ஒரு கோடி மெழுகுவத்திகள் – சுப்ரபாரதிமணியன்

………………………………………………………………………………

………………………………………………………………………………..

வலது கை பட்டு மெழுகுவத்தி பாக்கெட் கீழே விழுந்ததால் மொசைக் தரையில் சத்தம் எழுந்தபோதுதான், மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்தப் பகுதி முழுவதும் இருளடைந்தது. சுகன்யா நின்றிருந்தது சூப்பர் மார்க்கெட் மாலின் இரண்டாவது தளத்தில். உலகம் இருண்டுவிட்டது. பூனையாகக் கண்களை மூடியிருந்தாள் சுகன்யா.

கைபேசி ஒளிர்ந்து, ‘கண்ணம்மா… கண்ணம்மா…’ என்றது. இந்தச் சமயத்தில் கைபேசியை எடுத்துப் பேசிவிடக் கூடாது. எடுக்கவில்லை என்றால், வகுப்பில் இருப்பதாக அம்மா நினைத்துக் கொள்வாள். அது சௌகர்யம். எடுத்துவிட்டால், கல்லூரியில் இல்லை என்பதையும் வெளியில் இருப்பதையும் காட்டிக்கொடுத்துவிடும். வேண்டாம்… எடுத்துப் பேசி மாட்டிக்கொள்ள வேண்டாம்.

கைபேசியில் ‘செல்ஃபி’ எடுத்துக்கொள்ளலாம். அது சூப்பர் மார்க்கெட்டில் இருப்பதையோ, வேறு எங்கு இருப்பதாகவோ காட்டினால்கூட பரவாயில்லை. ஐந்து மெகா பிக்ஸல் இருக்கும்படி ஒரு புது கைபேசி வாங்கிவிட வேண்டும் என்பது சுகன்யாவின் சமீபகாலக் கனவு.

‘தொடாமல் பார்க்கவும்’ என அகழ்வாராய்ச்சிக் கூடங்களில் இருப்பதுபோல் தொங்கும் போர்டுகள் மட்டும்தான் அங்கு இல்லை. மற்றபடி, இப்போதைய பெரிய மளிகைக் கடைகளும் சூப்பர் மார்க்கெட்களும் மால்களும் அகழ்வாராய்ச்சிக் கூடங்கள்போல் இருப்பதாக அவளுக்குத் தோன்றும். மளிகைக் கடை என்றால், ‘என்ன அண்ணாச்சி… எப்படி இருக்கீய?’ எனப் பேசிக்கொண்டே நான்கு அரிசிமணிகளை வாயில் போட்டுக்கொள்ளலாம்; புளித் துணுக்கை எடுத்துப் பிய்த்துப் போட்டுக் கொள்ளலாம். பெரிய இடங்களில், கடைகளில், மால்களில் அதெல்லாம் இல்லாமல் போய்விட்டன. பாலித்தீன் பைகளுக்குள்ளும் அட்டைப்பெட்டி களுக்குள்ளும் எல்லாம் அடைபட்டுவிட்டன. எதையும் கண்களால் பார்ப்பதோடு சரி. ‘என்னை ஏதாச்சும் செய்யேன்…’ என அவை சவால்விட்டபடி இருக்கும். அடுக்குகளில் விரிந்துகிடக்கும் பாலித்தீன் பொட்டலங்களையும் டப்பாக்களையும் பார்த்துக்கொண்டிருந்தாள் சுகன்யா. அந்த நேத்ரா மாலில் பாலித்தீனின் ஆதிக்கம் அதிகம் என்பதுபோல், எல்லா பொருட்களுமே பாலித்தீன் பையினுள் மலிந்துகிடந்தன.

அப்போது மின்சாரம் மீண்டுவந்ததால் அங்கு இருந்த இருட்டு விலகி, மெழுகுவத்தியை ஏற்றிவைத்த மாதிரி அவளுக்குள் சின்னப் பரவசம் வந்தது. வீட்டில் மெழுகுவத்தி இல்லாதது பற்றி அம்மா சொன்னது ஞாபகம் வந்தது. எப்போது வேண்டுமானாலும் போகும்… வரும். அதுதான் மின்சாரம்.

