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஒட்டுமொத்தமாக அனைவரும் பதவி விலகினால் ஆச்சு!!ஒரு constitutional crisis உருவாக்கலாம்.

  6. அருள்'s avatar அருள் சொல்கிறார்:

    முல்லைப்பெரியாறு அநீதியும் முதுகெலும்பில்லாத தமிழ்நாடும்

    http://arulgreen.blogspot.com/2011/12/blog-post_09.html

  7. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    அன்பின் கா.மை.
    மேலே உள்ள பதிவில் அருள் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்:
    quote
    கடைசியில் உச்சநீதிமன்றம் அணையை உடனடியாக 142 அடிக்கும், பேபி அணை எனப்படும் பகுதியில் நடைபெற வேண்டிய சிறிய மராமத்து பணிகள் முடிந்த பின்னர் 152 அடிக்கும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்று 2006 ஆண்டு ஆணயிட்டது.
    ஆனால், முதுகெலும்பற்ற தமிழ் நாடு அரசு – உச்ச நீதிமன்ற ஆணையை செயல்படுத்தவில்லை. இத்தனைக்கும் முல்லைப்பெரியாறு அணை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.
    unquote
    இதைப்பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரியுமா?
    தி.மு.க.அரசு இதில் மெத்தனம் காட்டினார்களா?
    நாம் தும்பை விட்டு விட்டு வாலை பிடிக்க ஓடுகிறோமா என்ன?
    இது மிக முக்கியமான விஷயம்.
    உங்கள் கருத்துகளை / பதிலை எதிர்பார்க்கிறேன்!
    நன்றி.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பரே,

      142 அடி வரை நீர் தேக்கிக் கொள்ள அனுமதி
      அளித்து -சுப்ரீம் கோர்ட் உத்திரவு பிறப்பித்தது
      27/02/2006 அன்று.

      கேரள அரசு இதற்கு தடை விதிக்கும் வகையில்
      புதிய சட்டத்தை நிறைவேற்றியது –
      18/03/2006 அன்று.

      இடைப்பட்ட 19 நாட்களுக்குள் தமிழக அரசு
      இதை நிறைவேற்றி இருக்க வாய்ப்பு இருந்தது
      என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

      தமிழ் நாடு அரசை இந்த வகையில் குறை சொல்வது
      சரி இல்லை என்றே நான் நினைக்கிறேன்.
      (அப்போது பதவியில் இருந்தது திமுக )

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  8. rajanat's avatar rajanat சொல்கிறார்:

    கேரளாவுக்கு உள்ள ஒரே வலுவான ஆயுதம் பழசு.இந்த தியரியை எப்படி முறியடிப்பது என்பதிலும்,அதே சமயத்தில் கேரள மக்களின் புரிதலுக்கும்,பயம் நீக்குவதற்கும் வழி காண்பதில் மட்டுமே தமிழர்களின் நலன் உள்ளது.

  9. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    விளக்கத்திற்கு மிகவும் நன்றி ,காவிரிமைந்தன்.ஆனால் இடைப்பட்ட 19 நாட்களில் நம் மாநில அரசு செய்தது என்ன என்பது மர்மமாகவே இருக்கிறது.ஒரு வேளை கேரளா அரசின் இந்த கபடமான செயலை நம் அரசு எதிர்பார்க்கவில்லை போலும்!

  10. skumr's avatar skumr சொல்கிறார்:

    Dear Viewers,

    Please see this link, Kerala have the list of Resorts near in Iddukki and Periyar Areas.
    http://nivalink.com/kerala/thekkady.html

  11. skumr's avatar skumr சொல்கிறார்:

    Dear Mr. Kavirimainthan

    Can you read this Comments from Tamil Malar…….. and check this
    …..
    தமிழ்மலர் சொன்னது…
    இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள்

    http://tamilmalarnews.blogspot.com/2011/12/blog-post_09.html?utm_source=BP_recent

    அடுத்த காணொளியில் பேசுவது கேரள முல்லைபெரியாறு அணை பாதுகாப்பு போராட்டக்குழ தலைவர் திரு. சி.செ. ரோய் அவர்கள்

