700 ஆண்டுகள் ….ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் – சில சுவாரஸ்யமான தகவல்கள் …!!!

…………………………………………

…………………………………………

…………………………………………

…………………………………………

ஒருமுறை ஸ்ரீராகவேந்திரர் சுவாமிகள் கும்பகோணத்தில் தங்கியிருந்தபோது, மூன்று ஜோதிடர்கள் மடத்தில் தரிசிக்க விரும்பினர். பக்தர்கள் யாராக இருந்தாலும், எந்த தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை அன்புடன் வரவேற்று, ஆசி வழங்கி அனுப்புவது சுவாமிகளின் வழக்கம். மூன்று ஜோதிடர்களும் தரிசனம் முடிந்ததும் அங்கேயே தயங்கியபடி நின்றிருந்தனர்.

“என்ன வேண்டும்?’’ என்று சுவாமிகள் கேட்டார் அதற்கு அவர்கள், ”நாங்கள் ஜோதிடம் சொல்பவர்கள். எங்களுக்கு இங்கே ஒரு வாய்ப்பு கிடைத்தால், அதை எங்களுடைய பாக்கியமாக நினைப்போம்” என்றனர்.

சற்று யோசித்த சுவாமிகள், ”உங்களிடம் ஒரு ஜாதகம் தருகிறேன். அந்த ஜாதகத்துக்கு உரியவரின் ஆயுள் காலம் என்ன என்று கணித்துச் சொல்ல முடியுமா?” என்று கேட்டார்.

பொதுவாக ஜோதிடர்கள் ஆயுளை கணிப்பதில்லை. ஆனால், சுவாமிகளின் உத்தரவு என்பதால் அவர்களால் மறுக்கவும் முடியவில்லை. கொஞ்சம் தயங்கியபடியே, ”எங்களால் முடிந்தவரை கணித்துச் சொல்கிறோம்” என்று கூறினார்கள்.

”சரி, நான் ஜாதகத்தை தனித்தனியாக மூன்று பேரிடமும் கொடுக்கச் சொல்கிறேன். கணித்து பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். அதற்கு பிறகு என்னுடைய முடிவைக் கூறுகிறேன்” என்றார்.

அதன்படியே மூன்று ஜோதிடர்களிடமும் ஜாதகம் தரப்பட்டது. அவர்களும் தாங்கள் சொல்லிய படியே ஜாதகத்தைக் கணித்து பார்த்தனர். பின்னர், தங்கள் கருத்துகளை ஒப்பிட்டுப் பார்த்த போது, மூவரின் கணிப்பும் வேறு வேறாக இருந்தது.

“ஜாதகரின் ஆயுள் காலம் நூறு ஆண்டுகள்’’ என்றார் ஒருவர்.

“இல்லை, முந்நூறு ஆண்டுகள்’’ என்றார் அடுத்தவர்.

“இல்லையில்லை, எழுநூறு ஆண்டுகள் என்பதே சரி’’ என்றார் மூன்றாமவர். சுவாமிகளுடன் இருந்தவர்கள் அனைவரும் திகைத்துப் போனார்கள்.

“உங்கள் திறமையில் முழு நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதல்லவா? உங்கள் கணிப்பை முழு கவனத்துடன் தானே செய்தீர்கள்?” என்று கேட்டார் ராகவேந்திர சுவாமிகள்.

‘`ஆம் சுவாமி… அதில் சந்தேகமே இல்லை. அதுவும் தங்களுக்காக மேற்கொண்ட பணியில் நாங்கள் சிரத்தையுடன் ஈடுபட வேண்டியது எங்கள் கடமையல்லவா?’’ என்றனர்.

அப்படியெனில், ஏன் அவர்களின் கணிப்பில் வித்தியாசம் ஏற்பட்டது என்று எவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அனைவரும் திகைத்து நின்றார்கள்.

ஆனால், சுவாமிகளோ, “உங்களை சோதித்து பார்க்கவே இப்படிக் கேட்டேன். உங்களுடைய தன்னம்பிக்கையை மெச்சுகிறேன். நீங்கள் மூவரும் கணித்த கணிப்பு சரிதான்’’ என்றார்.

‘`சுவாமி, தங்கள் கட்டளைப்படி எங்கள் கடமையைச் செய்து விட்டோம். ஆனால், தங்களிடம் ஒரு விளக்கம் பெற விரும்புகிறோம். தனித்தன்மை வாய்ந்த இந்த ஜாதகத்துக்கு உரியவர் யார்?’’ என்று கேட்டனர்.

ராகவேந்திர மகான் புன்னகைத்தபடி “நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைத்தேன். அது என்னுடைய ஜாதகம்தான்’’ என்றார்.

தொடர்ந்து, “என்னுடைய ஆயுள்காலத்தை மூன்று பேரும் மூன்று விதமாக கணித்தது சரிதான். எப்படி என்பதை நான் விளக்குகிறேன்.

ஒருவர் ஆயுட்காலம் நூறு வயது என்று கூறியிருக்கிறார். நான் சரீரத்துடன் இருக்கும் காலத்தைத்தான் அவர் கணித்திருக்கிறார். எனவே, அவருடைய கணிப்பு சரி.

அடுத்தவர் முந்நூறு ஆண்டுகள் என்று கூறியிருக்கிறார். அவர், எனது கிரந்த நூல்கள் பிரகாசம் அடைந்து பரவும் காலத்தை கணித்துக் கூறினார்….!!!

