லஞ்சமா அல்லது சர்வீஸ் சார்ஜா…?

முந்தைய ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்த ஒருவர், தனது
இலாகாவில் வேலை தருவதாகச் சொல்லி, சிலரிடமிருந்து
சில லட்சங்களை – பெற்றுக் கொள்கிறார்…

பல காரணங்களால், அவர் பதவியில் நீடிக்க முடியவில்லை;
அவர் அமைச்சராக நீடித்த காலத்தில், அவரால் சொல்லியபடி
வேலை கொடுக்க முடியவில்லை; எனவே, அரசு வேலை வேண்டி
அவரிடம் சில லட்சங்கள் பணம் கொடுத்தவர்கள் –

சொன்னபடி வேலை தான் கொடுக்க முடியவில்லை;
எனவே, நாங்கள் கொடுத்த பணத்தையாவது திரும்பித் தாருங்கள்
என்று கேட்டுள்ளனர்….

நடக்கவில்லை -ஒன்றும் பலிக்கவில்லை; அதாவது
அரசு வேலையும் கிடைக்கவில்லை;
வேலைக்காக கொடுத்த பணமும் திரும்ப கிடைக்கவில்லை;

எனவே, பணத்தை பறிகொடுத்தவர்கள் நீதிமன்றத்திற்கு
போனார்கள்…அமைச்சராக இருந்தவர் மீது கிரிமினல் வழக்கு
தொடுக்கப்பட்டது.

அதற்குள்ளாக மேற்படி பெரியவர் கட்சி மாறி, ஆட்சியும் மாறி,
புதிய ஆட்சியில் மீண்டும் அமைச்சர் ஆகி விட்டார்…
அமைச்சர் மீது லஞ்சப்புகார் வழக்கு நடக்கலாமா….?

புகார் கொடுத்தவர்களுக்கு என்ன ட்ரீட்மெண்ட் கிடைத்ததோ
தெரியவில்லை; அவர்கள், நீதிமன்றத்தில், தாங்கள் வேலை வேண்டி
கொடுத்திருந்த பணம், தற்போது தங்களுக்கு திரும்ப கிடைத்து
விட்டதால், தாங்கள் தொடுத்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக
தெரிவித்திருக்கின்றனர்….

அமைச்சரின் வக்கீலும், புகார் கொடுத்தவர்களே தங்கள் புகாரை
வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவித்திருப்பதால் –
வழக்கை “ரத்து” செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அனைத்தையும் விவரமாக கேட்டறிந்த பின்னர், வழக்கு
“ரத்து” செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டிருக்கிறது…!!!

நமக்கு ஒரு விஷயம் புரியவில்லை;

அரசு வேலை வேண்டும் என்று, ஒருவர் – சம்பந்தப்பட்ட மந்திரிக்கு
பணம் கொடுத்தால் – அது லஞ்சமா இல்லையா….?

தன்னிடம் அரசு வேலை கேட்கும் ஒருவரிடமிருந்து,
வேலை கிடைக்கச் செய்கிறேன் என்று சொல்லி, அந்த
அமைச்சராகப்பட்டவர் சில லட்சங்கள் “துட்டு” வாங்கினால்
அது லஞ்சமா இல்லையா….?

லஞ்சம் வாங்கியதாக, கிரிமினல் வழக்கு நீதிமன்றத்திற்கு
போன பிறகு —

கொடுத்தவர், தான் கொடுத்த பணம் தனக்கு திரும்பக் கிடைத்து
விட்டதால், புகாரை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று
சொன்னால் …..

அரசு வேலை பெற லஞ்சம் கொடுத்ததாக ஒருவரும்,

அந்தப் பணத்தை மீண்டும் திரும்பக் கொடுத்துவிட்டதாக,
லஞ்சம் வாங்கிய நபரும் சொன்னால் –

செய்த குற்றம் இல்லை என்று ஆகி விடுமா….?

