பத்திரிகை சுதந்திரம் …இது தான் இந்தியாவின் “மதிப்பிடமா…? “

…………………………………………..

…………………………………………..

“ Red Zone ” -ல் இந்தியா.. … பத்திரிகை சுதந்திரத்தில்
பாகிஸ்தான், ஆப்கானைவிட பரிதாபம் ….!

டெல்லி: பத்திரிகை சுதந்திரம் குறித்த 180 நாடுகளின் தரவரிசை
பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டை காட்டிலும் 11 இடங்கள்
பின்னோக்கி சென்று 161 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

மே 3 ஆம் தேதி சர்வதேச பத்திரிகையாளர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு REPORTERS WITHOUT BORDERS
எனப்படும் எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் என்ற சர்வதேச ஊடக கண்காணிப்பு நிறுவனம் ஆண்டுதோறும் சர்வதேச அளவில் ஊடக சுதந்திரங்களை கொண்ட நாடுகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது 2023 ஆம் ஆண்டுக்கான 180 நாடுகளின்
பத்திரிகை சுதந்திர தர வரிசை பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.


அதில் –
நார்வே முதலிடத்திலும்
அயர்லாந்து 2 வது இடத்திலும்,
டென்மார்க் 3 வது இடத்திலும் உள்ளன.
ஸ்வீடன் 4 வது இடத்திலும்
பின்லாந்து 5 வது இடத்தையும் பிடித்து இருக்கின்றன.


வட கொரியா இந்த பட்டியலில் கடைசி இடத்தை தக்க வைத்து
இருக்கிறது. சீனா 179 வது இடத்திலும், வியட்னாம் 178 வது
இடத்திலும் ஈரான் 177 வது இடத்திலும் உள்ளன. துர்க்மேனிஸ்தான்
176 வது இடத்திலும் இருப்பதாக தரவரிசையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தர வரிசையில் வல்லரசு நாடுகளான பிரான்ஸ் 24 வது இடத்திலும் பிரிட்டன் 26 வது இடத்திலும் அமெரிக்கா 45 வது இடத்திலும் உள்ளன.
உக்ரைன் மீதான போர் தாக்குதல்களை நடத்தி வரும் ரஷியா,
இப்பட்டியலில் 164 வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

இப்பட்டியலில் கடந்த சில ஆண்டுகளாக சரிவை சந்தித்து வரும்
இந்தியாவின் நிலை, இந்த ஆண்டும் மோசமான இடத்துக்கு சரிந்து
உள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு 142 வது இடத்தில் இருந்த இந்தியா 2022 ஆம்
ஆண்டில் 150 வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டு மேலும் 11 இடங்களில் சரிந்து
161 இடத்துக்கு சென்று உள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த பட்டியலில் 133 வது இடத்தில் பின் தங்கி
இருந்த இந்தியா அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் சரிவை சந்தித்து இருக்கிறது.

இந்தியாவின் அண்டை நாடுகளான பூட்டான் 90 வது இடத்திலும்,
நேபாளம் 95 வது இடத்திலும், மாலத்தீவுகள் 100 வது இடத்திலும்
இலங்கை 136 வது இடத்திலும், பாகிஸ்தான் 150 வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 152 வது இடத்திலும், வங்கதேசம் 163 வது இடத்திலும், மியான்மர் 173 வது இடத்திலும் உள்ளன.

இந்தியாவின் இந்த நிலை குறித்து எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “2014 ஆம் ஆண்டு
முதல் நரேந்திர மோடியின் இந்து தேசிய வலதுசாரி கட்சியான பாஜகவின் ஆட்சியின் கீழ், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து வருகின்றன. அங்கு பத்திரிகை சுதந்திரம் ஆபத்தில் உள்ளது. 2023 ஜனவரியிலிருந்து
இன்று வரை ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்டு உள்ளார்.
10 பத்திரிகையாளர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டு
உள்ளனர்.” என்றார்.

……………………….
Read more at: https://tamil.oneindia.com/news/delhi/india-is-get-poor-rank-in-world-press-freedom-index-509997.html?
story=2

…………………………………………………………………………………………………………….

