தேவைக்கு மேல் …..


தேவைக்கு மேல் …

ஆனந்தம் என்கிற  வலைப்பின்னல்
http://www.gkpage.wordpress.com
என்கிற   வலைமனையில் வெளி வருகிறது.

ஆன்மிக வலைப்பின்னல்  என்கிற வகையில்
வருவதாலும்,  பரபரப்பான  தலைப்புகள் இன்றி
வருவதாலும், இதற்கு அதிக விளம்பரம் இல்லை.

அதிகம் பேர் பார்க்காத இந்த வலைமனையில்
ஆத்திகர்கள் மட்டுமின்றி பகுத்தறிவாளர்களும்
ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் பொதுவான
நல்ல பல கருத்துக்கள் அடிக்கடி வருகின்றன.

அண்மையில் “தேவைக்கு மேல் …” என்கிற
தலைப்பில் வந்த கட்டுரை எனக்கு மிகவும் பிடித்தது.
அதனை  இந்த வலையைக் காண அடிக்கடி வரும்
நண்பர்களுக்காக  கீழே எடுத்துக்கொடுத்துள்ளேன்.

(இந்த கட்டுரையின்  கடைசி பகுதியைக் குறித்து
எனக்கு ஒரு கருத்து உண்டு.  இன்று இந்த
கட்டுரையைப்  படியுங்களேன்.

நாளை எனது கருத்துக்கள் ..)



தேவைக்கு மேல் ….

ஒருவர்  நிம்மதியாக வாழ அத்தியாவசியமான
தேவைகள் எவை ?

இருக்க இடம், உடுக்க துணி, பசிக்கு உணவு.
இதற்கு மேல் கல்வி, மருத்துவம் போன்ற
குடும்பத்தினரின் அவசிய செலவீனங்களைச் சந்திக்க
தேவையான  அளவு பணம்.

ஐந்து அல்லது ஆறு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு
இதற்காக  மாதம் எவ்வளவு  தேவைப்படும் ?

சிக்கனமான குடும்பம் என்றால் 15,000 ரூபாய் போதும்.
சிறிது தாராளமாக இருந்து பழக்கப்பட்டவர்கள் என்றால் –
ரூபாய்  20,000 போதுமானது.

இன்னும் சிறிது வசதியாகவும், சௌகரியமாகவும் வாழ
வேண்டும் என்றால் – ரூபாய் 30,000  தாராளம்.

கார், பங்களா  என்று  மிகவும் வசதியாக வாழும்
குடும்பம்  என்றால்,  மாதம் ரூபாய் ஒரு லட்சம்
இருந்தால்  தாராளம் – தாராளம்.

எப்படிப்பட்ட வசதியான குடும்பம் என்றாலும்,  மாதம்
ஒரு லட்சத்திற்கு மேல் செலவு செய்ய நியாயமான
காரணங்கள்  எதுவும் யாருக்கும் இல்லை.

“ஊருணி நீர்  நிறைந்தற்றே உலகுஅவாம்
பேரறிவாளன்  திரு ” என்றார் வள்ளுவர்.

அதாவது அறிவும் கருணையும்  நிறைந்த ஒரு மனிதரிடம்
சேரும் செல்வம் – ஊருக்குப் பொதுவாக இருக்கும்
குடிநீர்க் குளத்தில் சேரும் தண்ணீரைப்போல்  அனைவருக்கும்
உதவியாக இருக்கும் என்றார்.

“மனிதன் பிறக்கும்போது எதையும் கொண்டு வருவதில்லை –
அதே போல் இறக்கும்போதும் எதையும் கொண்டு போகப்
போவதில்லை.உன்னிடம் இருக்கும் செல்வம்  அனைத்தும்
இடையில் வந்தது. இன்று உன்னிடம் இருக்கும் செல்வம் –
நாளை வேறு  யாரிடமோ போகப்போகிறது.

நீ இறக்கும்போது உன் மனைவியோ, பிள்ளைகளோ,
நண்பர்களோ,  உறவினர்களோ – யாரும் உன்னுடன்
வரப்போவதில்லை. நீ அழைத்தாலும்  யாரும்
கூட வரத்தயாராக  இல்லை.

–  எனவே உனக்கு நிரந்தரமாக்ச் சொந்தம் இல்லாத
இவற்றின் மீதுள்ள பற்றினை அறுத்து  எறி “-

என்கிறார் பஜகோவிந்தத்தில் ஆதிசங்கரர்.

செல்வத்தைப் பெற்றுள்ள  எவரும்  அதற்கு சொந்தக்
காரர்கள்  அல்ல – அவர்கள்  பாதுகாவலர்கள் மட்டுமே
என்கிறது  கீதை. கோவில் அறங்காவலர்கள்  எப்படி
கோவிலையும் அதன் சொத்துக்களையும்  பராமரித்து
அவற்றை  முறையாகச் செலவு செய்கிறார்களோ
அது போல் செல்வந்தர்கள்  தங்களிடம் உள்ள செல்வத்தை
நல்ல முறையில் பராமரித்து  மற்றவர்களுக்காகப்
பயன்படுத்த வேண்டும் என்கிறது கீதை.