லஞ்சம் கொடுப்பது – வாங்குவது இரண்டுமே கிரிமினல்
சட்டப்படி குற்றங்கள் தானே…. இருவர் மீதும் வழக்கு தொடரப்பட
வேண்டும் அல்லவா…? நிரூபிக்கப்பட்டால், இருதரப்பினருக்குமே தண்டனை
கொடுக்கப்பட வேண்டும் அல்லவா….?

இந்த வழக்கில், லஞ்சம் கொடுத்ததாக ஒரு தரப்பும்,

பணம் வாங்கினாலும், அது திரும்ப கொடுக்கப்பட்டு விட்டது
என்று இன்னொரு தரப்பும் –

வாங்கிய லஞ்சப்பணத்தை, (வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த பிறகு)
திரும்பக் கொடுத்து விட்டதால் – வழக்கு தொடர முடியாது
என்று வாதித்து –

கோர்ட்டில், அஃபிடவிட் ரூபத்தில் –
அதாவது ஆவணபூர்வமாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் இரு தரப்பினர் மீதுமே “லஞ்ச வழக்கு” தொடர்வதற்கு
இந்த ஆவணங்களே போதும்… ஆனால் அப்படி நடக்காததற்கு
என்ன காரணம்….?

ஒருவேளை
“லஞ்சம்” என்பது – “சர்வீஸ் சார்ஜ்”
என்று அர்த்தம் கொள்ளப்படுகிறதோ ….!!!!

( இந்தக் கேள்வி, “முன்னாள்”, ” இந்நாள்” -எல்லாருக்குமே சேர்த்து தான்..)

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.

7 Responses to லஞ்சமா அல்லது சர்வீஸ் சார்ஜா…?

  1. Subramanian's avatar Subramanian சொல்கிறார்:

    for the benefit of other readers
    I am giving below the link supposed to be the basis
    for KM sir’s above article.

    https://tamil.samayam.com/latest-news/state-news/chennai-high-court-has-quashed-the-case-against-senthil-balaji/articleshow/85102235.cms

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    நீதிபதி சுப்ரமண்யம் மாதிரி எல்லோரும் இருக்க இயலாது. நியாயம், சட்டம், தான் நேர்மை என்று நினைக்கும் கருத்து இவற்றைத் தீர்ப்பில் இவர் குறிப்பிடுகிறார். நடிகர் விஜய், தனுஷ், வரி ஏய்ப்பு சம்பந்தமான தீர்ப்பு இவருடையது.

    நம்ம உயர்நீதி மன்றங்களின் பல நீதிபதிகளின் தீர்ப்புகளும் செந்தில் பாலாஜி கேஸில் அமைந்துவிடுவதுபோல நடப்பதுதான், மக்கள் நீதிமன்றத்தை, அட.. இப்படி ஒரு வியாக்கியானம் நீதிபதிகள் கொடுக்கறாங்க. அடடா… என்ன மாதிரியான தீர்ப்பு. பாராட்டப்படவேண்டியது.

    அது சரி… செந்தில் பாலாஜி மேல் குற்றம் சுமத்தியது திமுக. அவர் கட்சி மாறியதும் கேஸ் வாபஸ் வாங்கிக்கொண்டார்கள். தீர்ப்பு வெளிவந்ததும் அதைக் கொண்டாடுவதும் திமுகதான்…..

  3. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    “நீங்க, தற்போது வேலுமணி ரெய்டு என்பதெல்லாம், செந்தில் பாலாஜி வழக்குத் தீர்ப்பை மறக்கடிக்கத்தான், அதனால்தான் இணையப் பத்திரிகைகள் வளைத்து வளைத்து வேலுமணி FIR மட்டும் எழுதுகின்றன… இப்படி திமுகவுக்கு வாலாட்டும் நாயாக பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் மாறிவிட்டது விசனத்துக்குரியது” என்று தவறாக எழுதிவிடப்போகிறீர்களே என்று ரொம்பவே கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன்.

    திமுக அரசு, ஊழலை ஒழிக்கணும், ஊழல் செய்தவர்களை சட்டத்தின்முன் நிறுத்தணும், அரசியலில் ஊழலே இருக்கக்கூடாது என்று முனைந்து செயல்படுகிறது என நான் நினைக்கிறேன்.