எதிரில் இருந்த வரமிளகாய் பொட்டலத்தின் விலை, அவளைப் பயமுறுத்தியது. மிளகாய் அரைக்கிற பழக்கம் மறைந்துவிட்டது பற்றி, அம்மா போனவாரம் சொல்லிக்கொண்டிருந்தாள். இப்போது எல்லாம் பொட்டலமாகக் கிடைக்கின்றன. மசாலா பொடியில், மிளகாய்ப் பொடியில் செங்கல் தூள் இருப்பதாக, அதை அம்மா சமைக்கத் தூவும்போது சுகன்யா நினைப்பாள். ரசமோ, சாம்பாரோ கொதிக்கிறபோது வரும் மணம் அவளுக்குப் பிடித்திருந்தது. அப்போதெல்லாம் அவள் செங்கல் தூளை நிராகரித்தே மணத்தை நுகர்வாள்.

‘இந்த மணத்தையே இப்பிடி ரசிக் கிறியே… உங்க பாட்டி செஞ்சு குடுக்கிற மிளகா, கொத்துமல்லிப் பொடினா அதுக்குள்ளயே வுழுந்து கெடப்ப!’ என்கிற அம்மாவுக்கு உதவுவதோடு சரி. ஒரு நாள்கூட முழுமையாகச் சமைத்தது இல்லை. ‘நல்லா சமையல் பண்ணினா, புருஷன்னு எவனையாவது கண்டுபுடிச்சு அவன்கூட தொரத்திருவேனு பயமாடி? காலேஜ் படிக்கிற பொண்ணு, பாடத்தோடு இதையும் கத்துக்கணும்’ என்றுகூட அம்மா சொல்லியிருக்கிறாள்.

சுகன்யாவின் தலை வலது பக்கம் திரும்பியபோது, அவளைப் பார்த்துக் கொண்டிருந்த கறுப்புக் கண்ணாடிக்காரன், தன் பார்வையைத் தாழ்த்தி ஹார்லிக்ஸ் பாட்டிலுக்குள் புகுத்திக்கொண்டான். 360 டிகிரி கோணத்தில் தலையைத் திருப்பினால், இதுபோல் பல கறுப்பு, சாதாரண கண்ணாடிக்காரர்கள் தென்படுவர். வெகு பாதுகாப்பாக இருப்பதற்காக வந்த இடம் என்பதை தனக்குள் சொல்லிக்கொண்டாள். ‘இல்லை… பாதுகாப்பு இல்லையோ…’ என முனகிக்கொண்டாள்.

இடது பக்கத்தில், முக்கால் பேன்ட்டும் டாப்ஸும் அணிந்திருந்த பெண் ஒருத்தி, தன் இரண்டு வயதுக் குழந்தையைத் தரதரவென இழுத்தாள். அந்தக் குழந்தையின் கையில் சாக்லேட் பார் ஒன்று இருந்தது.

”இன்னொண்ணும்மா..!” என அது குழறியது.

சென்ற முறை வந்திருந்தபோது இப்படித்தான் ஒருத்தி, ‘கனிஷ்… கனிஷ்…’ எனக் கத்தியபடி திரிந்து கொண்டிருந்தாள்.

”வீட்டுக்காரரா..?”

”அவரை இவ்வளவு மரியாதையா கூப்பிடணுமா… என்ன?”

”பின்னே..?”

”மை சன். ஐஸ்கிரீம் வாங்கிறப்போ எங்க போனானோ?” இன்னொரு ஐஸ்கிரீமை வாயில் வைத்தபடியே முக்கால் பேன்ட்காரி குழந்தையைத் தேடினாள்.

சுகன்யாவுக்கும் முக்கால் பேன்ட்டும் டாப்ஸும் போட ஆசைதான். ஆனாலும் அப்படியெல்லாம் போட்டுக்கொண்டு சேரியில் இருந்து கிளம்பிவிட முடியாது. படிப்பு முடிந்து வேலைக்குப் போனால்தான், அதெல்லாம் போட முடியும்.

சுகன்யா பேருந்தைவிட்டு இறங்கி யதும், இன்றைக்குக் கல்லூரிக்குப் போவது இல்லை என முடிவு செய்திருந்தாள். ரசாயன வகுப்பு அசைன்மென்ட் முடித்திருக்கவில்லை. கல்லூரிக்குப் போனால், முடிக்காத தற்காக அபராதம் கட்ட வேண்டும். போகாமல் இருந்தால், கல்லூரிக்கு வராததற்காக அபராதம் கட்ட வேண்டும். இரண்டும் ஒன்றுதான். அதற்காக வீட்டிலும் இருக்க முடியாது.

