நண்பர் வில்லவனின் -“கருணாநிதியும்
கக்கூஸ் தொடர்பான
சில வினாக்களும்” இடுகை பற்றி….
நண்பர் வில்லவன் தனது
http://villavan.wordpress.com/
வலைத்தளத்தில் ” கருணாநிதியும் கக்கூஸ் தொடர்பான
சில வினாக்களும்” என்கிற தலைப்பில்
ஒரு இடுகை இட்டிருக்கிறார்.
நண்பர் வில்லவன் எடுத்துக்கொண்ட பொருளைப் பற்றி
இதைவிட ஆழமாகவும், அழுத்தமாகவும்,
காரமாகவும், கோபத்துடனும் எழுதுவது
கிட்டத்தட்ட யாருக்கும் இயலாத செயல்.
“விமரிசனம்” என்கிற இந்த வலைத்தளத்தில் நான்
எழுதத் துவங்கிய போது, முதல் முதலில்
எடுத்துக்கொண்ட பொருள் இதே தான்.
“அடிப்படை தேவைகள்” என்கிற தலைப்பில்
ஜூலை 29, 2009 அன்று எழுதினேன்.
(பார்க்க வசதியாக,
கீழே மீண்டும் பதிந்துள்ளேன்).
மிக மிக மென்மையாக, “ப்ளீஸ்” என்கிற
வேண்டுகோளுடன் எழுதி இருந்தேன். இதன் பிரதியை
சம்பந்தப்பட்ட இடங்களுக்கும் அனுப்பி இருந்தேன்.
கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கடந்து விட்டன.
உம் ஹூம் .. எந்த வித விளைவும் இல்லை.
இப்போது வில்லவன் எழுதி இருக்கும் இடுகையை
பார்த்ததும் – அப்பாடா இவர்களுக்கு எழுத வேண்டிய
விதம் இது தான் என்று தோன்றுகிறது.
நான் எழுதியதை இப்போது படித்தால்-
எனக்கே வெறுப்பாக இருக்கிறது –
இந்த சொரணை கெட்ட மனிதர்களுக்கு –
இவ்வளவு மென்மையாக வேண்டுகோள்
வைத்திருக்கிறேனே என்று !
அமைச்சர்களை விடுங்கள் – அவர்களுக்கு ஆயிரம்
வேலைகள் இருக்கும் !(வாங்கிப் போடவே
நேரம் பத்தாது !!)
எம்.எல்.ஏக்கள், மாவட்டங்கள், வட்டங்கள்
ஏன் குறைந்த பட்சம் கார்பரேஷன் கவுன்சிலர்களை
எடுத்துக் கொள்ளுங்களேன்.
ஒருவருக்காவது உரைக்காதா ?
இப்படி ஒரு தேவை – குறை இருப்பது அவர்களுக்கு
தோன்றவே தோன்றாதா ?
(இத்தனைக்கும் – இதிலும் வழக்கம்போல்
கமிஷனுக்கு வழி இருக்கிறது !)
ஏன் இப்படி சொரணையற்றுக் கிடக்கிறார்கள் ?
பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் அரசியல்வாதிகள்
பொது மக்களின் அவசியத் தேவைகளைப் பற்றி
அறியாமல், உணராமல் – அல்லது உணர்ந்தும்
சொரணை இல்லாமல் இருப்பது எப்படி ?
வருவார்கள் மீண்டும் கூடிய விரைவிலேயே –
நம் முகத்தைப் பார்ப்பதற்கு.
மக்கள் தயாராக இருக்க வேண்டும்
இத்தகைய கேள்விக் கணைகளுடன்.
காரியம் நடக்கிறதோ இல்லையோ –
மக்களைச் சந்திக்கும்போது கேள்வி கேட்பார்களே
என்கிற பயமாவது இருக்கும்.
இது போல் மக்கள் பிரச்சினைகளைப் பற்றி
நிறைய பேர் எழுத வேண்டும்.
சம்பந்தப்பட்டவர்கள்
இத்தகைய வலைத்தளங்களை பார்த்துக்கொண்டு
தான் இருப்பார்கள்.
அல்லது – பார்ப்பவர்கள் யாராவது அவர்களிடம்
சொல்லத்தான் செய்வார்கள்.
மக்களின் எண்ண ஓட்டங்கள் எப்படி இருக்கின்றன
என்பது அவர்களுக்கும் தெரியட்டுமே !!
நண்பர் வில்லவனுக்கு,
பாராட்டும், வாழ்த்துக்களும்.
