அச்சடிக்கிறார்களா … ? …4,500 ஆடுகள், 24,000 கோழிகள்….! எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம் ….?

ஒரு பிரமிக்க வைக்கும் கதை கேளுங்கள் –

மதுரை முழுவதும் மாண்புமிகு அமைச்சர்
அவர்களின் மூத்த மகன் கல்யாணச் செலவு குறித்து
தான் பேச்சாக இருக்கிறது என்கிறார்கள். கைவசம்
வணிக வரி, பதிவுத்துறை இருக்கிறது -பிரமிப்புக்கு
இவை போதாதா… தனியாக நோட்டு வேறு அச்சடிக்க வேண்டுமா…?

விகடன் தளம் தரும் பிரமிப்பூட்டும் செய்திகள் –

…………………

2021 சட்டமன்றத் தேர்தலில் மூர்த்தி தாக்கல் செய்த
பிரமாணப் பத்திரத்தில், தன்னுடைய பெயரிலும்,
தன் குடும்பத்தினரின் பெயரிலும்
அசையும் சொத்துகளாக சுமார் 4.66 கோடி ரூபாயும்,
அசையாச் சொத்துகளாக 6.4 கோடி ரூபாயும்,
கடனாக 1.96 கோடியும் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சரான பதினைந்து மாதங்களிலேயே,
பிரமாண்டமாகத் திருமணம் நடத்தியிருக்கிறார்
அமைச்சர். “இவ்வளவு குறுகிய காலத்தில், இவ்வளவு
பணம் எங்கிருந்து வந்தது?” என்ற கேள்வி மதுரையைச் சுற்றிக்கொண்டிருக்கிறது.

4,500 ஆடுகள், 24,000 கோழிகள்!

அமைச்சர் மூர்த்தியின் மூத்த மகன் தியானேஷ்,
திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள்
ஸ்மிர்தவர்ஷினி திருமணத்துக்காக, மதுரை
பாண்டிகோவில் ஏரியாவில் சுமார் 30 ஏக்கர் நிலத்தைத் தேர்வுசெய்த அமைச்சர், அங்கே பந்தலிடும் பணியை
மூன்று மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டார்.
தி.மு.க மாநாடுகளுக்கு மேடை அமைக்கும் பந்தல் சிவாவிடம்தான் அந்தப் பணிகள் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

அந்த இடம் பள்ளமான பகுதி என்பதுடன், மழைநீர் புகும் அபாயமும் இருந்ததால், ஆயிரக்கணக்கான லோடு கிராவல் மண் அங்கே போடப்பட்டது. அதன் மதிப்பே ஒரு கோடி ரூபாயைத் தாண்டும் என்கிறார்கள். நுழைவு வாயிலை அழகுபடுத்த பல ஏக்கர் அளவிலான கரும்பும், வாழையும்,
பல டன் பூக்களும் பயன்படுத்தப்பட்டன.

விருந்து ஏற்பாடுகளும் பிரமாண்டம். …

சைவ சமையலுக்குத் திருப்பூரிலிருந்தும்,
அசைவ விருந்துக்கு திருச்சி மணப்பட்டியிலிருந்தும்
ஆட்கள் வரவழைக்கப்பட்டிருந்தார்கள். முதலில் 3,000 ஆடுகளும், 24,000 கோழிகளும் அறுக்கப்பட்டன.
பிறகு மேலும் 1,500 ஆடுகள் வாங்கப்பட்டன.
இதுதவிர, 14 டன் எடையிலான கடல் உணவுகள் சமைக்கப்பட்டுள்ளன. விருந்து சமைக்க மட்டும் 8,000-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

ஒரே நேரத்தில் 15,000 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் அமைக்கப்பட்ட பிரமாண்ட பந்தல்… இந்த மூன்று நாள்களில்
ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை,
மதுரை ஆகிய மாவட்டங்களில் இறைச்சி கிடைக்கவில்லை. மேலும், விழாவுக்கான மேளதாள வாத்தியக் கலைஞர்களும் கிடைக்கவில்லை.

இவ்வளவு செலவுக்கும் பணம் எப்படித் திரட்டப்பட்டது
என்று விசாரித்தோம். “பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறையின் மாவட்ட, மண்டல அளவிலான உயரதிகாரிகள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள் சிலரின் பங்களிப்புடனேயே இவ்வளவு
பெரிய ஏற்பாட்டைச் செய்தார் அமைச்சர்.
பதிவுத்துறையில் டெபுடேஷனில் இருக்கும் அதிகாரிகளிடம் பெரிய தொகையை மொய்யாக நிர்ணயித்து வசூல் செய்திருக்கிறார்கள்” என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

மொய் வசூலிக்க, தனியார் நிறுவனத்தின் மூலம்
50 ஹைடெக் கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன.
ஆனால், மொய் கவுன்ட்டர்களில் கூட்டம் இருந்ததே தவிர
பெரிய அளவில் வசூலாகவில்லை என்கிறார்கள்.
விசாரித்தால், “இந்த மொய் கவுன்ட்டர்களே கறுப்புப்
பணத்தை வெள்ளையாக்குவதற்காகத் தான்” என்று கண்ணடித்தனர் கட்சிக்காரர்கள்.