எப்போதும் வீட்டில் இருக்க முடியாததற்குக் காரணம், அவள் அப்பா டாஸ்மாக் வாசனையோடு வீட்டில் இருப்பார். அரசு கஜானாவை நிரப்பும் பொறுப்பான குடிமகன் என நினைத்துக்கொள்வார். இன்றைக்கு வீட்டில் இருக்க முடியாததற்குக் காரணம் இருந்தது… அப்பாவை ஜாமீனில் எடுக்க அம்மா காவல் நிலையம் செல்கிறாள். ‘நீயும் வாயேன்…’ என அழைத்துச் சென்று அங்கே நிற்கவைத்துவிட்டால், சிரமமாக நெளியவேண்டும்.

அப்பா ராம்ராஜ், 25 வருடங்களாகக் குடிப்பவர். முன்பெல்லாம் கள்ளச்சாராயம், பாலக்காடு கள், நம்பியாம்பாளையம் ஒரு மரத்துக் கள் எனக் குடிப்பார். டாஸ்மாக் வந்த பின், வார்த்தை மாறாதவர் மாதிரி வேறு எந்தக் கடைக்கும் வகைக்கும் மாறாதவர். போன வாரம் அவர் வாங்கின குவார்ட்டர் சரக்குக்கு, ஐந்து ரூபாய் அதிகம் வாங்கினார்கள் என டாஸ்மாக் கடை வாசலில் உட்கார்ந்து போராட்டம் நடத்தியவரை, யாரோ வீட்டுக்குத் தள்ளிக் கொண்டு வந்து போட்டுவிட்டுப் போனார்கள். உடலில் கொஞ்சம் காயம் இருந்தது. யாரோ அடித்திருக்க வேண்டும். ‘அதெல்லாம் இல்லை’ என்றுதான் சொன்னார்.

தூங்கி எழுந்தவர், சுகன்யாவிடம் பேப்பர் ஒன்றை வாங்கி எழுதிக்கொண்டே இருந்தார்.

”என்னப்பா… மனுவா?”

”போராட்ட அறிவிப்புக்கு முந்தின ஏற்பாடு!”

”அப்படின்னா..?”

”மொதல்ல தலைமைச் செயலகத்துக்கும் சூப்பரின்டெண்டன்ட் ஆஃப் போலீஸுக்கும் ஒரு மகஜர் அனுப்புறேன்!”

”என்னன்னு… ‘ரேஷன் கடையில ஒரு கிலோ பிளீச்சிங் பவுடர் வாங்கினாத்தான் ஐந்து கிலோ கோதுமை போடுவோம்’னு சொல்றாங்களே… அதைப் பத்தியா..?”

”அது உங்க கோரிக்கை… எங்க கோரிக்கைனு தனியா இருக்குதுல்ல.’

‘அப்படியா?”

”கேட்டுத் தெரிஞ்சுக்க. ஒண்ணு… வாங்கிற சரக்குக்கு பில் கொடுக்கணும். ரெண்டு… கேமரா பொருத்திவெக்கணும். சரக்கு போட்டுட்டு பிளாட் ஆகிறவங்கிட்ட பர்ஸ், செல்போன், நகைனு திருடுறவங்களைப் புடிக்கணும். அதுக்கு கேமரா வேணும். ஜெனரேட்டர் இல்லாத பாருக்கு லைசென்ஸ் தரக் கூடாது. பவர் இல்லீன்னாவோ, கரன்ட் போயிருச்சுன்னாவோ, குடிச்சுட்டு டேபிள்ல வெக்கிற சரக்கு காணாமப்போயிருது. பார்ல குடிச்சுட்டு வெளியே வர்றவங்க வண்டி ஓட்டினா புடிக்கிறாங்க. அது சரி இல்லை. பாருக்குள்ள விக்கிற சாமான்களுக்கு விலை நிர்ணயம் வேணும். சால்னா அயிட்டம், டம்ளர் எல்லாத்துக்கும்…’

எழுதிவிட்டு சுகன்யாவிடம் ஸ்டாம்ப் கேட்டார். அவள் பர்ஸில் தேடி எடுத்தபோது ரெவின்யூ ஸ்டாம்ப்கள் ஐந்தும், ஐந்து ரூபாய் ஸ்டாம்ப் ஒன்றும் இருந்தன. இந்த வாரம் ஸ்காலர்ஷிப் வரும் என ரெவின்யூ ஸ்டாம்ப்புடன் காத்திருந்தாள் அவள்.