மூன்றாமவர் எழுநூறு ஆண்டுகள் என்று கூறியிருப்பது, நான் எழுநூறு ஆண்டுகள் பிருந்தாவன வாசத்தின் மூலம் என் பக்தர்களை காப்பாற்றுவேன் என்பதைத் தான். ஆக மூவருடைய கணிப்பும் சரிதான்’’ என்று கூறி, மூவருக்கும் பிரசாதம் கொடுத்து ஆசீர்வதித்தார்..

………………………………………

ராகவேந்திரர் பற்றிய வரலாறு –

…………………

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் பூவுலகில் வாழ்ந்த காலம் –
1595 முதல் 1671-ஆம் ஆண்டு வரை….

விஷ்ணு பக்தரான இவர், பிரஹலாதரின் அவதாரமாக
கருதப்படுகிறார். இவர் தனது ஆயுள் காலத்தில் பற்பல அற்புதங்களை நிகழ்த்தியதாகவும், இன்றும் தனது பக்தர்களுக்கு ஆசியும் அருளும்
புரிந்து கொண்டிருக்கின்றார் என்றும் அவரைப் பின்பற்றுவோர் நம்புகின்றனர்.

ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள மந்திராலயம் என்ற இடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் இவர் உயிருடன் சமாதி (ஜீவ சமாதி) நிலையை அடைந்தார்….

ராகவேந்திரரின் பிறப்பு மற்றும் வரலாறு –

திரு திம்மண்ண பட்டர் மற்றும் திருமதி கோபிகாம்பாள் என்ற தம்பதிகளுக்கு மூன்றாவதாக ஒரு பிள்ளை தமிழ் நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் பிறந்தது. பெருமாள் வேங்கடாசலபதியின் பக்தர்களான அவர்கள்,
அந்த குழந்தைக்கு வேங்கடநாதன் என்று பெயரிட்டனர்….

தனது திருமணத்திற்கு பிறகு வேங்கடநாதன், கும்பகோணத்தில் குடியேறினார். அங்கே அவர் ஸ்ரீ சுதீந்திர தீர்த்தரிடம் துவைத வேதாந்தத்தையும் இலக்கியத்தையும் பயின்றார்.

சொற்பொழிவு ஆற்றுவதில் சிறந்தவரான அவர் பல அறிஞர்களுடன் விவாதங்களில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார். அவர் இசையில் நல்ல தேர்ச்சி பெற்றவராகவும் வீணை வாசிப்பதில் சிறந்தவராகவும்
திகழ்ந்தார். அவர் குழந்தைகளுக்கு சமஸ்கிருதமும் வேதமும் கற்பித்தார்.

ஸ்ரீ ஸுதீந்திர தீர்த்தார் தனக்கடுத்து மத்வ மடத்திற்கு பீடாதிபதியாக ஒரு நல்ல வாரிசை தேடிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவர் தான் பகவான் வேங்கடநாதரே ஸுதீந்திரருக்குப் பின் மடத்தின் பீடாதிபதியாக ஏற்றவர் என்று கூறியதாக கனவு கண்டார்.

ஸுதீந்திரரும் அவர் விருப்பத்தை வேங்கடநாதரிடம் தெரிவித்தார். வேங்கடநாதர் அவர் மனைவியையும் இளைய மகனையும் காப்பாற்ற வேண்டி இருந்ததால் அவரால் அப்பொறுப்பை ஏற்க இயலவில்லை. எனவே அவர் குருவின் விருப்பத்தைக் கேட்டு மிகவும் மனமொடிந்துப் போனார். எனினும் கடவுளின் இச்சையினாலும் கலைவாணியின் அருளாலும் பிறகு தனது முடிவை மாற்றிக்கொண்டார்.

வேங்கடநாதர், தஞ்சாவூரில் 1621 ஆம் ஆண்டு பால்குண மாசம், சுக்கில பக்ஷம், துவிதியை அன்று துறவறம் ஏற்று ஸுதீந்திர மடத்தின் பீடாதிபதியாக ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தராக பொறுப்பேற்றார்.

பீடத்தை ஏற்ற பிறகு அவர் பல்வேறு யாத்திரைகளை மேற்கொண்டார். அவர் சென்ற இடமெல்லாம் ஸ்ரீமத் ஆச்சாரியாரின் சித்தாந்தத்தைய் பரப்புதல், மற்ற எதிர் சித்தாந்தங்களை ஆதரிக்கும் அறிஞர்களை விவாதத்தில் வெல்லுதல், குறிப்புகளை எழுதுதல், மாணவர்களுக்கு சாஸ்திரங்களை போதித்தல் மற்றும் உள்ளூர் அறிஞர்களை ஊக்குவித்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டார்.

அவர் சென்ற இடமெல்லாம் தன் பக்தர்களின் குறைகளையும் உடல் ஊனங்களையும் குணமடையச் செய்து அருளினார் …..

…………

1671 -ஆம் ஆண்டு, துங்கபத்ரா நதிக்கரையில், மந்திராலயத்தில், ராகவேந்திர சுவாமிகள் தனது ஜீவசமாதியில், பிருந்தாவனப் பிரவேசத்திற்கு முன் –

தன் பக்தர்களுக்காக மனம் நெகிழவைக்கும் ஒரு உரையை தந்தார்… அப்போது, இனிமேல் உங்கள் பார்வையில் இருந்து நான் மறைந்து விடுவேன்… ஆனாலும் – 700 ஆண்டுகள் இங்கேயே, (சூட்சுமமாக) பிருந்தாவன வாசத்தின் மூலம் என் பக்தர்களுடன் இருப்பேன்… என்று வாக்கு தந்தார.

……………………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக