ஹைதராபாத் நிஜாம் செய்த அட்டூழியங்கள் …. (கலவர பூமி – பகுதி -3 )

.

சர்தார் படேல் என்கிற இரும்பு மனிதர் மட்டும்
இல்லாமல் போயிருந்தால் – நண்பர் டுடேஅண்ட்மீ கூறியது போல்,
ஆப்பிரிக்க துணைக்கண்டம் மாதிரி அறுபதோ, அறுனூறோ
துண்டுகளாகி இருக்கும் இந்தியா.

அப்போதைய துணைப்பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும்
இருந்த சர்தார் படேல் அவர்களின் தீர்க்கதரிசனத்தினாலும்,
விரைவாகவும், துணிச்சலுடன் அவர் எடுத்த ராஜதந்திர
நடவடிக்கைகளாலும் – ஹைதராபாத், ஜூனாகட், ஜம்மு காஷ்மீர்
போன்ற மிகச்சில சமஸ்தானங்களைத்தவிர மற்ற அனைத்து
சமஸ்தானங்களும் இந்திய நாட்டுடன் தங்களை இணைத்துக்கொள்ள
சம்மதித்தன. உடனடியாக இணைக்கப் பட்டன.

ஆனால், ஹைதராபாத் சமஸ்தானத்து மக்கள் மட்டும் பாவப்பட்ட
மக்களாயினர். இங்கு ஒரு விசித்திரமான நிலை.
ஹைதராபாத் சமஸ்தானத்தில் மெஜாரிடி மக்கள் ( 85% )
இந்துக்களாக இருந்தனர். கிட்டத்தட்ட அவர்கள் அனைவருமே
இந்தியாவுடன் இணைவதையே விரும்பினர்.

ஆனால் – இந்தியாவிலிருந்து மத அடிப்படையில் பாகிஸ்தான் பிரிந்த
பின்னரும் – எஞ்சி இருக்கும் இந்தியாவின் ஊடேயே ஒரு முகம்மதிய
கலாசார கட்டமைப்பு தொடர்ந்து இருக்க வேண்டும் என்று விரும்பிய
சில அடிப்படைவாதிகள், பாகிஸ்தானின் மறைமுக ஆதரவுடன்
ஹைதராபாத் ராஜ்ஜியம், இந்தியாவுடன் இணையாது –
பாகிஸ்தானுடனும் சேராது என்று கூறி செயல்படத் துவங்கினர்.
நிஜாம் அந்த அளவிற்கு வெளிப்படையாக பேசா விட்டாலும் –
நிஜாமின் எண்ணத்தையே அவர்கள் பிரதிபலித்தனர்.

தாங்கள் தொடர்ந்து பிரிட்டிஷ் அரசமைப்பின் துணையுடன்
காமன்வெல்த் உறுப்பினராக தனியான ஒரு நாடாகவே தொடர
விரும்புவதாக சிறிது கழித்து – அறிவித்தார் ஹைதராபாத் நிஜாம்.

22,000 பேர் கொண்ட ராணுவ அமைப்பும்,
பாகிஸ்தானிலிருந்தும் மற்ற வெளிநாடுகளிலிருந்தும்
ரகசியமாகக் கொண்டு வந்து சேர்த்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான
ஆயுதங்களும் –

இரண்டு லட்சம் பேர் கொண்ட – மிகப்பெரிய குண்டர் படையான
ரஜாக்கர்களும் இந்திய அரசாங்கத்தை எதிர்த்து நிற்கக்கூடிய
தைரியத்தைக் நிஜாமுக்கு கொடுத்தன.

ஹைதராபாத் சமஸ்தானத்தை, பேச்சு வார்த்தைகள் மூலம்
இந்தியாவுடன் இணைக்க இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள்
பலன் அளிக்கவில்லை.

ஆட்சியும் அதிகாரமும் நிஜாம் வசம் இருந்ததால் –
எந்தவித சட்டதிட்டத்திற்கோ, ஒழுங்குமுறைக்கோ அடிபணியாத
“ரஜாக்கர்” குண்டர் படை,
நிஜாமுக்கு எதிரான கட்சிகளையும்,
இந்தியாவுடன் இணையவேண்டும்
என்று கூறியதால் இந்துக்களையும் – அடக்கி ஒடுக்கி
துன்புறுத்த ஆரம்பித்தனர். நாளாவட்டத்தில்,
நிஜாம் அரசின் ஆதரவுடன் இவர்கள் இந்துக்களின் மீது கொள்ளை,
கொலை, கற்பழிப்பு போன்ற வன்முறை நிகழ்ச்சிகளை
அரங்கேற்ற ஆரம்பித்தார்கள். இவர்களை யாரும் கேள்வி கேட்க
முடியாத ஒரு நிலை அங்கு நிலவியது.

razakars of hyderabad-2

razakars of hyderabad-1

ஒரு வேளை இந்தியா ராணுவத்தின் துணையோடு –
ஹைதராபாத் சமஸ்தானத்தை வெற்றி கொள்ள முனைந்தால் –
அங்கு ஏற்கெனவே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்துக்களின்
உயிருக்கும், உடைமைகளுக்கும் பேராபத்து ஏற்படும் என்று
பயமுறுத்தும் பொருட்டு, வன்முறைக் காட்சிகளை
நடைமுறைப்படுத்திக் காட்டத் துவங்கினார்கள் ரஜாக்கர்கள்.

தனிப்பட்ட ஹைதராபாத் நாடு என்கிற முடிவிற்கு
இந்தியா ஒத்து வராது என்கிற நிலையில்-
நிஜாம் ஒரு தந்திரமான யோசனையை கூறினார்.
இன்னும் ஒரு வருட காலத்திற்கு
அப்போதிருந்த நிலையே தொடரட்டும் என்றும்
அதற்குள்ளாக ஒரு முடிவெடுக்கலாம் எனறும் நிஜாம் கூறவே –
சரி – கொஞ்சம் விட்டுப்பிடிப்போமென்று இந்தியாவும்
இதற்கு ஒத்துக்கொண்டது.

ஆனால், இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்திக்கொண்டு,
பாகிஸ்தானிடம் ரகசிய ராணுவ உதவி பெறவும்,
விஷயத்தை ஐக்கிய நாடுகள் சபை முன் ஒரு பிரச்சினையாகவும்
எடுத்துச் செல்லவும் நிஜாம் முயற்சி செய்தார்…..

இந்த இடைப்பட்ட காலத்தில் ஹைதராபாத் சமஸ்தானத்தில்
இருந்த இந்துக்கள் பட்ட பாடு கொஞச நஞ்சமல்ல.

முதலாவது அத்தியாயத்தில் கூறப்பட்ட கலவர நிகழ்வு
நடந்தது இந்த கால கட்டத்தில் தான்.

பத்து பேரைக் கொண்ட கோபாலன்- மீனாட்சி குடும்பத்தினர்,
சகலத்தையும் இழந்து நடு இரவில் பரதேசிகளாக ஹைதராபாத்தை
விட்டு வெளியேறி நாக்பூர் வந்தடைந்தது இந்த இடைப்பட்ட
காலத்தில் தான்.

இங்கு – கோபாலன் அவர்களைப் பற்றி சில வார்த்தைகள்….
அந்தக்கால மெட்ராஸ் யுனிவர்சிடி – பி.ஏ. பட்டதாரி.
தேசபக்தி மிகுந்தவர்….
கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே, காந்திஜியால் கவரப்பட்டு,
படிப்பை முடித்தவுடன், சுதேசி இயக்கத்தில் சேர்ந்தார்.
சுமார் 20-25 ஆண்டுக்காலம் சுதந்திரப் போராட்டத்தில் தீவிர பங்கு
கொண்டார்…. சுதேசமித்திரன் நாளிதழில் ( சம்பளமின்றி ) பணி புரியவும்,
மகா கவி சுப்ரமணிய பாரதியின் நட்பைப் பெறவும்,
பாக்கியம் பெற்றவராக இருந்தார்.
இது வரை எல்லாமே சரி தான்…….