”அஞ்சு ரூபா ஸ்டாம்பு ஒண்ணுதான் இருக்கு!”

”ரெவின்யூ ஸ்டாம்பு ஒட்டலாமே. குடிமகன்கள் ஏதாவது ஸ்டாம்பு ஒட்டினா போதும்.’

‘பார்லிமென்ட்ல அதுக்கு சட்டத் திருத்தம் கொண்டார, இன்னொரு மனு எழுதுங்கப்பா!”

ஐந்து ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி யாருக்கு அனுப்பினார் எனத் தெரியவில்லை. ஒரு வாரம் கழித்து காவல் துறையில் இருந்து வந்து அப்பாவை அழைத்துக்கொண்டு போனார்கள். கைதுசெய்துவிட்டதாக தொலைபேசியில் தகவல் சொன்னார்கள். குடித்துவிட்டு ரகளை செய்ததால், சிறையில் அடைத்தார்களாம்.

‘அவர் எழுதிய மனுதான் அவரை சிறையில் அடைத்துவிட்டது’ என்றாள் அம்மா. அப்பாவை மீட்க, கொஞ்சம் காசு தயார் பண்ணிக்கொண்டு அம்மா இன்று காவல் நிலையம் செல்கிறாள்.

பனியன் கம்பெனி பீஸ் மடி வேலை சம்பளம், இன்று இல்லாமல்போகும் அவளுக்கு. ‘மங்கலம் கிராம வங்கி’க்குப் போய் விவசாயக் கடன் என்ற பெயரில், நகைக் கடனாகக் காசு வாங்கி வந்திருந்தாள். அம்மா கருமத்தாம்பட்டிக்கு வேறு இன்று போவதாகச் சொல்லியிருந்தாள், சித்தியைப் பார்க்க. சித்தி கிராமத்தில் அவளையும் சேர்த்து 49 விதவைகள் இருந்தனர். அனைவரும் மதுவால் செத்துப்போனவர்களின் மனைவிமார்கள்.

‘உங்கப்பா என்னையும் அந்த லிஸ்ட்ல சேர்த்துடுவார்…’ எனச் சொல்லி, பல தரம் அம்மா அழுதிருக்கிறாள்.

அம்மாவுக்கு, தொலைக்காட்சியில் இந்திப் படங்கள் பார்க்கப் பிடிக்கும். ‘யாதோன் கி பாராத்’ காலம் தொட்டு இந்திப் படங்களை விரும்பிப் பார்ப்பதாகச் சொல்வாள். வசனங்கள் புரியாவிட்டாலும் முழுக் கதையையும் தெரிந்துகொண்டவள் மாதிரி சொல்வாள்.

‘மொஹல் இ ஆசம்’ அவளுக்குப் பிடித்த படம். அதில் வரும் வசனம் ஒன்று அவளுக்குப் பிடித்திருப்பதை அடிக்கடி சொல்வாள். ‘இரவில் எரியும் மெழுகுவத்திகள் பகலில் அணைத்து விடப்படுவது ஏன் தெரியுமா? இரவின் ரகசியங் களை அவை பகலுக்குத் தெரியப்படுத்திவிடக் கூடாது என்பதற்காகத்தான். நீயும் அதுபோல வாயை மூடிக்கொண்டு இரு!’ என்பான் சலீம் அந்தப் படத்தில்.

‘அதுபோல, ஊட்டு ரகசியங்கள் என்கிட்டே பொதஞ்சுகெடக்கு!’ என்பாள்.

”இது எப்பிடி உனக்குப் புரிஞ்சுதும்மா?”

”எங்கேயோ படிச்சது அந்தப் பட வசனம். மனசுல நின்னுருச்சு. வாழ்க்கையோட இருட்டு மாதிரி…”

சட்டென மறுபடியும் மின்சாரம் போய், இருட்டு ஆக்கிரமித்தது. மாலில் மின்சாரத் தடை அவளைப் பயமுறுத்தியது. இருட்டைக் கண்டால், அவளுக்கு எப்போதும் பயம்தான்.

வீட்டில் உள்ள இரவு விளக்கு, மாலையானால் எரிய ஆரம்பித்துவிடும். இரவு முழுக்க எரியும். குறைந்த வெளிச்சம் இல்லாமல், அவளால் தூங்க முடியாது. இருட்டு வெகுவாகக் குறைந்த வெளிச்சம் எனச் சொல்லிக்கொள்வாள்.