    இருவரும் சொல்வது :-

    திரு. சி.செ.ரோய் கேரள போராட்டக்குழு தலைவர் 😦 இவர்தான் முதன்முதலாக முல்லைப்பெரியாறு பிரச்சனை தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்)

    தற்போது தமிழகம் தண்ணீர் எடுக்கும் கால்வாய்களின் ஆழத்தை கூட்டி அல்லது புதிய கால்வாய் வெட்டி கூடுதலான தண்ணீரை தமிழகம் எடுத்து செல்ல வேண்டும். இதனால் அணையின் பயன்பாடு இல்லாமலும் தமிழகம் தண்ணீரை எடுத்து செல்ல முடியும். தண்ணீரை பாதுகாப்பாக எடுத்து செல்லவேண்டிய பொருப்பை தமிழகம் ஏற்கவும், தண்ணீரை முழுமையாக கொடுக்கும் தார்மீகத்தை கேரள கடைபிடிக்கவும் செய்வது தான் எங்களுடைய தீர்வு.

    திரு. கம்பம் அப்பாசு தமிழக போராட்டக்குழு தலைவர் ( இவர்தான் தமிழக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொ£டர்ந்தவர்.)

    முல்லைபெரியாறு அணையில் கூடுதாலான தண்ணீரை தேக்குவது கேரள மக்களுக்கு அச்சத்தை தருகிறது. இதற்கு மாற்றாக தாழ்வான கால்வாய்களை அமைத்து தமிழகம் 34 அடியில் இருந்து தண்ணீரை எடுக்கும் திட்டத்தை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம். இதற்கு கேரள அரசும் கேரள மக்களும் சம்மதம் தருவார்களானால் அதை தமிழக அரசும் தமிழக மக்களும் முழு மனதாக ஏற்றுக்கொள்வார்கள். இந்த திட்டம் எங்களுக்கு ழுழு திருப்தி.

    இந்த திட்டம் தான் திரு. பென்னிகுயிக் அவர்களினவ் கனவு திட்டம் அப்போது நிதி இல்லாததால் அதை அவரால் செயல்படுத்த முடியவில்லை. இதை திரு.பென்னிக்குயிக் தமது டைரி குறிப்புகளில் எழுதியுள்ளார். இந்த டைரி திரு.கம்பம் அப்பாசு அவர்களிடம் உள்ளது.

    சக வலைபதிவர்களே இந்த முயற்சிக்கு தமிழக கேரள ஊடகங்கள் ஒத்துழைப்பது இல்லை. தமிழக கேரள அரசியல்வாதிகள் கூட ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் ஊடகங்களுக்கு மட்டும் பிரச்சனை தீர்வதில் விருப்பம் இல்லை. இந்த இருவரின் பேட்டியை ஒளிபரப்ப எந்த ஊடகமும் தயாரில்லை. எந்த பத்திரிக்கையும் தயாரில்லை. கேரளாவின் ஒரு சில பத்திரிக்கைகள் மட்டுமே வெளியிட்டுள்ளன.

    அடுத்த இரண்டு வாரங்களில் கேரள தமிழக போராட்டக்குழுக்கள் சந்தித்து பேசி சுமூக முடிவை உச்சநீதிமன்றத்தில் அறிவிக்க உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
    6:50 PM, December 09, 2011

  12. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    கீஎழ்கண்ட அருமையான வாசகர் கருத்தை இன்றைய தினமலரில் சற்று முன் படித்தேன்.அதை நண்பர் காவிரிமைந்தன் அனுமதியோடு இங்கு மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.நம் மாநிலத்தின் துயரத்தை இதைவிட அழகாக விளக்க முடியாது.
    நன்றிகள்: இதை எழுதிய மனோ; தினமலர் & காவிரிமைந்தன்.

