இப்படியும் சம்பாதிக்கலாம் …..😊😊😊

………………………………

…………………………………

வங்கிக்கு புதிதாக வந்த மேனேஜர் வங்கியின் கணக்கு வழக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு அக்கௌண்ட்டில் மட்டும் தினமும் 1000 ரூபாய் போடப்பட்டு வந்தது. ஒரு நாள் கூட தடையில்லாமல் அந்த கணக்கில் போடப்பட்டு வந்தது. இடையில் ஞாயிறு போன்ற விடுமுறை தினங்கள் வந்தால் அன்றைக்கும் சேர்த்து அடுத்த வேலைநாட்களில் அந்த கணக்கில் சேர்க்கப்பட்டு வந்தது கண்டு அதிசயித்தார்.


கேஷியரை கூப்பிட்டு “யாருய்யா அந்த ஆள்” என்று கேட்டார். “தெரியலை சார்… தினமும் காலையில் 10 மணிக்கு டான்னு வருவார், பணத்தை போடுவார்… போய்ட்டே இருப்பார். ஆள் கொஞ்சம் சிடுமூஞ்சி மாதிரி இருக்கிறதால நாங்கலாம் யாரும் பேசுறதில்லை சார்” என்றார்.


மேனேஜருக்கு இப்படி ஒரு கேரக்டரை சந்திச்சே ஆக வேண்டுமென்று பெரிய ஆவலாகவிட்டது. அடுத்த நாள் காலையிலேயே வந்து காத்திருந்து அந்த நபர் வந்தவுடன் பக்கத்தில் போய் பேச்சு கொடுக்க முயன்றார். அந்த நபரோ இவரை கண்டு கொள்ளாமல் போய்விட்டார். அவர் புறக்கணித்ததும் வங்கி மேனஜருக்கு அவருடன் பழகி அவர் ஏன் தினமும் ஆயிரம் ரூபாய் வங்கியில் போடுகிறார் என்றும் கண்டுபிடிக்க வேண்டும் என்று பெரிய வெறியே ஆகிவிட்டது.


தினமும் பணம் செலுத்தும் இடத்தின் அருகே நிற்பது, சிரிப்பதுமாய் இருந்து அந்த நபரும் லேசாக புன்னகைக்க துவங்கியிருந்தார்.
ஒரு நாள் மேனஜர் வரும் வழியில் அந்த ஆயிரம் ரூபாய் பார்ட்டி வண்டி பழுதாகி ரோட்டில் நின்றிருந்தார். மேனேஜர் லிஃப்ட் கொடுத்து வங்கிக்கு அழைத்து வரவே கொஞ்சம் பேசவும் துவங்கியிருந்தார். ஒரு நாள் அவரிடம் மேனேஜர் ’’சார் நாமதான் நண்பர்களாகிட்டோம்ல இப்பவாவது சொல்லுங்க, எதுக்கு தினமும் ஆயிரம் ரூபாய் பேங்ல போடுறீங்க. அப்படி என்ன வருமானம் வரும்படி தொழில் செய்யறீங்க‘’ என்று கேட்டார்.


“சார், நான் வேலையெல்லாம் பாக்கலை, தொழிலும் செய்யலை, நான் தினமும் பந்தயம் கட்டுவேன்… அதுல எப்படியும் ஜெயிச்சுருவேன், அந்த காசுதான் சார் அது” என்றார்.


மேனேஜருக்கு நம்பமுடியவில்லை, அது எப்படி தினமும் ஒருத்தன் பந்தயத்தில ஜெயிக்க முடியும், இந்தாளு பொய் சொல்றான் என்று எண்ணிக்கொண்டார். அவரின் முகமாற்றத்தை கண்ட அவன் ‘’சார் இதுக்குதான் நான் யாரிடமும் இந்த பந்தய மேட்டரை சொல்வதில்லை” என்றார். அப்படியும் சந்தேகமாய் பார்த்த மேனேஜரிடம் ”சரி சார், நாம ரெண்டு பேருமே இப்ப ஒரு பந்தயம் போடுவோம், நான் ஜெயிக்கலைன்னா பாருங்க” என்றான். டென்சாகிய மேனேஜரும் “சரிய்யா பந்தயத்துக்கு ரெடி என்னய்யா பந்தயம்” ன்னாரு.


“சார், சரியா நாளைக்கு காலையில 10.15 க்கு உங்க ‘கால் தொடை பகுதி பச்சைக் கலரா மாறிடும்’ ரெண்டாயிரம் ரூபாய் பந்தயம்’‘ என்றான். “யோவ் என்னய்யா சொல்ற, எதாவது நடக்குற கதைய சொல்லு” என்று மேனேஜர் சொல்ல…


“பந்தயத்துக்கு வர்றீங்களா இல்லையான்னு கட் அண்ட் ரைட்டா சொல்லுங்க சார்” ன்னு கேட்டான். “சரி”ன்னு ஒத்துகிட்டார். “காலையில வருவேன் உங்க கால் தொடை பகுதி பச்சை பசேல்ன்னு மாறியிருக்கும் ரெண்டாயிரம் ரூவாயை எடுத்து வைங்க” என்றபடி சென்றுவிட்டான்.