உடனே ஜெனரேட்டர் போடுவார் களே… காணோம். எல்லாம் இருட்டில் கிடந்தன. எதிரில் மெழுகுவத்தி பெரிய சுருளாகக் கிடந்தது. இவ்வளவு பெரிய சுருளை வாங்க அவளிடம் காசு இல்லை. அம்மா மின்வெட்டு சமயங்களில் பெரிய பெரிய மெழுவத்திகளை வாங்குவாள். அவை உருகி மீண்டும் அவையே வளர்கிற மாதிரி, விறகுக்கட்டை தடிமனுக்கு என வகைவகையாக வாங்கிக்கொண்டு வருவாள். மாத மளிகை சாமான் சரக்குப் பட்டியலில் மெழுகுவத்தியைச் சேர்த்து நான்கு வருடங்கள் ஆகின்றன.

சோமனூர் சித்தியை கடைசியாகப் பார்த்தபோது, ஒரு தேவாலயத்தின் முன்புறம் மெழுகுவத்தி விற்றுக்கொண்டி ருந்தாள். அவள் மனநலம் பாதிக்கப்பட்ட வளாக ஒரு விடுதியில் இருந்தபோது, அங்கு தயாரிக்கப்படும் மெழுகுவத்திகளை ஞாயிறு அன்று தேவாலயம் முன்பு கொண்டுவந்து விற்பார்கள். ஐந்து வருடங்கள் விடுதியில் இருந்தவள் செத்துப் போனாள். அவளின் மகள் தங்கம் திருமணம் தடைபட்டு, அவள் சொந்த சாதியைவிட்டு கல்யாணம் செய்துகொண்ட பின்பு, சித்தப்பா நோயாளியாகிவிட்டார்.

தேவாலயங்களில் மெழுகுவத்திகளைப் பார்க்கிறபோது ஆச்சர்யமாக இருக்கும் அவளுக்கு. பகல் நேரத்திலும் எதற்கு இப்படி எரிந்து உருகுகின்றன. இதுவே இரவு நேரம் என்றால், மின்சாரத்தைத் துண்டித்துவிட்டுக்கூட வேடிக்கை பார்க்கலாம்.

பள்ளியில் படிக்கும்போது, வேளாங் கன்னிக்கு சுற்றுலா சென்றிருந்தாள். வகைவகையான மெழுகுவத்திகளை அங்குதான் பார்த்தாள். கடற்கரையில் இருந்து பார்க்கும்போது, தேவாலயம் பெரிய மெழுகுவத்திகளைச் சேர்த்து நிறுத்திவைத்த மாதிரி இருந்தது. ராட்சத மெழுகுவத்திகளாக தேவாலயக் கோபுரங்கள் நிற்பதாகத் தோன்றியது.

நிர்பயா மரணத்தின்போது, உள்ளூரில் கல்லூரி மாணவிகள் நடத்திய ஊர்வலங்களில் மெழுகுவத்தி ஏந்திதான் போராட்டம் நடந்தது. இரண்டாம் ஆண்டு பௌதீகம் படித்த செல்வராணி மீதான பாலியல் வன்முறையில் அவள் இறந்தபோதும் மெழுகுவத்தி ஏந்திப் போராட்டம் நடைபெற்றது. அவள் இருந்த வீட்டின் சொந்தக்காரன்தான் அப்படிச் செய்தவன்.

அடுத்த வரிசைக்கு வந்திருப்பதாக உணர்ந்தாள். இந்த வரிசையில் குழந்தைகளுக்கான பொருட்கள், வெவ்வேறு வகையான சோப்கள், வெவ்வேறு வகையான பவுடர்கள், சிறுசிறு விளையாட்டுப் பொருட்கள் வெகு ஒழுங்கமைப்புடன் இருந்தன. தான் இதில் எதுவும் உபயோகித்து வளர்ந்தவள் அல்ல எனச் சொல்லிக் கொண்டாள். ஒரே ரக சோப் வாழ்க்கை முழுவதும்; குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் அப்படியே ஒரு ஜென்மம் சென்றுவிட்டிருக்கும். அவள் வேலைக்குப் போயாவது அடுத்த தலைமுறைக்கான புதிய சோப்பை வாங்க வேண்டும் என, பல முறை நினைத்திருக்கிறாள். அமேசான் காட்டு மூலிகையில் இருந்து தயாரான சோப்பாக வாங்க வேண்டும் எனவும் நினைத்துக்கொண்டாள்.

