சரத்குமார் சொல்வதை கேட்ட பிறகும் சர்ச்சைகள் தொடர்ந்தால் …..

கடந்த சில நாட்களாக, உணர்வுகளை கிளப்பிவிட வேண்டும்
என்கிற ஒரே நோக்கத்தில், தேவையே இல்லாமல்,
சிலர் தொடர்ந்து – சைவமா அல்லது இந்துவா…?
இந்து என்று ஒரு மதம் இருந்ததா இல்லையா – என்று
சர்ச்சைகளை கிளப்பி, தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள்…

இவர்கள் அத்தனை பேருமே –
கடவுள் நம்பிக்கையோ அல்லது (இந்து) மத நம்பிக்கையோ
இல்லாதவர்கள்… திருவாளர்கள் வெற்றிமாறன், திருமாவளவன்,
சீமான், கமல்ஹாசன், கி.வீரமணி – போன்றவர்கள்.
ராஜராஜ சோழன் சைவமாக இருந்தாலென்ன…?
இந்துவாக இருந்தாலென்ன….?
இவர்களுக்கு அதில் என்ன பிரச்சினை….?

மத நம்பிக்கை, உணர்வு உள்ளவர்களை உசுப்பிவிட்டு,
வேதனைப்படுத்த வேண்டும் என்பதைத் தவிர
வேறு எந்தவித அக்கறையும் இவர்களுக்கு இல்லை…

இந்த நிலையில், சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும்,
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில்,
பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்தில் நடித்தவருமான –
திரு.சரத்குமார் – இந்த பிரச்சினை குறித்து, தெளிவான,
விவரமான- அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்….

கீழே –

…………..

ராஜராஜ சோழன் இந்து இல்லையா…?
மனிதனை “குரங்கு” என்பீர்களா….?

ராஜ ராஜ சோழன் இந்துவா, சைவமா என்று கேட்பது –
மனிதனை, மனிதனா – குரங்கா என்று அழைப்பதை போன்றது
என்றும் மதத்தை பற்றி பேசாமல் தஞ்சை பெரிய கோயிலின் பெருமை பற்றி பேச வேண்டும் எனவும் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“மாமன்னன் ராஜ ராஜ சோழன் இந்துவா?
சைவமா? வைணவமா …?சைவம் இந்து மதமா ….? –
என பரபரப்பான சர்ச்சையாக தற்போது சென்று
கொண்டிருக்கிறது.

சிவன், விஷ்ணு, சக்தி,
முருகன், சூரியன், விநாயகர் –
ஆகிய கடவுள்களை வழிபடுபவர்களை, கி.பி. 8 – ஆம்
நூற்றாண்டில் ஆதிசங்கரர் சைவம், வைணவம், சாக்தம்,
கௌமாரம், சௌரம், கணாபத்தியம், ஸ்மார்த்தம் என
ஆறு பிரிவுகளாக பிரித்தவற்றை, இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி சைவம், வைணவம், சமணம், பௌத்தம், சீக்கியம்
மற்றும் அனைத்து நாட்டுப்புற சமயங்களையும் உள்ளடக்கி பொதுவாக இந்து சமயம் என வரையறுத்துள்ளது.

1790- ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் சட்டங்களை தொகுத்தபோது, கிறிஸ்தவம், இஸ்லாமியத்தை தவிர்த்து
இருந்த பெரும் பிரிவு சமயங்களை சேர்த்து, சிந்து நதியில்
(Indus Valley) இருந்து மருவிய இந்து (Indus) என்ற பெயரிடப்பட்டது.

குரங்கிலிருந்து வந்தவன் மனிதன், மனித குரங்கு
எதிலிருந்து வந்தது? குரங்கு விலங்கு என்றால்,
விலங்கினத்திற்கு மனிதன் என பெயரிட்டது யார்?

மனிதனை இப்போது குரங்கு என்று சொல்வோமா?
அல்லது குரங்கை இப்போது மனிதன் என சொல்வோமா?
இந்த சர்ச்சைகள் எல்லாம் நாட்டிற்கு தேவையான ஒன்று தானா..?

கிறிஸ்தவம் எப்போது உருவானது…?
கிறிஸ்தவர்கள் என்ற பெயர் எப்போது வந்தது….?
இஸ்லாம் எப்போது உருவானது…?
இஸ்லாமியர்கள் என்ற பெயர் எப்போது வந்தது…?

