………………………………………

………………………………………………………………………..
எம்.ஜி.ஆருக்கு உள்ள தனிப்பட்ட சிறப்பு தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி, கடுமையாக தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார்.
சொல்லப் போனால், தன் மீது கல் வீசுவோருக்கு கனி தரும் மரம் போல, தன்னைக் கடுமையாக தாக்கிப் பேசுவோருக்கு அதிகமாகவே உதவுவார்.
அவர்கள் திறமையாளர்களாக இருந்துவிட்டால் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, அவர்களின் திறமைக்கு உரிய கவுரவமும் அங்கீகாரமும் அளிப்பார்.
எம்.ஜி.ஆர். நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. படத்தின் கிளைமாக்ஸூக்கு முன் ஒரு பாடல்.
அடிமை முறையை ஒழித்து சுதந்திர சமுதாயம் காணப் புறப்பட்ட ஒரு புரட்சி வீரன் பாடுவது போன்ற பாடல். அந்தக் காட்சிக்கு பலர் பாடல் எழுதியும் எம்.ஜி.ஆருக்கு திருப்தி ஏற்படவில்லை.
அப்போது கவிஞர் கண்ணதாசன் ஏற்கனவே எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தார். ஆனால், அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆரை மேடைகளில் கடுமையாக விமர்சித்து வந்தார்.
ஆனாலும், கண்ணதாசன் என் படங்களில் பாடல் எழுதக் கூடாது என்று எம்.ஜி.ஆர். கூறியதில்லை. எம்.ஜி.ஆர். படங்களுக்கு நான் பாடல் எழுத மாட்டேன் என்று கவிஞரும் சொன்னதில்லை.
மேடைப் பேச்சுக்கள் ஏற்படுத்திய தர்ம சங்கடத்தால் எம்.ஜி.ஆர் படங்களின் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் கவிஞரை அணுகத் தயங்கினர். அதனால், எம்.ஜி.ஆரின் சில படங்களில் அவர் பாடல்கள் இடம்பெறவில்லை.
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கான பாடலுக்காக பல கவிஞர்கள் எழுதியும் திருப்தி ஏற்படாத நிலையில், எம்.ஜி.ஆரை விமர்சிக்கும் கண்ணதாசனை விட்டே அந்தப் பாடலை எழுதச் சொன்னால் என்ன? என்ற யோசனை பிறந்தது.
படக்குழுவினர் கவிஞரிடம் விஷயத்தைச் சொல்ல, அவரும் எழுதிக் கொடுத்தார். எம்.ஜி.ஆருக்கு அந்தப் பாடல் மிகவும் பிடித்துப் போனதுடன் கவிஞரின் திறமையைப் பாராட்டி அந்தப் பாடலை ஓ.கே. செய்தார்.
அந்தப் பாடல்தான் காலத்தால் அழியாத ‘அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்…’
கண்ணதாசன் எம்.ஜி.ஆரை கடுமையாகத் தாக்கிப் பேசுவாரே தவிர, மனதில் ஒன்றும் வைத்துக் கொள்ள மாட்டார் என்பது எம்.ஜி.ஆருக்குத் தெரியும்.
எம்.ஜி.ஆர். நடித்த வெள்ளிவிழா படமான ‘மாட்டுக்கார வேலன்’ படத்தில், ‘பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?’ என்ற இனிமையான பாடலை எழுதியவர் கண்ணதாசன்.
நாயகியைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாடும் வரிகளில் ‘பள்ளிக் கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு, நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு’ என்று வரும்.
பதிலுக்கு நாயகி,
‘போடுங்கள்.. கூண்டில் ஏற்றுங்கள்..நான் போதும் என்று சொல்லும் வரை நீதி சொல்லுங்கள்’ – என்று பாடுவதுபோல எழுதியிருந்தார் கண்ணதாசன். நாயகி பாடும் வரிகள் எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை.
கண்ணதாசனிடம் சொல்லி அந்த வரிகளை மாற்றச் சொன்னார். கண்ணதாசன் உடனே மாற்றிக் கொடுத்த வரிகள்தான்,
‘போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள், உங்கள் பொன்மனத்தை சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்’.