  4. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    “தற்போது வேலுமணி ரெய்டு என்பதெல்லாம், செந்தில் பாலாஜி
    வழக்குத் தீர்ப்பை மறக்கடிக்கத்தான், அதனால்தான்
    இணையப் பத்திரிகைகள் வளைத்து வளைத்து
    வேலுமணி FIR மட்டும் எழுதுகின்றன… இப்படி திமுகவுக்கு
    வாலாட்டும் நாயாக பத்திரிகைகள் தொலைக்காட்சிகள்
    மாறிவிட்டது விசனத்துக்குரியது”

    – என்று நான் ஏன் எழுதவில்லை….?

    அலுத்துப் போய் விட்டது….இந்த கேடுகெட்ட ஊடகங்கள்
    இப்படித்தான் எழுதும் என்பது நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட
    வழக்கம் ஆகி விட்டது…

    இதற்கு மாறாக அவர்கள் யாராவது செயல்பட்டால் –
    அது தான் அதிசயம்…!!! அப்போது தான் எழுதத்தோன்றுமென்று
    நினைக்கிறேன்…

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  5. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    // திமுக அரசு, ஊழலை ஒழிக்கணும், ஊழல் செய்தவர்களை
    சட்டத்தின்முன் நிறுத்தணும், அரசியலில் ஊழலே இருக்கக்கூடாது
    என்று முனைந்து செயல்படுகிறது // – என்று நான் நினைக்கிறேன்….

    -என்று எழுதி இருக்கிறீர்கள்.

    ஒரு சின்ன correction –

    ” என்கிற மாதிரி ஒரு இமேஜை ஏற்படுத்த முயற்சிகள்
    மேற்கொள்ளப்படுகின்றன..” என்பதை சேர்த்துக்கொண்டீர்கள்
    என்றால் சரியாக இருக்கலாம்…

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      என்னுடைய ‘திமுக’ பற்றிய கணிப்பு உண்மை, அது வஞ்சப் புகழ்ச்சி இல்லை என்று புரிந்துகொண்டதற்கு நன்றி…ஹிஹிஹி

      அவர்களால் அப்படி ஒரு இமேஜைக் கொண்டுவருவது கடினம். அணில் பிரச்சனை, வெள்ளைக் காகிதம் என்றெல்லாம் வெளியிட்டு, பத்திரிகைகளை ஜால்ரா போட வைத்தாலும், நடுநிலையாளர்கள் அதனைப் பொருட்படுத்த மாட்டார்கள்.

      பத்திரிகைகளைப் பற்றி யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், சபரீசன் மாளிகை ரெய்டுக்கு எப்படி அவங்க செய்தி தயாரித்தாங்க, வேலுமணிக்கு எப்படி தயாரிக்கறாங்க என்பதை திரும்பவும் படித்தாலே தெரிந்துவிடும்.

  6. Selvadurai Muthukani's avatar Selvadurai Muthukani சொல்கிறார்:

    அந்தக் காலத்துல ஒரு தமாஷ் கதை சொல்லுவாங்க. இப்போ அது உண்மையாய் நடக்குது!!!!
    தேங்கா திருட தென்னைமரம் ஏறினானாம் ஒருத்தன். தோப்புக்காரன் பார்த்து “எவன்டா அவன் தேங்கா திருட வந்தது?” ன்னு கேட்க, திருடன் கீழே இறங்கிக்கொண்டே, “ஐயா, ஒரே ஒரு மாங்கா மட்டும் பறிக்க மரம் ஏறினேனுங்கோ” ன்னானாம். தோப்புக்காரன், “ஏண்டா, மாங்கா தென்னமரத்துலையா காய்க்குது” ன்னு கேட்டானாம். அதுக்கு திருடன், “அதாங்க கீழே இறங்குறேன்” அப்படீன்னானாம். எப்படி இருக்கு கதை!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.