…
…
வருடங்கள் பறந்து விட்டன….
81-82-ம் ஆண்டுகளில் நான் திருச்சியில் இருந்த, மத்திய அரசின்
பாதுகாப்புத்துறை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தேன். அங்கு சுமார் 3000 பேர் பணியாற்றி வந்த நேரம் அது.
அங்கு பணிபுரிபவர்களின் – மற்றும் அவர்களது குடும்பத்தினரின் –
பொழுதுபோக்கு, விளையாட்டு போன்ற தேவைகளை
கவனித்துக்கொள்ள எங்களுக்கென்று ஒரு மன்றம் இருந்தது.
ஆறேழு ஆண்டுகள், நான் அதன் தேர்ந்தெடுக்கப்பட்டட
செயலாளராக பணியாற்றி வந்தேன். பலவிதமான
சமூக சேவைகளின் மூலம் வெளியே பொது வாழ்விலும்,
தொழிற்சாலைக்கு உள்ளேயும் நான் துடிப்பாகச் இயங்கி வந்த
காலகட்டம் அது…!!!
மன்றத்திற்காக கொஞ்சம் நிதி திரட்டி நல்ல நூலகம் ஒன்றை
உருவாக்க தீவிரமாக முயற்சி செய்து வந்தேன்…
ஏற்கெனவே இருந்த கட்டிடத்துடன், நூலகத்திற்காக
இன்னொரு பெரிய அறையை(Hall) எழுப்பி, கொஞ்சம்
விரிவாக்கம் செய்ய முயற்சி செய்தேன்… என்னுடன் முழு
ஈடுபாட்டுடன் ஒத்துப்போகக்கூடிய நண்பர்களை கொண்ட
ஒரு நல்ல டீம் எனக்கு துணையாக அமைந்திருந்தது…..!!!
திட்டம், வரைபடம், தேவையான நிதி – அனைத்தையும் தயார்
செய்து விட்டோம். அந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில்
சிமெண்ட்டுக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது…
பற்றாக்குறை காரணமாக, ப்ளாக் மார்க்கெட்டில் பயங்கர
விலையில் விற்றுக் கொண்டிருந்தது. எனவே, தமிழக அரசே
சிமெண்ட் விநியாகத்தை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்
கொண்டிருந்தது….நியாயமான, மிகவும் அவசியமான
தேவைகளுக்கு, தகுந்த ஆதாரங்களுடன் அந்தந்த மாவட்ட
நிர்வாகத்தை அணுகி அனுமதி பெற வேண்டியிருந்தது.
அஸ்திவாரம் தோண்டி, வேலையைத் துவக்கி விட்டு,
மேலே தொடர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தோம்…
RDO ஆபிசில் பலமுறை அணுகிப் பார்த்து விட்டேன்…
எங்கள் தேவையை அவசியம், அவசரம் என்கிற category-யில்
ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள்… ஆறு மாதங்களுக்கும்
மேல் ஆகி விட்டது….
கடைசியாக ஒரு யோசனை தோன்றியது…
மன்றத்தின் சார்பாக, ஒரு கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தேன்.
கலெக்டர் ஆபிசுக்கு சென்று, அவரது செயலாளரை தொடர்பு
கொண்டு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க கலெக்டரை அழைக்க
வேண்டும் என்று நேரில் சந்திக்க appointment கேட்டேன். கிடைத்தது.
சாந்த ஷீலா நாயர் அவர்களை அவரது அலுவலகத்திலேயே
சந்தித்தேன்… அப்போது அவருக்கு மிஞ்சிப் போனால் 30 வயது
இருக்கலாம். சிரித்த முகத்துடன் வரவேற்றார். பொதுவாக
விசாரித்தார்…. நிகழ்ச்சிக்கு வர ஒப்புக்கொண்டார்.
இரண்டு வாரங்கள் கழித்து, ஒரு சனிக்கிழமை மாலை நிகழ்ச்சி.
அரங்கில் நல்ல கூட்டம்… நான் வாசலிலேயே அவரை வரவேற்க
மன்ற செயற்குழுவுடன் காத்திருந்தேன்…
வந்து இறங்கியவரை காருக்கு அருகேயே மாலையோடு
வரவேற்றோம்.
என் 5 வயது குட்டி மகளை ஒரு நண்பர் தோள் உயரத்திற்கு
தூக்கிக்கொள்ள, அவள் தான் கலெக்டருக்கு மாலை அணிவித்தாள்…
அவர் சிரித்துக்கொண்டே குனிந்து ஏற்றுக் கொண்டார்..