————————————————————————————
அடிப்படை தேவைகள்
Posted on ஜூலை 29, 2009 by vimarisanam –
kavirimainthan|
அடிப்படைத்தேவைகள்
சென்னை மாநகராட்சி அண்மையில் சென்னை நகரை
அழகு படுத்தும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு
வருகிறது. அதன் ஒரு பகுதியாக –
நகரில் குறிப்பிட்ட சில இடங்களை தேர்ந்தெடுத்து
அந்த இடங்களில்
சுவரொட்டிகளை ஒட்டவும்,
சுவர் விளம்பரங்களில் ஈடுபடவும் தடை விதித்திருக்கிறது.
மேலும்,தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களில்
அழகுணர்வுடன், தமிழ் பண்பாட்டை விளக்கும்
வண்ண சுவர் ஓவியங்களும் வரையப்படும்
என்றும் அறிவித்திருக்கிறது.
சந்தேகமே இல்லாமல் வரவேற்கக்கூடிய –
பாராட்டக்கூடிய – செயல்களே இவை !
மனதார வரவேற்கிறோம் – பாராட்டுகிறோம் !!
சென்னைக்கு மட்டும் இல்லாமல்
தமிழ்நாடு முழுவதற்கும் ஏற்ற
யோசனைகள் இவை !!! மற்ற பெரிய
நகரங்களும் இதனை மேற்கொள்ள தமிழக அரசு ஆவன
செய்யலாம்.
ஆனால் – முக்கியமான மற்றொரு கருத்தையும்
இந்த சமயத்தில் வலியுறுத்த வேண்டி இருக்கிறது.
நகரை அழகுபடுத்துவது எவ்வளவு முக்கியமோ
அதை விட பன்மடங்கு முக்கியம் அடிப்படை
சுகாதாரம்/ அன்றாட கழிப்பிட தேவைகள்.
குடிசைகள் நிறைந்த சென்னை மாநகரத்தில் –
எனக்குத்தெரிந்து – ஒரு இடத்தில் கூட
இலவச கழிப்பறை இல்லை.
விளைவு -பல தெருக்களில் மூத்திர நாற்றம் !
முழு விலையை கொடுத்து அரிசி வாங்கி சாப்பிட
இயலாதவர்கள் ஏழை மக்கள் என்பதை
உணர்ந்து தானே –
கிலோ அரிசி ஒரு ரூபாய் என்று
அரசாங்கம் கொடுக்கிறது ?
அரிசியை கிலோ ஒரு ரூபாய்க்கு கொடுக்கும் அரசு –
ஒரு தடவை மூத்திரம் போக ஒரு ரூபாய் என்றும்
ஒரு தடவை மலம் கழிக்க இரண்டு ரூபாய் என்றும்
வசூலித்தால் எங்கே போவார்கள் மக்கள் ?
போக்கிடம் சந்து முனை தானே?
ஒரு குடும்பத்தில் குறைந்தது 4 பேரையாவது கொண்ட –
குடிசைகளில் வசிக்கும் மக்கள் அன்றாடம் இயற்கை
கழிவுகளை கழிக்க எப்படி காசு செலழிக்க முடியும் ?
இந்த விஷயம் –ஏழை மக்களின் இந்த அடிப்படை
தேவைகள் – மாநகராட்சியிலோ – அரசாங்கத்திலோ –
முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு தெரியாதா ?
பின் ஏன் இந்த அலட்சியம் ?? பாராமுகம் ???
முக்கால்வாசி கட்டண கழிப்பறைகளின் வசூல்
முக்கிய உள்ளுர் அரசியல்வாதிகளுக்கு
போய் சேருகிறது என்பது உண்மையா ?
தேவைப்படும் இடங்களில் எல்லாம்,
முக்கியமாக குடிசைகளில் வசிக்கும் பெண்களின் நிலையை
கருதியாவது –
கட்டணம் வசூலிக்காத கழிப்பறைகளையும்,
குளியலறைகளையும் – கட்டிக்கொடுத்து, அவற்றை நல்லபடியாக
பராமரிப்பது மாநகராட்சி மற்றும் அரசாங்கத்தின்
முக்கிய கடமை இல்லையா ?
அப்படி என்ன செலவு ஆகவிடப்போகிறது ?
இடம் ஏற்கெனவே அரசுக்கு சொந்தமாக இருக்கப்போகிறது.
ஒரு கழிப்பறை/குளியலறை கட்ட
மிஞ்சிப்போனால் ஒரு லட்சம் ரூபாய் ஆகலாம்.
