அன்னபூர்ணா விவகாரம் : பாயும் வானதி, பதறும் அண்ணாமலை…!!!

…………………………………………………

……………………………………………………

(விகடன் தளத்தில் வெளிவந்துள்ள ஒரு சூடான அரசியல் / செய்திக் கட்டுரை … !!!)

கோவை அன்னர்பூர்ணா ஹோட்டல் உரிமையாளர் விவகாரம், அரசியல் பிரச்னையாக மாறி பாஜக-வுக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பிரச்னை குறித்து அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதி அமைச்சர் முன்னிலையில் கூறிய கருத்து சமூகவலைதளங்களில் வைரலானது.

இந்த விவகாரத்துக்கு பின்னர் சீனிவாசன், நிர்மலா சீதாராமன் மற்றும் வானதி சீனிவாசனை நேரடியாக சந்தித்து மன்னிப்பு கோரினார்.

பொதுவாக மன்னிப்பு கோரினால், பிரச்னை முடிவுக்கு வரும். இந்தப் பிரச்னையில் மன்னிப்பு கேட்ட பிறகு தான் அது பூதாகரமாக வெடித்தது. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் பாஜகவில் அண்ணாமலையின் ஆதரவாளர்களே இந்த அரசியலை விரும்பவில்லை.

“என்ன இருந்தாலும் அவர் தங்கள் தொழிலின் பிரச்னையை சொன்னார். அந்த நிகழ்வில் கூட அவர் தொடக்கத்தில் பாஜக அரசை பாராட்டியுள்ளார். அப்படி இருக்கும்போது, மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியிடப்பட்டது தவறு. அண்ணாமலையே இதை விரும்ப மாட்டார். தர்மசங்கடத்துக்கு உள்ளாக்க வேண்டாம்.” என்கிறார்கள் அண்ணாமலையின் ஆதரவாளர்கள்.

பாஜக கொங்கு அரசியலை குறிவைத்து தீவிரமாக பணியாற்றி வருகிறது. அங்கு பிரதானமாக உள்ள கவுண்டர், நாயுடு, அருந்ததியர் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினருக்கும் தனி கவனம் செலுத்தி வருகிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கிய அண்ணாமலை 4.5 லட்சம் வாக்குகளை பெற்றார்.

தொழில்துறையினரும், நாயுடு சமுதாயத்தினரும் பாஜகவுக்கு ஆதரவளித்த காரணத்தால், அதிமுகவை விட அதிக வாக்குகளை வாங்கியிருந்தனர் என்பது கோவையில் சொல்லப்படும் வாக்கு கணக்கு.

கோவையில் அரை நூற்றாண்டுக்கு மேல் இயங்கி வரும் அன்னபூர்ணா உணவகம், முக்கிய அடையாளமாக உள்ளது. அன்னபூர்ணா சீனிவாசன் நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவர். எனவே அவருக்கு நடந்த இந்த சம்பவத்தை தொழில்துறையினரும், நாயுடு சமுதாயத்தினரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என பாஜகவே நினைக்கிறார்கள். அதனால் இது தேர்தல் அரசியலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் யோசிக்கிறார்கள்.

இதன் காரணமாகதான் நிர்மலா சீதாராமன், வானதி சீனிவாசன் எதிர்ப்பையும் மீறி, அண்ணாமலை ஆதரவாளர்கள் இந்தப் பிரச்னையில் அன்னபூர்ணாவுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். இதன் விபரீதத்தை உணர்ந்த அண்ணாமலை லண்டனில் இருந்து சீனிவாசனுக்கு போன் செய்து பேசி, தனிப்பட்ட சந்திப்பில் நடந்த வீடியோவை வெளியிட்டதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார்.

……………………………………………………………………………………..…………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to அன்னபூர்ணா விவகாரம் : பாயும் வானதி, பதறும் அண்ணாமலை…!!!

  1. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    என்ன பேசினார் அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் …? கீழே –

    …………………………………………..

    ………………………………………….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.