நண்பர் புதியவன், ஏற்கெனவே இந்த இடுகைக்கான பின்னூட்டத்தை எழுதத்தொடங்கி இருப்பார்….

( “நிச்சயமாக இந்த பட்டியலின் பின்னணியில் அமெரிக்கா அல்லது ஆப்பிரிக்கா அல்லது இஸ்ரேலின் சதி இருக்கிறது ( அ, ஆ, இ -வந்து விட்டது…!!!)

எங்கே இருக்கிறது இந்த REPORTERS WITHOUT BORDERS …..? யாராவது முன்ன பின்ன கேள்விப்பட்டிருக்கிறீர்களா…?

கா.மை.சாருக்கு வேறு வேலை இல்லையா…? ஏன் இப்படி கண்ட கழிசடைகளின் ரிப்போர்ட்டுகளையெல்லாம் போட்டுக்கொண்டு …… 😃 !!!! )

.

……………………………………………………………………………………………………………..………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

10 Responses to பத்திரிகை சுதந்திரம் …இது தான் இந்தியாவின் “மதிப்பிடமா…? “

  1. Vicky's avatar Vicky சொல்கிறார்:

    ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லாதது கவலைக்குரியது.
    ஒரு கேள்வி, ஆளும்கட்சி சார்பு நிலையை பத்திரிக்கை தானாகவே எடுத்துக்கொண்டால் அது பத்திரிக்கை சுதந்திற்குள் வருமா வராதா?
    உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் எத்தனை பிரதான பத்திரிக்கைகள் திமுகவிற்கு எதிரான விமர்சனங்களை எழுதவோ விவாதிக்கவோ செய்கின்றன? மாநிலங்களின் கூட்டமைப்பு தானே இந்தியா? மாநில அளவில் இந்த சுதந்திரம் எந்த அளவில் உள்ளதாக நினைக்கிறீர்கள்?

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    Reporters without Borders – இந்த மாதிரி ஆயிரம் NGOக்கள் அடுத்த நாட்டைப் பற்றி ஒன்றுமே அறியாமல் எதையாவது உளறுவதற்கு வந்துவிடுவார்கள். இவர்கள் எந்த அளவுகோலை வைத்து இதனைக் கண்டுபிடிக்கிறார்கள், யார் யாரிடம் சர்வே செய்தார்கள் என்பதையெல்லாம் வெள்ளை அறிக்கையாக கொடுப்பாங்களா?

    இந்த மாதிரி வெற்றுப்பயல்கள் (இவங்க பல்வேறு நாடுகளிலிருந்து நிதி பெறுவார்கள்), இந்தியாவிற்கு என்று ஒரு 100 பேரை லிஸ்டில் வைத்திருப்பார்கள். அந்த 100 பேர் யார் யார் என்று அவங்களே தேர்ந்தெடுத்து வச்சிருப்பாங்க. (உதாரணமா கா.மை. சார் தொடர்ந்து பாஜகவை எதிர்த்து வந்தால், சரி, அவரையும் லிஸ்டுல சேர்ப்போம் என்று சேர்த்துக்கொள்வார்கள். தீவிர இந்திய எதிர்ப்பு மனநிலை இருக்கிறதா, சரி உங்களையும் அதுல சேர்த்துக்கொள்கிறேன் என்று சேர்த்துப்பாங்க. உங்களுக்கு நினைவிருக்கா..ஒரு பொருளாதார எக்ஸ்பர்ட்..சென்? அவர்தான் இலங்கை பாகிஸ்தான் இந்த இரு நாடுகளும் பொருளாதாரத்தில் இந்தியாவை விட மிகவும் வேகமா வளருகிறார்கள் என்று 1 1/2 வருடத்துக்கு முன் சொல்லி, பிறகு இரண்டு நாடுகளும் கவுந்த உடனே, ஆளே காணாமல் போய்விட்டார். இந்த மாதிரி ஆட்கள்தான் இந்த சர்வே லிஸ்ட்ல இருப்பாங்க). இவங்க குட்டு வெளிப்படக்கூடாது என்பதற்காக ஆதரவு ஆட்களையும் கொஞ்சம்பேரை வச்சிருப்பாங்க. அப்புறம் சர்வே செய்து உலக அளவில் பப்ளிஷ் பண்ணுவாங்க.