ஆனால், சிறிய வயதில் – கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே
திருமணம் ஆகி விட்ட அவரை நம்பி ஒரு பெரிய குடும்பம்
இருக்கையில் –
சுதேசி போராட்டத்தில் அவர் தீவிரமாக ஈடுபட்டது –
அந்த குடும்பத்தை உருக்குலையச் செய்து விட்டது.

அவருக்கு கிட்டத்தட்ட 45 வயது ஆகும்போது,
பிரிட்டிஷ் அரசு இந்தியாவிற்கு சுதந்திரம் தர ஒப்புக்கொண்ட பிறகு –

காந்திஜி –
” அதான் சுதந்திரம் வந்து விட்டதே.
காங்கிரஸ் கட்சியை கலைத்து விட்டு,
எல்லாரும் அவரவர் சொந்த வேலையைப்
பார்க்க போகலாம் ”
என்று சொன்ன பிறகு தான் –

குடும்பத்தை கவனிக்க ஆரம்பித்தார்…!
ஹைதராபாத்தில் நல்ல வேலை ஒன்று கிடைக்கவே
சென்னையிலிருந்து குடும்பத்தோடு
ஹைதராபாத் சென்று செட்டில் ஆக முயற்சித்தார். அடுத்த
இரண்டு-மூன்று வருடங்களுக்குள் – இவ்வளவு பெரிய பிரச்சினை ….

அப்போது, அந்த கலவரத்தின்போது ஹைதராபாத்தை விட்டு
ஓடி வந்த அந்த குடும்பம் –
வேறு வேலை தேடி பல இடங்கள் மாறி,
ஊர்கள் மாறி – மொழிகள் மாறி –
புதிய இடம் தேடி, வீடு தேடி,
பாதியில் படிப்பு நின்று போன பிள்ளைகளை எல்லாம்,

மாற்று மொழி பள்ளிகளில் படிக்க வைத்து –
ஒரு நிலைக்கு வர இன்னும் இருபது ஆண்டுகள் தேவைப்பட்டன….
அந்த அளவிற்கு ஆடிப்போய் விட்டது குடும்பம்…

நிஜாம் சமஸ்தானத்தை விட்டு, 1948-ல் ஒரு அர்த்த ராத்திரியில்
திக்கு திசை தெரியாமல் ஓடிவந்த அந்த குடும்பத்தின்
கடைக்குட்டியான – மிகச்சிறிய அந்த 4 வயது சிறுவன் தான் –
இன்று இந்த இடுகையை எழுதிக் கொண்டிருக்கும் நான்…..!!!

(தொடர்கிறது – பகுதி 4-ல் )

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

24 Responses to ஹைதராபாத் நிஜாம் செய்த அட்டூழியங்கள் …. (கலவர பூமி – பகுதி -3 )

  1. today.and.me's avatar today.and.me சொல்கிறார்:

    கடைசிப் பாராவில் தான் நீங்கள் நிற்கிறீர்கள் ஜி.

    விமரிசனத்தை எழுதுவதற்கு உங்களைவிடத் தகுதியானவர் யாரும் இருக்கமுடியாது.

    பிறப்பும். பின்னணியும், வளர்ப்பும்,
    படிப்பும், பணியும், தகுதியும்..

    சான்சே இல்லை.

    4-ஆம் பாகத்திற்கு WAITING…….

    • மணிச்சிரல்'s avatar மணிச்சிரல் சொல்கிறார்:

      என்றும் நினைவில் நிற்பவர்கள் வலியுடன் வளர்ந்தவர்களாகத் தான் இருக்கிறார்கள். உயர்ந்த உள்ளத்தை வணங்குகிறேன். வணக்கம்.

  2. Surya's avatar Surya சொல்கிறார்:

    ஒரு திரைபடத்தில் முன்னணி நடிகரை அறிமுகபடுத்தும் காட்சி போல இருந்தது உங்களடுய கடைசி பாரா. நன்று!

