எம்.ஜி.ஆர். ” சிவாஜி ” -ஆகி இருந்தால் …. சிவாஜி என்னவாகி இருப்பார்….!!!

………………………………..

…………………………………

( அண்ணா – சிவாஜி -” சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் ” நாடகத்தில்… )

…………………………………

அந்த காலத்தில், சினிமாவுக்கு வரும் முன்னர் கலைஞர்களின் களமாக
இருந்தது நாடக மேடைகள்தான். அப்போது கணேசனுக்கு 11 வயதுதான்.
அப்போது பொன்னுசாமி பிள்ளை நாடகக் கம்பெனியில் அரிதாரம் பூசிக்கொண்டிருந்த கணேசன், கொஞ்சநாளில் அதிலிருந்து விலகி
சரஸ்வதி கான சபாவில் சேர்ந்தார்.

பிற்பாடு கணேசன் மங்கள கான சபாவில் இணைந்தார். அதை விலைக்கு
வாங்கிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அதற்கு என்.எஸ்.கே.
நாடக சபா என்று பெயரிட்டார். சில நாட்களிலேயே கலைவாணர்
லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிறை செல்ல நேர்ந்தது.
சகஸ்ரநாமத்திடம் பொறுப்பைத் தந்தார்.

அங்கிருந்த நடிகர் கே.ஆர். ராமசாமிக்கு அது பிடிக்காமல்
வெளியேறினார். அவருடன் டி.வி.நாராயணசாமியும் கணேசனும் வெளியேறிவிட்டார்கள்.

வெளியேறிய மூவரும் நேராக அறிஞர் அண்ணா நடத்திவந்த திராவிட நாடு பத்திரிகை அலுவலகத்தில் அடைக்கலமானார்கள். அங்கே சின்னச் சின்ன வேலைகளை கணேசனும் மற்றவர்களும் செய்தார்கள்.

அது திராவிடர் கழகத்தின் சார்பில் ஏழாவது சுயமரியாதை மாநாடு
நடைபெற இருந்த சமயம். அதில் அரங்கேற்றுவதற்காக அண்ணா ஒரு
நாடகத்தை எழுதி முடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அந்த
நாடகம்தான் ’சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’.

டி.வி.நாராயணசாமியிடம் அந்த நாடகத்தைத் தயாரித்து வழங்கும்
பொறுப்பைத் தந்தார் அண்ணா. அத்துடன் அவரையே அதில் நடிக்க
வேண்டும் என்றும் சொன்னார். அப்போது ‘மாயா மச்சீந்திரா’ படம் வெளிவந்திருந்தது. அதில் எம்ஜிஆர் மிகவும் அருமையாக கத்திச்சண்டை
போட்டு நடித்திருந்தார். அதைப் பார்த்திருந்த நாராயணசாமி,
நாடகத்தில் சிவாஜி வேடத்திற்கு எம்ஜிஆர் தான் பொருத்தமாக இருப்பார்
என்று சொல்லி, கூடவே எம்ஜிஆரையும் அண்ணாவிடம் அறிமுகம்
செய்துவைத்தார்.

அதுதான் எம்ஜிஆர் – அண்ணா முதல் சந்திப்பு.

அப்போது எம்ஜிஆர் கதர் உடுத்தும் தேசியவாதி. அதுமட்டுமல்ல…
கழுத்தில் துளசி மாலை, நெற்றி நிறைய திருநீற்றுப் பட்டை என
சிவப்பழமாகக் காட்சியளித்தார். நல்ல சிவப்பு நிறம். கட்டான உடல்.
அந்த கம்பீரத் தோற்றம் அண்ணாவைக் கவர்ந்தது. தான் கற்பனை செய்துவைத்திருந்த சிவாஜி இவர்தான் என்ற முடிவுக்கு வந்தார் அண்ணா.
உடனே, எம்ஜிஆர் அளவுக்கு சத்ரபதி சிவாஜி உடைகள் தைக்கப்பட்டன. வசனங்களை ஒப்படைத்தார்கள்.

அப்போது கோவை ஜூபிடர் பிக்சர்ஸில் ‘ராஜகுமாரி’ படத்தில்
கதாநாயகனாக நடித்துக்கொண்டிருந்தார் எம்ஜிஆர். ஒத்திகைக்கு அழைக்கப்பட்டபோது ஒருசில காட்சிகளை மாற்றியமைத்தால்
நன்றாக இருக்குமே டி.வி. நாராயணசாமியிடம் சொன்னார் எம்ஜிஆர்.

அண்ணாவுக்கு அதில் ஆட்சேபனை ஏதும் இருக்கவில்லை.
அண்ணாவுக்கு நேரமில்லை என்றால், தான் அந்தத் திருத்தங்களைச் செய்துதருவதாக ‘ராஜகுமாரி’ பட இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி
சொன்னார். அண்ணா பெருந்தன்மையோடு அதற்கும் ஒப்புக்கொண்டார். அப்படியிருந்தும் சிவாஜி வேடத்தில் நடிப்பதா வேண்டாமா என்ற குழப்பம் எம்ஜிஆருக்கு ஏற்பட்டது.

“அறிமுகமானபோதே திருத்தம் சொல்லி உன்னை எல்லோரும் தவறாக நினைக்கும்படி நடந்துகொண்டாய். இப்போது நடிப்பதா வேண்டாமா
என்கிற குழப்பம் வேறு. எனவே, இந்த நிலையில் நீ நடிக்காமல் இருப்பதே
நல்லது” என்று சாமி அறிவுரை கூற, அண்ணாவின் சிவாஜி நாடகத்தில்
நடிக்க இயலாது என்று சொல்லி விலகினார் எம்ஜிஆர்.

