என் விருப்பம் – உள்ளத்தை உருக்கும் மொஹம்மது ரஃபி பாடல் …

…………………………………………………….

……………………………………………………..

நான் முதல் தடவை இந்த பாடலை கேட்டபோது எனக்கு
வயது-10. அப்போதே, எனக்கு திரைப்பட பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும்…. ஆனால் கேட்கத்தான் வசதிகள் இல்லாமல்
இருந்தது.

மஹாராஷ்டிராவில், கர்க்கி என்கிற ஊரில்,
ஒரு இரானி ஓட்டலின் வாசலில் நின்றுகொண்டு கேட்ட,
உள்ளே வைக்கப்பட்டிருந்த வானொலியிலிருந்து
மிதந்து வந்த பாடல்….64 ஆண்டுகள் கடந்த பின்னரும்
உருக்குகிறது….!

அப்போதெல்லாம், இப்போது போல், நினைத்தபோதெல்லாம்
பாட்டு கேட்க முடியாது, வசதிகள், டெக்னாலஜி கிடையாது.
ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கு, மாலை/இரவு
நேரங்களில், ரேடியோ சிலோனில் மட்டும் திரைப்பட
பாடல்கள் வைப்பார்கள். சாதாரண வீடுகளில் ரேடியோ
கிடையாது. பணக்காரர்களுக்கு மட்டுமே இருந்த வசதி அது.
சில ஓட்டல்களிலும் இருக்கும்… தேடிப்போய் கேட்டுக் கொள்ள
வேண்டியது தான். என் சிறு வயது நண்பன் ஒருவன் நன்றாகப் பாடுவான். நாங்கள் அடிக்கடி அவனை சூழ்ந்து உட்கார்ந்து கொண்டு எங்களுக்கு பிடித்த பாடல்களை பாடச்சொல்லி கேட்பது வழக்கம்.

பாய்ஜூ பாவரா (baiju bawara ), 1952-ஆம் ஆண்டு வெளிவந்து
100 வாரங்களுக்கு மேல் ஓடிய ஒரு ஹிந்தி திரைப்படம்.
ஒரு மிகப்பெரிய மியூசிகல் ஹிட்…!

பாரத்பூஷன், மீனாகுமாரி நடித்தது.
பேரரசர் அக்பரின் காலத்தில் நடந்ததாகச்
சொல்லப்படும் ஒரு கதையை அடிப்படையாக கொண்டது.

“ஓ துனியா கே ரக்வாலே” –

இந்த உலகை ரட்சிக்கும் பகவானே –
என்று ஆண்டவனை வேண்டி பாடப்பட்ட பாடல்.
மனதைப் பிழியும்…குரல், இசை, ராகம்…!

சாஸ்த்ரீய ஹிந்துஸ்தானி இசையின் அடிப்படையில் –
அமைந்த இந்த பாடலை –

எழுதியவர் ஷகீல் பதாயுனி,


இசையமைத்தவர் இந்தி திரையுலகில் அந்த காலத்தில் மிகப்பிரசித்தி பெற்ற நௌஷாத் அவர்கள்,


பாடியவரோ மயக்கும் குரலுக்கு சொந்தக்காரரான
மொஹம்மத் ரஃபி அவர்கள்…


– ஆக மூன்று பேரும் இஸ்லாமியர்கள்…. ஆனால்,
பாடல் இந்துக் கடவுளான சிவனைக் குறித்தது….!

இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?

பல ஆண்டுகள் இந்த பாடலை கேட்பதற்கென்றே எங்கெங்கோ
அலைந்து கொண்டிருந்தேன். நான் வளர்ந்து வேலைக்குபோய்
சம்பாதிக்கத் துவங்கிய பிறகு, டெக்னாலஜி வந்தபிறகு,
முதல் முதலாக டேப் ரிக்கார்டர் வாங்கிய பிறகும்,
இந்த பாடலை பதிவு செய்து வாங்க அலைந்து கொண்டிருந்தேன்….

நேற்றிரவு, என் விருப்பத்தில் போட நினைத்தபோது,
வெகு சுலபமாக, யூ-ட்யூபிலிருந்து எடுத்து பதிய முடிந்தது…
டெக்னாலஜி …..எவ்வளவு வளர்ந்து விட்டது ….!!!

திரைப்படத்தில் வரும் பாடல் காட்சியே கிடைத்தது.
இருந்தாலும், ரஃபி அவர்கள், உணர்வுபூர்வமாக
நேரில் பாடுவதை நண்பர்கள் பார்த்து
ரசிக்க வேண்டுமென்று நினைத்தேன்…

படம் வெளிவந்து 25-30 ஆண்டுகளுக்கு பிறகு, பம்பாயில்,
இசையமைப்பாளர் நௌஷாத் அவர்களும், ரஃபியும் சேர்ந்து
நிகழ்த்திய ஒரு live orchestra பதிவை கீழே தந்திருக்கிறேன்…

ஆனால், இந்த காலத்து இளைஞர்களுக்கு இது
எந்த அளவிற்கு பிடிக்கும் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை.

பாருங்களேன்…..பிடிக்கிறதா – சொல்லுங்கள்…!!!

கூடவே அதே படத்தில் இன்னுமொரு அற்புதமான பாடல் –
இதே காம்பினேஷனில் –

” ஹரி ஓம் -மன் தட்பத் ஹரி தர்ஷன் கோ ஆஜ் ” –

(மறுபதிவு…..)

…………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.