சோறு இலவசம் – சிறுநீர் கழிக்க காசு !

சோறு இலவசம் – சிறுநீர் கழிக்க காசு !

முன்னர் திமுக மேயர் பொறுப்பில் இருந்தபோது
ஒரு விண்ணப்பம்  தயாரித்து  அனுப்பி இருந்தேன்.
அவர் பதவிக்காலம் முடிந்து விட்டது.
காரியம் நடக்கவில்லை.

புதிய மேயர் பொறுப்பு ஏற்றிருக்கிறார்.

மீண்டும் ஒருமுறை வேண்டுகோள்  –
இவராவது செய்வார் என்று நம்பி அனுப்புகிறேன்.

நகரை அழகுபடுத்துவது எவ்வளவு முக்கியமோ
அதை விட பன் மடங்கு முக்கியம் அடிப்படை
சுகாதாரம்/ அன்றாட கழிப்பிட தேவைகள்.

குடிசைகள் நிறைந்த    சென்னை மாநகரத்தில் –
எனக்குத்தெரிந்து – ஒரு இடத்தில்  கூட  
இலவச கழிப்பறை இல்லை.
விளைவு –  பல  தெருக்களில்  மூத்திர நாற்றம் !

ஏழை மக்களின் வாங்கும் சக்தியை மனதில் கொண்டு
தானே  அதிமுக அரசு “விலையில்லா அரிசி”யை
அறிமுகப்படுத்தி இருக்கிறது ?

உழைக்கும் மக்கள், ஏழைக்குடும்பங்கள்
காசு இருக்கிறதோ  இல்லையோ – சோற்றுக்குத்
திண்டாடக் கூடாது என்று தானே மாதந்தோறும்
விலையில்லாமல் அரிசி வழங்கப்படுகிறது ?

கழிப்பிடங்களில் மட்டும் காசு வசூலித்தால்
எப்படி ?
எந்த குடிசையில் டாய்லெட் இருக்க முடியும் ?
அரிசி வாங்கவே காசு இல்லாதவர்கள் என்று
கருதப்படும் மக்கள் – ஒரு தடவை மூத்திரம்  
போக ஒரு ரூபாய்  என்றும்  ஒரு
தடவை மலம் கழிக்க இரண்டு ரூபாய் என்றும்
வசூலித்தால்  எங்கே போவார்கள்  ?

போக்கிடம் சந்து முனை தானே?
ஒரு குடும்பத்தில்  குறைந்தது 4 பேரையாவது
கொண்ட – குடிசைகளில்  வசிக்கும் மக்கள்
அன்றாடம் இயற்கை கழிவுகளை கழிக்க
எப்படி  காசு செலழிக்க முடியும் ?

இந்த விஷயம் – ஏழை மக்களின்  இந்த அடிப்படை
தேவைகள் – மாநகராட்சியிலோ – அரசாங்கத்திலோ –
முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு தெரியாதா  ?  
பின்  ஏன் இந்த அலட்சியம்  ??  பாராமுகம்  ???

கடந்த காலத்தில் –  கட்டண கழிப்பறைகளின்
வசூல் முழுவதும், நேரடியாகவும், மறைமுகமாகவும் –
கார்பரேஷன்  கவுன்சிலர்களுக்குப் போய்க் கொண்டிருந்த்து.

இலவச கழிப்பறைகள் கட்டப்பட்டால்,
அவர்களது வருமானம் பாதிக்கப்படும் என்பதும்
கழிப்பறைகள் கட்டப்படாததற்கு  
ஒரு முக்கியமான காரணமாக இருந்தது.

முக்கியமாக குடிசைகளில் வசிக்கும் பெண்களின்
நிலையை  கருதியாவது –

கட்டணம்  வசூலிக்காத (விலையில்லாத ?)
கழிப்பறைகளையும்,
குளியலறைகளையும்  – கட்டிக்கொடுத்து,
அவற்றை நல்லபடியாக பராமரிக்க  மாநகராட்சியும்
அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.     

அப்படி என்ன  செலவு ஆகவிடப்போகிறது ?  
இடம்  ஏற்கெனவே  அரசுக்கு  சொந்தமாக
இருக்கப்போகிறது.
ஒரு கழிப்பறை/குளியலறை கட்ட  மிஞ்சிப்போனால்
ஒரு லட்சம் ரூபாய்  ஆகலாம்.
ஒரு கோடியில் 100 கழிப்பறைகள் கட்டலாம்.
10 கோடி ஒதுக்கினால் சென்னையில் மட்டுமே
1000 கட்டலாம்.

எத்தனையோ  தொண்டு நிறுவனங்களும்
இந்தப்பணியில்   உதவ முன் வரும்.
இதனை செய்ய மாநகராட்சியாலும் முடியும் –
அரசாங்கத்தாலும்  முடியும்.  

மனம் இருந்தால் வழியா இல்லை ?
இந்த அவசியத்தை கொஞ்சம் நினைத்துப் பார்க்க
வேண்டும் – அவ்வளவு தான்.

மனிதநேயம் மிக்க
மேயர் அவர்களே –
போனது போகட்டும் –
இப்போதாவது செய்யுங்களேன் ! 

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to சோறு இலவசம் – சிறுநீர் கழிக்க காசு !

  1. vignaani's avatar vignaani சொல்கிறார்:

    A good post. Thousands think about in a passing second and leave it there Somehow this has not mustered enough initiatives. Any action/agitation initiated in this regard will be justified..