( எம்.ஜி.ஆர்.- “சிவாஜி” ஆகாதது இதனால் தான் ….!!! )

அதன் பிறகு நடிகர் எஸ்.வி.சுப்பையாவை சிவாஜி வேடத்தில் நடிக்க
வைக்க ஒரு முயற்சி நடந்தது. சுயமரியாதை இயக்கம் கடவுள் மறுப்பு
பேசும் இயக்கம் என்று கூறி மறுத்துவிட்டார் சுப்பையா.
‘பராசக்தி’யில் பூசாரியாக நடித்த கே.பி.காமாட்சி அப்போது
நாடகங்களில் முக்கிய நடிகராக இருந்தார். அவரையும்
பரிசீலித்தார்கள்; பலனில்லை.

நாடகம் அரங்கேற நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. திராவிட நாடு
அலுவலகத்தில் கே.ஆர்.ராமசாமி, கணேசன் இவர்களோடு சிவசூரியன்,
கிருஷ்ணன், சிதம்பரம் போன்ற நடிகர்களும் இருந்தார்கள்.
நம்ம கணேசனை சிவாஜி வேடத்தில் போட்டால் என்ன என்று
ஒரு யோசனை அப்போதுதான் அவர்களுக்குத் தோன்றியது.
சொன்னவர் சிதம்பரம் என்ற நடிகர். அதை நாராயணசாமி
அண்ணாவிடம் சொன்னார். அண்ணா, “கணேசன் பெண் வேடங்களில்
நடித்துப் பார்த்திருக்கிறேன்…” என்று இழுத்தார். தயார் செய்துவிடலாம்
என்று நம்பிக்கையளித்தார் நாராயணசாமி.

கணேசனிடம் அண்ணா கேட்டார்: “கணேசா… சிவாஜியாக
நீ நடிக்கிறாயா?” அதற்கு கணேசன், “சிவாஜி எங்கே, நான் எங்கே…
என்னால் முடியுமா….? ” என்று திருப்பிக் கேட்டார் .

“முயற்சித்துப்பார் கணேசா… உன்னால் முடியும்” என்றார் அண்ணா.
அத்துடன் தொண்ணூறு பக்க வசனங்களையும் கணேசனிடம் தந்தார்.
அப்போது காலை மணி 11. படித்துப்பார். நான் மாலை வருகிறேன்
என்று சொல்லி வீட்டிற்குச் சென்றுவிட்டார் அண்ணா.

மாலை 6 மணிக்கு வந்தார். படித்தாயா என்று கணேசனிடம் கேட்டார்.
கணேசன் உற்சாகத்தோடு அண்ணாவை ஒரு நாற்காலியில் உட்காரச்
சொன்னார். அண்ணா எழுதித்தந்த அத்தனை வசனங்களையும்
கணேசன் பேசி நடித்துக் காண்பித்தார். அக்கம் பக்கத்தில்
இருந்தவர்களெல்லாம் கணேசனின் கம்பீரக் குரல் கேட்டுக்
கூடிவிட்டார்கள்.

அண்ணாவின் கண்களில் நீர் ததும்பியது. வியந்துபோன அவர் எழுந்து
கணேசனிடம் சென்றார். அவரைக் கட்டித்தழுவினார்.
“இனி நீதான் சிவாஜி!” – என்றார். நாடகத்துக்கு நான்கு நாட்கள்தான்
இருந்தன. எம்ஜிஆருக்காகத் தைக்கப்பட்ட உடைகள் கணேசன்
அளவுக்குத் திருத்தித் தைக்கப்பட்டன. முடியாத இடங்களில்
பஞ்சு வைத்து அடைக்கப்பட்டது.

அப்போது கணேசனுக்கு எம்ஜிஆரைவிட மெலிந்த தேகம்.
ஏழாவது சுயமரியாதை மாநாடு சென்னை உயர்நீதிமன்றத்தின்
எதிர்ப்புறம் நடந்தது. அங்கிருந்த பெரிய திரையரங்கில் அண்ணாவின்
‘சிவாஜி கண்ட இந்துராஜ்ஜியம்’ நாடகம் அரங்கேறியது. நாடகம்
மூன்று மணிநேரம் நடந்தது. நாடகத்தில் காகப்பட்டராக
அண்ணாவே நடித்தார்.

நாடகத்தை முழுவதும் பார்த்து ரசித்த தந்தை பெரியார் மேடையேறிப்
பேசினார்: “நான் பத்து மகாநாட்டில் சொல்ல வேண்டிய கருத்துக்களை
ஒரே நாடகத்தில் கூறிவிட்டார் அண்ணா. சிவாஜி வேடத்தில் குறுக்கும்
நெடுக்கும் ஓடிக்கொண்டு, மிகச் சிறப்பாக நடித்த அந்தச்
சின்னப்பையன் யார்?” – என்றார். அவன்தான் கணேசன் என்று சொல்லி,
பெரியார் முன்பு கணேசனை அழைத்து வந்து நிறுத்தினார்கள்.

பெரியார் கணேசனைப் பார்த்துச் சொன்னார்: “நீதான் கணேசனா..?
இல்லை… இல்லை… இன்று முதல் நீ சிவாஜி…!” என்றார்….!!!

அன்று முதல் அவர் உலகமே போற்றிய நடிப்பு மேதை சிவாஜி கணேசன் என்றாகிப்போனார். “சிவாஜி கணேசன்” என்ற பெயர் தந்தை பெரியார எனக்குப்போட்ட பிச்சை என்று பின்னாளில் தனது சுயசரிதையில்
நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டிருந்தார் சிவாஜி…..!!!

( – ஆசிரியர் சோழ.நாகராஜன் அவர்களுக்கு மிகுந்த நன்றியுடன் – அவர் எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள்…. )

.
………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.