தேசம் முதலில் வந்ததா…?
இங்கு வசிக்கும் மக்கள் முதலில் வந்தார்களா…?
தமிழ்நாடு முதலில் வந்ததா….?
தமிழர்கள் முதலில் இங்கு இருந்தார்களா…?
சென்னை மாகாணத்திற்கு
தமிழ்நாடு என்று பெயர் மாற்றி விட்டோம், ஆனால்,
இது தமிழ்நாடு அல்ல என்பது என்ன வாதம்….?
கோழி வந்ததா..? முட்டை வந்ததா…? என்பது போல
ஆராய்ச்சி செய்து என்ன சாதிக்க போகிறோம்…?

யார் முதலில் வந்தார்கள்…? எது முதலில் வந்தது…? என்பதை
வைத்து பின்னாளில் மாற்றியமைக்கப்பட்ட பெயரை விடுத்து ஆதிகால பெயரையே அழைக்க தீர்மானிப்பது அறிவார்ந்த
செயலாக இருக்க முடியுமா….?

காலத்திற்கேற்ற ஆட்சியமைப்பு ஒருங்கிணைப்பு வளர்ச்சி
என்பது தவிர்க்க முடியாதது –
அப்போது ‘ஹோமோசேப்பியன்ஸ் என்றிருந்த மனித இனத்தை இன்றும் அவ்வாறு அழைக்கிறோமா…..?

சைவ சமயம் இருந்தது உண்மை,
வைணவ சமயம் இருந்தது உண்மை. அந்த சமயங்களை
இந்து சமயத்தில் இணைத்தது உண்மை எனும் போது
இதற்கு மேல் என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்..?

இவை அனைத்துமே இறை கொள்கையை அடிப்படையாக கொண்டது. அவரவர் நம்பிக்கைக்கேற்ப இறைவனை
வழிபட்டு மதச்சார்பின்மையுடன் செயல்படும் நாட்டில்,
தொடர்ந்து சர்ச்சைகள் எழுவது வேதனைக்குரியது.

அடிப்படை தேவை-

மனித இனத்தின் அடிப்படை தேவைகளான உண்ண உணவு,
உடுக்க உடை, இருக்க இடம், சுவாசிக்க தூய்மையான காற்று,
கல்வி, சுகாதாரம், பொருளாதார மேம்பாடு,
கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம்,
தனிமனித வாழ்க்கைத்தர உயர்வு அனைவருக்கும் கிடைக்கப்பெறுவது எப்போது….?

இத்தகைய சர்ச்சைகள் நியாயமா…?

புவி வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, இயற்கை சீர்கேடு,
நோய்த் தொற்று பரவல், புதுப்புது வைரஸ் தாக்கம்,
சமூக சீர்கேடுகள் என தேசத்தில் நடந்தேறும் நிலையை
தடுப்பது எப்படி…? மாற்றுவது எப்போது….?
மக்கள் நலனுக்கான முற்போக்கு சிந்தனைகளில்
நேரத்தை செலவிடாமல்,

பின்னோக்கி சென்று வரலாற்றில் சாதித்த
மன்னர்களின் புகழை ஆராயாமல், அவர்களது
சமயத்தை ஆராய்ந்து இது உண்மையா…? பொய்யா….?
என மீண்டும் மீண்டும் பேசி சர்ச்சைக்குரிய ஒன்றாக
உருவாக்குவது நியாயமா….?

அறிவியல் வளர்ச்சி விலங்கினமாக இருந்த இனம்
இரு கற்களை உரசி தீப்பொறி உருவாகுவதை கண்டுபிடித்ததில் இருந்து, சக்கரங்கள், உலோகங்கள் என அன்றாட
கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்ப வளர்ச்சிகளும் மிகவும் ஆச்சரியமூட்டும் வகையில் நீண்டு செல்கிறது.

அபரிமிதமான அறிவியல் வளர்ச்சியால் ஆலிஸ் (Alice)
என பெயரிடப்பட்ட உலகின் முதல் மின்சார பயணிகள்
விமானம் வெற்றிகரமாக வானில் பறந்துள்ளது….

ராஜ ராஜ சோழனின் புகழ் –

நாளைய மனிதன் விண்வெளிக்கு பாதை அமைக்க
திட்டமிடும் போது, செவ்வாய் கோள்களில் குடியேற
சிந்திக்கும் போது,

ராஜ ராஜ சோழன் எந்த மதத்தைச் சார்ந்தவர்
என்று விவாதிக்காமல், உலக அதிசயங்களுள்
ஒன்றாக வைத்து போற்றக்கூடிய மாபெரும் புகழ்மிக்க
தஞ்சை பெரிய கோவிலை மக்களுக்கு அர்ப்பணித்த
அந்த மாமன்னன், வீரத் தமிழன் ராஜ ராஜ சோழனின்
புகழை உலகின் எட்டுத்திக்கும் எடுத்துச் செல்வதில்
இந்த ஆர்வம் இருந்தால் சிறப்பாக இருக்கும்….”
என்று பதிவிட்டுள்ளார்….