‘புரூக் மாலில் இருக்கும் பொம்மைகள் கையில் இருக்கும் துணியையோ, பையையோ காட்டி ‘வாங்குங்கள்’ எனச் சொல்வதுபோல் அசைவுகள்கொண்டதாக, புதிதாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன’ என அஞ்சலி சொல்லியிருந்தாள். இன்றைக்கு அதைப் பார்க்க புரூக் மாலுக்குப் போயிருக்கலாம். புதிதாக ஏதாவது மாலில் பார்த்ததாக அஞ்சலிபோல் பீற்றிக்கொள்ள வாய்ப்பாவது கிடைத்திருக்கும்.

யாருடைய கண்களோ தன் மீது படர்ந்திருப்பதுபோல் பட்டது. கண் களைத் தாழ்த்தியபடியே கழுத்தைத் திருப்பிப் பார்த்தாள். யாரும் தென்படவில்லை. கழுத்தின் பின்பக்கம் கண்காணிப்பு கேமரா இருந்தது. தன்னை பலருக்கும் அது காட்டிக்கொண்டிருக்கும். யாரும் தன்னைப் பார்க்கவில்லை. தான் தனிமையாக்கப்பட்டவள். யாரும் நம்மைத் தொந்தரவு செய்ய முடியாது என நினைத்திருந்தவளுக்கு, பின்பக்க கண்காணிப்பு கேமரா சுரீரென மண்டையில் எதையோ போட்டுவிட்டுப்போனது. இங்கு வந்ததில் இருந்து தன்னை இது பின்தொடர்ந்து கொண்டிருக்கிறதா? தனியாக இருப்பதாக இறுமாப்புடன் இருந்தவளை, பலர் வேடிக்கை பார்க்கிறார்களா? திக்கென இருந்தது. இப்படி மால்களில் திரிகிறபோது யாராவது ‘என்ன வேணும்… உதவலாமா?’ எனக் கேட்டால், எரிச்சலுடன் தயாராகப் பதிலை வைத்திருப்பாள். அவர்களைத் தவிர்த்துவிடுவாள்.

பாலித்தீன் பைகளில் பரோட்டாவும் சப்பாத்தியும் தாளித்த சேமியாவும்கூட இப்போதெல்லாம் இங்கே தென்படுகின்றன. ஆனால், குறைந்த கைப்பணம் அதன் மீது ஆசையை வளர்க்கவிடாது. கையில் இருக்கும் சின்ன நார்த்தங்காய் இலை மடிப்பு, நாலு வாய் சாதத்தைக் குவித்திருக்கும். அது போதும். அம்மாவிடம் காசு கேட்பது, அழுகையைக் கொண்டுவந்துவிடும் சுகன்யாவுக்கு.

மளிகை சாமான்களின் குவியல், கண்களில் இருந்து அகலவில்லை. அவள் நிற்கும் இடத்தில் இருந்து நான்கு அடி தள்ளி ஓர் அறை எனத் தொனிக்கும் வகையில், கதவு ஒன்று இருந்தது. மின்வெட்டு இருளாக்கும் நேரத்தில் யாராவது ஓர் எம்பு எம்பி உள்ளே தள்ளி விட்டால் போதும், அறைக்குள் சென்று கிடக்க வேண்டியதுதான். இருட்டுக்குள் நடப்பது நல்லதாக இருக்காதே. பயம் உடம்பை உலுக்கி நகரச் செய்தது. திரைப்படம் பார்க்க தனியாகப் போன ரோஸி, அப்படித்தான் கழிப்பறையில் ஆடைகள் அலங்கோலமாக்கப்பட்டுக் கிடந்தாள்.

இதெல்லாம் நினைக்கும்போது, உடல் சட்டென தெப்பலாக வியர்வையில் நனைந்து விட்டதை, கழுத்தில் இருந்த கசகசப்பால் உணர்ந்தாள்.

செத்துப்போனவர்களை நினைவு படுத்துவதற்குத்தான் மெழுகுவத்திகளா? நிர்பயா, செல்வராணி, ரோஸி… என வன்கொடுமையில் செத்துப்போனவர்களுக்காக மெழுகுவத்திகளை ஏந்தி ஊர்வலம் போயிருக்கிறாள். இப்படி தனிமையில் எங்கேயாவது சிக்கிக் கொண்டால், தனக்கும் மெழுகுவத்திகளை யாராவது ஏந்தவேண்டி இருக்குமா? உடல் நடுங்கியது.