    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
    முல்லைப்பெரியாறு பிரச்சினை:

    நியாமான நீண்டகாலத்தீர்வுகளை எடுப்பதை விட்டு, இன மற்றும் மொழி பிரச்சினையாக இதை பார்ப்பது அற்ப செயல். காமராசருக்கு பிறகு எத்தனை தலைவர்கள் வந்தார்கள்…. அவர்கள் எல்லாம் செய்து கிழித்தது என்ன? எத்தனை புதிய ஏரிகள் உருவாக்கப்பட்டன? எத்தனை ஏரிகளின் பரப்பளவு அதிகப்படுத்தப்பட்டது? எத்தனை அணைகள் கட்டப்பட்டது? “நீர் மேலாண்மை” என்ற சொல்லுக்கு அர்த்தமாவது விளங்கி கொண்டார்களா? இன்னும் ராஜராஜ சோழனும், பென்னி குக்கும், காமராசரும் கட்டிய அதே அணைகளை வைத்து கொண்டு வாய்ச்சவடால் பேசி கொண்டிருக்கிறோம். இருக்கிற ஏரிகளை எல்லாம் மூடி வீட்டு மனைகளாக மாற்றி விற்று ஏப்பம் விட்டது சாமானிய பொது சனமா? அரசியல்வாதிகள்தானே.. மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரிக்கும் பொழுது, குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் அதிகமான நீர் தேவை என்பதை கூட உணராத அரசாங்கம். காவிரியில் துளையிட்டு, துளையிட்டு, வறண்ட காவிரியாக உருமாற்றியதுதான் மிச்சம்.. ஏரிகளை தூர்த்து நிலக்கொள்ளை ஒருபுறம், அள்ளி அள்ளி நீராதத்திற்கான வாய்ப்பே இல்லாமல் செய்யும் மணல் கொள்ளை ஒருபுறம், விவசாய நிலங்களை எல்லாம் மிரட்டி பிடுங்கி வீட்டு மனைகளாக் விற்கும் அவலம் ஒருபுறம்.. தமிழ்நாட்டின் இன்றைய அரசியல்வாதிகள் நமக்கெல்லாம் ஒரு சாபக்கேடு. மழை நீரை சேமிப்பது எப்படி என்பது போய், விரைவாக கடலுக்கு வடிப்பது எப்படி என்பதையே சிந்திக்க கூடிய ஒரு கூட்டம்.. அடுத்த மாநிலகாரனிடம் கையேந்தாமல் மழைநீரை சேமிக்க ஏரிகளை உருவாக்கவும், ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டி, நிலத்தடி நீரை அதிகரிக்கவும், மணல் கொள்ளையை தடுத்து காவிரியின் கடைமடைக்கும் தண்ணீர் கிடைக்கின்ற நிலை ஏற்படவும் திட்டம் தீட்டுங்கள்.. எல்லா நதிகளையும் இணைத்து வீணாக கடலில் கலக்கின்ற நீரை தேவையான இடங்களுக்கு கொண்டு செல்லுங்கள்..விவசாயத்தை மேம்படுத்துங்கள்.. பல்லாயிரக்கணக்கான கோடிகள் தேவைப்படும் திட்டம்தான் என்றாலும், டி.வி., மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மருத்துவ காப்பீடு என்று இலவசங்களை வாரி இறைப்பதை விட்டு, இது போன்ற நீண்ட கால மக்களின் பிரச்சினைகளுக்கு முற்று புள்ளி வைக்க கூடிய திட்டங்களுக்கு செலவிடுதல்தான் மக்களின் அரசாக இருக்கும்.. ஒட்டு வங்கி அரசியலுக்காகவும், பதவி சுகத்திற்காகவும் மட்டுமே திட்டங்களை தீட்டுவது மாக்களின் அரசாக மட்டுமே இருக்கும்.. நாங்கள் மக்கள்.. நீங்கள் என்னவென்று அரசியல்வாதிகளை பார்த்து ஒவ்வொருவரும் கேளுங்கள்.. இது உங்களில் உரிமை.. போராடுங்கள்.. இல்லையேல் போரிடுங்கள்.. தமிழக அரசியல்வாதிகளுடனான யுத்தம் சகோதர யுத்தமாக இருக்காது.. அது சத்ருக்களுடனான யுத்தமாகவே இருக்கும்..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.