…………………………………………………………………………………………………………………………

சரத்குமாரின் இந்த விளக்கமான, தெளிவான அறிக்கையை
பார்த்த பின்னரும், இந்த வேண்டாத சர்ச்சைகளை
யாராவது தொடர்ந்தால்,

அவர்களது நோக்கம்- நிச்சயம், நேர்மையானதாக இருக்காது.

.
………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to சரத்குமார் சொல்வதை கேட்ட பிறகும் சர்ச்சைகள் தொடர்ந்தால் …..

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    உங்களிடம் நான் கேட்கும் கேள்வி, ராஜராஜ சோழன் தமிழனா? வீரபாண்டியன் தமிழனா? உங்களின் (கேட்டால் தனிப்பட்ட முறையில் சொல்வதாக ஆகிவிடும்), உங்களைப் போன்ற ஒருவரின் முப்பாட்டனாருக்கு முப்பாட்டனார் இந்தியனா? “தமிழ்” என்ற வார்த்தை இலக்கியத்தில் உள்ளது. ஆனால் தமிழர், தமிழ்நாடு என்பதெல்லாம் இல்லவே இல்லை.

    இந்த மாதிரி இந்துக்களுக்கு எதிராகக் கேள்விகள் எழுப்பும் அனேகர், கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள், ஆ.ராசா, வெற்றி மாறன் உட்பட. இவர்களை ஆதரிப்பது போல, அரசும், இந்துக் குறியீடுகளை அழிக்கிறது (இது கருணாநிதி காலத்திலிருந்தே தொடர்கிறது. முன்பு திருவள்ளுவர், பிறகு வள்ளலார். சமீபத்தில் வடபழனியில் செதுக்கப்பட்ட சிற்பங்களில் இந்து குறியீடுகள் நீக்கப்பட்டுள்ளன, பரமாச்சார்யாருக்கு முதற்கொண்டு). இதற்குக் காரணம், திமுகவின் இந்து மத எதிர்ப்புதான்.

    அதுபோல, காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். என்று ஒரு சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. இதை ஒப்புக்கொள்ளவேண்டும் என்றால், இராஜீவைக் கொன்றது தமிழன், அதற்கான வேலைகளைச் செய்தது திராவிடர் கழகம், எம்.ஜி.ஆர் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியது திராவிடர் கழகம் என்றெல்லாம் பிறர் சொன்னால், மறுத்தல் இயலாது.

    அதனால் மத, இனச் சர்ச்சைகளைக் கிளப்புபவர்கள் பெரும்பாலும், வெளிநாட்டு நிதியைப் பெற்றுக்கொண்டு, அதற்கான கூலியாக அதனைச் செய்கிறார்கள், கமலஹாசன் உட்பட. Kamal, said, he was working for Christian Arts and Culture’ to spread the message of Christ. I have seen this video speech.

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    அதெல்லாம் இருக்கட்டும்….. சைவ வைணவ மதங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படும் போலத் தெரிகிறதே… அவர்களும் இட ஒதுக்கீட்டின்கீழ் பலன் பெறும் காலமும் வருகிறார்போல் தெரிகிறது.

    அதுவும் நல்லதுதான். சிறுபான்மையினருக்கு இருக்கும் எல்லாச் சலுகையும் சைவ மற்றும் வைணவ மதங்களுக்கு அளிக்கப்படவேண்டும்.

  3. bandhu's avatar bandhu சொல்கிறார்:

    //திருவாளர்கள் வெற்றிமாறன், திருமாவளவன்,
    சீமான், கமல்ஹாசன், கி.வீரமணி – போன்றவர்கள்.//
    இவர்கள் குறிக்கோள் ஒன்றே. இந்துக்கள் ஒற்றுமையாக இருக்கக்கூடாது! அப்போது தான் கன்வர்ட் பண்ண எளிதாக இருக்கும்! திமுக வகையறாக்களுக்கு , அப்போது தான் மற்ற பிரச்சனைகளை மறந்து அடித்துக்கொள்வார்கள். ஆட்சியில் இருப்பவர்கள் வழக்கம்போல் கொள்ளை அடித்துக்கொண்டிருக்கலாம்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.