இந்த செய்தி நிஜமோ – சற்று மிகையோ – ஆனாலும், அதன்அடிப்படை உண்மையே ….!!!

………………………………

………………………………

ஆள் நடமாட்டம் இல்லாத அந்தச் சாலையில் நடந்து சென்று
கொண்டிருந்தார் அந்தப் பெண் .
அருகிலேயே அவளது கணவர். தூக்க முடியாமல்
ஒரு பெரிய மூட்டையைத் தூக்கித் தோளில் சுமந்தபடி ,
அந்தப் பெண்ணுக்குத் துணையாக வந்து கொண்டிருந்தார்.
இவர்கள் இருவரைத் தவிர அந்தச் சாலையில் ஒரு ஈ, காக்கா கூட இல்லை .
காரணம் ஊரடங்கு உத்தரவு.

கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு விட்டன; போக்குவரத்து அடியோடு
நிறுத்தப்பட்டு விட்டது. வீட்டிலிருந்து யாராவது தெருவுக்கு வந்தால் விரட்டி அடித்தார்கள் போலீஸ் காரர்கள்.
காஷ்மீர் தலைநகரமான ஸ்ரீநகரில் கடந்த சில காலம் முன் ( 2016 ஜூன் )
நடந்த சம்பவம் இது.

( வலைத்தளத்தில், நான் படித்த ஒரு சம்பவம் பற்றிய தகவல் இது….
இந்த சம்பவம் குறித்த செய்தியில் சற்று மிகை இருக்கக்கூடும்…
ஆனாலும், எனக்கு இதில் மிகவும் பெரிதாகத் தோன்றுவது,
மத சார்புகளுக்கு அப்பாற்பட்டு, சம்பந்தப்பட்ட மனிதர்களின்
உள்ளத்திலிருந்து மனிதநேயம் எந்த அளவிற்கு வெளிப்பட்டிருக்கிறது
என்கிற ஆச்சரியம் தான்…..)

பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்
ஒரு முக்கியமான தலைவர் கொல்லப்பட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது .
இந்துக்களும் முஸ்லிம்களும் மோதிக் கொண்டார்கள்.
உடனே போடப்பட்டது ஊரடங்கு உத்தரவு.
சந்தேகப்படும்படி யாராவது கண்ணில் பட்டால் உடனே சுட்டுத் தள்ள
நிர்வாகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது ….!
ஆனாலும் அந்தக் கணவனும் மனைவியும் அந்த ஆள் அரவமற்ற
சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள் .

இடையே, தடுத்தி நிறுத்தினார்கள் போலீஸ்காரர்கள்:
“யார் நீங்கள் ? எங்கே போகிறீர்கள் ?”
அந்தப் பெண் பதில் சொன்னார் : “ஜவகர் நகருக்கு ?”
“ஜவகர் நகருக்கா ? உங்கள் வீடு அங்கேயா இருக்கிறது ?”

“இல்லை. இங்கே ஸ்ரீநகரில்தான் இருக்கிறோம். ஒரு முக்கியமான
வேலையாக ஜவகர் நகருக்குப் போகிறோம்.”
“முக்கியமான வேலையா ? இந்த நெருக்கடியான நேரத்திலா ?
அதுவும் நீங்கள் போகும் ஜவகர் நகர் கலவர பூமி. இந்த நேரத்தில்
அங்கு போக உங்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது ?
அது இருக்கட்டும். இங்கிருந்து ஜவகர் நகர் எவ்வளவு தூரத்தில்
இருக்கிறது தெரியுமா?”

அந்தக் கணவன் சொன்னார் : “தெரியும். பல கிலோ மீட்டர்கள் போக
வேண்டும்.”
“பஸ் ஆட்டோ எதுவும் ஓடவில்லை. எப்படி நடந்து போவீர்கள்
அவ்வளவு தூரம் ? அதுவும் இவ்வளவு பெரிய மூட்டையைத் தூக்கிக்
கொண்டு…”
“போய் விடுவோம்.”
கணவனும் மனைவியும் சேர்ந்தே சொன்னார்கள் .

இவர்கள் பிடிவாதத்தைக் கண்டு கோபம் கொண்டார் அந்தப் போலீஸ்காரர் : “சந்தேகப்படும்படி யாராவது சாலையில் போனால் கண்டவுடன் சுடச் சொல்லி எங்களுக்கு உத்தரவு. அது தெரியுமா உங்களுக்கு ?”
“ தெரியும்.”
“அது மட்டும் அல்ல. இந்துக்களும் முஸ்லிம்களும் அங்கங்கே மோதிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கலவரக்காரர்கள் கண்ணில் பட்டால்
உங்கள் கதையையே முடித்து விடுவார்கள்.”
அந்தப் பெண் உறுதியாகச் சொன்னார் : “அதுவும் தெரியும்.
ஆனாலும் நாங்கள் போய் விடுவோம். போய்த்தான் ஆக வேண்டும்.
மிக மிக முக்கியமான வேலை.”