( புகைப்படம் கீழே )

…
( மாலை அணிவித்த என் மகளை கையை பிடித்து தன் கூடவே
அழைத்து வந்தார். தான் அமர்ந்த இடத்தில்,
தன் நாற்காலியிலேயே, தன்னுடன் என் மகளையும் இருத்திக்
கொண்டார்….( கீழே புகைப்படம் ). இந்த சுட்டி என்னுடனே
இருக்கட்டும். நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என்று
என்னிடம் சொல்லி என்னை அனுப்பி விட்டார்…
கலை நிகழ்ச்சிகளின் இடையிடையே மேடையில் நடப்பதை
காண்பித்து அவளிடம் opinion கேட்டு, அவளின்
மழலை பதில்களை கேட்டு ரசித்து சிரித்துக் கொண்டிருந்தார் ….!! )

கலை நிகழ்ச்சி முடிந்த பின்னர் கலெக்டரும் உரையாற்றினார்.
கீழே இறங்கியபோது, அவரிடம் ஒரு சின்ன டீ,பிஸ்கட் –
ஏற்பாடு செய்திருக்கிறோம் உள்ளே போகலாம் வாருங்களேன்
என்று கூறி மன்ற கட்டிடத்திற்கு உள்ளே அழைத்துச் சென்றேன்.
நாங்கள் 7-8 பேர் கமிட்டி மெம்பர்களும் கலெக்டரும் …
அமர்ந்து டீ அருந்திக்கொண்டிருக்கையில் நான் மெதுவாக
ஆரம்பித்தேன்… நாங்கள் தொழிற்சாலை டவுன்ஷிப்பில் எத்தகைய சமூக நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருக்கிறோம் என்று விவரித்தேன். ஆர்வத்துடன் கேட்டு பாராட்டினார்…
நூலக திட்டத்தையும், அதற்கான வரைபடம், ஆகியவற்றையும்
அவரிடம் காண்பித்து விட்டு, அஸ்திவாரம் கூட போட்டு விட்டு,
மேலே தொடர முடியாமல் நாங்கள் சிமெண்டுக்காக காத்திருப்பதை நைசாக எடுத்துச் சொன்னேன். என்னால் RDO-வை convince பண்ண முடியவில்லை…. எங்களுக்கு நீங்கள் உதவினால் தான் உண்டு என்று கோரிக்கை வைத்தேன்.
ஏற்கெனவே நான் 150 மூட்டை சிமெண்ட் வழங்க கலெக்டரின்
அனுமதி கோரி தயார் செய்து வைத்திருந்த விண்ணப்பத்தையும்
அவரிடம் நீட்டினேன்….
” நாங்கள் இதற்காகத்தான் உங்களை விழாவிற்கு அழைத்தோம்
என்று நீங்கள் தவறாக நினைத்து விடக்கூடாது..
மிகவும் துடிப்பாகச் செயல்படும் மாவட்ட கலெக்டரை
எங்கள் மக்கள் பார்க்க வேண்டும், நீங்கள்
எங்கள் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்பது தான் எங்களின்
பிரதான விருப்பம் ” என்றும் சொன்னேன்…!!!
அதைக்கேட்டு அவர் பலமாகவே சிரித்து விட்டார்…
” நீங்கள் நன்றாகப் பேசுகிறீர்கள்,
புத்திசாலித்தனமாக செயல்படுகிறீர்கள் –
பொதுத் தொண்டில் ஈடுபடுபவர்கள் இப்படித்தான்
இருக்க வேண்டும் ” என்று பாராட்டி விட்டு,
நான் கொடுத்த விண்ணப்பத்தின் மேலேயே,
முதல் தவணையாக 100 மூட்டை அனுமதிக்கலாம்.
அதை பயன்படுத்திய பிறகு,
மீதி 50 மூட்டைகளையும் ரிலீஸ் செய்யலாம் என்று
எழுதி கையெழுத்தும் போட்டு என்னிடமே கொடுத்து –
இதை நாளைக்கு RDO அலுவலகத்தில் கொடுத்து,
உரிய பெர்மிட்டை வாங்கிக் கொள்ளுங்கள்…
இதை பயன்படுத்தி முடிந்த பிறகு, என்ன வந்து பாருங்கள்..
மீதி எவ்வளவு தேவையோ அதை ரிலீஸ் செய்கிறேன் என்றார்.
கூடவே, உங்களுக்கு பொது நலன் சம்பந்தமாக
எத்தகைய உதவி தேவை என்றாலும், நீங்கள் எப்போது
வேண்டுமானாலும் நேராக என்னை வந்து பார்க்கலாம்…
வேறு யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியம்
இல்லை. PA விடம் சொல்லி விட்டு நேரே என்னிடம்
வந்து விடலாம் என்றார்.
அதன் பிறகும் ஒன்றிரண்டு தடவை, பொது விஷயமாக
அவரை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன்.
எப்போது போனாலும், இன்முகத்தோடு வரவேற்று,
அவரால் இயன்றதை உடனடியாக செய்து கொடுக்கும் குணம்
அவரிடம் இருந்தது.
பிற்காலத்தில் இத்தனை உயரத்திற்கு அவர் போக முடிந்தது
என்றால், அது அதிருஷ்டமோ – அரசியல்வாதிகளிடம்
உண்டான செல்வாக்கு காரணமாகவோ அல்ல …
அதற்கான அடிப்படை குணங்கள் –
புத்திகூர்மை, உழைப்பு, திறமை,
முக்கியமாக – நேர்மையான அணுகுமுறை,
ஆகியவை அவரிடம் இயல்பாகவே அமைந்திருந்தது
தான் காரணம்.
