இந்த ” கவர்னர் “- ஹீரோவா அல்லது வில்லனா ….???

……………………………………

……………………………………………………………………….

தலைப்பை பார்த்து குழப்பம் வேண்டாம். நான் சொல்வது
இன்றைக்கு 300 ஆண்டுகளுக்கு முந்தைய கவர்னர் ஒருவரைப்பற்றி….புகைப்படத்தை பார்த்தவுடனேயே குழப்பம் தீர்ந்திருக்குமே….!!!

ராபர்ட் க்ளைவ் -1725 ஆண்டு, இங்கிலாந்தின் ஷ்ராப்ஷையரில் உள்ள
ஒரு சிறிய நகரமான ஸ்டைச்சியில் பிறந்தார்.

பள்ளி வயதிலேயே சண்டைகளில் ஈடுபடுவதும், பிரச்சினைகளில்
சிக்குவதாகவும் இருந்தவர், கொஞ்சம் வளர்ந்ததும், பேட்டை ரவுடியாக
மாறி, சந்தையில் கடைக்காரர்களை மிரட்டி மாமூல் வசூல் செய்யவும்
துவங்கி இருக்கிறார்.

இரண்டு முறை சிறைக்கு சென்று வந்த ராபர்ட் கிளைவை அவரது
தந்தை ரிச்சர்ட் கிளைவ், எப்படியோ – 1743-ம் ஆண்டு ஆங்கிலேய
கிழக்கிந்திய கம்பெனியில் எழுத்தர் வேலைக்கு சேர்த்துவிட்டார்.

நீண்ட – கிட்டத்தட்ட ஒரு வருட கால – கடற்பயணத்திற்கு பின்னர்
கிளைவ் 1744-ம் ஆண்டு இந்தியாவில் மெட்ராஸ் கரையை வந்தடைந்தார்.

இந்த நீண்டகால பயணம் அவரது வாழ்கை சிக்கல்களை சரிசெய்து
அவருக்கு அதிர்ஷ்டத்தைத் தேடுவதற்கான வாய்ப்பை வழங்கும் என்று
கிளைவ் குடும்பத்தினர் அவசியம் நம்பினர்.

ஆனால் அவர் இந்திய மற்றும் பிரிட்டிஷ் வரலாற்றில் மிகவும் செல்வாக்கு
மிக்க நபர்களில் ஒருவராக மாறுவார் என்பது அவர்களுக்கு அன்று தெரிந்திருக்கவில்லை.

மெட்ராஸில் நிலவிய வெப்பம் ராபர்ட் க்ளைவை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியது. எழுத்தர் வேலையில் போதிய நாட்டம்
இல்லாமல் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கும்
ராபர்ட் க்ளைவ் முயன்றுள்ளார்.

1746-ம் ஆண்டு பிரஞ்சு தளபதி லெபூர்தனே சென்னையில் உள்ள
புனித ஜார்ஜ் கோட்டையை கைப்பற்றியபோது உள்ளூர்வாசிகளை
போல் உடைகளை அணிந்து கடலூரில் உள்ள புனித டேவிட் கோட்டைக்கு தப்பினார் க்ளைவ்.

அப்போது பிரஞ்சு கவர்னராக இருந்த சமகாலத்தவரான டியூப்ளே அக்கோட்டையின் மீது படையெடுத்தார். ராணுவம் உள்ளிட்ட எந்த போர் பயிற்சி பின்புலமும் இல்லாத கிளைவ் நள்ளிரவு சூழலை தனக்கு சாதமாக பயன்படுத்த நினைத்தார்.

கையில் இருந்த வெடிகுண்டுகளை வீசி பிரஞ்சு படைகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தினார். அந்த சமயத்தில் சாதுரியமாக புகுந்த பிரிட்டிஷ் வீரர்கள் பிரஞ்சு படைகளை சுலபமாக வெற்றி கொண்டனர்.