அந்தப் பெண் நடக்க ஆரம்பித்தார். கணவனும் மூட்டையைத் தூக்கித்
தோளில் வைத்துக் கொண்டு மனைவியைப் பின் தொடர்ந்தார் .
இடையில் பல இடங்களில் போலீஸ் அவர்களை மறித்தது.
மீண்டும் மீண்டும் எச்சரித்தது .
அதையும் மீறி அந்தக் கணவனும் மனைவியும் வெறிச்சோடிய
அந்தச் சாலைகளில் பகல் முழுவதும் நடந்தார்கள் ;
பல கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்தார்கள் . ஒரு வழியாக
ஜவஹர் நகரை அடைந்தார்கள் .

எல்லா வீடுகளின் கதவுகளும் இறுக்கமாக மூடப்பட்டிருந்தன.
இந்தத் தம்பதிகள் தேடி வந்தது பண்டிட்ஜி வீடு. அது அடுத்தத் தெருவில்தான் இருக்கிறது. தெருவை நெருங்கினார்கள் .

அதற்கு முன் ஒரு கடுமையான குரல் அவர்களை அதட்டியது :
“நில்லுங்கள்.”
திரும்பிப் பார்த்தார்கள். காவல்துறை அதிகாரியுடன் சேர்ந்து ஒரு
பெரிய போலீஸ் பட்டாளமே அங்கு நின்றது .
“உங்களைக் கைது செய்யப் போகிறோம்.”
“எதற்காக ?”
“உங்கள் தோளில் இருக்கும் பெரிய மூட்டைக்குள் என்ன ஆயுதங்களை வைத்திருக்கிறீர்கள் ? அதைக் கீழே இறக்குங்கள் .”
இறக்கினார்கள்.

போலீஸ்காரர்கள் அதை எச்சரிக்கையுடன் திறந்து பார்த்தார்கள்.
திகைத்துப் போனார்கள். எல்லாமே உணவுப் பொருட்கள்.
“யாருக்கு இதைக் கொண்டு போகிறீர்கள் ?”

அந்தப் பெண் சொன்னார் : “இந்த ஜவகர் நகரில் இருக்கும் பண்டிட்
வீட்டுக்கு ! ஏன் என்பதையும் நீங்கள் கேட்காமலேயே சொல்லி விடுகிறேன்.”
நடந்ததை அப்படியே போலீசுக்கு எடுத்துச் சொன்னார் அந்தப் பெண் .

அதிகாலையிலேயே ஒரு போன் வந்தது ஸ்ரீநகரில் இருக்கும் இந்தப்
பெண்ணுக்கு… !
பேசியவர் ஜவகர் நகரில் இருக்கும் பண்டிட்டின் மனைவி . இருவரும்
நெருங்கிய தோழிகள். ஒரே ஸ்கூலில்தான் டீச்சராக வேலை செய்கிறார்கள்.
அது சரி, போனில் பண்டிட்டின் மனைவி என்னதான் சொன்னார் ?

இதோ, அந்தப் பரிதாபக் கதை :
“ஹலோ, இங்கே ஜவகர் நகரில் நிலைமை ரொம்பவும் மோசமாக
இருக்கிறது . கடைகள் அடைக்கப்பட்டுப் பல நாட்களாகி விட்டன . வெளியில்
செல்ல முடியவில்லை. வீட்டிலும் உணவுப் பொருட்கள் எதுவுமே இல்லை.
பாட்டியம்மா வேறு படுத்த படுக்கையாக இருக்கிறார்கள். தொலைபேசி
வேறு வேலை செய்யவில்லை. இப்போதுதான் இணைப்பு கிடைத்திருக்கிறது.
நான்கு நாட்களாக நாங்கள் யாரும் எதுவும் சாப்பிடவில்லை. உயிரைக் கையில் பிடித்தபடி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்றும் பட்டினியாக த்தான்
இருக்க வேண்டும் போல தெரிகிறது. நாளை நாங்கள் உயிரோடு இருப்பது
கூட சந்தேகமாக…”

பேசிக் கொண்டிருக்கும்போதே போன் கட் ஆகி விட்டது. பாதுகாப்பு
நடவடிக்கை களுக்காகத் தொலைத் தொடர்பு இணைப்புகள் மீண்டும்
துண்டிக்கப்பட்டு விட்டன. இனி அவர்களோடு பேசுவது இயலாத காரியம் .

இங்கே ஸ்ரீநகரில் இந்தப் பெண்ணும் அவரது கணவரும் தவித்தார்கள்;
துடித்தார்கள். “நான்கு நாட்களாகப் பட்டினியா ? அந்த பண்டிட்டின்
குடும்பத்துக்கு எப்படி உதவுவது ?”
ஒரு நொடி கூட யோசித்து நேரத்தைக் கடத்தாமல் உடனே ஜவகர் நகருக்குப்
புறப்பட்டு விட்டார்கள் கணவனும் மனைவியும் .

