………………………………………………………………………………………………….
1921 முதல் 1940 வரையிலான 20 ஆண்டுகளில், சுபாஸ் சந்திர போஸ் – 11 முறை பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சுபாஷின் அறிவாற்றலும், அவருடைய திட்டமிட்ட தீவிர அரசியல்
ஈடுபாடும் விடுதலை போராட்டத்திற்கு வேகமூட்டியது.
1928 ஆண்டு டிசம்பரில், கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், “முழு சுதந்திர’த்திற்கு குறைவான எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது”
என்ற தீர்மானத்தை சுபாஸ் கொண்டுவந்தார். ஆனால்
மகாத்மா காந்தியின் எதிர்ப்பு காரணமாக அந்த தீர்மானம்
வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டது.
ஆனால், அதற்கு அடுத்த ஆண்டு 1929-ல் லாகூரில் ஜவஹர்லால் நேரு தலைமையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் முழு சுதந்திர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் தலைவராக சுபாஸ் சந்திர போஸ் நியமிக்கப்பட்டு அடுத்த 9 ஆண்டுகள் தொடர்ந்து இந்தப்பணியில் ஈடுபட்ட சுபாஸ்,
தன் பேச்சாலும், மிகச்சிறப்பான செயல்பாடுகளாலும்
அகில இந்திய அளவில் மட்டுமன்றி, இந்தியாவைத் தாண்டி
வெளிநாடுகளிலும் பேசப்படும் நிலைக்கு உயர்ந்தார்.
1938-ல், இந்திய விடுதலை இயக்கத்திற்கு ஆதரவு தேடி சுபாஸ் சந்திர போஸ் ஐரோப்பாவில் பயணம் செய்து கொண்டிருக்கையிலேயே –
இந்தியாவில், அகில இந்திய காங்கிரஸ் கூடி, அதன் தலைவராக
அவர் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால், சுபாஸ் சந்திர போஸின் வேகமும், செயல்பாடும்
மிதவாதியான காந்திஜிக்கு பிடிக்கவில்லை. எனவே, அதற்கு
அடுத்த வருடம் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு,
நேதாஜியின் பெயர் பரிசீலனையில் இருக்கும்போதே –
மௌலானா ஆசாத் பெயரையும் சேர்க்க முயற்சி செய்தார்கள்.
கூடவே ஆந்திராவைச் சேர்ந்த பட்டாபி சீத்தாராமையாவும் நின்றார். நேருஜி இந்த காலகட்டத்தில், நீண்ட விடுமுறை எடுத்துக் கொண்டு, ஐரோப்பா சென்று தங்கி விட்டார்.
பின்னர் மௌலானா வாபஸ் வாங்கவே, சுபாஸ் சந்திர போசுக்கும் பட்டாபி சீத்தாரமையாவுக்கும் நேரடி போட்டி நிகழ்ந்தது. பட்டாபி தனது ஆதரவு பெற்ற வேட்பாளர் என்று கூறி
காந்திஜி வெளிப்படையாகவே ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டார்.
தமிழகத்திலிருந்து காங்கிரஸ் மாநாட்டிற்கு சென்ற
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரும் அவரது ஆதரவாளர்களும்,
நேதாஜியின் வெற்றிக்கு தங்கள் முழு ஆதரவையும்,
ஒத்துழைப்பையும் தந்து உழைத்தனர்….
இறுதியில் 1939-ல் திரிபுராவில் நடந்த அகில இந்திய காங்கிரஸ்
கட்சித்தலைவர் தேர்தலில் நேதாஜி -1580 ஓட்டுக்களையும்,
பட்டாபி சீத்தாரமையா -1377 ஓட்டுக்களும் பெற்று,
நேதாஜி தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால், நேதாஜியின் தேர்வு காந்திஜிக்கு ஏமாற்றம் அளித்தது.