6 ஆண்டுகளுக்குப் பிறகு 1751-ல் பிரெஞ்சு மற்றும் அவர்களது இந்திய கூட்டாளிகளின் முற்றுகைக்கு எதிராக ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில்
இருந்த ஆற்காட்டை பாதுகாத்தது கிளைவின் குறிப்பிடத்தக்க
சாதனைகளில் ஒன்றானது.

இந்த வீரச் செயல், கிழக்கிந்திய கம்பெனியில், அவருக்கு பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்ததுடன், இந்தியாவில் அவரது எதிர்கால இராணுவச் சுரண்டல்களுக்கும் அடித்தளமிட்டது.

இருப்பினும், கிளைவின் மிகவும் பிரபலமான சாதனை 1757-ல் நடந்த
பிளாசி போர்…. பிளாசியில், வங்காளத்தின் வலிமைமிக்க நவாப் சிராஜ் உத்-தௌலாவுக்கு எதிராக ஒப்பீட்டளவில் மிகச்சிறிய பிரிட்டிஷ்
படையை அவர் வழிநடத்தி அற்புதமான வெற்றியைப் பெற்றார்.

இந்த போர் இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய தருணத்தைக் குறித்தது. ஏனெனில் இதுவே, வங்காளத்திலும், இறுதியில் இந்தியா முழுவதும்
பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு வழி வகுத்தது.

கிளைவின் தொடர்ந்த வெற்றிகளையொட்டி, அவர் 1758-ம் ஆண்டு
வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டார்.

இங்கே, ராபர்ட் க்ளைவ் குறிப்பிடத்தக்க நிர்வாக சீர்திருத்தங்களை செயல்படுத்தி, பிராந்தியத்தின் மீது பிரிட்டிஷ் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தினார்.

இந்திய ஆட்சியாளர்களுடனான கூட்டணி மற்றும் உள்ளூர் வளங்களை சுரண்டுவதன் மூலம் தனக்கென்று கணிசமான அளவில் செல்வத்தையும்
குவித்தார்.

இந்தியாவில் ராபர்ட் கிளைவின் சாதனைகள் இராணுவ மற்றும்
அரசியல் புத்திசாலித்தனத்தின் சாதனைகளாக கொண்டாடப்பட்டாலும்,
அவர் குவித்த செல்வம், பெரும்பாலும் கேள்விக்குரிய வழிகளில், ஊழல்
மற்றும் அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்தது.

பிரிட்டனில், கிளைவ் பாராளுமன்ற விசாரணைகளை எதிர்கொள்ள
நேரிட்டது….கடுமையான விசாரணைகளுக்கு உள்ளான அவர்
தற்கொலைக்கும் முயன்றிருக்கிறார்.

என்ன இருந்தாலும், இந்தியாவில் பிரிட்டிஷ் அரசின் ஏகாதிபத்தியம்
ஏற்பட அடித்தளம் போட்டவர் ராபர்ட் க்ளைவ் தான் என்பதை
யாராலும் மறுக்க முடியாது…..அவரது வெற்றிகளே இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடித்தளம் அமைத்தன.

மனச்சிதைவு, பித்தப்பை கோளாறு போன்ற உடல் பிரச்னைகளாலும்,
பலவித மனோவியாதிகளாலும் அவதிப்பட்ட ராபர்ட் கிளைவ் 1774-ம்
ஆண்டு நவம்பர் 22-ம் நாள் தனது 49-வது வயதில் இங்கிலாந்தில் உள்ள
தனது பண்ணை வீட்டில் தன்னைத் தானே கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். பல்வேறு வழிகளில், மிகவும் சிரமப்பட்டு சேர்த்த சொத்துக்களை அனுபவிக்க முடியாமல், அற்பாயுளிலேயே போய் விட்டார்.

……………

ராபர்ட் க்ளைவ் மரணம் ஏற்பட்ட சூழ்நிலையை
சித்தரிக்கும் ஒரு காணொளி –

……………..

.
……………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.