“பந்தல் மற்றும் மேடை அலங்காரம், விருந்துச் செலவு, பத்திரிகை விளம்பரம், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்குப் பரிசுப்பொருள்கள்; உறவினர்களுக்கு பட்டு வேட்டி, சட்டை, பட்டுச்சேலை; சொந்த பந்தங்கள், நெருங்கிய உறவுகளுக்கு நகை, பணம்; கிராமங்களிலிருந்து நிகழ்ச்சிக்கு
அழைத்துவர வாகன வசதி எனக் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட பணம் எனக் கணக்கிட்டால் செலவு மட்டுமே சுமார் 100 கோடியை நெருங்கும்” என்கிறார்கள் அமைச்சருக்கு நெருக்கமானவர்கள்.

அமைச்சரின் திட்டம்!

“கொங்கு மண்டலத்துக்கு செந்தில் பாலாஜியைப்போல,
தென் மண்டலம் என்றால் பி.மூர்த்திதான் என்று
தலைமையைச் சொல்லவைப்பதுதான் மூர்த்தியின் திட்டம். அதற்காகத்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமும்”
என்கிறார்கள் உள்ளூர் தி.மு.க-வினர்.

திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தலைமையேற்று நடத்திவைத்ததோடு, “அமைச்சர்
மூர்த்தி எதைச் செய்தாலும் பிரமாண்டமாகத்தான்
செய்வார். இதை மணவிழா என்று சொல்வதைவிட
மாநாடு சென்று சொல்வதுதான் சரியாக இருக்கும்”
எனப் புகழ்ந்து தள்ளிவிட்டார்.

( தன் அமைச்சரவையில், தன் மேற்பார்வையின் கீழ்
பணிபுரியும் ஒருவரால் எப்படி இத்தனை கோடி
சம்பாதிக்க முடிந்தது – என்கிற குற்ற உணர்வே
இல்லாமல், தனக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமும்
இல்லை என்கிற பற்றற்ற ஞானியின்,
பொறுப்பற்ற ஒரு நிலை, கழகத் தலைவருக்கு எப்படி வந்ததோ…??? …!!!)

`இந்த பிரமாண்டத்துக்கான வருமானம் எங்கிருந்து
வந்தது?’ என்ற கேள்வி எழும் என்பது தெரிந்தும்,
பந்தா காட்டியிருக்கிறார் அமைச்சர். அவரை
கேள்வி கேட்கும் பொறுப்பில் இருப்பவர், புகழ்ந்து
பாராட்டி விட்டு சென்றிருக்கிறார். வசூல் ஏஜெண்டுகளில்

திறமையானவர் என்று இவர் நிரூபித்ததையொட்டி – அடுத்து, இதைவிட உயர்ந்த பொறுப்புகளும் கிட்டுமோ….?

எங்களை தேர்ந்தெடுங்கள் மக்களே –
” ஊழலற்ற ஆட்சியை தருவோம் ” – என்று
நம்மிடம் சத்தியம் செய்துவிட்டு போய் ஆட்சியில்
அமர்ந்தார்களே அதே மனிதர்கள் தானே இவர்கள் ….???

நம்மை பார்க்க அவர்களுக்கு கூசவில்லை… ஆனால்,
அவர்களைப் பார்க்க நமக்கு வெட்கமாக இருக்கிறது –
இப்படி ஏமாந்தோமே என்று….

( மூலம் – ஜூனியர் விகடன் கட்டுரை….)

.
…………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to அச்சடிக்கிறார்களா … ? …4,500 ஆடுகள், 24,000 கோழிகள்….! எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம் ….?

  1. bandhu's avatar bandhu சொல்கிறார்:

    எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம் என்பதே பார்க்கும் / கேட்கும் எல்லோருக்கும் வரும் முதல் கேள்வி. அதை பற்றி எந்த அக்கறையும் இல்லாத ஒரு முதலமைச்சர்! தனக்கு வரவேண்டியது வந்ததா என்று மட்டுமே பார்ப்பவர்களால்தான் இப்படி இருக்க முடியும்!

    இதுவே கடைசி திராவிட கட்சிகளின் ஆட்சியாக இருக்கட்டும்! அதை நோக்கித்தான் போய் கொண்டிருக்கிறார்கள்!

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    ரொம்ப அப்பாவி சார் இந்த விகடன். வேட்பாளர்கள் தங்கள் சொத்தாகக் கணக்குக் காண்பிப்பதையும், தேர்தல் செலவாகக் கணக்குக் கொடுப்பதையும் உண்மை என்று நம்பியிருக்கிறார்களே. கொஞ்சம்கூட அதைப்பற்றி எழுதாமல், திருமணத்தைப் பற்றி எழுத வந்துவிட்டார்கள். தேர்தல் கமிஷனுக்குக் கொடுத்த கணக்குப் பிரகாரம் சோனியா காந்தி, லட்சக்கணக்கில் கடன் வாங்கியிருக்கிறார் (மகனிடமிருந்து). ஆனால் உண்மை நிலவரம், உலகப் பெரும் பணக்காரர்களில் பத்துக்குள் இடம் பெற்றவர்.

    இந்த திமுக ஆட்சியில் வேறு என்ன என்ன திருமணங்கள் நடந்துள்ளன (திமுக அமைச்சர்கள், எம்பிக்கள் வீட்டில்), அவை எப்படி நடந்தன என்று பார்த்தால், இது ஒன்றும் புதிதில்லை என்பது தெரியும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.