நீதித் துறை யார் கையில்…? …ஜஸ்டிஸ் ஏ.பி.ஷா

………………………………………

………………………………………

உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற ஒரு மாதத்துக்கெல்லாம் ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார் எஸ்.அப்துல் நசீர். அயோத்தி ராமர் கோயில் வழக்கில் ‘அரசமைப்புச் சட்ட அமர்வு’ எடுத்த முடிவுக்கும், இப்போது அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் பதவிக்கும் நிச்சயம் தொடர்பு இருக்கும் என்று மேலும் பலரைப் போலவே நானும் நம்புகிறேன்.

நரேந்திர மோடி தலைமையில் 2014இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவிக்கு வந்த பிறகு, பதவியிலிருந்து ஓய்வுபெற்ற உடனேயே உயர் அரசியல் நியமனப் பதவியைப் பெறும் உச்ச நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிமான் அவர். முதலில் நீதிபதி பி.சதாசிவம் கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டார். பிறகு நீதிபதி ரஞ்சன் பி.கோகோய் மாநிலங்களவையின் நியமன உறுப்பினர் ஆனார்.

முக்கியம் என்று அரசு கருதும் வழக்குகளில், அதற்கு ஆதரவாகத் தீர்ப்பு சொன்னால் ஓய்வுபெற்ற பிறகு இப்படிப்பட்ட உயரிய பதவிகள் கைம்மாறாக வழங்கப்படும் என்று இப்போது பதவியில் இருக்கும் நீதிபதிகளுக்கு ஆட்சியாளர்கள் உணர்த்தும் மறைமுக செய்திதான் இந்த நியமனங்கள். இப்படிப் பதவிகளைத் தந்து நீதிபதிகளை ஈர்ப்பது, நீதிபதிகளிடையே அரசுக்கு இணக்கமாகப் போகும் புதிய வழக்கத்தைத்தான் தோற்றுவிக்கும்.

இப்போதுமே சில நீதிபதிகள் அதைச் செய்துவருகின்றனர். இதனால் மக்களுக்கு நீதித் துறையின் மீதான நம்பகத்தன்மை குறைந்துவருகிறது. நீதிபதி வி.டி.துல்ஜாபுர்கார் 1980இல் கூறினார்: “தேர்தல் வெற்றிக்காக அரசியல் தலைவருக்கு நீதிபதிகள் பூங்கொத்து கொடுப்பதோ, பாராட்டுவதோ, உயர்ந்த பதவியை ஏற்பதற்காகப் புகழ் மொழிகளால் அர்ச்சிப்பதோ நீதித் துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பி்க்கையையே ஆட்டம் காண வைத்துவிடும்.”

  • நீதித் துறை மாண்பு மீதான அடி –

மாநில ஆளுநர் பதவி என்பது அலங்காரமான அரசமைப்புச் சட்டப் பதவியாகத் தோன்றினாலும், உள்ளூர அது அரசியல் சார்புள்ள நியமனப் பதவிதான். எந்தக் காலத்திலும் ஆளுங்கட்சிகளின் நீண்ட கால அரசியல் விளையாட்டே, நீதித் துறையின் சுதந்திரத்தை முழுதாகவோ – பகுதியளவுக்கோ வெவ்வேறு விதங்களில் வலுவிழக்க வைப்பதுதான்; இந்த விவகாரங்களுக்கு வெளியில் நின்றுகொண்டு நடப்பவற்றை ஊன்றிக் கவனித்தால் மெதுவாக – ஆனால் நிச்சயமாக, நீதித் துறையை நிர்வாகத் துறை வலுவிழக்கச் செய்துவருவதை அறியலாம்.

(மிக்க நன்றி – ஆங்கிலத்தில் எழுதிய ஜஸ்டிஸ் ஏ.பி.ஷா -தமிழில் மொழி பெயர்த்த : வ.ரங்காசாரி ஆகியோருக்கு…..)

.
………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to நீதித் துறை யார் கையில்…? …ஜஸ்டிஸ் ஏ.பி.ஷா

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    நான் அப்படி நினைக்கவில்லை. பல நேரங்களில் நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் சரியான கருத்தோ, தீர்ப்போ, நாட்டை முன்னிறுத்தி எடுக்கும்போது (சில நேரங்களில் என்பதுதான் சரியாக இருக்கும்), அதை அங்கீகரிக்கும் விதமாக, இந்த மாதிரி நீதித்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் அரசியல் அலங்காரப் பதவி கொடுக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

    நீங்கள் சொல்லவரும் கருத்து சரி என்று நினைத்தால், ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு நடத்தும் விசாரணைக் கமிஷன்களும் உள்நோக்கம் கொண்டவைதானே. அதிகாரிகளாக இருந்த எம்.கே.நாராயணன் போன்றவர்களை கவர்னராக ஆக்கியதும் பெரும் உள்நோக்கம் உடையதுதானே.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      அதானே….