நட்பு ஒருபுறம் இருந்தாலும், எம்.ஜி.ஆரின் மனதை பொன்மனம் என்று வர்ணித்தவர் கண்ணதாசன். அந்த அளவுக்கு அவர்களுக்கிடையில் புரிதல் இருந்தது.
சினிமாவில் பொதுவாக பெண்களின் அழகைத்தான் கவிஞர்கள் வர்ணிப்பார்கள்.
ஆண்களின் அழகையும் வர்ணிக்க முடியும் என்றால் அது எம்.ஜி.ஆருக்குத்தான் பொருந்தும்.
‘குடும்பத் தலைவன்’ படத்தில் ‘கட்டான கட்டழகு கண்ணா, உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?’ என்று எம்.ஜி.ஆரை வர்ணித்திருப்பார் கண்ணதாசன்.
எம்.ஜி.ஆரின் அழகை, ஆளுமையை ‘நீதிக்குப் பின் பாசம்’ படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில், நாயகி பாடுவது போல கண்ணதாசன் விவரித்திருப்பார். அந்த வரிகள்…
“தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது
பொன்னல்லவோ நிறத்தை தந்தது”.
இந்த வரிகளைப் படித்தாலே நினைவுக்கு வருபவர் எம்.ஜி.ஆராகத்தான் இருக்க முடியும்.
கண்ணதாசன் எழுதிய பாடல்களில் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தது, ‘மன்னாதி மன்னன்’ படத்தில் இடம்பெற்ற ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா…’ பாடல்.
எம்.ஜி.ஆர். காரில் பயணம் செய்யும்போது அவர் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இந்தப் பாடல் தவறாமல் இடம் பெறும்.
அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகும் அவரை தாக்கி பேசுவதை கண்ணதாசன் நிறுத்தவில்லை.
ஒருநாள், முதல்வர் வீட்டிலிருந்து கண்ணதாசன் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு. தனது மகன் திருமண விஷயமாக கண்ணதாசன் வெளியூர் சென்றிருந்தார்.
இப்போதுபோல அப்போது செல்போன் எல்லாம் கிடையாது. தீவிர முயற்சிக்குப் பிறகு, கண்ணதாசனை தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர்., அவரை உடனே புறப்பட்டு சென்னை வரச் சொன்னார்.
எதற்காக வரச் சொல்கிறார் என்பது புரியாமலே தன்னை சந்தித்த கண்ணதாசனுக்கு எம்.ஜி.ஆர். இன்ப அதிர்ச்சி அளித்தார்.
‘‘தங்களை தமிழக அரசின் அரசவைக் கவிஞராக நியமிக்க முடிவு செய்திருக்கிறேன்.
” சம்மதம் ” என்ற ஒரே வார்த்தையை மட்டுமே உங்களிடம் எதிர்பார்க்கிறேன்’’ என்றார். எம்.ஜி.ஆரின் அன்பிலும் மகிழ்ச்சியிலும் திக்குமுக்காடிப் போனார் கண்ணதாசன்.
‘அரசவைக் கவிஞர்’ பட்டமளிக்கும் விழாவில் உணர்ச்சிவசப்பட்ட கண்ணதாசன், ‘‘நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும். இந்தச் சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
அவர் கூறியது போலவே நடந்தது. அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்ற கண்ணதாசன் வெறும் உடலாகத்தான் திரும்பினார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் இறுதி ஊர்வலத்துக்குத் தயாரானது.
கண்ணதாசன் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்ட பின், யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் எம்.ஜி.ஆர். மின்னலாய் அந்த வாகனத்தின் மீது ஏறிவிட்டார்.
கண்ணதாசன் உடலை சற்று உயர்த்தி சிறிய ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டிவிட்டு கீழே இறங்கிய எம்.ஜி.ஆர்., ‘‘இப்போது, கவிஞரின் முகம் பொதுமக்கள் பார்க்க வசதியாக நன்றாக தெரிகிறது’’ என்றார்.