  3. Thiyagarajan's avatar Thiyagarajan சொல்கிறார்:

    நான் நினைத்தேன் முதல் பாகம் படிக்கும் பொழுது உக்களுக்கும் இந்த தொடருக்கும் சம்பந்தம் இருக்கும் என்று .

  4. VS Balajee's avatar VS Balajee சொல்கிறார்:

    Great write up. KM Sir, i am lone time reader and first time writing on your blog. Pl write more !
    VS Balajee

  5. புது வசந்தம்'s avatar புது வசந்தம் சொல்கிறார்:

    சோதனையிலும் சாதனை, வாழ்த்துகள்.

  6. gopalasamy's avatar gopalasamy சொல்கிறார்:

    அசோகமித்திரன் 18ஆவது அட்சகோடு என்கிற நாவல் எழுதி உள்ளார். அதிலும் சில விபரங்கள் உள்ளன.
    என்னை விட எல்ல விதத்திலும் பெரியவர் தாங்கள். வணக்கங்கள்

    • மணிச்சிரல்'s avatar மணிச்சிரல் சொல்கிறார்:

      அப்புத்தகத்தில் அவரின் அந்த கால ஹைதராபாத் செக்கந்திராபாத் வாழ்க்கையை பற்றி தான் குறிப்பிடபட்டுள்ளது. இந்த விசயங்கள் தமிழ் கதைக் களத்தில் அச்சேறியதில்லை என்று நினைக்கிறேன்.

    • today.and.me's avatar today.and.me சொல்கிறார்:

      என்ன? அட்சகோட்டில் காமைஜி யைப் பற்றியா?
      ஆச்சரியமாக உள்ளதே?
      😦 😦

      • gopalasamy's avatar gopalasamy சொல்கிறார்:

        18 அக்ஷகோடு நாவல், 1947,48 வருடங்களில், ஹைதராபாத்,செகந்தராபாத் நகரங்களில் நடந்த அரசியல் மாற்றங்களை, ஒரு விடலை பையனின் பார்வையில் எழுதி இருப்பார். அந்த நாவலின் உச்ச கட்டத்தை படித்து அறியும்படி கேட்டு கொள்கிறேன். இந்த உச்ச கட்டத்தை பற்றி ஜெயமோஹனும் தன்னுடைய இணைய தளத்தில் எழுதி உள்ளார்.நேரடியான தமிழ் நாவல் இது.

  7. Venkat's avatar Venkat சொல்கிறார்:

    Dear KM sir,

    I am reading your blog for last 4 years. never missed a post.
    However never wrote any comment.

    Great write up…! Please write more.
    Thank you.

  8. KuMaR's avatar KuMaR சொல்கிறார்:

    Gr8 KM Sir..

  9. பிங்குபாக்: ஹைதராபாத் நிஜாம் செய்த அட்டூழியங்கள் …. (கலவர பூமி – பகுதி -3 ) | Classic Tamil

  10. Thiyagaraaj's avatar Thiyagaraaj சொல்கிறார்:

    நான் இதுவரை நிறைய எழுத்தாளர்களின் ப்ளாக்-குகளை படித்துள்ளேன்.
    ஆனால் இதுவரை பின்னூட்டம் அளித்ததில்லை.
    இதுதான் முதல் பின்னூட்டம்.
    என் மனதை ஏதோ செய்கிறது…
    தான் உணர்ந்த, அனுபவித்த வலிகளை மட்டுமே ஒருவரால் இப்படி உணர்சிகரமாய் சொல்லமுடியும்…
    கமல் கூறியதை போல நிறைய சொல்ல வேண்டும் என்று மனது நினைக்கிறது…ஆனால் வார்த்தைகள்தான் வரவில்லை….

    வாழ்த்துக்கள்….உங்களின் அடுத்த பாகத்திற்கான ஆவலுடன்…..