மேலே  சொல்லியதுபோல்  மிக மிகச் சிக்கனமாக
குறைந்த பட்சத் தேவைகளுடன் வாழ்வதாக இருந்தாலும்
ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூபாய் 15,000 அவசியம்
என்கிற நிலையில் –

மாதம் 2000 ரூபாய்  கூட
சம்பாதிக்க வழி இல்லாமல் – நாயாய்,பேயாய் அலையும்,
அல்லல்படும் மனிதர்கள்  எவ்வளவு பேரை
அன்றாடம் பார்க்கிறோம் !

இருக்க இடம் இன்றி, நடைபாதையில் வசிக்கும்
குடும்பங்கள்  எத்தனை எத்தனை ?
ஒரு வேளைக் கஞ்சிக்கும்  ஆலாய்ப் பறக்கும்
குடும்பங்கள் எத்தனை ?

பள்ளிக்கூடம் செல்லாமல் பிளாட்பாரத்தில் அலையும்
சிறுவர்கள், டீ கடைகளில், மளிகைக் கடைகளில்,
காய்கறிக் கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள்
எத்தனை பேரைக் காண்கிறோம் ?

ஓடும் ரெயில்களில் பாட்டுப்பாடி பிச்சை எடுக்கும்
கண்பார்வை இல்லாத மனிதர்கள் எவ்வளவு பேரைப்
பார்க்கிறோம் ?

பகல் முழுதும் பிச்சை எடுத்து, இரவு நேரங்களில்
ரெயில்வே ஸ்டேஷன்களின் மேம்பாலங்களில்
படுத்துறங்கும் ஆதரவற்ற அநாதை முதியவர்கள்
எத்தனை பேர்களைப் பார்க்கிறோம்.

மன நலம் குன்றி, கவனித்துக் கொள்ள ஆளின்றி
தெருவில் அலையும் பாவப்பட்ட ஜென்மங்கள் எத்தனை
பேரைப் பார்க்கிறோம் ?

இவர்களைப்  பராமரிக்கும் கூட்டுப் பொறுப்பு – நமக்கு,
இந்த சமுதாயத்திற்கு இல்லையா ? முக்கியமாக
மாதம்  லட்சம் ரூபாய்க்கும் மேல் வருமானம் உள்ள
பெரிய மனிதர்களுக்கு இல்லையா ?

“வாடிய பயிரைக் காணும்போதெல்லாம் வாடினேன்”
– என்றார் வள்ளலார். பயிர்கள்  வாடுவதைக்கூட
காணப்பொறுக்காத வள்ளலார் அளவுக்கு  இல்லா
விட்டாலும்,இத்தனை  அவலங்களையும் பார்த்துக்கொண்டு,
மனச்சாட்சி உள்ள  மனிதர்கள்  சும்மா இருக்கலாமா ?

“தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த
ஜெகத்தினை அழித்திடுவோம் ” என்றார்  பாரதி.
இதனையே  சற்று  மாற்றிச்சொன்னார்  கார்ல் மார்க்ஸ்.

அத்தகைய  அழிவு  ஏற்படாமல் தடுக்க நாம் முயற்சி
எடுக்க வேண்டாமா ?

தரமான இலவசக் கல்வியை அளிக்கும் பள்ளிக்கூடங்கள்
மிகுந்த எண்ணிக்கையில் உருவாக்கப்பட வேண்டும்.

ஏழைச்சிறுவர், சிறுமிகள் தங்கி, உண்டு, படிக்க
தரமான இலவச  தங்கும் விடுதிகள் பல -தேவைப்படும்
இடங்களில் எல்லாம் கட்டப்பட வேண்டும்.

நல்ல மருத்துவ உதவியை அளிக்கக்கூடிய இலவச
மருத்துவமனைகள்  உருவாக்கப்பட்டு ஏழை நோயாளிகளை
நன்கு பராமரிக்க வேண்டும்.

ஆதரவற்ற முதியோர்களையும், பெண்களையும்,
குழந்தகளையும் பாதுகாக்க  ஆதரவற்றோர் இல்லங்கள்
உருவாக்கப்பட வேண்டும்.

தெருவில் அலைந்து கொண்டிருக்கும் மனநோயாளிகளை
தங்கவைத்து தக்க சிகிச்சை அளிக்க தகுந்த
மனநோயாளிகள் இல்லங்கள்  மாவட்டம்தோறும்
உருவாக்கப்பட வேண்டும்.

தொழில் பயிற்சி  அளிக்கக்கூடிய தொழில்கூடங்களை
உருவாக்கி, வேலையற்ற, உழைக்கும் தகுதியுள்ள
நபர்களுக்கு பயிற்சி அளித்து அவர்க்ளுக்கான
வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

இவை அனைத்தும் இந்த சமுதாயத்தின் கூட்டுப்பொறுப்பு.
யாரிடம் அதிகப் பணம் இருக்கிறதோ –
யாரிடம்  செல்வம் குவிந்திருக்கிறதோ -அவர்கள்
தாமாகவே  இத்தகைய சமுதாயக் கடமைகளை
நிறைவேற்ற முன் வர வேண்டும்.

வருவார்களா ?

வரவில்லை என்றால் -அவர்களைச் செய்ய வைக்கவேண்டிய
பொறுப்பு   நமக்கு இருக்கிறது அல்லவா ?

என்ன  செய்யப்போகிறோம் ?

(நன்றி –  http:www.gkpage.wordpress.com )

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசு, அறிவியல், ஆத்திகன், ஆத்திகர், இரக்கம், சினிமா, நாகரிகம், பக்திமான், வரி ஏய்ப்பு, வருமான வரி and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.