இது என் தேசம் –
இவர்களும் எம்மக்கள் –
இதில் ஒருவர் எமக்குத் தலைவி !
தடுக்கி விழுந்தால் கண்ணில் படுவது
அரசியல்வாதிகள் தான்.
99 விழுக்காடு – கடைந்தெடுத்த
சுயநலவாதிக் கூட்டம் !
விழித்திருக்கும்போதே
சுருட்டும் கூட்டம் !
110 கோடி மக்கள்.
இதில் ஒரு தலைவர் உருவாக முடியாதா ?
உருவாக்க இயலாதா ?
தனக்குள் ஒரு தலைவனைத் தேட
வக்கில்லாதவர்கள் –
இவர்களை
மேய்க்க தலைவர் ஒருவர் மேற்கே இருந்து
தான் வரவேண்டுமாம் !
காந்திக்கு எந்த சம்பந்தமும்
இல்லாத ஒரு காந்தி !
பெற்றவளைப்
பரிதவிக்க விடுவார்கள் –
யாரையோ “அன்னை”யென கொண்டாடுவார்கள்.
சொந்த அன்னை –
பிறந்த தேதி தெரியாது – ஆனால் –
வந்த “அன்னை”யின் பிறந்த நாளை
விமரிசையாகக் கொண்டாடுவார்கள்.
அந்த அன்னையோ –
ஊரில், உலகில் இது வரை யாரும்
பார்க்காத அன்னை !
ஒன்றரை லட்சம் உயிர்களை
காவு கொண்ட பிறகு-
மூன்று லட்சம் பேர்,
வீடிழந்து, உறவிழந்து,
உறுப்பிழந்து சொந்த நாட்டிலேயே
அகதிகளாக ஆன பிறகு –
கண்ணகி செய்தால் பத்தினித் தெய்வம் –
நான் செய்தால் ஏசுவீரோ – என்பது போல்
மௌனப் புன்முறுவல் பூத்துக்
கொண்டிருக்கும் மோனாலிசா!
வாய் திறந்து ஏதும் பேசாமலே
அத்தனையையும்
நடத்திக் கொண்டிருக்கும்
ஓர் அற்புத அன்னை.
சுவாமியைக் கேட்டால் –
கொலையும் செய்வாள் பத்தினி என்பார் !
குருமூர்த்தியோ – 40,000 கோடி
ஸ்விஸ் அக்கௌன்டில் என்பார் !!
வெண்குல்லா மக்களைக் கேட்டாலோ –
“உரைசால் பத்தினிக்கு
உயர்ந்தோர் ஏத்தல்” என்பர் !
இத்தனை பெரிய நாட்டினை
ஆண்டு கொண்டிருப்பவர் அவரே-
அத்தனை பேரையும் ஆட்டி வைப்பவரும் அவரே –
ஆனால் – எந்த அரசு பதவியையும் வகிக்காதவர்.
யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய
அவசியம் இல்லாதவர் !
அனைத்து சுகங்களையும்
அனுபவித்துக்கொண்டிருக்கும் இவர் –
ஒரு அதிசய தியாகி !
பத்திரிகையாளர்களை
என்றாவது
சந்தித்தது உண்டா ?
கேள்வி கேட்க எவரையாவது
அனுமதித்ததுண்டா ?
அவர்களைச் சொல்லி என்ன பயன் ?
ஏமாறுபவர் இருக்கும் வரை
ஏமாற்றுபவர் இருக்கத்தானே செய்வர் ?
தான் யாரால் மேய்க்கப்படுகிறோம்
என்பதைக் கூட உணரத் தெரியாத
ஒரு ஆட்டு மந்தை –
நம் மக்கள் கூட்டம் !
உலகில் வேறு எங்கும்
காண முடியாத அதிசயக் கூட்டம் !
இந்த லட்சணத்தில் “அங்கே” ஒரு கூட்டம் –
“இங்கே” ஒரு கூட்டம் !
இது தான் என் தேசம் !
இவர்கள் எம்மக்கள் !!
அய்யோ – இவர்களில் நானும் ஒருவனா ? !!!



excellent. Shame on us