    இந்த நோபல் பரிசுக் கமிட்டி வெத்துப் பயல்களும் இந்த கேஸ்தான். ஏன் காந்திக்கு அமைதிப் பரிசு கிடையாது என்று கேட்டால், பேர் Kல ஆரம்பிக்குது அதுனால கொடுக்கலைம்பாங்க. ஏன் ஒபாமாவுக்குக் கொடுத்த என்று கேட்டால், உப்புமா எங்களுக்குப் பிடிக்கும், அதுனால ஒபாமாவுக்குக் கொடுத்தோம் என்பாங்க.

    இவங்க சர்வேலாம், சும்மா ஒரு பதிவு தேற்ற உதவும். சில பல international lawsக்கு உதவும். அவ்ளோதான்.

    இந்த கா.மை சார் சொல்லட்டுமே… ஏன் தமிழக ஊடகங்கள் தமிழக அரசைப் பற்றி எதையுமே விமர்சனம் செய்வதில்லை, எழுதுவதில்லை என்று. யாருடைய தயவு, பணம் (இதெல்லாம் லஞ்சத்துல வராதா?) போன்றவைகளை எதிர்பார்த்தால் அங்கு நேர்மை/நியாயம் செத்துவிடும். ஏன் தினம் கம்யூனிஸ்டு தலைவர்கள், சூரியன் கிழக்கில் உதிப்பதற்கே ஸ்டாலின் அரசுதான் காரணம் என்று பஜனை பண்ணறாங்க? காரணம் டப்புதான்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      .

      புதியவன்,

      உங்களின் நிறைவேறாத ஆசை –

      // உதாரணமா கா.மை. சார் தொடர்ந்து
      பாஜகவை எதிர்த்து வந்தால்,……//

      நான் எந்த கட்சிக்கும் ஜால்ரா போடுபவன் அல்ல…
      (உங்களைத்தான் சொல்கிறேன் என்று
      நினைத்துக்கொண்டு விடாதீர்கள்……)

      அதே மாதிரி, எந்த கட்சியையும்
      காரணம் இல்லாமல் எதிர்த்துக்கொண்டே
      இருப்பவனும் அல்ல….

      கண்ணதாசன் ஸ்டைலில் சொல்வதானால் –

      “நான் சுதந்திரமானவன்…. எனக்கு எந்த கட்சியும்
      சாஸ்வதமில்லை ” …

      இன்று எதிர்ப்பேன் – நாளையே பாராட்டுவேன்….

      நான் சிலரைப்போல் –
      ( உங்களைச் சொல்கிறேன்
      என்று நினைத்து விடாதீர்கள்…!!!)
      கட்சி சார்பாக எதையும் எழுதுவதில்லை…
      விஷயம் சார்ந்தே எழுதுகிறேன்…
      ( My stand is NOT PARTY BASED…
      But ISSUE BASED, Welfare of the
      Soceity Based …)

      ஆமாம் – நேற்று காங்கிரஸை கிண்டல் செய்து
      எழுதி இருந்தேனே…. நீங்கள் பார்க்கவில்லையா….?

      பார்த்திருந்தால் இந்த வார்த்தை வந்திருக்காதே…!!!

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

        .
        புதியவன்,

        பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி,
        செய்தி மீடியா – தளங்கள்
        பொதுவாக மூன்று விஷயங்களுக்கு
        அடிபோகின்றன ….

        1) பணம், 2) அதிகாரம் 3) மிரட்டல்….

        (இது சென்னைக்கும் பொருந்தும்….
        டெல்லிக்கும் பொருந்தும்…😊 )

        புதியவன்- ஹேப்பி…..?