ஒரு கோடியில் 100 கட்டலாம்.
10 கோடி ஒதுக்கினால் சென்னையில்
மட்டுமே 1000 கட்டலாம். எத்தனையோ தொண்டு
நிறுவனங்களும்
இந்தப்பணியில் உதவ முன் வரும்.
இதனை செய்ய அரசாங்கத்தால் முடியாதா ?
மனம் இருந்தால் வழியா இல்லை ?
போனது போகட்டும் – இப்போதாவது
செய்யுங்களேன் – please !!!



இந்த எருமாட்டு அதிகாரவர்க்கத்துக்கு உறைக்கும்னு நீங்க நிணைக்கிறீங்களா..?
எதிர்க்கட்சிகள் உண்மையிலேயே இதை ஒரு வாக்குறுதியாகவே கொடுக்கலாம். மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும்.
நன்றி காவிரிமைந்தன்.
மேற்கூறிய இந்த இடுகை மிக சாவகாசமான மனநிலையில் எழுதப்பட்டது. பேருந்துகளில் நீண்டதூரம் பயணிப்பவர்கள் எல்லோரும் அனுபவிக்கும் சிரமங்கள்தான் இவை. ஒரு நண்பர் இதைக் குறிப்பிட்டு சொல்லியே கட்டுரையொன்றை எழுதுமாறு கேட்டுக்கொண்டார்.
ரயிலில் அடிபட்டு இறப்போரில் பலர் அங்கு காலைக்கடன் கழிக்கச்செல்வோர்தான் என நான் கேள்விப்பட்டதுண்டு. நாஞ்சில் நாடன் நாவல் ஒன்றில் கழிப்பறையில்லாத குடிசைவாசிகளின் மழைக்கால சிரமங்கள் பற்றி விரிவாக சொல்லப்பட்டிருக்கும்.
நம் மக்களில் அனேகர் எதிர்கொள்ளும், ஒரு முக்கியமான இடையூறு பற்றி பரவலாக விவாதிக்க கூச்சப்படும் நிலையே இங்கு நிலவுகிறது. எனக்குமே இந்த தயக்கம் கட்டுரை எழுதும்வரை இருந்தது. எனவேதான் வழக்கமான நடையில் இல்லாமல் சற்று மென்மையான இடுகையாக இதை வெளியிட்டேன். (அவ்வளவு கோபமான இடுகையாவா தெரியுது??).
இத்தனை பேரால் இந்த இடுகை வாசிக்கப்படும் என நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை.. தமிழகத்தில் அதிகம் கவனிக்கப்படாதிருந்த ஒரு விடயத்தைப் பற்றி எழுதியதில் ஒரு திருப்தியென்றால், அது உங்களைப்போல நண்பர்களால் பரவலாக கொண்டு செல்லப்பட்டதில் கூடுதல் மகிழ்ச்சி.
மற்றபடி இது எல்லோராலும் எழுதமுடிகிற கட்டுரையே.. உங்களது ஆரம்பகால கட்டுரைக்கும் எனது இடுகைக்கும் உள்ள வேறுபாடு அவற்றின் நீளம் மட்டுமே, உள்ளடக்கம் என்னவோ ஒன்றுதான், இல்லையா?
நன்றி,
வில்லவன்.
//குடிசைகள் நிறைந்த சென்னை மாநகரத்தில் –
எனக்குத்தெரிந்து – ஒரு இடத்தில் கூட
இலவச கழிப்பறை இல்லை.
விளைவு -பல தெருக்களில் மூத்திர நாற்றம் !//
இலவசமா கூட வேண்டாம்.கட்டண கழிப்பிடமே கூட இல்லாமல் மூர்மார்க்கெட் மூத்திர சந்தாகத்தான் காட்சியளிக்கிறது.
ஸ்டாலின் தற்போது லண்டன் போயிட்டு வந்தாராமே!இன்னும் பல நாடுகள் சுற்றுப்பயணம் போய் வாருங்கள் ஸ்டாலின்.
சிங்கார மூத்திர சென்னை மாற்றமும்,கூவம் சுத்தப்படுத்தலுமே எந்த ஒரு ஆட்சியின் சாதனையாக இருக்கும்.
காவிரிமைந்தன் அவர்களே ….கழிப்பிட வசதி செய்துகொடுக்கதான் ஆறாவதுமுறையும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்க கேட்கிறாரோ ……..?!