  2. viyapathy's avatar viyapathy சொல்கிறார்:

    இதுவேதான் என் கருத்தும் ஆகும். அரிசி இலவசமாக தரப்படும் போது கழிப்பறைகளுக்கு பணம் வாங்குவது எந்த விதத்தில் நியாயம்? கட்டணம் வசூலிப்பது அக்கழிப்பறைகள் நன்கு பராமரிக்கப் படுவதற்காகத் தானே தவிர அதிலும் வருமாணம் பார்க்க அல்ல! ஏழைகளை மனதில் கொண்டாவது இலவச கழிப்பிடங்களை ஏற்படுத்தித்தரவேண்டும். இது அத்யாவசிய தேவை மட்டுமல்ல உடனடி தேவையும் கூட.

  3. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    மிகவும் அருமையான கருத்து.
    ஒவ்வொரு மக்கள் நலப் பணியாளர்களும் தம் வேலையை பாதுகாத்துக்கொள்வதற்காக (இலஞ்சம்?) லட்சக்கணக்கில் செலவிட தயாராக இருக்கின்றனர்.
    இவர்களுக்கு சொந்தத்தொழில் புரிய இதை ஒரு வாய்ப்பாக எண்ணினால், நிச்சயம் ஒரு சுகாதாரமான தமிழகம் உருவாகும்.

  4. star's avatar star சொல்கிறார்:

    ஒரு நாட்டின் முக்கியமாக விளங்குவது சுகாதாரமும் ஒன்று.அதை அரசு முன் வந்து செய்தால் ஒழிய சுத்தம் என்பது வெறும் பேச்சுதான்.இது அனைவரின் பிரச்சனையாக பார்ப்பதே நல்லது.

  5. Ponraj Mathialagan's avatar Ponraj Mathialagan சொல்கிறார்:

    இந்த லெட்டரும், உங்கள் பற்றிய விபரமும் கீழ்பாக்க மருத்துமனைக்கு மேயரால் உடனே பார்வர்ட் செய்யப் படும்.

  6. Ponraj Mathialagan's avatar Ponraj Mathialagan சொல்கிறார்:

    கேள்வி: புதிய பொருளாதார கொள்கையை எளிய முறையில் விளக்கு.
    பதில்:
    வாங்குற வாட்டர் பாக்கெட்டோட விலை ஒரு ரூபாய்
    அதை குடிச்சதுக்கு அப்புறம் வெளியேறும் சிறு நீர் கழிக்க இரண்டு ரூபாய்.

  7. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    நிற்பதற்கு ஒரு இடமும் ,சரியான நீளத்திற்கு ஒரு நெம்புகோலும் கொடுங்கள்;நான் இந்த பூமியையே நகர்த்துவேன் என்றார் ஆர்கிமிடிஸ்;

    குந்தியிட்டு அமர ஒரு இடமும் ,ஒரு குவளை நீரும் கொடுங்கள்;நாங்கள் இந்த பூமியையே நாறடிப்போம் என்கிறார்கள் இந்தியர்கள்;

    அரிசி உயிர் வாழ தேவை;தொலைகாட்சி உயிர் வாழ தேவை;எனவே அவை இலவசம்.ஆனால் கழிப்பறைகள் அப்படியல்ல.;எனவே அதை பற்றி மக்கள் கவலை படுவது இல்லை. மேலும் கழிப்பறை கட்டிதருவது கூட பெரிய விஷயமல்ல;ஆனால் அதை பராமரிப்பது இயலாத காரியம்.

    மும்பை கழிவறைகளை படமெடுத்துகாட்டியே ஆஸ்கர் விருது பெற்றனர் ஆங்கிலேயர்கள்.தாஜ்மஹால் போல ஒரு வசதி ஏற்படுத்தி கொடுத்தாலும் அதை தனுஷ்கோடி இடிந்த கோபுரமாகிவிடுவர் நம் மக்கள்

    பாட்னாவின் பரிதாப நிலை யைப்பார்த்து விக்கித்துப்போன ஜப்பானிய தூதர் லல்லுவிடம் சொன்னாராம் :”பாட்னாவை ஒரு ஆண்டு எங்களிடம் ஒப்படையுங்கள்;நாங்கள் அதை டோக்கியோ ஆக்கி காட்டுகிறோம்!” என.
    கொதித்தெழுந்த லல்லு பதில் சொன்னாராம்:
    “ஹ! ஒரு ஆண்டு!! உங்கள் டோக்கியோவை ஒரு மாதம் எங்களிடம் ஒப்படையுங்கள்;நாங்கள் அதை பாட்னா ஆக்கி காட்டுகிறோம்!” என.

    கடவுள் இந்த நாட்டிற்கு கொடுத்த ஒரு பெரிய வரம் இதை உஷ்ண நாடாக வைத்திருப்பதுதான்;நினைத்துப்பாருங்கள் இந்தியா ஒரு குளிர் பிரதேசமாக இருந்தால் என்ன ஆகும் என!!

    64 ஆண்டுகால மக்களாட்சியில் நாம் நாட்டை இடியாப்ப சிக்கல் ஆக்கிவைத்திருக்கிறோம்.இதில் கழிவறை என்ற நுனியை எங்கு போய் தேடுவது?

    Sorry for sounding pessimistic.by telling the truth!

  8. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    No sorry –
    I enjoy your comments
    my dear friend Ganpat !!!

    -with all best wishes
    kavirimainthan

  9. ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

    மலச்சிக்கல் போயின் உடலில் வேறு எச்சிக்கலும் வராது என்பது அனுபவப் பாடம். ஊருக்கு ஊர் கழிப்பிட வசதிகளை அதிகப்படுத்தினால் மக்களுக்கு இலவசக் காப்பீடுத் திட்டமெல்லாம் அவசியமே இல்லாமல் போகும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.