வீட்டில் இருந்த கோதுமை, அரிசி, பருப்பு, காய்கறிகள், மசாலா பொருட்கள். எல்லாவற்றையும் பெரிய மூட்டையாகக் கட்டி தன் கணவரின் தலையில்
வைத்தார் அந்தப் பெண் . பஸ் , ஆட்டோ எதுவும் இல்லாததால் ,
பல கிலோ மீட்டர்கள் நடந்தே வந்து ….

“இப்போது ஜவகர் நகருக்கு வந்திருக்கிறோம்” இப்படி போலீஸ்காரர்களிடம் பொறுமையாகச் சொல்லி முடித்தார் அந்தப் பெண்.

கலங்கி விட்டார் அந்தக் காவல்துறை அதிகாரி : “ ஒரு நட்புக்காக
உயிரைப் பணயம் வைத்துப் பல கிலோமீட்டர்கள் நடந்தே வந்திருக்கிறீர்கள்.
அதுவும் இந்த மூட்டையைச் சுமந்து கொண்டு… ! பாராட்டுகிறேன் அம்மா.
சரி, உங்கள் குடும்ப நண்பர் பண்டிட் வீடு எங்கே இருக்கிறது ?”
“அடுத்தத் தெருவில்தான்.”
“வாருங்கள். நானே பத்திரமாக வீடு வரை வருகிறேன்.”

அந்தக் காவல்துறை அதிகாரியே சென்று பண்டிட் வீட்டுக் கதவைத்
தட்டினார் . கதவு மெல்லத் திறந்தது. உள்ளே இருந்து வந்த பண்டிட்டும்
அவரது மனைவியும் இந்தத் தம்பதிகளைப் பார்த்தவுடன் ஆச்சரியத்தில்,
“ அட கடவுளே, இது என்ன ? இவ்வளவு தூரம் எப்படி வந்தீர்கள் ?
முதலில் உள்ளே வாருங்கள்.”

தோழிகள் இருவரும் கட்டித் தழுவிக் கொண்டார்கள் ; கண்ணீர் வடித்தார்கள் .
வாசலில் நின்ற காவல்துறை அதிகாரி கூட தன் கண்களைத் துடைத்துக்
கொண்டார் : “சரியம்மா, முதலில் சாப்பாடு தயார் செய்து சாப்பிடுங்கள் .
நான் வருகிறேன் .”
“நன்றி சார்.”
“பை தி பை, நான் உங்கள் பெயரைத் தெரிந்து கொள்ளலாமா மேடம் ?”
அந்த ஸ்ரீநகர் பெண் சிரித்தபடி சொன்னார் : “சுபைதா பேகம்.”

ஆம். இந்து முஸ்லிம் கலவரம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த
அந்த நேரத்தில், பசியால் துடித்துக் கொண்டிருந்த பண்டிட் என்ற
ஒரு இந்து மனிதரின் குடும்பத்துக்கு, பல கிலோமீட்டர் தூரம் நடந்து கடந்து ,
தேடிச் சென்று உணவு கொடுத்தது சுபைதா பேகம் என்ற ஒரு முஸ்லிம்
குடும்பம்தான் !

இது கதையல்ல.
‘இந்தியா டுடே’யில் வந்த செய்தி….

இப்படிப்பட்ட மனித நேயம், மத நல்லிணக்கம் கொண்ட மனிதர்கள்
பல கோடி பேர்கள் இங்கு இருக்கும்வரை, இந்திய மக்களிடையே மதத்தின் அடிப்படையில் பிரிவினையை யாரால் உருவாக்க முடியும் …???

.

…………………………………………………………………………………………………………………….………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to இந்த செய்தி நிஜமோ – சற்று மிகையோ – ஆனாலும், அதன்அடிப்படை உண்மையே ….!!!

  1. Karthikeyan Palanisamy சொல்கிறார்:

    திராவிடக் கட்சிகளால் கண்டிப்பாக முடியும்

    • ஆதிரையன் சொல்கிறார்:

      முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு ..
      முஸ்லீம் கைதிகள் விடுதலை குறித்து தேர்தல் வாக்குறுதி கொடுப்பது …
      முஸ்லீம் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து…
      இந்து மதத்தை மட்டும் இழிவுபடுத்துதல் …
      இந்துக்கள் கலாச்சாரத்தை அழித்தால்தான் , மதநல்லிணக்கம் என்று தொடர்ந்து கூவுதல் ..
      இந்து மதம் என்ற ஒரு மதம் கிடையாது என்று இழிவுபடுத்துதல் ..
      இந்து கோவில்களின் நிகழ்ச்சிகளை கிண்டல் செய்தல்…
      இந்து கோவில்களின் நிர்வாகத்தில் மட்டும் தலையிடுதல் …
      எதிர்த்து கேட்டால் சங்கிகள் என்றும், மதவெறியர்கள் என்றும் பட்டம் சூட்டுவது ….
      திராவிடத்தை போற்றுவோம்….
      நாமும் அவர்களுடன் சேர்ந்து , எதிர்த்து கேட்பவர்களை மதவெறியர்கள் என்றே தொடர்ந்து வர்ணிப்போம்…

பின்னூட்டமொன்றை இடுக