எம்.ஜி.ஆர். அதிலும் தமிழக முதல்வர். கண்ணசைத்தால் காரியம் செய்ய காத்திருப்போர் ஆயிரம் பேர்.
என்றாலும் கண்ணதாசனின் முகத்தை பொதுமக்கள் இறுதியாகப் பார்த்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக, தானே வேன் மீது ஏறினார் என்றால், கவிஞர் மீது அவர் கொண்டிருந்த அன்பும், எதையும் மக்களின் கோணத்தில் இருந்தே பார்க்கும் எம்.ஜி.ஆரின் நுண்ணறிவும் பிரமிக்கத்தான் வைக்கும். (நன்றி – ‘ சினி ராக்கெட் ‘ கட்டுரை …)
…………………………………………………………………………………………………………………………..



எம் ஜி ஆர் மாதிரி, தானாகவே உதவும் நல்ல குணம் பெரும்பாலான அரசியல்வாதிகளுக்குக் கிடையாது. ஜெ.வுக்கு உண்டு (ஆனால் ஒரு பிசாசு தடுத்தது என்று பலமுறை படித்திருக்கிறேன். சாதாரண தொண்டரையும் எம்.எல்.ஏவாகவோ இல்லை எம்.பியாகவோ இல்லை பெரிய பதவியிலோ உட்கார வைப்பதில் அவருக்கு இணை யாருமில்லை. என்னவோ எம்.ஜி.ஆரைப் பற்றிப் படிக்கும்போது அவருக்கு உறுதுணையாக பிறகு அதிமுகவை ஓஹோ என்று வளரச் செய்த ஜெ.நினைவும் வருகிறது. நீங்கள் தாழ்த்தப்பட்டவர் என்பதால் தொகுதியில் தேர்தலின்போது விருந்து நடத்தினால் கட்சித் தலைவர்கள் வராமல், என்னிடமே உங்களைப் பற்றிக் குறை சொல்லுகிறார்களா? அவர்களே உங்களை மரியாதை செய்ய வைக்கிறேன் என்று சபாநாயகராக்கிய புரட்சித் தலைவி அவர்).
நயத்தகு நாகரிகம் உள்ளவர் எம்.ஜி.ஆர். வாலி அவர்கள் இந்தச் சம்பவத்தைப் பற்றி (கண்ணதாசன் அரசவைக்கவிஞர் ஆனது பற்றி) எழுதியிருக்கிறார் அவருடைய நினைவுநாடாக்கள் தொகுதியில். எம்.ஜி.ஆர் வாலியிடம் முன்பே இதைப்பற்றிச் சொல்லி அவர் கருத்தைக் கேட்டிருக்கிறார் (கண்ணதாசனை முழுமையாகத் தவிர்த்துவிட்டு, வாலியையே தன் எல்லாப் படங்களுக்கும் பாடலாசிரியராக இருக்க வைத்து வாலியின் ஏற்றத்திற்கு உறுதுணையாக இருந்தவர் எம்.ஜி.ஆர்). மிகப் பெரிய மனிதரைப் பற்றி எப்போது எழுதினாலும் படிக்க ரசனையாக இருக்கிறது. பொன்மனச் செம்மல் என்று சும்மா அவருக்கு பட்டம் கிடைக்கவில்லை.
//கண்ணதாசன் என் படங்களில் பாடல் எழுதக் கூடாது என்று எம்.ஜி.ஆர். கூறியதில்லை// இதெல்லாம் கற்பனைச் செய்திகள். எம்.ஜி.ஆர் அந்தச் சமயத்தில் ஒரு அரசியல் மேடையில், இனி என் படத்தில் வாலி என்பவரே பாடல்கள் எழுதுவார் என்று சொன்னார். அதன் பிறகுதான் வாலி மாத்திரமே பாடல்கள் எழுதுவது நிகழ்ந்தது. யார் பாடல் எழுதினாலும், யார் இசை அமைத்தாலும், எம்.ஜி.ஆரின் ஒப்புதல் பெறவேண்டும் என்பதை எம்.ஜி.ஆர் எப்போதுமே கடைபிடித்தார்.