      ஆக, காங்கிரஸ் கட்சி செய்ததைத்தானே இவர்களும்
      செய்கிறார்கள் -என்கிறீர்கள்….!!!

      சபாஷ்…. அதற்காகத்தானே இவர்கள்
      தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்….!!!

      அதனால் தானே நீங்களும் இதற்கெல்லாம்
      வக்காலத்து வாங்குகிறீர்கள்…!!!

      நல்ல வாதம்….
      -வாழ்த்துகள்

      காவிரிமைந்தன்

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    அது இருக்கட்டும்… ஒருவர் இன்னொருவரை சுப்ரீம் கோர்ட் ஜட்ஜாக பரிந்துரை செய்வது, அந்த ஜட்ஜ், தன்னைப் பரிந்துரை செய்தவரின் பையனை ஜட்ஜாக பரிந்துரை செய்வது, அந்த ஜட்ஜ், தன்னைப் பரிந்துரை செய்தவரின் பையனை ஜட்ஜாக ஆக்குவது என்று டைனஸ்டி, நம் உச்சநீதிமன்றத்தில் கோலோச்சுகிறதாமே… 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே மாற்றி மாற்றி நீதிபதிகளாக ஆகிறார்களாமே…இதைக் கவனித்தீர்களா?

  3. bandhu's avatar bandhu சொல்கிறார்:

    அரசு சார்பாக தீர்ப்பு கொடுத்தால் ஓய்வு பெற்றவுடன் அரசு பதவி என்றால் பெரும்பாலான நீதிபதிகள் ஓய்வு பெற சில மாதங்களே இருக்கும்போது வழக்குகளில் அரசு சார்பாக தீர்ப்பு கொடுக்க வாய்ப்பு மிக அதிகம். அதிலும், முக்கியமான வழக்குகள் மெதுவாக நகர்ந்து சுப்ரீம் கோர்ட் வரும்போது பெரும்பாலும் ஓய்வு பெற சில மாதங்களே உள்ள நீதிபதிகளிடம் வருகிறது. இது மேலும் மேலும் தொடரவே வாய்ப்பு அதிகம்.

    நீதிமன்றங்களில் நியமனங்கள் / பணி உயர்வு போன்றவை அரசின் கீழ் வராமல் சுய அதிகாரம் கொண்ட அமைப்பின் கீழ் வருவது , ஓய்வு பெற்றவுடன் ஒரு வருடத்துக்கு எந்த பதவியும் வகிக்கக்கூடாது போன்ற சட்டங்கள் ..இவையெல்லாம் நடந்தால் நீதித்துறையில் அரசின் தலையீடு குறையும்!

    இன்றைய நிலை இருக்கும்போதே 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே மாற்றி மாற்றி நீதிபதிகளாக ஆகிறார்களாமே… (புதியவன் தகவல்) .. சுய அதிகாரம் கொண்ட அமைப்பாக இருந்தால் வேறு விதமான தலைவலிகள் வரக்கூடும்!

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      //ஓய்வு பெற்றவுடன் ஒரு வருடத்துக்கு எந்த பதவியும் வகிக்கக்கூடாது போன்ற சட்டங்கள் // – எந்த அரசு பணியாளர்களும் தனியார் கம்பெனியில், விஆர்.எஸ் வாங்கிக்கொண்டு சேரக்கூடாது, தனியார் கம்பெனியில் சேர்ந்தால் ஓய்வூதியம் முற்றிலுமாகத் தரப்படக்கூடாது.. வாக்குக்கு காசு வாங்கியது (50 ரூபாய் என்றாலும்) நிரூபிக்கப்பட்டால், அவர் குடும்பத்தில் யாருக்குமே அரசு வேலை கிடையாது, ரேஷன் கிடையாது..என்று பெரிய லிஸ்ட் இருக்கிறது. இதெல்லாம் நம்ம நாட்டில் நடக்குமா?

      சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் பற்றி சில காணொளிகள் வந்தன. சேமித்து வைத்திருந்தால், அதனையும் சேர்த்து எழுதியிருக்கலாம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.