  11. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    ஃபீனிக்ஸ் பறவையாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் உங்களை பற்றிய பிம்பம் மேலும் உயர்வில் எங்களின் இதயங்களில்.
    காலம் எல்லாவற்றையும் புறட்டிக்கொண்டே இருக்கிறது.
    வாழ்த்துகள் ஐயா!

  12. Siva's avatar Siva சொல்கிறார்:

    KM sir,
    You got a great but painful past! God bless you and family a happy life!
    Initially I thought why u are writing about nizam’s genocidal/barbaric act, but now I realized that you are one of the victims of the barbaric act!

    Unfortunate twist in this story is that your father should have looked for job in and around chennai, as he was spending time for Gandhi movement. However, he moved the family to Hyderabad for better life! But your family got the opposite! It’s painful to read!!!

  13. Paiya's avatar Paiya சொல்கிறார்:

    Hats off to gopalan and family. Nation should remember such personalities who sacrificed their family,wealth,happiness for freedom. He is like senior kamal in ‘INDIAN’.

  14. srinivasanmurugesan's avatar srinivasanmurugesan சொல்கிறார்:

    Very great sir

  15. Srini's avatar Srini சொல்கிறார்:

    Dear KM Sir,

    Wishing you good health and happy life. Prayers and Pranams.

    Srini

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர்கள் எல்லாருக்கும் வணக்கம்.

      எல்லாருமாக சேர்ந்து என்னை எங்கேயோ உயரத் தூக்கிச் சென்று
      உட்கார வைக்கிறீர்கள்.. நான் இதற்கெல்லாம் தகுதியானவன் அல்ல.

      உடலில் வலுவிருந்த வரையில் – என்னைச்சுற்றி நெருங்கி இருந்த
      வட்டத்திற்குள், அரசுப்பணியோடு – என்னால் இயன்ற சமூகப் பணிகளைச் செய்து வந்தேன்.

      உடல் பலம் தீர்ந்த பிறகு –
      நமக்குத் தெரிந்ததை,
      நமது எண்ணங்களை,
      நாம் பெற்ற அனுபவங்களை மற்றவர்களுடன்
      பகிர்ந்து கொள்வோமே என்று தோன்றியது.

      கடந்த சுமார் 4 வருடங்களாக மனதில் தோன்றுவதை எல்லாம்
      இதில் எழுதி வருகிறேன். என் அதிர்ஷ்டம் – எனக்கு அற்புதமான வாசக
      நண்பர்கள் இந்த வலைத்தளத்தின் மூலம் கிடைத்திருக்கிறீர்கள்.

      எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி.

      தொடர்ந்து அனுபவங்களையும், எண்ணங்களையும்
      பகிர்ந்து கொள்வோம். உங்கள் மறுமொழிகள் / பின்னூட்டங்கள் தான்
      எனக்கு மிகப்பெரிய “டானிக்” – ஊக்க மருந்து… அவை தான் இந்த
      வலைத்தளத்தின் மிகப்பெரிய சிறப்பும், பலமும் கூட.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  16. gopalasamy's avatar gopalasamy சொல்கிறார்:

    சுதந்திர இந்தியா பிறந்து வந்தது ரத்தத்தில் இருந்துதான். டிரைலர், டீசர் மாதிரி, 1946 இல், கல்கத்தா, பீகார் கலவரங்கள் நடந்தன. பிரிவினையின் பொழுது, பல லட்ச கணக்கானவர்கள் மாண்டது, வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்கள் அறிந்ததே. மறுபடியும் ஒரு பிரிவினை வேண்டாம்.

  17. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    படிக்கும்போது ஓரளவு ஊகிக்க முடிந்தாலும் சஸ்பென்சை உடைக்க விரும்பவில்லை.ஆனாலும் உங்கள் நேர்மை / தேசபக்திக்கான காரணம் இதன் மூலம் தெரிகிறது.உங்கள் வாழ்க்கை வரலாறே எங்களுக்கு நல்ல பாடமாக இருக்குமே!

  18. Thinakar's avatar Thinakar சொல்கிறார்:

    super ji continue your writing

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.