மகளிர் தினத்தன்று திருமதி சாந்த ஷீலா நாயர் அவர்களை
பற்றி இங்கு எழுத நேர்ந்தது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி.
எந்த சமுதாயத்தில் பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ,
அந்த சமுதாயம் எல்லா விதத்திலும் சிறப்பாக இருக்கும்
என்பது என் கருத்து.
————————————————-
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளேபெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
-சுப்ரமணிய பாரதி……..



Thanks for sharing your wonderful experience. will be a inspiration to all.
காமை ஐயா , மிக நல்ல கட்டுரை. இருக்கும் அரசியல் குழப்பங்களுக்கு இடையில் ஒரு மனதை வருடும் கட்டுரை. நா ன் மனதை வருடும் என்று சொன்ன காரணம் இதில் உங்கள் பெண் குழந்தையும் ஒரு சுட்டி அங்கமாக இருந்தது. இப்படிப்பட்ட ஆட்சியர் இருந்தும் நம் நோக்கமான இன்றில்லாவிட்டாலும் தள்ளிக்கொண்டே செல்வது கடவுளின் திருவிளையாடலா ??
great
நல்ல இனிமையான அனுபவம்.
மிக அழகாக வர்ணிக்கிறீர்கள்.
நீங்கள் இது போல் நிறைய எழுத வேண்டும்
கே.எம்.சார்,
இது மாதிரி நீங்கள் நிறைய அனுபவங்களை
எழுத வேண்டும் என்பது என் வேண்டுகோளும் கூட.
திருமிகு சாந்த ஷீலா நாயருடனான தங்களின் அனுபவம் மிகுந்த நெகிழ்வைத் தந்தது… தங்கள் தளத்தின் மூலம் பல்வேறு வரலாற்றுச் செய்திகளை தொடர்ந்து வழங்கு வருகிறீர்கள்… மேலும் நிறைய எழுத வேண்டும்… அவற்றையெல்லாம் தொகுத்து புத்தகமாக்க வேண்டும்… வாழ்த்துகள் ஐயா…
நல்ல அதிகாரிகள் — நல்ல செயலுக்கு தோள்கொடுத்து உதவிய அவரின் செயல் — குழந்தைகளிடம் அன்பு காட்டும் தாய்மை உணர்வு — மகளிர் தினத்துக்கு நினைவு கூற ஏற்ற பெண்மணி ….
நல்லதொரு பதிவை படித்து மகிழ்ச்சியோடு இருக்கும் வேளையில் அதை கெடுக்கும் விதமாக ஒரு எதிலும் சேர்த்தியில்லாத ஒரு பிறவியின் ” டிவிட்டர் ” குறுக்கே புகுந்து கெடுக்கிறது : — // “பொறுக்கிகளுக்கு காண்டாமிருக தோலும், கழுதை மூளையும் தான் உள்ளது.. தொடர்ந்து சீண்டும் சாமி //
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/porkis-have-the-skin-a-rhino-brain-a-mule-subramaniya-samy-276230.html
Subramanian SwamyVerified account
@Swamy39
One thing to note about Porkis. They have the skin of a rhino and and brain of a mule. Despite getting a hammering in twitter they want more
ஒரு இனத்தையே கண்டபடி — வாயில் வந்தவாறு — கீழ்த்தரமான வாக்கியங்களால் அவ்வப்போது சீண்டிக்கொண்டே இருப்பதை கண்டிக்காத அவர் சார்ந்துள்ள கட்சியும் — தலைமையும் — பதவியை கொடுத்தவர்களும் வாய்மூடி ரசிக்கிறார்களோ என்று எண்ண தோன்றுகிறதல்லவா … ?
செல்வராஜன்,
இன்றில்லா விட்டாலும் ——— நாளை இல்லா விட்டாலும்…
என்றாவது ஒரு நாள், அவரது பாஜக தலைமையும்
இதே அனுபவத்தை பெறும் என்று உறுதியாக நம்புவோமாக….!!!
( 20 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் RSS பற்றி எழுதி நாறடித்தது
நினைவிற்கு வருகிறது…. இப்போது அங்கு தான்
ஒ(ஓ)ட்டிக்கொண்டிருக்கிறார்….!!! )
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
மகளிர் தினத்துக்குப் பொருத்தமான இடுகை.
நல்லவர்களைப் பாராட்டப் பாராட்டத்தான், அவர்கள் மேலும் மேலும் மக்களுக்காக நல்லது செய்யவேண்டும் என்று உத்வேகம் பெறுவார்கள்.
உங்கள் அனுபவம் ரசிக்கவைத்தது. ‘சிறுமை கண்டு பொங்குவாய்’, ‘எளிமை கண்டு இரங்குவாய்’ என்பதை நீங்கள் கடைபிடிப்பதும் புரிந்தது.