        .
        -வாழ்த்துகளுடன்,
        காவிரிமைந்தன்

        • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

          என்னுடைய அளவுகோல் (மீடியாக்களுக்கு) ‘ஒன்றியம்’ என்ற வார்த்தையை உபயோகப்படுத்துபவர்கள் அனைவரும் விலைபோனவர்கள். நாளைக்கே திமுக அரசு, ஆங்கிலேயர்களுக்கும் தாய்மொழி தமிழ்தான், அவர்களையும் திராவிடர்கள் என்று அழைக்கணும் என கருத்து தெரிவித்தால், உடனே பிரிட்டனில் இருக்கும் திராவிடர்கள் என்று எழுத ஆரம்பித்துவிடுவாங்க.

          இப்படிச் செய்வதால் என்னாகிவிடுகிறது…. சர்க்குலேஷன் மிகவும் குறைந்துவிடும். மக்களின் நம்பிக்கை கிடைக்காது. இந்து பத்திரிகைக்கு ஆன கதைதான்.

          • Vicky's avatar Vicky சொல்கிறார்:

            உண்மை. இத்தனை காலம் இல்லாமல் ஸ்டாலின் பதவிக்கு வந்தவுடன் அவர் சொன்னவுடன் அத்தனை பத்திரிகைகளும் ஒன்றிய அரசு என மாற்றி எழுதுகின்றன?

  3. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    நீங்களே இந்து தமிழ் பத்திரிகை பற்றி இரண்டு நாட்களுக்கு முன் மதுரையில் நடந்த காணொளி பார்த்திருப்பீங்க. நீட் தேர்வு, கஷ்டம், மாணவர்கள் தோல்வியடைவார்கள், தற்கொலை என்றெல்லாம் முதல் பக்கத்தில் எழுதி, ஓசிக்கு பேப்பரை மதுரை மாணவர்களிடம் கொண்டு கொடுத்தபோது, பெற்றோர்களிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும் அடி வாங்காத குறை, பேப்பரை எரிப்பது என்றெல்லாம் ஆனபிறகு அந்த இடத்திலிருந்து ஓட்டம் பிடித்தாங்க. அதே பத்திரிகையில், +2 தேர்வில் பாஸாகதால் 5 பேர் தற்கொலைச் சம்பவம் வந்ததா? வராது. காரணம் இதேதான்.

  4. Karthikeyan Palanisamy's avatar Karthikeyan Palanisamy சொல்கிறார்:

    One India செய்தியா அப்ப இது உண்மையான செய்திதான் 2014க்கு முன்னாடி இந்தியா முதலிடத்திலும் தமிழ்நாடு கடைசியிடத்திலும் இருந்தது. திருட்டு மாடல் ஆட்சி வரவும் தமிழ்நாடு முதலிடத்திலும் ஒன்றியரசு 161 இடத்திற்கும் வந்துவிட்டது. ஈவேரா மட்டும் இல்லைனா 🔥🔥🔥

  5. bandhu's avatar bandhu சொல்கிறார்:

    இது போன்ற ‘காகிதப் புலிகள் ‘ எல்லோருக்குமே ஒரே அஜெண்டா தான்! மேற்குலகுக்கு ஆமாம் சாமி போடாத நாடுகளில் ‘மனித உரிமை மீறல்’ ‘பத்திரிகை சுதந்திரம் இல்லை’ ‘மத சுதந்திரம் இல்லை’ ‘பட்டினி இண்டெக்ஸில் கீழே இருப்பது ‘ ‘தனி மனிதர் மகிழ்ச்சி இன்டெக்ஸிஸ் கீழிருப்பது’ என்று வரிசையாக வந்து கொண்டே இருக்கும்! பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத சர்வேக்கள்!

    அரசை எதிர்க்கும் மீடியாக்கள் செய்தியாக போட்டு மகிழ மட்டுமே உதவும்!

  6. Tamil's avatar Tamil சொல்கிறார்:

    //2023 ஜனவரியிலிருந்து
    இன்று வரை ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்டு உள்ளார்.
    10 பத்திரிகையாளர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டு
    உள்ளனர்.//

    இது பொய்யாக இருக்க முடியாது.

    சிறையில் இருக்க வேண்டியவர்கள் ஆட்சியாளர்களாக இருக்கின்ற போது இதைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.