மேனேஜருக்கு எப்படி இவ்வளவு தைரியமா பந்தயம் கட்டுறான் என்று ஆச்சர்யம். அவன் போனவுடன் முதல் வேலையாக பாத்ரூம் சென்று தனது பேண்ட்டை அவிழ்த்து கண்ணாடியில் முன்னும் பின்னும் தொடை பகுதியை பார்த்தார், அது வழக்கம் போல் கன்னங்கரேல் என்று என்றுதான் இருந்தது. இருந்தாலும் அவருக்கு இருப்பு கொள்ளவில்லை… அரைமணிக்கொரு முறை பேண்ட்டை அவிழ்த்து பார்க்கவும் போடுவதுமாய் இருந்தார்.


விடிந்தது…
முதல் வேலையாக அதை போய் பார்த்தார், இப்பவும் அப்படியே கருப்பாகவே இருந்தது. நம்ம கால் தொடையாவது பச்சை கலராகிறதாவது என்று அவரே சமாதானம் சொல்லிக்கொண்டே குளித்து அலுவலகம் கிளம்பினார்.


எங்கே பஸ்ஸில் உட்கார்ந்தால் எதும் செட்டப் செய்து நிறம் மாற செய்து விடுவார்களோ என்று எண்ணி நடந்தே போனார். பத்து மணி அலுவலகத்துக்கு 9 க்கே வந்துவிட்டாலும் 10 நிமிடத்துக்கு ஒரு முறை போய் போய் பார்த்து உறுதி செய்தபடியே இருந்தார்.
இன்னைக்கு அவனை ஜெயிச்சு ரெண்டாயிரம் ரூபாயை வாங்கிறனும் என்று ஆவலோடு காந்திருந்தார்.

சொல்லி வைத்தாற்போல் சரியாக 10.15 அவன் அந்த அறைக்குள் நுழையவே வேகமாய் சீட்டிலிருந்து எழுந்து தனது பேண்ட்டை கழட்டி நின்று “ இந்தா பார்த்துக்கோ அப்படியே கருப்பாதான் இருக்கு” என்று முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் காட்டினார். அவன் உடனே அருகிலிருந்தவனிடம்…


”நீ என்னமோ பேங்க் ஆபிசர், பெரிய மனுசன், அப்படியெல்லாம் செய்யமாட்டருன்னு சொன்ன, இப்ப என்ன சொல்லுறே, எடு மூவாயிரத்தை“ என்றான்.


அப்போதுதான் கவனித்தார் பந்தயக்காரனுடன் வேறு ஒருவனும் வந்திருந்தான். அவனும் மேனேஜரை முறைத்தபடி மூன்றாயிரம் ரூபாய் எடுத்து நீட்டினான். அதை வாங்கிய பந்தயக்காரன் இரண்டாயிரம் ரூபாய்களை மேனேஜரிடம் நீட்டி “உங்கிட்ட கட்டின பந்தயத்தில நான் தோத்துட்டேன், ஆனா இவன்கிட்ட கட்டின பந்தயத்தில ஜெயிச்சுட்டேன், ஆயிரம் ரூபாய் லாபம்” என்று வழக்கமாய் பணம் கட்டும் கவுண்ட்டருக்கு போய்விட்டான்.


அவனுடன் பந்தயம் கட்டி மூவாயிரம் ரூபாய் தோற்றவனிடத்தில் “நீ எதற்கு அவனிடம் பந்தயம் கட்டினாய்” என்று மேனஜேர் கேட்க வந்தவன் கடுப்பாகி அவரிடம் “போய்யா நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? என்னை பார்த்தவுடனே பேண்டை கழட்டி காமிப்பாருன்னு சொன்னான், ச்சேசே அப்படியெல்லாம் இருக்காதுன்னு உன்னை நம்பி பந்தயம் கட்டினா இங்க நீ ரெண்டாயிரம் ரூபாய்க்கு இவ்வளவு கேவலமான வேலை செய்யற… த்தூ…” என்று துப்பிவிட்டு போனான்.


இதனால் அறியப்படுவது என்னன்னா… அவனவன் வேலையை அவனவன் பார்க்கணும், அடுத்தவன் எப்படி சம்பாதிக்கிறான், என்ன பண்றான்னு அடுத்தவன் வேலையிலே
தலையிடக் கூடாது….😊😊😊( வலையில் படித்த பாடம் … !!! )

…………………………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.