……………………………………………………………..

………………………………………………………………..

……………………………………………………………..

………………………………………………………………..
திருமதி லா.ச.ராவின் நினைவுக்குறிப்பு……..
( இலக்கியப்பீடத்தில் தொடராகவும் விஜயாபதிப்பகத்தின் புத்தகமாகவும்
வந்ததிலிருந்து அம்மாவின் நினைவு ….)
……………………………………………..
அக்டோபர் 25 , 2007,
நான் குளித்து உடைமாற்றி டி.விக்கு எதிரே சோபாவில் அமர்ந்திருக்க, அவர் வாக்கரைப் பிடித்திருந்த கை நடுங்கிற்று.
”சந்தோஷமாயிருக்கையா?”
”ஏன்? என் சந்தோஷத்துக்கென்ன குறைச்சல்?”
அடுத்த அரைமணி நேரம் இருவரிடையேயும் பேச்சு இல்லை, மூச்சு இருந்தது….
அவர் நுட்பமான விஷயங்களை பேசுமுன் மனதில் ரிகர்சல் ஓடும்.( என்று நினைக்கிறேன்).
காயத்ரியும் ஸ்ரீகாந்தும் அருணாச்சலமும் உட்கார்ந்ததும் அதற்கு காத்திருந்ததைப் போல ஆரம்பித்தார்.
”குறிப்பிட்ட ஒத்தருக்காகவோ, குறிப்பிட்ட விஷயத்துக்காகவோ சொல்லலை பொதுவா சொல்றேன். நான் இந்த வாரம் தாண்டினால் ஜாஸ்த்தி. ஆட்டம் க்ளோஸ்ன்னு சொல்லவந்தேன்”
கல்லு மாதிரி இருந்துண்டு பேச்சைப் பாரு. மனசைத் தாண்டி நெத்தியில குங்குமத்துக்கு அடியில விர்ர்ர்ர்.
……………
அக்டோபர் 26 வெள்ளி.
நேத்து நைட்டு ரொம்ப முடியலைன்னு ஆஸ்பத்திரியில சேத்ததுக்கும் இவர் பேசினதுக்கும் ஏதோ கனெக்ஷன் இருந்தது. சாயங்காலம் கண்ணா, சேகர் வந்தாச்சு .ஐசியூல படுத்துண்டு “பயந்துட்டேளா” ன்னு கேட்டார்.
………………………..
அக்டோபர் 27 சனி.
இன்றும் ஐசியூ வாசம். நார்மலாகத்தான் பேசிண்டிருந்தார். இன்னிக்கு நான் அவரைப்பாக்க போகலை. அவரை ஆஸ்பத்ரியில் பாத்ததே இல்லை. ஒண்ணு புரிஞ்சது…. ஆத்துக் கட்டிலும் ஆஸ்பத்ரி கட்டிலும் ஒண்ணு இல்லை.
……………..
அக்டோபர் 28 ஞாயிறு.
இன்று பார்க்க தெளிவாயும் சுத்தமாயுமிருந்தார். நுழைந்ததுமே ஒரு நர்ஸ் “, தாத்தா சூப்பராய்ப் பேசறாரும்மா. வீட்லயும் இப்படித்தான் தமாஷாயிருப்பாரா?”
” நான் ஆஸ்பத்ரிக்கு வாழ்நாளுல 3 ஆபரேஷனுக்கு அப்பறமா இப்பத்தான் வந்திருக்கேன். சௌகரியமாத்தான் இருக்குங்கறதால இங்கே தங்கிட முடியாது. நான் பயப்படலே . ஆனா ரொம்ப பயமுறுத்திட்டேன் போல இருக்கு. அருணாச்சலத்தை திட்டாதீங்கோ ,அடிக்காதீங்கோ. அவன் பண்றது அக்ரமம்தான். ஆனா பெரிய ஆளா வருவாண்டா. சரி இன்னிக்கு என்ன தேதி?”
”இருபத்தி எட்டு”
”பலே ரெண்டு நாள் இருக்கா?”
(எதுக்கு…?! பொறக்கறதுக்கா? போகறதுக்கா….?)
……………………………..
அக்டோபர் 29 திங்கள்.
ராத்திரி பதினொண்ணரை.பசங்க அதிரடியாய் கூப்பிட்டார்கள்
“அம்மா வாம்மா அப்பாவை ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரலாம்”
” எதுக்குடா இப்ப நடு ராத்திரியில?”
“கேள்வி கேட்டு கடுப்பேத்தாதேம்மா கூப்ட்டா வா. அவ்ளோதான்”
கிளம்பிப் போனேன். பார்த்தேன்.
அவரிடம் எந்த சலனமுமில்லை …. விழிதிறக்கவில்லை….. வாய் திறக்கவில்லை. மனம் திறக்கவில்லை.
ஸ்டூலின் மேல் கொடுத்தனுப்பின கஞ்சி அப்படியே இருந்தது.
என் மனசு ஒரே தீர்மானத்துக்கு வர முயல்வதைப்போல இருந்தது.
அரை மணிக்கு ஒருதடவை பகலும் அரைமணி நேரத்துக்கு ஒருமுறை இரவு வருவதைப்போல ஏதோ குழப்பமான விழிப்பும் தூக்கமுமாய் இருந்தது.
பசங்க ராத்திரி முழுக்க வீட்டிற்கு வராதது எக்ஸ்ட்ராவா சங்கடப்படுத்திற்று.
………………………………….
அக்டோபர் 30 செவ்வாய்.
அதிகாலை ஐந்து இருக்கலாம். மசூதி கூப்பிட்டாச்சு .
தொடர்ச்சியாய் கூடத்திலிருந்த டேபிள் சோபா நாற்காலி எல்லாம் சத்தமில்லாமல் நகர்த்தும் சத்தம். நான் படுத்திருந்த அறையில் கேட்டது.பசங்களுடைய ரஹஸ்யக் குரல்கள் காயத்ரியின் அமுக்கமான விசும்பத்திமிறல். இவைகளை அதிகாலை அமைதியில் உணரவே வயிறு கலங்கி இம்சை படுத்திற்று.
சேகர் ரூமுக்குள் வந்து லைட்டைப் போட்டான்.
அது இருட்டைச் சொல்லவந்த வெளிச்சமாயிருந்தது. அவன் எதுவும் சொல்லவில்லை.
அதுவே சொன்னாற் போலிருந்தது.
நாளை….
(நன்றி – சப்தரிஷி லாசரா ….)
…………………………………………………………………………………………………………………………………………………………………………..



[…] […]