விஸ்வாமித்திரர் – காதலுக்கு விதி விலக்கல்லவே – கண்ணதாசன் …!!!

………………………………………………

………………………………………………..

சென்சார் அதிகாரிகள்

அதிர்ந்து போனார்கள்.

கண்ணதாசன் எழுதிய அந்தப் பாடலைக் கேட்டு, கோபத்தில் கொதித்துக் கொந்தளித்தார்கள்.

“ஐயய்யோ… அபச்சாரம்… அபச்சாரம்..!

என்ன இது… இப்படியெல்லாம் எழுதியிருக்கார்..!”

‘பாவ மன்னிப்பு’ படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம் அது.

படத்தில் ஆரம்பத்தில் சிவாஜி சைக்கிள் ஓட்டியபடி பாடிக் கொண்டு வரும் ‘வந்த நாள் முதல் இந்த நாள் வரை..’

படப்பிடிப்பு நல்லபடியாக முடிந்து சென்ஸாரின் பார்வைக்குப் போனது. அந்தப் பாடல் காட்சியைப் பார்த்த அதிகாரிகள் பதறிப் போனார்கள்.

“இல்லை இல்லை. இந்த பாடல் வரியை அனுமதிக்க முடியாது.”

“ஏன் ?”

“அந்தப் பாடலின் இடையில் கண்ணதாசன் எழுதிய வரியில் மாபெரும் தவறு இருக்கிறது.”

“தவறா ?”

“ஆமாம். இங்கே பாருங்கள்.

‘எதனைக் கண்டான்

மதங்களைப் படைத்தான்’

என்று எழுதி இருக்கிறார். அதை மாற்றி எழுதித் தரச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் இந்தப் பாடலை அனுமதிக்க முடியாது.”

படக் குழுவினர் கண்ணதாசனிடம் போய் நடந்த விஷயங்களைச் சொன்னார்கள்.

சென்சார் கண்டித்து அனுப்பிய தன் பாடலை கண்ணதாசன் நிதானமாக வாசித்துப் பார்த்தார்.

“பறவையைக் கண்டான்

விமானம் படைத்தான்

பாயும் மீன்களில்

படகினைக் கண்டான்

எதிரொலி கேட்டான்

வானொலி படைத்தான்

எதனைக் கண்டான்

மதம்தனைப் படைத்தான்.”

கண்ணதாசன் புன்னகையுடன் சொன்னார்: “நான் சரியாகத்தானே எழுதி இருக்கிறேன். சென்சாரிடம் போய்ச் சொல்லுங்கள்.”

சொன்னார்கள்.

சென்ஸார் மறுத்தது : “இல்லவே இல்லை. கண்ணதாசன் தப்பா எழுதி இருக்கார். மதங்கள் கடவுளால் படைக்கப்பட்டவை. மனிதன் உருவாக்கியது அல்ல.”

சென்சாரின் இந்த வாதத்தைக் கேட்ட கண்ணதாசன் சிரித்தார் :

“இது என்ன வேடிக்கை ? சிவனோ விஷ்ணுவோ வந்து இந்து மதத்தை உண்டாக்கினார்களா ? அல்லது அல்லாஹ் வந்து இஸ்லாமிய மதத்தை உருவாக்கினாரா ?

இல்லையென்றால் பரமபிதா வந்து கிறிஸ்தவ மதத்தைப் படைத்தாரா ?

கடவுள்கள் பெயரைச் சொல்லி , அடுத்து வந்த மனிதர்கள் உருவாக்கியதுதானே அத்தனை மதங்களும் ? அதைத்தானே நான் எழுதி இருக்கிறேன் ?”

கண்ணதாசனின் இந்த தெளிவான விளக்கத்தைக் கேட்ட சென்ஸார் போர்டு மௌனமாக இருந்தது.

ஆனாலும் ஈகோ தடுத்தது.

“இல்லை இல்லை.

ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த வரிகளை மாற்றத்தான் வேண்டும்.”

கண்ணதாசன் தலையில் அடித்துக் கொண்டு, இப்படி மாற்றி எழுதிக் கொடுத்தார்:

“எதனைக் கண்டான்

பணம்தனைப் படைத்தான்.”

“இப்போ ஓகே.” ஏற்றுக் கொண்டார்கள் சென்சார் அதிகாரிகள்.

படத்தில்தான் இந்த வார்த்தைகள் இப்படி இருக்கின்றன. ஆனால் ஒரிஜினல் இசைத் தட்டில் ‘மதம்தனை படைத்தான்’என்ற வார்த்தை அப்படியேதான் இருக்கிறது.

இத்தோடு முடியவில்லை சென்சாரின் சீற்றம்.

அதே படத்தின் இன்னொரு பாடல்…

“பாலிருக்கும் பழமிருக்கும்

பசியிருக்காது

பஞ்சணையில் காற்று வரும்

தூக்கம் வராது.”

பிரச்சினை வந்தது.

சென்ஸார் அதிகாரிகள் பதட்டத்தில் படபடத்தார்கள். “அய்யய்யோ, அடுத்தும் ஒரு அபச்சாரம். கண்ணதாசனா எழுதினார் இப்படி?”

அப்படி என்ன எழுதி இருந்தார் கண்ணதாசன் ?

“காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே

கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே

வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே

அது வேதம் செய்த குருவைக் கூட விடுவதில்லையே…”

இந்த கடைசி வரியை கட் செய்யச் சொன்னார்கள் சென்ஸார் அதிகாரிகள்.

இப்போது பதிலுக்குச் சீறினார் கண்ணதாசன் : “என்னய்யா இது ? மந்திரங்களில் சிறந்தது காயத்ரி மந்திரம். அதை எழுதிய விஸ்வாமித்திரரையே காதல் விடவில்லையே ? அதைத்தானே நான் எழுதி இருக்கிறேன்?

என்ன ஆனாலும் சரி .

எவர் சொன்னாலும் சரி .

இதை நான் மாற்ற மாட்டேன்.”

இப்போது படக் குழுவினர் கெஞ்சினார்கள்: “நீங்கள் சொல்வது சரிதான் கவிஞரே, ஆனால் படம் வெளி வர வேண்டுமே ? தயவு செய்து…”

வேறு வழியின்றி வேத வரிகள் மாறின, படத்திற்காக மட்டும்.

இசைத்தட்டில் கண்ணதாசன் எழுதிய ஒரிஜினல் வரிகள் அப்படியேதான் இருக்கின்றன.

“வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே

அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே.”

பாவ மன்னிப்பு வந்தது.

பாடல்களும் படமும் ஹிட் ஆனது.

அதன் பின்னரும் அவ்வப்போது அங்கங்கே ஏதாவது ஒரு சில பிரச்சினைகள், ஓராயிரம் சமரசங்கள்..!

அதனால்தானோ என்னவோ , ஒருமுறை இப்படி எழுதி இருந்தார் கண்ணதாசன்.

“நான் இறந்த பிற்பாடு

என்னையே நான் விமர்சனம் செய்துகொண்டால்

இப்படித்தான் சொல்வேன்:

முட்டாள்களிடையே

வாழ்ந்துகொண்டிருந்த கெட்டிக்காரனொருவன்,

கெட்டிக்காரர்களோடு பழகத்தொடங்கி

முட்டாளாக செத்துப் போனேன்.”

-கண்ணதாசன். ( நன்றி – ஜான் துரை ஆசிர்செல்லையா … )

……………………………………………………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.