ஜெனரேட்டர், ஏதோ சிரமத்தில் இருக்க வேண்டும். மால், இருட்டில் மூழ்கி மெதுவாக அவ்வப்போது உயிர்பெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் கண்காணிக்கப்படுகிறோம் என்ற உணர்வும், ஏதாவது தாறுமாறாக நடந்துவிட்டால் என்ன ஆவது என்ற கவலையும், அவள் உடலைச் சட்டென நடுங்கச்செய்தன. மாலுக்குள் நுழையும் போது தப்பித்தலாக, பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தாள். இப்போது எல்லாம் மாறிவிட்டதுபோல் உடலிலும் வியர்வை பெருக்கெடுத்தது.

அப்பாவுக்காக இன்று காவல் நிலையம் சென்றிருக்கும் அம்மா, அப்புறம் தனக்காகவும் காவல் நிலையம் செல்லவேண்டியதாகிவிடும். உடல் பதற ஆரம்பித்தது.

கல்லூரிக்குப் போகத் தோன்றாத போது எல்லாம் ஏதாவது மாலுக்குள் வந்து புகுந்துகொள்வாள். இப்போது நகரில் நான்கு மால்கள் வந்துவிட்டன. பழைய சூப்பர் மார்க்கெட்கள் தன் பொலிவை இழந்துவிட்டன. அவற்றில் இரண்டு, டாஸ்மாக் பார்கள் ஆகி விட்டன. மால்களில் நல்ல குளிர் சாதனங்கள் உள்ளன. இரண்டு மணி நேரமாவது உடலுக்கு உறுத்தல் இல்லாமல் கழிந்துவிடும். சும்மா வெளியே போகக் கூடாது என, ஏதாவது நோட்டுப் புத்தகத்தையாவது வாங்கிக்கொண்டு கிளம்பிவிடுவாள். இன்றைக்கும் நோட்டுப் புத்தகம் வாங்க, சுகன்யாவிடம் காசு இருந்தது. ஆனால், குண்டு மெழுகுவத்தி வாங்க காசு இல்லை.

எதிரில் இருக்கும் மெழுகுவத்தியை எடுத்து பற்றவைக்கக்கூட தீப்பெட்டி வேண்டும். மின்சாரம் வரும் வரை இருட்டில்தான் இருக்க வேண்டும். அது கொஞ்சம் பயத்தைக் கொண்டுவந்திருந்தது. ஜோசப் அவளை கல்லூரி கேன்டீனில் தொட்டபோது ஏற்பட்ட பயம்போல மெள்ள கிளம்பியது.

பாட்டிக்கு அப்படி ஒரு பழக்கம் எப்படி ஏற்பட்டது எனத் தெரியவில்லை. கோபமாக இருக்கும் சமயங்களில் எரியும் மெழுகுவத்திச் சொட்டுகளை விசிறி, கையில் படவைத்து விடுவாள். கை எரியும். அவள் சொல்வதைக் கேட்காததற்கு தண்டனைபோல் சொல்லிக் கொள்வாள். அது எரிந்து, உருகி, நிலை குலைந்துபோவதைப் பார்த்துக்கொண்டி ருப்பாள். பாட்டியின் சமையல் அபாரமாக இருக்கும். மெழுகுவத்தி சிதறலில் சந்தோஷம் கொள்ளும் பாட்டி, சமையலில் ஆச்சர்யம் தருபவளாக இருப்பது அவளுக்கு வியப்பே.

இந்த இருட்டில் எத்தனை நேரம் நிற்பது? இருட்டில் எது நடந்தாலும் அபாயகரமானதாக இருக்கும். யாராவது மெழுகுவத்தி ஏற்றிவைத்து வெளிச்சம் காட்டினால் பரவாயில்லை என்பது ஞாபகம் வந்தது. இருட்டு அவளைப் பயமுறுத்தி உடலை நடுங்கச் செய்தது.