காந்திஜி வெளிப்படையாகவே ” பட்டாபியின் தோல்வி – என் தோல்வி” என்று கூறினார். இது காங்கிரசில் ஒரு பெரிய பிளவையும், ஒரு பிரிவினரிடையே நேதாஜிக்கு எதிரான துவேஷ உணர்வையும் உருவாக்கியது.
நேதாஜி, காரிய கமிட்டி உறுப்பினர்களை நியமிப்பதில் காந்திஜியின்
ஆலோசனைகளை கோரியபோது, காந்திஜி ஒத்துழைக்கவில்லை.
உங்கள் இஷ்டம் போலவே செய்து கொள்ளுங்கள் என்று கூறி
விட்டார். காந்திஜியே வெளிப்படையாக இப்படிச் சொன்ன பிறகு,
கட்சியில் யார் அவருடன் ஒத்துழைப்பார்கள்…?
இத்தகைய விரோத போக்குகள் –
நேதாஜிக்கு மனவருத்தத்தையும்,
காங்கிரஸ் தலைவராக தொடர்ந்து செயல்படுவதில் பல
சிக்கல்களையும் உருவாக்கியது. இறுதியில் – சுபாஸ் சந்திர போஸ் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இருந்தாலும், தான் விரும்பிய விதத்தில் செயல்பட,
கட்சிக்குள்ளேயே Forward Block – முற்போக்கு அணி
என்கிற பெயரில் ஒரு குழுவைத் துவங்கி தன் ஆதரவாளர்களைச்
சேர்த்துக் கொண்டு செயல்படத்துவங்கினார்.
பார்வர்ட் பிளாக்கிற்கு காங்கிரஸ் கட்சிக்குள் செல்வாக்கு பெருகியது.
காங்கிரஸ் கட்சிக்குள் மோதலும் முற்றியது. அதன் விளைவாக,
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சியில் நேதாஜி
எந்தவித பொறுப்பும் வகிக்கக் கூடாது என காங்கிரஸ் தலைமை
தடையுத்தரவை பிறப்பித்தது.
இதே சமயத்தில், செப்டம்பர் 1939-ல் இரண்டாம் உலகப்போர்
துவங்கியது. இந்தப் போரில், வெள்ளையர் அரசை எதிர்த்து,
நேதாஜியும், அவரது குழுவினரும் கடுமையாக பிரச்சாரம் செய்தனர்.
1940 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், சுபாஸ் சந்திர போஸ்
பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்து தன்னை விடுவிக்கா விட்டால்
தான் பட்டினி கிடந்து சாவேன் என்று
சுபாஸ் எச்சரிக்கை விடுத்தார். தங்கள் சிறையில் நேதாஜி
உயிர்விடுவதை விரும்பாத பிரிட்டிஷ் ஆட்சி அவரை விடுவித்து,
ஆனால் – கல்கத்தாவில் இருந்த அவரது வீட்டிலேயே,
வீட்டுக்காவலில் வைத்தது.
அவருடைய வீட்டைச் சுற்றி கடும் கண்காணிப்பு போடப்பட்டது.
பிரிட்டிஷ் ஆட்சி போட்ட கட்டுக்காவலையும் மீறி, அடுத்த ஆண்டு
துவக்கத்தில், அதாவது 1941 ஜனவரி 14 ஆம் நாள் நேதாஜி
பிரிட்டிஷ் அரசுக்கு கடுக்காய் கொடுத்து விட்டு தப்பிச் சென்றார்.
வீட்டுக் காவலில் இருந்து தப்பிய நேதாஜி எங்கு சென்றார்,
எப்படிச் சென்றார் என்று பிரிட்டிஷ் அரசு அலையோ அலையாய்
அலைந்தது. ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
அடுத்த 12 வாரங்கள் சாலை வழியாகவும்,
ரயில் வழியாகவும், கார் வழியாகவும், – பல வித்தியாசமான
தோற்றங்களில், மாறுவேடங்களில் –
நேதாஜி இந்தியாவைக் கடந்து, ஆப்கானிஸ்தான் வழியாக
ரஷ்யா சென்றார்… பின் அங்கிருந்து, ஆர்லாண்டோ மஸ்ஸோட்டா என்ற இத்தாலிய பெயரில் கடவுச் சீட்டுப் பெற்று மேலும் பயணம் செய்து ஏப்ரலில் ஜெர்மன் தலைநகர் பெர்லினை அடைந்தார்.
பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ராணுவ ரீதியிலான போராட்டம்
நடத்த வேண்டும் என்ற தனது நீண்டநாள் திட்டத்திற்கு ஒரு
செயல் வடிவம் கொடுக்கும் களமாகவே
ஜெர்மனியை பயன்படுத்திக் கொண்டார் நேதாஜி.
ஜெர்மன் அயலுறவுத் துறை அமைச்சகத்தில் பணியாற்றிய
ஆடம் வான் டிராட் ஸு சோல்ஸ் என்பவரின் உதவியுடன்
ஜெர்மன் அரசிடமிருந்து தன் செயல்பாடுகளுக்கான,
நிர்வாக ரீதியான உதவிகளைப் பெற்றார்.
” இந்தியாவின் நண்பர்கள் ” என்கிற அமைப்பு ஒன்று
ஏற்கெனவே ஜெர்மனியில் செயல்பட்டுக் கொண்டிருந்தது.
கூடவே ” சுதந்திர இந்தியா மையம் ” ((Freedom India Centre) என்கிற அமைப்பினையும் நேதாஜி பெர்லினில் தொடங்கினார். அதற்கு குறைந்தபட்ச அரசு அங்கீகாரத்தையும் (Semi Diplomatic Status) ஜெர்மனி அரசிடமிருந்து பெற்றார்.
“Azad Hind Radio” -சுதந்திர இந்தியாவின் வானொலி நிலையம்
என்கிற பெயரில் ஒரு ரேடியோ அலைவரிசை பெர்லினில்
இருந்து கொண்டு, நேதாஜியால் துவக்கப்பட்டது. கூடவே,
துணை அமைப்புகளாக azad muslim radio, national congress
radio என்கிற பெயர்களிலும் ஒலிபரப்புகளைத் துவக்கினார்.
இந்த வானோலி நிலையங்கள் அனைத்தும் –
இந்திய விடுதலைப்போராட்டம் குறித்த செய்திகளையும்,
உலகப் போர் குறித்த செய்திகளையும் ஒலிபரப்பின.
நாஜி கொள்களை பாராட்டியோ, ஹிட்லரின் நடவடிக்கைகளை
ஆதரித்தோ எந்தவித செய்திகளையும் பரப்பும் கருவிகளாக இந்த வானொலிகள் செயல்படாதவாறு நேதாஜி பார்த்துக் கொண்டார்.
அடுத்த முயற்சி, இந்திய தேசிய ராணுவம் அமைக்கவும்,
அது செயல்படவும் தேவையான நிதி மற்றும் நிர்வாக ரீதியான
உதவிகளை ஜெர்மன் அரசிடமிருந்து பெறுவது. நிதியுதவியை –
அன்பளிப்பாக அல்ல – திரும்பக் கொடுக்கப்படக்கூடிய –
சுதந்திர இந்தியாவிற்கான – கடனாகவே கோரினார் நேதாஜி.
இதற்காக அவர் ஹிட்லரை நேரில் சந்தித்தது
இன்றளவிலும், பரபரப்பாகப் பேசப்படும் ஒரு விஷயம்….!!!
(தொடர்கிறது – பகுதி-4-ல் )
……………………………………………………………………………………………………………………………………………………………………
நேதாஜி பற்றிய தொடரில் 3-வது பகுதி இந்த இடுகை.
இதற்கு முந்திய 2 -வது பகுதியை பார்க்க –












[…] […]