சட்டென வெளிச்சம் பரவி, பல நூறு மெழுகுவத்திகளை ஒன்றாகப் பற்றவைத்ததுபோல் இருந்தது. மின்சாரம் வந்துவிட்டது. மறுபடியும் போகும்… வரும். அதுதான் மின்சாரம். இது என்ன விளையாட்டு? இருட்டு போய், வரும் இந்த வெளிச்சம் எல்லாவற்றையும் நல்லதாக்கி விடும். அப்பா விடுதலையாகி வந்துவிடுவார். அம்மா இந்த வாரம் பனியன் கம்பெனியில் முழு வாரச் சம்பளம் வாங்குவாள். ஸ்காலர்ஷிப் இந்த வாரம் வந்துவிடும். பர்ஸில் இருக்கும் ரெவின்யூ ஸ்டாம்ப் அதை வாங்க சரியாகப் பயன்படும். அம்மாவுக்குக் கொஞ்சம் பாரம் குறையும். இப்படி கல்லூரிக்குப் போகாமல் பயந்து நிற்பதை உதறிவிட வேண்டும் என்ற நினைப்பு வந்தது.

இப்போது ஒரு பீரியடு முடிந்திருக்கும். அடுத்த பீரியடில்கூட சேர்ந்துகொள்ளலாம். அசைன்மென்ட் எழுதாததற்கு அபராதம்கூட கட்டிவிடலாம். இப்படி எங்கோ ஒளிந்து கொண்டிருப்பது பிரச்னையைத் தீர்த்துவிடாது. தப்பித்து மாலில் ஒளிந்துகொள்வதும், கொஞ்சம் பொழுதுபோக்குவதும் தற்காலிகமானதே. பிரச்னையை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். பிரச்னையை அம்மா எதிர்கொள்ளாமல் இருந்தால், அப்பாவின் ஜாமீனுக்காக நகையை அடமானம் வைத்து காசு சேர்த்து இன்றைக்கு போலீஸ் ஸ்டேஷன் போயிருக்க மாட்டாள். அப்பாவைப் புறக்கணித்துவிட்டு குடும்பத்தை மனதில்கொள்ளாமல் இருந்தால், குடும்பம் நாசமாகியிருக்கும். அம்மா எல்லாவற்றையும் எதிர்கொண்டு சமாளித்து, தானும் உயிரோடு இருக்கிறாள்; என்னையும் உயிரோடு வைத்திருக் கிறாள். எத்தனையோ ரகசியங்களை, வேதனை களை, சந்தோஷங்களை மனதுள் போட்டு மூடி வைத்துக்கொண்டு குடும்பத்தைக் காப்பாற்று கிறாள். கல்லூரிப் பிரச்னைகளை எதிர்கொள்ள மனம் இல்லாமல் மாலுக்குள் ஒளிந்து கொள்வதால், பிரச்னைகள் தீர்ந்துவிடுமா என்ன? யோசனை வந்தது சுகன்யாவுக்கு.

இன்றைய பிரச்னையை நாளைக்காவது எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். அது கல்லூரியாக இருந்தாலும் வீடாக இருந்தாலும், கல்லூரி கேன்டீனாக இருந்தாலும்… கல்லூரி மாணவியாக, அம்மாவாக, பாட்டியாக எல்லா வற்றையும் சந்தித்தே ஆக வேண்டும். இல்லா விட்டால் மெழுகுவத்தி ஏற்றி வேடிக்கை காட்டி, இரு நிமிடங்கள் மௌனமாக இருந்து, பின் கல்லூரிப் பெயர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கிவிடுவார்கள். குடும்ப அட்டை யிலும் ஒரு கிலோ அரிசியும் கால் கிலோ சர்க்கரையும் இலவசப் பொருட்களும் பெற முடியாதபடி பெயர் இல்லாமல்போய்விடும். அங்கிருந்து உடனே வெளியேறிவிடுவது என்ற தீர்மானத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டாள்.

குளிர் நிரம்பிய அந்தக் கட்டடத்தைவிட்டு அவள் உடனே மெள்ள வெளியேறும்போது, மளிகைப் பொருட்கள் மெள்ள நழுவி தூரம் போயின. அப்பாவும் அம்மாவும் உடனிருக்கும் உணர்வு மெள்ள வந்தது. வெளிப்பகுதியின் வெளிச்சம் சூடாக அவள் மீது இறங்கியது. பயத்தை உதறிவிட்டு நடப்பது ஆசுவாசப் படுத்தியது.

மாலுக்கு வெளியே ஒரு கோடி மெழுகுவத்தி களின் கூட்டாக சூரியனின் பிரகாசம் விரிந்திருந்தது. பாதுகாப்பாக உணர்ந்தாள் சுகன்யா…!!!

……………………………………………………………………………………………………………………………………………………………………………..…..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக